நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் நாட்டின் சுற்றுலாத்துறையை பாரியளவில் பாதித்தது. கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வந்த சுற்றுலாத்துறையானது இந்த அசம்பாவிதத்தின் பின்னர் பாரிய தாக்கத்தை எதிர்கொண்டுள்ளது.
காரணம் இந்த தாக்குதல்களில் இலங்கையின் நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலரும் உயிரிழந்திருந்தனர். அது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன்படி ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு பின்னர் சுற்றுலாத்துறை பாரிய சரிவை அடைந்தது. நட்சத்திர மற்றும் சுற்றுலாத்துறை ஹோட்டல்கள் வெறிச்சோடி கிடக்கும் நிலைமை காணப்படுகின்றது. தற்போது சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகமும் சுற்றுலாத்துறையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. எனினும் அது பாரிய சவாலுக்கு உரிய விடயமாகவே உள்ளது.
ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் சிறப்பான பங்களிப்பை செய்து வந்த சுற்றுலாத்துறையை மீண்டும் விரைவாக கட்டியெழுப்பவேண்டிய நிலை காணப்படுகின்றது. சுற்றுலாத்துறையினால் எந்தளவு தூரம் அந்நிய செலாவணி நாட்டுக்குள் வந்து சேர்கின்றனவோ அதேபோன்று உள்நாட்டில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புக்களும் உருவாக்கப்படுகின்றன.
இந்நிலையில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை எவ்வாறு உள்ளன என்பதை பார்க்கவேண்டியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் புள்ளிவிபரங்களின்படி கடந்த மே மாதம் வெறுமனே 37,802 சுற்றுலாப் பயணிகளே இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து வருகை தந்துள்ளனர். இது கடந்த வருடத்தின் மே மாதம் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 70 வீத வீழ்ச்சியாகவுள்ளது. அதேபோன்று கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு 2,44,328 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். ஆனால் மே மாதத்தில் வெறுமனே 37,000 பேர் மட்டுமே வந்துள்ளனர்.
அதேபோன்று கடந்துபோன ஜூன் மாதத்தில் இலங்கைக்கு 63,072 சுற்றுலாப் பயணிகளே வந்துள்ளனர். இது கடந்த வருடத்தின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 57 வீதமான வீழ்ச்சியாகவுள்ளது. எனினும் இங்கு மகிழ்ச்சியடையக்கூடிய ஒரு விடயம் உள்ளது. அதாவது மே மாதத்தின் பின்னர் ஜூன் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது இவ் வாறே அதிகரித்துச் செல்லுமானால் வருட இறுதியில் நிலைமை ஓர் அளவுக்கு திருப்திகரமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
கடந்த 2018 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 2333796 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். அதன்படி 2019 ஆம் ஆண்டில் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை வர வைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எனினும் ஏப்ரல் 21 தாக்குதல்கள் அனை த்து எதிர்பார்ப்புக்களையும் சீர்குலைத்துவிட்டன. தற்போதைய சூழலில் மே மற்றும் ஜூன் மாதங்களில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவே முதலிடம் வகிக்கின்றது. தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு முன்னரும் இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவே முதலிடத்தில் இருந்தது. அந்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்கின்றது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படுகின்ற நீண்டகால நெருக்கமான இருதரப்பு உறவு இதற்கு காரணமாக இருக்கலாம்.
மே மாதத்தில் இந்தியாவிலிருந்து 11,246 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இரண்டாவது இடத்தில் பிரித்தானியாவும்மூன்றாவது இடத்தில் ஆஸி.யும் நான்காவது இடத்தில் ஜேர்மனியும் ஐந்தாவது இடத்தில் சீனாவும் இருக்கின்றன. மூன்றாவது இடத்தில் இதற்கு முன்னர் சீனா இருந்தது. தற்போது சீனா பின்சென்றுள்ளது. கிட்டத்தட்ட இதே நிலைதான் ஜூன் மாதத்திலும் காணப்படுகின்றது.
ஜூன் மாதத்தில் வழமைபோன்று முதலாவது இடத்தில் இந்தியா உள்ளது. ஜூன் மாதம் இலங்கை வந்த 63,000 சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவிலிருந்து மட்டும் 15,048 பேர் வந்துள்ளனர். இரண்டாவது இடத்தில் ஆஸி.யும் மூன்றாவது இடத்தில் பிரித்தானியாவும் நான்காவது இடத்தில் சீனாவும் உள்ளன.
கடந்த மார்ச் மாதத்தின் தரவுகளை நாங்கள் பார்க்கும்போது 2,44,328 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இதில் 34,812 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். அதேபோன்று பிரித்தானியாவிலிருந்து 29,682 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சீனாவிலிருந்து 23,759 பயணிகள் வந்துள்ளனர்.
எப்படியிருப்பினும் மே மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூன் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலைமை மேலும் உயர்வடைய
வேண்டும். நாடு பாதுகாப்பானதாக உள்ளது என்ற விடயம் வெளிநாடுகளுக்கு உணர்த்தப்படுவது அவசியமாகும். ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் இலங்கைக்கு பயணத் தடையை விதித்திருந்த நாடுகள் தற்போது அவற்றை தளர்த்தி வருகின்றன.
2018 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கைக்கு 2333796 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இது இலங்கையை பொறுத்தவரை பாரிய வளர்ச்சியாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்தபோது இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நான்கரை இலட்சங்களாகும்.
எனினும் கடந்த 10 வருட காலப்பகுதியில் 23 இலட்சமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது அபார வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றது. இதனூடாக இலங்கையின் சுற்றுலாத்துறை எந்தளவு தூரம் வளர்ச்சியடைந்து செல்கின்றது என்பதனை புரிந்துகொள்ள முடிகின்றது.
கடந்த 2018 ஆம் ஆண்டு தரவுகளின் பிரகாரம் சுற்றுலாத்துறை காரணமாக 169003 பேர் நேரடியாக தொழில் வாய்ப்புக்களை பெற்றுள்ளனர். அதேபோன்று மறைமுகமாக 219484 பேர் தொழில்வாய்ப்புக்களை பெற்றுள்ளனர். இது இன்னும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.அதனூடாக பார்க்கும்போது சுமார் 4 இலட்சம் பேர் சுற்றுலாத்துறை காரணமாக தொழில்வாய்ப்புக்களை பெற்றுள்ளனர். இதனை வெறுமனே நான்கு இலட்சம் பேர் என்று கூற முடியாது. இங்கு நான்கு இலட்சம் குடும்பங்கள் இதில் தங்கி வாழ்கின்றன என்பதே யதார்த்தமாகும்.
கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கைக்கு சுற்றுலாத்துறை ஊடாக 4,381 மில்லியன் டொலர்கள் வருமானம் கிடைத்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் 3,925 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளன. அதனால் சுற்றுலாத்துறை ஊடாக இலங்கைக்கு எந்தளவு தூரம் வருமானம் கிடைக்கின்றது என்பதனையும் அது பொருளாதாரத்தில் எவ்வளவு முக்கிய பங்களிப்பை செலுத்துகின்றது என்பதனையும் நாம் ஊகிக்கலாம்.
இவ்வாறு அதிகளவு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ள மற்றும் பொருளாதாரத்தில் பாரிய பங்களிப்பை செலுத்துகின்ற சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தற்போதைய சூழலில் இலங்கையின் சுற்றுலாத்துறையை மீளக்கட்டியெழுப்பக்கூடிய இயலுமை அரசாங்கத்திடமே காணப்படுகின்றது. ஏற்கனவே சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகமும் இந்த விடயத்தில் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இந்த விடயத்தில் உலக நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று செயற்படலாம். குறிப்பாக உலக அளவில் உள்ள சுற்றுலாத்துறை தொழில்சார் நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று நடவடிக்கை எடுக்கலாம்.
எப்படியும் தற்போதைய இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படவேண்டியது முக்கியமாகும். நாட்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பான சூழல் உள்ளது என்றது மான செய்தி சரியான முறையில் கொண்டு செல்லப்படவேண்டும். சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் செலவிடும் ஒவ் வொரு டொலரும் எமது நாட்டின் பொரு ளாதாரத்துக்கு வலுச் சேர்க்கும் என்பதனை யாரும் மறந்துவிடக்கூடாது.
எனவே தற்போது இந்த விடயத்தில் செலுத்தப்படும் அதிகூடிய அவதானம் தொடரவேண்டும் என்பதுடன் சுற்று
லாத்துறையை கட்டியெழுப்ப அர்ப் பணிப்புடன் செயற்படவேண்டியது கட்டாயமாகும்.
(ரொபட் அன்டனி)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM