'மக்களுக்கிடையிலான பரிமாற்ற கோட்பாட்டின் அச்சாணியாகும் ஊடகங்கள்'
2ஆவது, சீனா,தெற்காசிய கூட்டுறவு மாநாட்டின் ஓர் அங்கமாக சீனா, தெற்காசிய ஊடக வலையமைப்பினை வலுவாக ஸ்தாபிக்கும் அமர்வொன்று நடைபெற்றிருந்தது. குறிப்பாக, மக்களுக்கிடையேயான பரிமாற்றம் என்ற மூலோபாயக் கொள்கையை நடைமுறைச் சாத்தியமாக்கும் சக்தி ஊடகங்களுக்கு காணப்படுவதை மையப்படுத்தி சீனா-தெற்காசிய ஊடகங்களுக்கு இடையிலான பரஸ்பர பரிமாற்றங்களையும், ஒத்துழைப்புக்களையும் ஏற்படுத்துவதை இலக்காக கொண்டு இந்த அமர்வு நடைபெற்றிருந்தது. இந்த அமர்வின் பிரதான அதிதிகளின் கருத்துக்கள் பின்வருமாறு அமைந்திருந்தன.
சீனாவின் இணைய சங்கங்களின் கூட்டமைப்பின் துணைத் தலைவரும், தலைவரும், சின்ஹூவா செய்தி முகவர் நிலையத்தின் தலைவருமான ரியான் சுபின்,
சீனா மற்றும் தெற்காசிய பிராந்தியத்திற்கு இடையில் புவியியல் ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் பல்வேறு தொடர்புகளைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான நிலையில் சீனாவுக்கும் தெற்காசிய பிராந்திய நாடுகளுக்கும் இடையில் காணப்படும் வெவ்வேறு நாகரிகங்களை இணைக்கும் பாலமாகவும் பரந்துபட்ட ஒத்துழைப்புக்குக்கும் ஊடகங்களின் பங்களிப்பு அவசியமாகின்றது.
சீனாவிலிருந்தும் தெற்காசிய நாடுகளிலிருந்தும் பல்வேறு தொழில் வாண்மை பங்கேற்பாளர்கள் இந்த ஊடகத்துறை வலையமைப்பு கட்டமைப்பொன்றை உருவாக்குவதை இலக்காக கொண்டு நடைபெறும் ஊடகங்கள் வாயிலாக நாடுகளை ஒன்றோடு இணைப்பதற்கான ஒரு தளத்தை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. ஊடகங்கள்; பல்வேறு சவால்களை எதிர்கொள்வதற்குரிய சாத்தியமான நிலைமைகளை கட்டியெழுப்புவதோடு ஊடகங்களுக்கிடையிலான தகவல் தொடர்பாடல் ஒழுங்கை அமைப்பதற்குமான ஏற்பாடுகள் அவசியமாகின்றன என்றார்.
சீன தகவல் செய்தித்தாளான கான்கோக்ஸியாக்ஷியின் தலைவரான வாங் சாவென்,
சமூக ஊடக நிர்வாகத்தை மேம்படுத்துவதன் மூலம் புதிய ஊடக யுகத்தை கான்கோக்ஸியாக்ஷி போன்ற பாரம்பரிய அச்சு ஊடகங்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்கின்றன என்பது தொடர்பில் நான் கருத்துக்களை முன்வைக்கவுள்ளேன். பாரம்பரிய அச்சு ஊடகத்தினை பாதுகாக்க வேண்டிய அதேசமயம் நவீனத்துவத்தின் பால் உருவெடுத்துள்ள புதிய ஊடக கட்டமைப்பை புறக்கணித்து செயற்பட முடியாததொரு காலகட்டத்தில் இருக்கின்றோம் என்பதே யதார்த்தமாகும்.
பாரம்பரிய அச்சு ஊடகம் மற்றும் புதிய அச்சு ஊடகம் ஆகியவற்றை எவ்வாறு கையாள்வது என்பது மிக முக்கியமான விடயமாகின்றது. இதனை பாரம்பரிய கலாசாரத்தினைக் கொண்ட ஊடக கட்டமைப்புக்கள் நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, இவ்விரண்டு கட்டமைப்புசார் ஊடகத்துறைகளும் நெருக்கமாகவும் பரந்துபட்ட ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும். அந்த அடிப்படையில், "தெற்காசிய ஊடகங்களின்; நண்பர்களுடன் நெருக்கமாக ஒத்துழைக்க நாங்கள் தயாராக உள்ளோம்" என்றார்.
நேபாள ஜனாதிபதியின் மொழி மற்றும் கலாசார ஆலோசகர் மாதவ் சர்மா,
சீனா- தெற்காசிய நாடுகளில் மொழி ரீதியான வேறுபாடுகள் சில காணப்பட்டாலும், கலாசார, பண்பாட்டு ரீதியான வெவ்வேறுபட்ட ஒற்றுமைகளும், ஒத்துழைப்புகளும் வரலாற்றுக்காலம் முதல் நீடித்து வருகின்றன. சீனாவின் ஒரே பட்டி மற்றும் மண்டலம் முன்முயற்சியின் ஊடாக பிராந்திய ரீதியான பிணைப்புக்கள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன என்பதை நாம் வெளிப்படையாக உணரக்கூடியதாக உள்ளது.
இந்நிலையில், சீனா மற்றும் தெற்காசிய மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளிடையே புரிந்துணர்வு மற்றும் உணர்வு ரீதியான தொடர்பை மேம்படுத்துவதன் அடிப்படையில், பல்வேறு சாதனைகளை ஏற்படுத்த முடியும். குறிப்பாக, சீனா முன்னெடுத்து வரும் ஒரே பட்டி மற்றும் மண்டலம் முன்முயற்சியின் வெற்றிக்கும், பிராந்திய நாடுகளின் எதிர்காலத்திற்குமான அதீத ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சரங்க விஜயரட்ன,
சீனாவின் மக்களிடையேயான பரிமாற்றம் என்ற கோட்பாடு நபர்களுக்கிடையிலான ஒருவருக்கொருவர் பரஸ்பர புரிந்துணர்வையும் மரியாதையையும் உருவாக்குகிறது. இதில் ஊடகங்களின் பங்களிப்பு என்பது இன்றியமையாததாகின்றது. ஊடகங்கள் மக்களின் பாரம்பரிய மற்றும் உணர்வு ரீதியான விடயங்களையே பிரதிபலிப்பதாக உள்ளன. ஆகவே மக்களிடையேயான பரிமாற்றம் என்ற கோட்பாட்டிற்கான செயல்வடிவத்தினை ஊடகங்களே வழங்குகின்றன.
மேலும் சீனா, நவீனத்துவத்தின் புரிதலை நன்கு உள்வாங்கியுள்ளது. ஆகவே, ஊடக வல்லுநர்களுக்கான தகவல்தொடர்பு தளத்தை உருவாக்க வேண்டிய தார்மீக கடமையை சீனா கொண்டிருக்கின்றது. இவ்வாறான தளத்தினை உருவாக்குவதன் மூலம் தெற்காசிய நாடுகளில் உள்ள மக்களை ஒன்றிணைப்பதற்கான வாயிலை ஏற்பாடுத்த முடியும். இந்த செயற்றிட்டத்தினை முன்னெடுப்பதற்கான முழு அந்தஸ்தினையும் சீனா தன்னகத்தே கொண்டிருக்கின்றது. சீனாவினால் அனைத்து தரப்புக்களையும் ஒன்றுபடுத்த முடியும் என்றார்.
பங்களாதேஷ் தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சின் மூத்த தொடர்பாடல் அதிகாரி அக்ரம் உதின் அகமட் மிர்,
மக்களிடமிருந்து மக்களுக்கான பரிமாற்றம் என்ற கோட்பாடானது, கலாசாரங்கள் உள்ளிட்ட அனைத்து மட்டத்திலுமான உறவுகளை உருவாக்குகிறது. விசேடமாக வெவ்வேறு நாடுகளுக்கிடையிலான மக்கள் குழுக்களுக்கிடையிலான அனைத்து வகையான எண்ணக்கருக்களையும், தனித்துவமான திறன்களையும் பரிமாற்றுவதற்கும் வழிசமைக்கின்றது. மக்களிடமிருந்து மக்களுக்கான பரிமாற்றம் என்ற கோட்பாடு இந்த நூற்றாண்டின் சிறந்த இணைப்பு பலமாக அமைகின்றது என்றால் மிகையல்ல.
இந்த கோட்பாட்டின் மிக முக்கிய பங்காளர்களாக ஊடகங்கள் காணப்படுகின்றன என்று கூறுவதை விடவும் மிக நெருக்கமாக ஊடகங்கள் பிணைக்கப்பட்டுள்ளன என்றே சுட்டிக்காட்டி கூறவேண்டியுள்ளது. ஒவ்வொரு நாடுகளிலும், ஊடகங்களின் ஒத்துழைப்பானது வலுவாக காணப்படுகின்றது. இத்தகைய ஒத்துழைப்பு பிராந்திய ரீதியில் வலுப்பெறுகின்றபோது அதன் பிரதிபலிப்பானது மக்கள் பரிமாணத்தின் வெற்றிக்கு வழிவகுப்பதாக இருக்கும் என்றார்.
இதேவேளை, சீனாவில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பான பகிர்வு மற்றும் பரிமாற்றம், பிராந்திய அபிவிருத்திக்கான வலுவான ஒத்துழைப்பு, மேலதிக தொடர்புக்கான ஒருங்கிணைந்த கண்டுபிடிப்பு ஆகிய தலைப்புக்களில் வட்டமேசை கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருந்தன. இதன்போது, புலனாய்வு ஊடகத்துறை, தரவு ஊடகத்துறை, செயற்கை நுண்ணறிவு, 5ஜி தொழில்நுட்பம், ஐம்பரிமாண நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பயன்படுத்துதல் அவற்றில் உள்ள நன்மை தீமைகள் கையாளும் முறைமைகள் தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அத்துடன் வளர்ந்துவரும், கைத்தொலைபேசி ஊடகவியல் தொடர்பிலிலும் கவனம் செலுத்தப்பட்டது. இறுதியாக, சீன, தெற்காசிய ஊடகப்பிரதிநிதிகளின் பொதுப்படையான கருத்துக்களை கோரும் திறந்த அமர்வொன்றும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(ஆர்.ராம்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM