தான் பெற்ற இரட்டை செல்வங்களை கட்டியணைத்து கதறும் அந்த தாய் அன்பு பிள்ளைகளை இழந்து துடிதுடித்து நிற்கும் தந்தை. ஒன்று கூடி வாழ்ந்த அந்த இளம் சிட்டுக்களை பிரிந்து, இன்று கண்ணீர் சிந்தும் தோட்டத்து மக்கள். இவர்களின் மன வேதனைக்கும் வலிக்கும் யார் தான் ஆறுதல் கூறுவார்கள்.
ஆம்..! அக்கரபத்தனை, டொரிங்டன்- அலுப்புவத்தை தோட்டமே இன்று சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
பாடசாலை சென்று ஆசையாக வீடு திரும்பிய இரட்டை சகோதரிகள், இடைநடுவில் வெள்ள நீரில் அடித்துச் செல்லபட்டுள்ளமையானது ஒரு சமூகத்தை மாத்திரம் அல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த புதன்கிழமை(17) முதல் மலையகத்தில் கடுமையான மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை (18) டொரிங்டன் பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்றுவந்த இரட்டை சகோதரிகளான 12 வயதுடைய மதியழகன் லெட்சுமி, மதியழகன் சங்கீதா ஆகிய மாணவிகள், அந்த பிரதேசத்தை சேந்த மற்றுமொரு மாணவனுமாக வழமை போன்று சந்தோசமாக பாடசாலை சென்று வீடு திரும்பியுள்ளனர்.மாணவிகள் பாடசாலை விட்டு வீட்டுக்கு செல்லும் பாதையில் நீரோடை பாதையில் பெருக்கெடுத்துள்ளது.
இதன்போது மாணவிகளுடன் சென்ற மாணவன் ஒருவாறு பாதையை கடந்துள்ளான். இதனை பார்த்த இரு மாணவிகளும் ஒருவர் ஒருவரது கைகளை கோர்த்துக் கொண்டு பாதையை கடக்க முற்பட்டுள்ளனர்.ஆனால் இருவரும் ஒன்றாக நீரோடைக்குள் விழுந்து அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரை விட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பிரதேச மக்களின் கடுமையான தேடுதல் நடவடிக்கையின் பின், மதியழகன் லெட்சுமி என்ற மாணவி சம்பவ தினத்தன்று மாலை ஐந்து மணியளவில் உயிரிழந்த நிலையில் 800 மீற்றர் பள்ளத்தில் சடலமாக மீட்டுள்ளார்.
காணாமல் போன மற்றுமொரு மாணவியான மதியழகன் சங்கீதா இரண்டாவது நாளான நேற்று வெள்ளிக்கிழமை (19) உயிரிழந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டார்.
சோகமயமான அலுப்புவத்தை
இரட்டை சகோதரிகளின் பிரிவால் அலுப்புவத்தை தோட்டமே சோகத்தில் காட்சியளிக்கின்றது. அங்குள்ள ஒவ்வொரு தாயுள்ளமும் கதறி அழுகின்றது. யாரும் வேலைக்கு செல்வில்லை. தோட்டமே சோகத்தில் குடிகொண்டுள்ளது. குறிப்பாக ஐந்து தோட்டங்கள் இன்று முடங்கி கிடக்கின்றன. யாரும் வேலைக்கு செல்லவில்லை.
டொரிங்டன் பாடசாலை
டொரிங்கடன் பாடசாலையில் தரம் 9 வரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இந்த பாடசாலைக்கு ஐந்து தோட்டங்களைச் சேர்ந்த பிள்ளைகள், கல்வி கற்றலுக்காக குறித்த மாணவிகள் சென்ற பாதையையே பயன்படுத்துகின்றனர்.
ஆபத்தான இருபாலங்கள்
ஐந்து தோட்டங்களை சேர்ந்த மக்கள் மாணவிகள் காவுகொள்ளப்பட்ட பாதையையே பிரதான போக்குவரத்து பாதையாக பயன்படுத்துகின்றனர். இந்த பாதையில் இரண்டு இடங்களில் பாதுகாப்பற்ற பாலங்கள் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவர்களை காவுகொண்ட பாலம்
பாலம் ஆரம்பத்தில் கல்பாலம் என அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த இடத்தில் இருந்த கல்லை அகற்றாமலேயே பாலத்தை அமைத்துள்ளனர்.
மழை காலங்களில் நீரில் அடித்து வரப்படும் குப்பைகள் தேங்குவதால் நீர் பாதைக்கு மேலாக நிரம்பி செல்கின்றது.
மக்கள் முறைப்பாடு
இந்த விடயம் தொடர்பில் தோட்ட நிர்வாகத்துக்கும் அரசியல்வாதிகளுக்கும் பிரதேச மக்கள் பல முறை முறைப்பாடு செய்துள்ளனர். எனினும் எந்த அதிகாரிகளும் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை.
யார் பொறுப்பு
இந்த சம்பவத்திற்கு ஒரு தரப்பை மாத்திரம் விரல் நீட்டி குற்றம் சுமத்திவிட முடியாது. ஆனால் இந்த சம்பவமொன்றும் எமக்கு புதிதல்ல.
கடந்த வருடத்தில் கந்தப்பளை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் பாடசாலை விட்டு வீட்டுக்கு போகும் வழியில் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். அதே போன்றதொரு சம்பவம் தான் இன்று அக்கரபத்தனை அலுப்புவத்தையிலும் பதிவாகியுள்ளது.
அரசியல்வாதிகள்
எந்த சம்பவத்தை எடுத்தாலும் அரசியல்வாதிகளைத்தான் குறை கூறுகின்றோம் எனக் கூற முடியாது. மக்களுக்கு சேவை செய்ய ஒவ்வாரு அரசியல்வாதியும் அந்த மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் செல்கின்றார். ஆனால் இதுபோன்ற துரதிஸ்டமான சம்பவங்கள் அரங்கேறும்போது அதற்கு முழுப்பொறுப்பு கூற வேண்டிய கடப்பாடும் அரசியல்வாதிகளுக்கே உள்ளது.
குறிப்பாக மலையகத்தில் பெரும்பாலான பாதைகள் குன்றும் குழியுமாக காணப்படுவதால் மழை காலங்களில் நீர் நிரம்பி சேறும் சகதியுமாகத்தான் காணப்படும். அதாவது பாதைகளில் பயணிப்பது என்பது ஆபத்தான விடயமாகத்தான் இருக்கும்.
இதனை மலையக அரசியல்வாதிகள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். இருந்தும் அதற்கு தீர்வுத் திட்டங்களை அவர்கள் வழங்குவதில்லை.
ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிப்பது வீதி கட்டமைப்பாகும். ஆனால் மலையகத்தில் தோட்டப் பகுதிகளில் அவை தலைகீழாகவே காணப்படுகின்றன.
ஒவ்வொரு நாளும் மக்கள் உயிர் ஆபத்துடனேயே பாதைகளில் பயணிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
பாதைகளை புனரமைத்து தரும் பொறுப்பு அரசியல்வாதிகளிடமே இருந்தும் அவர்கள் அதனை மும்முரமாக செய்வதில்லை. பிரதேச மக்களால் பல முறைப்பாடுகள் செய்தும் யாரும் அதனை கவனத்தில் கொள்ளவில்லை.
ஒருவேளை தோட்டத் தொழிலாளியின் பிள்ளை தானே இறக்கின்றது என ஏளனமாக நினைத்து விடுகின்றார்கள் போலும்.
தோட்ட நிர்வாகம்
ஒவ்வொரு தோட்டத்திலும் வடிகாலமைப்பை சரியான முறையில் அமைப்பது தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பாகும். வெ ள்ளத்தில் மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்கள் எனக்கூறும் போது அந்த தோட்டத்தில் வடிகாலமைப்பு எவ்வாறு இருக்கும் என்பதை விளங்கிக்கொள்ள முடிகின்றது. இந்த மாணவியரின் மரணத்துக்கு தோட்ட நிர்வாகத்துக்கும் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு உள்ளது.
பெற்றோர்
மழை காலங்களில் பிள்ளைகள் பாடசாலை செல்லும் போதோ அல்லது வீட்டை விட்டு வெளியில் செல்லும்போதோ பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். மழைகாலங்களில் ஆபத்துக்களில் இருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது தொடர்பாக அவர்களுக்கு அறிவுரைகளை வழங்க வேண்டும். குறிப்பாக மழை காலங்களில் பெற்றோரே பிள்ளைகளை பாதுகாப்பாக கூட்டிச் சென்று கூட்டி வருவது சிறப்பானதாகும். உயிர் பிரிந்தவுடன் எதை செய்தும் பயன் இல்லை.
பாடசாலை
குறிப்பாக மழை காலங்களில் பாடசாலை முடிந்து மாணவர்கள் பாதுகாப்பாக செல்லும் நிலை இருக்கின்றதா இல்லையா என்பதை பாடசாலை நிர்வாகமும் அறிந்திருக்க வேண்டும். பாடசாலை முடிந்தவுடன் பெற்றோர் பாடசாலை வந்து பிள்ளைகளைக் கூட்டிச் செல்லும் வரையில், மாணவர்கள் பாடசாலையிலேயே தங்கியிருக்க ஏற்பாடுகளை செய்துகொடுக்க வேண்டும்.
மழை காலங்களில் மலையகத்தில் ஏதோ ஒருவகையில் உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. மண்சரிவாக இருக் கலாம் அல்லது வெள்ளமாக இருக்கலாம். இந்த அனர்த்தங்கள் திடீரென வந்து விடுகின்றன.இருந்தும் இதற்கு முகம் கொடுக்கும் வகையில் முன் ஆயத்தமாக இருக்க வேண்டியது ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.
தமது பிள்ளைகளை பிரிந்து அந்த பெற்றோர் கதறி அழுகின்றார்கள். ஊர் மக்களும் கண்ணீர் வடிக்கின்றார்கள். ஆனால் அந்த பிரிந்த உயிர்கள் மீண்டும் வரப்போவதில்லை. எனவே ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதை விட எதிர்காலத்தில் இதுபோன்ற துர்பாக்கிய சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க ஒவ்வாரு நபரும் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
எம்.டி. லூசியஸ் –
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM