முழு உலகுக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்த உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் மூன்று மாதங்கள் நிறைவடைந்துவிட்டன. மூன்று மாத நிறைவில் இது தொடர்பில், பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் விளைவுகள் பல்வேறு மட்டங்கள் வரை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளமையைக் காண முடிகின்றது.
மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள சூழலில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ள விமர்சனங்கள் அதற்கு அரச தலைமைத்துவம் வழங்கியுள்ள பதிலடி போன்ற விடயங்கள் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. அந்தவகையில் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ஏற்படுத்திய தாக்கங்களும் விளைவுகளும் இன்னும் மக்கள் மத்தியில் பாரிய செல்வாக்கு செலுத்துகின்றன என்பதே யதார்த்தம்.
உயிரிழப்புகளையும் அச்சத்தையும் ஏற்படுத்திய குண்டுத்தாக்குதல் நடைபெற்று மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ளன. கடினமானதொரு காலப்பகுதியை நாம் கடந்து வந்திருக்கின்றோம் என்பதே சரியானது. 250க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்த பதிவுகள் உட்பட பாரிய தொரு அழிவை இந்தக் குண்டுத்தாக்குதல்களில் நாடு சந்தித்தது. அதுமட்டுமன்றி நாட்டின் வர்த்தகத்துறை, பொருளாதாரத்துறை, சுற்றுலாத்துறை என்பன பாரிய வீழ்ச்சியை நோக்கிப் பயணித்தன. நாட்டின் பொருளாதாரம் கடும் பாதக விளைவுகளைச் சந்தித்தது. தாக்குதல்களின் பின்னர் நாட்டில் என்ன நடந்தது என்பதை சுதாகரித்துக்கொள்ளவே மக்களுக்கு ஒரு கால இடைவெளி தேவைப்பட்டது. மக்கள் மத்தியிலான இந்த அச்சமும் பயமும் இதுவரை முழுமையாக நீங்கி விடவில்லை என்பதே உண்மை. மக்கள் அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கின்ற போதிலும் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை மக்கள் இன்னும் மறக்கவில்லை. தற்போது பொருளாதாரம், சுற்றுலாத்துறை, மக்களின் அன்றாட செயற்பாடுகள் என்பன வழமை நிலைக்குத் திரும்பி வருகின்றன.
எனினும் குண்டுத் தாக்குதல்கள் ஏற்படுத்திய அதிர்ச்சி நிலை இன்னும் முழுமையாக மாறவில்லை. இந்த நாட்டுக்கு ஏப்ரல் 21ஆம் திகதி என்பது ஓர் இருள்சூழ்ந்த நாளாகவே இருக்கிறது. கிறிஸ்தவ மக்கள் மிகவும் உற்சாகத்துடன் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஆராதனைகளில் பங்கேற்றனர். ஆனால் இப்படியொரு நிலைமை ஏற்படும் என ஒருபோதும் எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று காலை ஆராதனையில் மக்கள் பங்கேற்றிருந்தபோது இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் திடீரென இடம்பெற்றன. கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் கட்டுவாப்பிட்டிய ஆகிய பிரதேச ஆலயங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. அதேபோன்று சுற்றுலாப்பயணிகள் அதிக எண்ணிக்கையில் தங்கியிருந்த சினமன்கிராண்ட், ஷங்கிரில்லா, கிங்ஸ்பரி ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றன.
மேலும் தெமட்டகொட, தெஹிவளைப்பகுதிகளிலும் இடம்பெற்ற சம்பவங்களுடன் மொத்தமாக எட்டு இடங்களில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின. இந்தச் சம்பவங்களை அடுத்து உலகமே அதிர்ச்சியுடன் இலங்கையை திரும்பிப் பார்த்தது. என்ன நடக்கின்றது என்று மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நாடு ஏற்கனவே முப்பது வருட யுத்தத்தை எதிர்கொண்டு வடுக்களையும் வலிகளையும் தாங்கிக் கொண்டிருந்தது. எனவே இவ்வாறான சம்பவங்களின் வலி எவ்வாறானது என்பது மக்களுக்குத் தெரியும். எனினும் 2009ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை இந்த நாட்டில் ஆயுதப் போர் இடம்பெறவில்லை. இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்காவிடினும் கூட கடந்த பத்து வருடங்களாக மக்கள் அமைதிக்காற்றை சுவாசித்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு பத்து வருடங்கள் அமைதிக்காற்றை சுவாசித்து வந்த மக்களுக்கு ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்தத் தாக்குதலுடன் மக்கள் மத்தியில் ஒருவகையான அச்சம் குடிகொண்டது. மக்கள் வீதிக்கு இறங்கவே பயந்தனர். பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்பவே தயங்கினர். ஆனால் பாதுகாப்புத் தரப்பினர் உடனடியாக செயற்பட்டு நாட்டில் மீண்டும் சகஜநிலையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதிரடிக் கைதுகள் இடம்பெற்றன. பயங்கரவாதிகள் தங்கியிருந்த இடம் முற்றுகையிடப்பட்டது. அப்போது பயங்கரவாதிகள் தம்மைத்தாமே குண்டு வைத்து அழித்துக் கொண்டனர். அவசர கால சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் பாதுகாப்புத் தரப்பினர் சரியான முறையில் செயற்பட்டு நாட்டின் அன்றாட நிலையை சீர்பட்வழமைக்குக் கொண்டு வந்தனர். மக்கள் மத்தியிலும் நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்தது.
குண்டு வெடிப்புச் சம்பவத்தின் பின்னர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டன. பாதுகாப்புத் தரப்பினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி நியமித்த குழு விசாரணை அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தது. அதேபோன்று பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு அதன் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. எனினும் குண்டுத் தாக்குதல் நடைபெற்று 20 தினங்களுக்குப் பின்னர் வடமேல் மற்றும் மேல் மாகாணத்தின் சில இடங்களில் முஸ்லிம் சமூகத்தினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. அதன்பின்னர் ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதி கள் மீதான குற்றச்சாட்டுகளும் வலுவடைந்தன. ஒரு கட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் கூட்டாகத் தமது பதவிகளை ராஜினாமா செய்தனர். அதேபோன்று அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பி.யினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்த நிலையில் அந்தப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டு தோற்கடிக்கப்பட்டது. இவ்வாறான கரடுமுரடான மற்றும் கடினமான பயணத்தின் மத்தியிலேயே இந்த மூன்று மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றன. இதில் பல்வேறு விமர்சனங்கள் பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. விசேடமாக இந்தத் தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் கடுமையாக முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக உயர் அதிகாரிகளின் அசமந்தப் போக்கு காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாக கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
வெளிவந்த விடயங்கள்
பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணையின் போது பல விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டு வந்தன. இவ்வாறு கடினமான மூன்று மாத பயணத்தின் பின்னர் தற்போது கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றார். கட்டுவாப்பிட்டியவில் குண்டு வெடிப்பினால் அழிவடைந்த ஆலயம் மீள் புனரமைப்பு செய்யப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கர்தினால் ஆண்டகை பல விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றார்.
"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர் பில் ஆராய்வதற்குச் சுயாதீனமான உறுப்பினர்களைக் கொண்ட ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும். ஏனெனில் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் மீதோ அவை முன்னெடுக்கும் விசாரணைகள் மீதோ எவ்வித நம்பிக்கையும் எமக்கில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்தும் முறையான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்பது தெரிகிறது. சர்வதேசத்தின் விருப்புக்காக எமது நாட்டு அரசியல் தலைமைகள் புலனாய்வுப் பிரிவை செயற்படவிடாமல் தடுத்தமையே இதற்கான பிரதான கார ணம். நாம் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றாற்போல வாழ வேண்டியதில்லை. அந்த நாட்டுத் தலைவர்களுக்கு ஏற்றாற்போல எமது நாட்டை ஆட்சி செய்யவும் இடமளிக்க முடியாது. புலனாய்வுத்துறையைப் பலப்படுத்த வேண்டும். தாக்குதல்கள் குறித்து நாட்டில் அரசியல் தலைவர்கள் எவரும் கவனத்தில் கொள்ளாததோடு, நாளானதும் இதனைப் புறந்தள்ளி விட்டார்கள். இது குறித்த விசாரணைகள் எதுவுமே ஆக்கபூர்வமாக முன்னெடுக்கப்படவில்லை. அரசியல் தலைமைகள் இந்த விடயத்தில் இனிமேலும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டிருக்காமல் அனைவரும் ஒன்றிணைந்து இனியொரு சந்தர்ப்பத்தில் இது போன்ற அடிப்படைவாதத் தாக்குதல் இடம்பெறா மல் பார்த்துக் கொள்வதோடு நாட்டில் அமைதியையும் சட்டம், ஒழுங்கையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம். முழு நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற பொது நோக்கத்துடன் செயற்படுமாறு சகல அரசியல் தலைவர்களையும் கேட்டுக் கொள்கிறோம். தாக்குதல்களைத் தடுக்க முடியாத அரசாங்கம் வீடு செல்லுமாறு நாம் கோருகிறோம்” என்று கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை மிகவும் காரசாரமான விமர்சனத்தை முன்வைத்திருக்கின்றார்.
பல்வேறு கோணங்கள்
அவரின் கோணத்தில் இந்த விமர்சனம் சற்றுக் காரமானதாக இருந்தாலும் கூட 250 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்ட இந்தத் தாக்குதல் தொடர்பான ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கின்றார். தவறு விடப்பட்டமையை நியாயப்படுத்தாமல் இது தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே கர்தினால் ஆண்டகையின் கோரிக்கையாக உள்ளது.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆண்டகையின் உரைக்கு அதிரடியான பதிலை வழங்கியிருக்கிறார். அதாவது ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரான காலத்தில் அரசாங்கம் தனது அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்றியுள்ளது. தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பை இலங்கையிலிருந்து ஒழித்தது மாத்திரமன்றி, அத்தாக்குதல் இடம்பெறுவதற்கு ஏதுவாக அமைந்த சகல விடயங்கள் தொடர்பாகவும் தற்போது பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடைபெறவில்லை. அரசாங்கத் தலைவர்களுக்கு முதுகெலும்பில்லை; அவர்கள் வீடு செல்ல வேண்டும் போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நாங்கள் வீடு செல்லத்தான் இருக்கின்றோம். நிரந்தரமாக தங்குவதற்கு நாங்கள் வரவில்லை. உத்தியோகபூர்வ காலம் முடிந்ததும் வீடு செல்வோம். தேவையெனின் மீண்டும் தேர்தலுக்கு முகம் கொடுப்போம். அதனை யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எமக்கு சிறந்த முதுகெலும்பு உள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி எனக்கு முதுகெலும்பு உள்ளது என்பதைக் காட்டினேன். அதன் பின்னர் பதவியில் இருந்த பிரதமரை நீக்கி முன்னாள் ஜனாதிபதியை பிரதமராக்கி எனக்கு முதுகெலும்பு உள்ளது என்பதைக் காட்டினேன். இதனால் தமது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தீர்மானங்களை முன்வைக்க வேண்டாமென சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றேன். அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே முதுகெலும்பு இல்லை என்று கூறுகின்றனர். யாராக இருப்பினும் என்னுடன் வெளிப்படையாகக் கலந்துரையாட முடியும். தேவையேற்படின் ஊடகங்களுக்கு முன்னாலும் அதனை மேற்கொள்ள முடியும். மறைந்து நின்று பேச வேண்டியதில்லை. என்னுடன் நேரடியாகப் பேச வாருங்கள்”
இவ்வாறு மிகவும் காரசாரமான பதிலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருக்கின்றார்.
உண்மையில் மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் முரண்பட்டுக்கொண்டிருக்காமல் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய இக்கட்டான காலட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். தற்போதைய நெருக்கடிமிக்க இந்தச் சூழலில் மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே தீய சக்திகளை அகற்றி நாட்டில் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த முடியும். கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகையின் ஆதங்கத்தை அரச தரப்பு புரிந்துகொள்ளவேண்டும்.
நாட்டில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றவுடன் ஏற்படவிருந்த பாரிய அழிவை மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை நேரடியாக தலையிட்டு தடுத்திருந்தார். குண்டுவெடிப்பு இடம்பெற்றதுடன் அது ஐ.எஸ். தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்டது என்பது தெரிந்ததும் அப்பாவி முஸ்லிம் மக்களை யாரும் துன்புறுத்தக் கூடாது என்பதை கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை மிகவும் திட்டவட்டமாக அறிவித்திருந்தார். உண்மையில் அவரின் அந்த அறிவிப்பின் பயனாகவே 22 மற்றும் 23ஆம் திகதிகளில் நாட்டில் எவ்விதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்பதுடன் பாரிய சேதங்கள் தடுக்கப்பட்டன.
குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுத்திருந்தனர். அந்த விடயத்தில் அனைவரும் அப்போது திருப்தி அடைந்திருந்தனர். எனினும் இதன் பின்னர் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் செயற் படுவதற்கு என்ன மதிப்பீடுகள் செய்யப்பட்டன என்பதே கர்தினால் ஆண்டகையின் கேள்வியாக, ஆதங்கமாக உள்ளது.
அதேபோன்று யாருடைய அசமந்தப் போக்கினால் இந்தப் பேரழிவு இடம்பெற்றது என்பது குறித்தும் ஆராய வேண்டும் என்பதையே அனைவரும் கோருகின்றனர். அதனையே கர்தினால் ஆண்டகையும் வெளிப்படுத்தியிருக்கிறார். யார் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். அதேபோன்று மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை உறுதிப்படுத்த வேண்டும். இதன் பின்னர் இவ்வாறானதொரு அசம்பாவிதம் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதும் அவசியம். மிக விசேடமாக மக்கள் மத்தியில் காணப்படுகின்ற அச்ச நிலைமை போக்கப்பட வேண்டும்.
புரிந்துகொள்ள வேண்டும்
பாதுகாப்புத் தரப்பினர் கடந்த மூன்று மாத காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். அந்த நிலைமை நீடிக்க வேண்டும். இவ்வாறான அடிப்படைவாத அமைப்புகள் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டியது அத்தியாவசியமாகும். கொல்லப்பட்ட மக்களின் சமயம் சார்ந்த தலைவர் என்ற அடிப்படையில் கர்தினால் ஆண்டகையின் ஆதங்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் இந்த இடத்தில் மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்படுவதே மிக முக்கிய தேவையாக இருக்கின்றது.
இதன் மூலமே நாட்டில் தேசிய ஒற்றுமையைப் பலப்படுத்துவதுடன் அடிப்படைவாத அமைப்புகளைத் துடைத்தெறிய முடியும். எனவே தொடர்ந்தும் முரண்பாடுகளை வளர்த்துக்கொள்ளாமல் இணைந்து செயற்படுவதற்கான வழிமுறைகளை தலைவர்கள் ஆராய வேண்டும். குறிப்பாக மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து ஒரு பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்புவது குறித்து ஆராய வேண்டும். இந்தத் தாக்குதல் சம்பவங்களினால் கடுமையாக பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறை தற்போது ஓரளவு படிப்படியாக மீண்டு வருகிறது. அதேபோன்று உள்நாட்டு வர்த்தகத் துறைகள், வெளிநாட்டு முதலீடுகளும் பாதிக்கப்பட்டன. எனவே இவை அனைத்தையும் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும். அதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பதே மிகவும் அவசியமாகிறது. அதனால் தோன்றியிருக்கின்ற முரண்பாடுகளை ஒருபக்கம் வைத்துவிட்டு அமைதி யான, பாதுகாப்பான நாட்டைக் கட்டி யெழுப்புவதற்கு அரசியல், மத மற்றும் சிவில் தலைவர்கள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியதே காலத்தின் தேவையாக இருக்கிறது.
- ரொபட் அன்டனி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM