"உறவுகளுக்காக உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து இன்று முகவரியற்றவனாக யாசகம் செய்கிறேன்." என்று கொழும்பு புறக்கோட்டையில் யாசகம் கேட்கும் கண்ணையா என்று பெயர் சொல்லும் முதியவர் தனது உளக்குமுறலை கொட்டித்தீர்த்தார். (பெயர், இடம் மாற்றப்பட்டுள்ளது.)
அம்பாறைப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவரே இவ்வாறு தன் சோகங்களையும், வாழ்வில் சந்தித்த ஏமாற்றங்களையும் கண்ணீருடன் சொல்லிச் சென்றார். இவரைப் போன்றே எம்மில் பல்லாயிரக்கணக்கான தந்தையர்களும், தாய்மார்களும், சகோதர, சகோதரிகளும் தெருவில் கைவிடப்பட்ட நிலையில் யாசகர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான நாடுகளில் யாசகம் என்பது பரவலாகவே காணப்படுகின்றது. அதிலும் இலங்கையில் யாசகம் என்பது தவிர்க்க முடியாதவொன்றாகிவிட்டது. ஆசிய நாடுகளின் பட்டியலில் சுற்றுலாத்துறைக்கு பெயர் பெற்ற நாடாக விளங்கும் எமது நாட்டில் நகரப்பகுதிகளில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவது துரதிஷ்டமே.
எந்த முதலீடும் இல்லாமல் இலகுவாக பணம் சம்பாதிக்கும் ஒரு வழிமுறையாக இந்த யாசகம் விளங்குவதாலோ என்னவோ நாளுக்கு நாள் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என்றும் எண்ணத் தோன்றுகிறது.
நாட்டின் சகல நகரங்களிலும் யாசகர்கள் பரவலாக காணப்படுகின்றபோதிலும் தலைநகர் கொழும்பிலேயே அதிக எண்ணிக்கையிலானோர் யாசகம் செய்கின்றனர். இவர்கள் தெருவோரங்களிலும், பஸ், புகையிரத தரிப்பிடங்களிலும் தமது அன்றாட வாழ்வை பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் கழித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் வயது முதிர்ந்தவர்களாகவும் தமது உறவுகளால் கைவிடப்பட்டவர்களாகவும் காணப்படும் அதேவேளை தனக்கான வாழ்வாதாரத்தை தேடிக்கொள்வதற்காக கூலி வேலைகளுக்கு செல்ல கூட உடல் அளவிலும் உள அளவிலும் இயலாதவர்களாக காணப்படுகின்றனர்.
அதேநேரம் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சினைகளால் உறவுகளை பிரிந்து ஆதரவற்றவர்களாக வீதிக்கு வந்த பலர் இறுதியில் யாசகம் என்பதை தமக்குரிய போர்வையாக கொண்டு அதனையே தொழிலாக செய்து வருகின்றனர். இன்னொரு தரப்பினர் போதை வஸ்துக்கு அடிமையானதாலும் மற்றொரு தரப்பினர் குடும்ப பொறுப்பின்மையாலும் புகையிரதங்களிலும், பேருந்து வண்டிகளிலும், சன நெருக்கடி அதிகமாகவுள்ள இடங்களிலும் யாசகம் செய்கின்றனர்.
அதிலும் சிலர் தமது திறமைகளைக் காட்டி அதாவது பாட்டு பாடுவது, மெஜிக் என்ற பெயரில் ஏதேனும் சாகசங்கள் செய்வதன் ஊடாக பணம் சம்பாதிக்கின்றனர். இவர்களது இத்தகைய செயற்பாடுகள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாகவே காணப்படுகின்றன.இதனை சாதகமாக பயன்படுத்தும் சிலர் புகையிரத நிலையம், பஸ்தரிப்பிடம் என மக்கள் அதிகம் வந்துபோகும் இடங்களைத் தேர்ந்தெடுத்து உடமைகளையும் நகைகள் பணம் உள்ளிட்ட பெறுமதி வாய்ந்த பொருள்களையும் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அன்றாடம் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
இவர்களுக்கு அப்பால் இன்னுமொரு தரப்பினர் குழந்தைகளை கையில் ஏந்தி பொதுமக்களிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர். இல்லையேல் தனக்கு ஏதேனும் சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமெனக் கூறி ஆயிரக்கணக்கில் யாசகம் செய்கின்றனர்.
பொதுமக்களும் மனிதாபிமானம் என்ற ரீதியில் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். ஆனால் சமீபகாலமாக யாசகம் என்பது ஒருவகைக் கலையாக மாறிவரும் தொழில் என பரவலாக கூறப்படுகின்றது. அதாவது போலியான காரணங்களைக் காட்டி பொது இடங்களில் இவ்வாறு யாசகம் அதிகரித்து வருவதே இதற்கு காரணமாகும்.
இதனால் உண்மையாகவே உறவுகளால் கைவிடப்பட்டு, உடல் அளவில் ஊனமுற்றவர்கள் பொதுமக்களால் புறக்கணிக்கப்படுகின்றனர். இத்தகைய போலியான காரணங்களைக் காட்டி யாசகம் என்பதை தொழிலாக கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களது பின்புலத்தை அவதானித்தால் பெரும்பாலானவர்கள் போதை வஸ்துக்கு அடிமையானவர்களாகவே உள்ளனர். ஒருசிலர் இலகுவான முறையில் பணம் சம்பாதிக்கும் வழி என்பதால் இதனை ஒரு தொழிலாகவே செய்து வருகின்றனர்.
யாசகம் செய்வதை தொழிலாகக் கொண்டுள்ள சிலர் யாசகத்தின் ஊடாக கிடைக்கப் பெறும் இந்த வருமானத்தால் வீடு, காணி என அசையா சொத்துக்களுக்கு உடமையாளர்களாகின்றனர். அண்மையில் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்ட கண்களை இழந்த யாசகர் ஒருவர் பல ஆண்டு காலமாக யாசகம் செய்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு தனது இரு பெண் பிள்ளைகளுக்கும் வீடு, காணி என அசையா சொத்துக்களை சேர்த்துவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று ஆதரவற்ற அல்லது தமது குழந்தைகளையே வாகனங்களில் வைத்துக் கொண்டு போலியான வைத்திய சான்றிதழ்களை தயாரித்து சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து பணம் சம்பாதிக்கின்றனர். இதற்கு அண்மையில் மலையகத்தில் இடம்பெற்ற கைது சம்பவம் நல்ல உதாரணமாகும். அதேபோன்று திருகோணமலையில் யாசகம் கொடுத்த தம்பதிகளை தாக்கி அவர்களிடமிருந்த உடமைகளை யாசகர் ஒருவர் கொள்ளையிட்ட சம்பவமும் சுட்டிக்காட்டத்தக்கது.
வாழ வழியின்றி தற்கொலையை முடிவாகத் தேடிக் கொள்ளாமல் யாசகம் பெற்றேனும் வாழ்க்கை நடத்த வேண்டும் என நினைப்பது பாதிக்கப்பட்டவர்களைப் பொறுத்தமட்டில் நியாயமானதாக பார்க்கப்பட்டாலும் போலியான காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றி யாசகத்தையே பிராதன தொழிலாக கொண்டு மக்களை ஏமாற்றுபவர்கள் பொதுமக்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் இத்தகையோருக்கு எதிராக அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
காலாகாலமாக ஆட்சிக்கு வரும் தலைமைகள் மக்கள் மத்தியில் பல்வேறு வாக்குகளைக் கூறி ஆட்சிக்கு வருவதும் பின்னர் பல்வேறு காரணங்களைக் கூறி கொடுத்த வாக்குகளை காப்பற்ற காலம் தாழ்த்துவதும் வேடிக்கையான விடயமாயிற்று.
அந்த வகையில், கடந்த உள்ளூராட்சிசபைத் தேர்தல் சமயத்தின்போது தற்போதைய கொழும்பு மாநகரசபை மேயர் றோசி சேனாநாயக்க கொழும்பு மாநகரில் யாசகத்தை இல்லாதொழித்து புதிய அழகிய நகரை உருவாக்குவதாக தெரிவித்திருந்தார். மேலும் யாசகர்களுக்கான தீர்வு திட்டமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு தற்போதைய கொழும்பு மாநகர மேயர் றோசி சேனாநாயக்க ஒரு விடயத்தை முன்வைத்திருந்தார். அதாவது தன்னுடைய தேர்தல் வெற்றியின் பின்னர். தலைநகர் வாழ் யாசகர்களின் வாழ்வாதாரத்திற்கும் வாழ்க்கை தரத்திற்குமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக கைவிடப்பட்ட யாசகர்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அவ்வாறு சேர்க்கப்படும் யாசகர்களில் தொழிலுக்கு செல்லக் கூடியவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கி அவர்களுக்கு புதுவாழ்வு அளிக்கப்படும்" எனவும் தெரிவித்திருந்தார்.
அதேபோன்று கடந்த ஆண்டு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, யாசகர்களுக்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்திருந்தார். இதில் கொழும்பில் யாசகம் பெறுவோர் கொழும்பு மாநகர சபையின் ஆணையாளரை சந்திக்கவேண்டும் எனவும் அதன்பின்னர் பதிவு செய்யப்பட்ட யாசகர்கள் அனைவரும் புனருத்தாபன நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் வர்த்தக ரீதியில் யாசகம் பெறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உண்மையாகவே யாசகம் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டோருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு அவ்வப்போது நல்லபல திட்டங்களை முன்வைக்கின்றபோதிலும் அவற்றை நடைமுறைப்படுத்தாமை கவலையளிக்கிறது.
ஒரு பிரச்சினையை அடையாளம் கண்ட பின்னர் அதனைத் தீர்ப்பதற்கான நல்ல திட்டங்களை முன்மொழிந்து முறையாக வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல் ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்ற கதையாகிவிடும். எமது நாடு பல்லின மக்கள் வாழும் இயற்கை வளங்கள் நிறைந்த அழகிய நாடு என்பதால் உலக நாடுகளின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்க வைத்துள்ளது. இந்நிலையில் சுற்றுலாத்துறையினர் அதிகம் வந்து செல்லக் கூடிய கொழும்பு போன்ற நகர்ப்புறங்களில் இவ்வாறு யாசகர்கள் வகை தொகையின்றி பெருகியிருப்பது நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்கால அபிவிருத்திக்கும் மிகப்பெரிய தடையாக அமையும்.
நாட்டு மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய, தீர்த்து வைக்க வேண்டிய பல்வேறு விடயங்கள் குவிந்து கிடக்கின்ற நிலையில் யாசகர்களின் வாழ்வாதாரம் குறித்து சிந்திப்பதென்பது சாத்தியப்படுமா என பலரும் சிந்திக்கக் கூடும்.
அண்மைக்காலமாக அரசியலிலும் பொருளாதாரத்திலும் ஏற்பட்டுள்ள தளர்வு நிலையிலிருந்து நாடு இன்னமும் மீள முடியாமல் தத்தளிக்கின்றது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலால் நாடு பாரிய பின்னடைவுக்கு முகம் கொடுத்துள்ளது. இதனால் நாட்டுக்கு வருமானம் ஈட்டித்தரும் மிகப்பிரதான துறையான சுற்றுலாத்துறை பாரியளவு வீழ்ச்சியைடைந்துள்ளது.
இந்நிலையில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துச் செல்லுமாயின் நாட்டின் செழிப்பு நிலை கேள்விக் குறியாகிவிடும்.
எனவே தலைநகரங்களில் குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் பெருகிவரும் யாசகர்களின் வாழ்வாதாரத்திற்கு பொறுப்புள்ள அரசாங்கம் என்ற ரீதியில் ஆட்சியிலுள்ளவர்கள் சிறந்த தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டும். அதேநேரம் இலகுவாக பணம் சம்பாதிக்கக் கூடிய தொழிலாக யாசகத்தை தேர்ந்தெடுத்துள்ள தரப்பினருக்குமான வாழ்வாதார திட்டங்களை இனங்கண்டு அவர்களுக்கான தொழில் வழிகாட்டல் செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடு என்ற ரீதியில் யாசகமில்லாத நாடு சாத்தியமில்லை என்றாலும் கூட சமூகத்தில் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு ஆதரவற்ற நிலையிலுள்ள தரப்பினருக்கு கைகொடுத்து உதவிக்கரம் நீட்ட வேண்டிய தார்மீக பொறுப்பு அரசாங்கத்தினுடையது. அதேவேளை மேற்குறிப்பிட்ட முதியவரின் கதையை மனதிற்கொண்டு நாமும் இயன்றளவு நமக்கென சேமிப்பு, காப்புறுதி என்பவற்றில் முதலீடுகளை மேற்கொள்வோமானால் நாளை நாமும் இவரைப் போன்று ஏமாற்றத்தோடு காலம் கடத்த வேண்டிய தேவையிருக்காது.
- நிவேதா அரிச்சந்திரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM