இந்திய மகளிர் ரக்பி அணி தனது முதல் சர்வதேச அளவிலான வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

ஆசிய மகளிர் ரக்பி சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்று வருகிறது. 2021ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறவுள்ள உலக ரக்பி சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறும் தொடர்களில் ஒன்றாக இது உள்ளது.
இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில், 15 பேர் கொண்ட இந்திய அணியின் வீராங்கனைகள் சிங்கப்பூர் அணியை எதிர்கொண்டனர்.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி வீராங்கனைகள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினர்.

அனுபவம் மிக்க சிங்கப்பூர் அணியின் வீராங்கனைகளின் முயற்சி கடைசி வரை பலனளிக்காததால் 21-19 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி தங்களது வரலாற்று சிறப்புமிக்க முதல் சர்வதேச வெற்றியை பதிவு செய்ததோடு, வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச்சென்றது..
இந்திய மகளிர் ரக்பி அணியின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதலிடத்துக்கான போட்டியில் பிலிப்பைன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட சீனா 68-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது.