உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் மூலம் இரண்டு விடயங்கள் வெளிப்பட்டிருந்தன. உலக பயங்கரவாதத்தின் பிடிக்குள் இலங்கை சிக்கியிருக்கின்றது என்ற அதிர்ச்சி மிக்க அபாயகரமான உண்மை வெளிப்பட்டிருந்தது என்பது முதலாவது. இஸ்லாமிய ஜிஹாத் அடிப்படைவாதம் இலங்கைக்குள் வேரூன்றி இருக்கின்றது என்பது இரண்டாவது விடயம்.
இந்த பயங்கரவாதத்தில் இருந்தும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் இருந்தும் எவ்வாறு நாடு மீளப் போகின்றது என்ற கவலையான நிலைமையில் இருந்து விடுபடுவதற்காக நாடு போராடிக் கொண்டிருக்கின்றது. சமூகங்களும் வெவ்வேறு வழிகளில் இதனால் போராட வேண்டிய ஒரு நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றன.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளும் இறுக்கமாக்கப்பட்டிருக்கின்றன. அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை முன்னதாகவே முறியடிக்க முடியாமல் போன பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான விடயம் அரசியல் சர்ச்சையாக நாட்டை உலுப்பிக் கொண்டிருக்கின்றது.
பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், தேசிய பாதுகாப்பில் ஏற்பட்டிருந்த தவறுகள் அல்லது ஓட்டைகளுக்கான பொறுப்பேற்றல் விடயம் தீவிரமான அரசியல் போராட்டமாகவே மாறியிருக்கின்றது.
இந்த இரண்டு நிலைமைகளுக்கும் அப்பால் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராகக் கிளர்ந்துள்ள பௌத்தவாதம் புதியதொரு நெருக்கடியை உருவாக்கி இருப்பதைக் காண முடிகின்றது.
தலைகீழான நிலைமை
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் பெருந்தொகையில் தமிழர்களே – தமிழ் கிறிஸ்தவர்களே கொல்லப்பட்டிருந்தார்கள். அந்த வகையில் அந்தத் தாக்குதல் தமிழ் மக்களைக் குறிவைத்து நடத்தப்பட்டதோ என்ற சந்தேகத்திற்கு வழியேற்படுத்தி இருந்தது.
தமிழ்மக்களே பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், கத்தோலிக்க மதத் தலைவராகிய கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் சமயோசித சமாதான அணுகுமுறைச் செயற்பாட்டின் காரணமாக தமிழ்மக்கள் உணர்ச்சி வசப்பட்டு ஆத்திரமடையாமல் தடுக்கப்பட்டிருந்தது.
தற்கொலைத் தாக்குதல்களை அடிப்படைவாத இஸ்லாமியர்களே நடத்தியிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியதும், சிங்கள பௌத்தர்கள் வெகுண்டெழுந்தனர். பௌத்த பிக்குகளும் முஸ்லிம்கள் மீதான சிங்கள பௌத்த தீவிரவாதிகளின் தொடர்ச்சியான தாக்குதல்களின் ஓர் அம்சமாகவே இந்த தாக்குதல்கள் அமைந்திருந்தன. ஏனெனில் உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் இடம்பெற்ற சில வாரங்களுக்குப் பின்னரே முஸ்லிம்கள் மீதான இந்தத் தாக்குதல்கள் சிலாபம், மினுவாங்கொட உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்டிருந்தன.
முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பௌத்த தீவிரவாதிகளின் இனவாத சீற்றம் திடீரென ஏற்பட்டதல்ல. அது காலத்துக்குக் காலம் மாத்தறை, அம்பாறை, கண்டி என நாட்டின் பல இடங்களிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்திருக்கின்றன. இந்தத் தாக்குதல்கள் பகிரங்கமாக திட்டமிடப்பட்ட வகையில் வன்முறைக் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
இதனால் அவர்களுடைய நடவடிக்கைகளை அரசாங்கம் அங்கீகரித்ததாகவே கருத வேண்டிய நிலைமையை உருவாகியிருந்தது. ஒரு ஜனநாயக நாட்டில் பெரும்பான்மை இனத்தவர்கள் சிறுபான்மை இன மக்களை அடக்கி ஒடுக்கலாம் என்ற நியதிக்கு இடமில்லை. சிறுபான்மை இன மக்களுடன் இணைந்து விட்டுக் கொடுத்து, அவர்களுயை உரிமைகளுக்கு மதிப்பளித்து, அவற்றுக்குப் பாதுகாப்பு வழங்கி வாழ வேண்டும் என்பதே ஜனநாயக நடைமுறை. ஆனால் இலங்கையின் ஜனநாயகத்தில் அது தலைகீழாகவே இருக்கின்றது.
இனவாத பகை உணர்வுப் போக்கு
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களைத் தொடர்ந்து இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கையைக் கொண்ட பயங்கரவாதிகளுக்கு எதிராகப் பாதுகாப்புப் படையினரும் பொலிஸாரும் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். பயங்கரவாதிகளின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி, நாட்டு மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தமது வழமையான வாழ்வியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வழி செய்யப்பட்டிருக்கின்றது.
அதேவேளை முஸ்லிம்கள் மத்தியில் சிறிய எண்ணிக்கையானவர்களே இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக் கடைப்பிடித்து, பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் அப்பாவிகளான முஸ்லிம்களும் அடங்கியிருந்ததனால், அவர்களைத் தரம் பிரித்து, அடையாளம் கண்டு விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முஸ்லிம் தலைவர்கள் முன்வைத்திருந்தார்கள்.
அந்த கோரிக்கையின் நியாயத்தன்மையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. ஆனாலும், சிங்கள பௌத்த தீவிரவாதிகளின், முஸ்லிம்களுக்கு எதிரான மோசமான இனவாத அணுகுமுறையும் பகை உணர்வுப் போக்கும் தணியவில்லை.
மாறாக சிங்கள பௌத்த தீவிரவாதத்தில் ஊறிப்போயுள்ள பொதுபலசேனா போன்ற இனவாத தீவிரப் போக்குடைய பௌத்த அமைப்புக்களினால் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத சீற்றத்தைத் தூண்டிவிடுகின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலைமையை அரசாங்கம் கண்டும் காணாததுபோன்று நடந்து கொண்டிருக்கின்றது.
இதனால், மதவாதத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தீவிரமான இனவாதப் போக்கு, கட்டுப்பாடின்றி வளர்ச்சிப் போக்கில் முன்னேறத் தொடங்கியிருப்பதையே காண முடிகின்றது. இந்த முன்னேற்றத்தை கண்டியில் நடைபெற்ற பொதுபலசேனா அமைப்பின் மாநாடு சந்தேகத்துக்கு இடமின்றி வெளிப்படுத்தியுள்ளது.
சிங்கள இராஜ்ஜியப் பிரகடனம்
'முழு நாடும் ஓரணியில்' (திரள வேண்டும்) என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், இலங்கையில் சிங்கள இராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மாநாட்டுத் தீர்மானத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிங்களவர்களும் குறிப்பாக பௌத்த மதமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதனாலேயே சிங்கள இராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்ற பிரகடனம் முன்வைக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பின் இந்தக் கருத்துக்குப் பலத்த எதிர்ப்பும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், சிறுபான்மை இன மக்களை அச்சுறுத்துகின்ற இந்த பிரகடன பிரசார நடவடிக்கையை அரசாங்கம் கருத்திலும் கவனத்திலும் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.
இந்த நாடு பல்லின மக்களும் பல மதங்களைச் சேர்ந்தவர்களும் வாழ்கின்ற பல்லினத்துவமுடைய ஜனநாயக நாடாகக் கருதப்பட்ட போதிலும், சிங்கள பௌத்த தீவிரவாதப் போக்குடையவர்கள் இந்த ஜனநாயகக் கொள்கைக்கு எதிரானவர்களாகவே செயற்பட்டு வருகின்றார்கள். இதனால், இன, மத ரீதியாக சிறுபான்மை இன, சிறுபான்மை மதம் சார்ந்த மக்களின் இருப்புக்கு ஏற்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நிலைமாறுகால நீதியை நிலைநாட்டும் நடவடிக்கைகளை அரசாங்கம் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் முன்னெடுத்திருக்கின்றது. ஆனால் பொது பலசேனா போன்ற சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் அதற்கு நேர்மாறானவைகளாக அமைந்திருக்கின்றன. அவை நல்லிணக்க நடவடிக்கைகளுக்குக் குந்தகத்தையே விளைவித்து வருகின்றன.
சிங்கள பௌத்த தீவிரவாதிகளின் செயற்பாடுகள் இனவாத, மதவாதப் போக்குடையவையாக மட்டுமல்ல. பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பவையாகவும் இருக்கின்றன. கண்டியில் பொதுபல சேனா அமைப்பினர் நடத்திய மாநாட்டின்போது, அங்குள்ள முஸ்லிம்கள் அச்சத்தின் பிடியில் சிக்கியிருந்தனர்.
எந்த வேளையிலும் அந்த மாநாட்டில் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான பௌத்த பிக்குகளும் சிங்கள பௌத்த தீவிரவாதிகளும் தங்கள் மீது தாக்குதல்களை ஆரம்பித்துவிடுவார்களோ என்று அச்சத்தில் உறைந்திருந்தார்கள். இதனால் அன்றைய தினம் முஸ்லிம் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்கள் மற்றும் அலுவலகங்களைத் திறக்கவில்லை. அசம்பாவிதங்கள் ஏதும் இடம்பெறாத போதிலும், இத்தகையதோர் அச்ச நிலைமையிலேயே சிங்கள இராஜ்ஜியத்தைப் பிரகடனம் செய்த பொதுபல சேனாவின் மாநாடு நடந்து முடிந்திருந்தது.
அச்சம் நிறைந்த வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.....
பொதுபல சேனா அமைப்பின் தலைமையிலான சிங்கள பௌத்த தீவிரவாதிகளும் பௌத்த பிக்குகளும் தாங்கள் விரும்பிய தருணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வெகுண்டெழுந்து வன்முறைகளில் ஈடுபடுவதை வழமையான நடவடிக்கையாகவே கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் இந்த நடவடிக்கைக்கு சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய அரசாங்கம் ஒரு வகையில் சட்ட ரீதியான அங்கீகாரத்தை வழங்கியுள்ளதோ என்று சந்தேகிக்கின்ற வகையிலேயே நிலைமைகள் காணப்படுகின்றன.
ஞானசார தேரரின் வழியைப் பின்பற்றி அத்துரலிய ரத்ன தேரரும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் துணிந்து இறங்கியிருக்கின்றார். முஸ்லிம் ஆளுநர்கள் இருவர் மற்றும் அமைச்சர் ஒருவர் உள்ளிட்டவர்களை உடனடியாகப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி அதில் அவர் வெற்றியும் பெற்றிருந்தார்.
அவருடைய உண்ணாவிரதப் போராட்ட அழுத்தத்துக்குப் பணிந்து அரசாங்கம் ஆளுநர்களைப் பதவி விலகச் செய்திருந்தது. ஆனால் அமைச்சரைப் பதவி நீக்கம் செய்வதற்கு முன்னர் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தாங்களாகவே தமது பதவியைத் துறந்தார்கள். இருப்பினும் அரசாங்கத்தின் மீது தாங்கள் விரும்பியவாறு அச்சுறுத்தி அல்லது அழுத்தத்திற்கு உட்படுத்தி காரியங்களை சாதிக்க முடியும் என்ற மனப்போக்கை – இனவாத அரசியல் சார்ந்த துணிவை அரசாங்கமே அத்துரலிய ரத்ன தேரர், ஞானசார தேரர் போன்ற தீவிரவாத பிக்குகளுக்கு அளித்திருக்கின்றது.
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலுடன் தொடர்புடைய; பயங்கரவாதத்துடன் தொடர்புடைய ஆதாரமற்ற விடயங்களையே ரத்ன தேரர் தனது உண்ணாவிரதப் போராட்ட நிபந்தனைக்காக முன்வைத்திருந்தார். ஆனாலும் அந்த குற்றச்சாட்டு குறித்து அரசாங்கமோ அல்லது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்குப் பொறுப்பான பொலிஸாரோ அலட்டிக் கொள்ளவில்லை. உண்மையைக் கண்டறிந்து அதற்கேற்ற வகையில் அந்த உண்ணாவிரதத்தைத் தடுக்கவும் முற்படவில்லை.
சிங்கள பௌத்தர்களினதும், அந்தத் தீவிரவாதத்திற்குத் தலைமைதாங்கியும் துணைபோயும் ஆதரவளிக்கின்ற பௌத்த பிக்குகளினதும் நடவடிக்கைகளை அரசாங்கம் உரிய முறையில் கட்டுப்படுத்துவதற்கு முன்வர வேண்டும். இல்லையேல், அவர்களின் கட்டுக்கடங்காத நடவடிக்கைகள் சிறுபான்மை இன மக்களையும் சிறுபான்மை மதம் சார்ந்த மக்களையும் தொடர்ச்சியாக அச்சத்தின் பிடியில் சிக்கி வாழ்கின்ற நிலைமைக்கே இட்டுச் செல்லுவதைத் தடுக்க முடியாமல் போகும்.
அரசியல் அந்தஸ்து இல்லாத ஆபத்து
பொதுபலசேனா அமைப்பினரின் மாநாட்டையோ அல்லது அவர்களின் பிரசார நடவடிக்கைகளையோ தீவிரமாகக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தெருச்சண்டித்தன அரசியலிலேயே ஈடுபடுகின்றார்கள். அவர்களுடைய கருத்துக்கள் ஒருபோதும் அரசியல் நிலைப்பாடாக மாறப்போவதில்லை என்று ஒரு சாரார் வாதிடுகின்றார்கள்.
பொதுபலசேனா அமைப்பினரும்சரி அதுபோன்ற ஏனைய சிங்கள பௌத்த மத தீவிரவாத அமைப்புக்களும்சரி அரசியல் ரீதியான அந்தஸ்தைக் கொண்டவை அல்ல. சிஹல உறுமய போன்று நாடாளுமன்றத்தில் இவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடையாது. அதேவேளை நாடாளுமன்றத்தின் ஊடாக காரியங்களைச் சாதிப்பதற்கு அவசியமான கட்சி ரீதியான அரசியல் அந்தஸ்தும் கிடையாது என்று அவர்கள் காரணம் கற்பிக்கின்றார்கள்.
அவர்கள் கூறுகின்ற காரணங்களை தர்க்கத்திற்காக ஏற்றுக்கொண்டாலும், சிங்கள பௌத்த தேசியவாதத்தை உயிர் மூச்சாகக் கொண்டுள்ள மேலாண்மை போக்கைக் கொண்டுள்ள பேரினவாத அரசியலில் ஆட்சி அமைக்கின்ற அரசியல் சக்தியைத் தீர்மானிக்கின்ற வல்லமை அவர்களிடமே இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.
அதேவேளை, எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும், அவர்கள் பௌத்த பீடங்களினதும், சிங்கள பௌத்த தேசியவாதத்தைக் கொள்கையாகக் கொண்டுள்ள பௌத்த பிக்குகளினதும் விருப்பத்திற்கு மாறாகச் செயற்படத் துணிய மாட்டார்கள் என்ற அரசியல் நிதர்சனத்தையும் மறந்துவிட முடியாது.
உண்மையில் பாரம்பரிய ஜனநாயக வழியைப் பின்பற்றுகின்ற நாடாக இலங்கை தொடர்ந்து திகழ வேண்டுமானால், சிங்கள பௌத்த தேசிய தீவிரவாதப் போக்கை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். சகல இனங்களும் சகல மதங்களைச் சேர்ந்தவர்களும் அமைதியாகவும் ஐக்கியமாகவும் வாழ்வதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இது ஆட்சியாளர்களின் தலையாய கடமையாகும்.
பொதுபலசேனா அமைப்பினரின் எல்லைமீறிய கொள்கைப் பிரகடனமும், செயற்பாடுகளும் நாடு தேர்தல்களை எதிர்நோக்கியுள்ள சூழலில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யார் யார் வேட்பாளர்களாகக் களம் இறங்கப் போகின்றார்கள், தேர்தல் வாக்குறுதிகளாக என்னென்ன விடயங்களை முன்வைக்கலாம் என்பது பற்றி அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையில் சிங்கள இராஜ்ஜியம் உருவாக்கப்பட வேண்டும் என்பது போன்ற கொள்கைப் பிரகடனங்கள் அவர்களுடைய தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தக் கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
எனவே, தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் தேர்தல்களுக்காக எத்தகைய முடிவையும் அல்லது தீர்மானத்தையும் மேற்கொள்ளலாம். ஆனால் பல்லினம் சார்ந்த மக்கள் வாழ்கின்ற இலங்கை என்ற ஜனநாயக நாட்டின் தலைவிதியைப் பிழையான வழியில் அல்லது தவறான வழியில் நிர்ணயிப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்ற பழிச் சொல்லுக்கு ஆளாகாமல் இருப்பதற்காக இனவாத, மதவாத போக்குடைய பௌத்த தீவிரவாதிகளின் செயற்பாடுகளுக்கு எல்லையிட்டு கட்டுப்படுத்த அல்லது மட்டுப்படுத்த முன்வர வேண்டும். இதுவே இன்றைய அரசியல் சூழலில் அத்தியாவசியமான தேவை.
பி.மாணிக்கவாசகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM