‘தெட் ஹவ் டூ ஐ நோ சேர் ? மனமுண் டானால் மார்க்கபந்து’ இவை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என்றும் மறக்காத வசனங்கள் …. இன்றைய இளைய இணைய தலைமுறைகளின் மீம்ஸுகளில் அதிகம் இடம்பெறுகின்ற வசனமும் கூட….
திரைப்பட ரசிகர்களுக்கும் நகைச்சுவை உணர்வாளர்களுக்கும் எப்போது கேட்டாலும் பார்த்தாலும் இந்த வசனங்கள் சிரிப்பை பற்றவைக்கும்.. ஆனால் தற்போது முதன் முறையாக இந்த வசனங்கள் கண்ணீரை வரவழைத்து சென்றுள்ளன. காரணம் இந்த வசனத்துக்கு சொந்தக்காரர் இன்று நம்மோடு இல்லை…
மனிதனை மனிதத்துடனும் மகிழ்வுடனும் வாழவைக்கின்ற உணர்வுகளில் நகைச்சுவை என்பது முக்கியத்துவம் பெறுகின்றது. ஆனால் இந்த நகைச்சுவை சில நேரங்களில் ஏனையவர்களின் இயலாமையை எள்ளி நகையாடுகின்றதாகவோ ஒருவரின் மனதை புண்படுத்துவதாகவோ அமையலாம். குறிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு மனிதனின் உருவ உடல் குறைபாடுகளைக்கூட நகைச்சுவையாக காண்பிக்கின்ற வக்கிரத்தை பார்த்திருக்கின்றோம். மிகப்பெரிய நகைச்சுவை நடிகர்கள்கூட இந்த வக்கிரத்தை தமது படங்களில் பயன்படுத்துவது உண்டு. ஆனால் யார் மனதையும் புண்படுத்தாமல் நகைச்சுவையை உருவாக்குகின்ற சிறப்பு ஒரு சிலருக்கு மட்டுமே உண்டு. அந்த ஒரு சிலரில் முக்கியமானவர் கிரேஸி மோகன். ஆம் அவரது நகைச்சுவை யார் மனதையும் புண்படுத்தவோ வேதனைப் படுத்தும் விதமாகவோ ஆபாசமானதாகவோ இருக்காது. அதுதான் அவரது சிறப்பு.
கிரேஸி மோகன் தமிழ்த் திரையுலகில் பிரபலமான கதை -வசனகர்த்தா மற்றும் நடிகராவார். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியவர். 3000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை இயக்கி நடித்தவர். அடிப்படையில் இவர் ஒரு பொறியியலாளர் ஆவார்.
1952ஆம் ஆண்டு ஒக்டோபர் 16ஆம் திகதி பிறந்த இவரின் இயற்பெயர் மோகன் ரங்காச்சாரி. மாணவர் பருவத்திலேயே நகைச்சுவை உணர்வுடன் வளர்ந்த இவரது நகைச்சுவை உணர்வை சக நண்பர்கள் பாராட்டி அவரை நாடகம் எழுத தூண்டினர். 1970-ஆம் ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரியில் 'மெக்கானிக்கல் இன்ஜினி யரிங்' படிப்பை நிறைவு செய்த மோகன் 1979-ஆம் ஆண்டு முதல் தனது நண்பர்களுடன் இணைந்து ‘கிரேஸி’ என்னும் குழு மூலம் மேடை நாடகங்களை இயக்கி, நடிக்க தொடங்கினார்.
இந்நிலையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, 'கிரேட் பாங்க் ராபர்ரி' என்று கல்லூரிகளுக்கிடையேயான போட்டிக்காக அவர் எழுதி, நடித்த முதல் கதைக்கு சிறந்த நடிகர், சிறந்த கதையாசிரியர் என்று இரண்டு விருதுகளை கமல்ஹாசன் கையால் பெற்றார். கமலுடன் அன்று ஆரம்பித்த நட்பு இறக்கும் வரையில் தொடர்ந்தது.
பெரும்பாலும் பிறரை எரிச்சலூட்டும் நகைச்சுவை கிரேஸி மோகனிடம் இருந்ததில்லை. உடல் ஊனமுற்ற, மனநலம் குன்றியவர்களைப் பற்றிய நகைச்சுவைகளை ஒரு கட்டத்துக்குப் பிறகு நிறுத்திக்கொண்டு, அத்தகைய ஆரம்ப கால எழுத்துகளுக்காக வருந்தி மன்னிப்பு கேட்டவர்.
கிரேஸி மோகன் எப்போதும் கூட்டு குடும்பமாக வாழவே ஆசைப்பட்டவர். அவரது குடும்பம் கூட்டு குடும்பம்தான். முதியோர் இல்லங்களில் நாடகம் போடும்போது கூட்டுக்குடும்பங்கள் இல்லாததன் விளைவே முதியோர் இல்லங்கள் என அவர் மனம் வருந்தியதாக கூறப்படுகின்றது. அவரது மனைவி பெயர் நளினி. இவர்களுக்கு அஜய், அர்ஜுன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது சகோதரர் மாது பாலாஜி இவரும் கிரேஸி மோகனின் நாடகங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இதேவேளை, மோகன் ரங்காச்சாரியார் எனும் இயற்பெயர் கொண்ட இவர் முதன் முதலில் எஸ்.வி.சேகருக்காக, 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' என்ற நாடகத்தை எழுதிக்கொடுத்தார். அந்த நாடகத்தை, எஸ்.வி.சேகர் மேடை யேற்றினார். அந்த நாடகம் மாபெரும் வெற்றி பெற்றமையால் அதுவரையில் மோகன் ரங்காச்சாரியாக இருந்தவரை 'கிரேஸி மோகனாக' மாற்றியது. அன்றிலிருந்து ரசிகர்கள் அன்போடு 'கிரேஸி மோகன்'என்று அழைத்து வந்தனர். 'சாக்லேட் கிருஷ்ணா' என்னும் அவரது நாடகம் 3 வருடங்களில் 500 முறை மேடையேற்றப்பட்டு சாதனை படைத்தது. நாடகங்கள் அழியும் காலத்தில் அவற்றை காப்பாற்றிய பெருமை இவரையும் சேரும். சினிமா தாண்டி பல்லாயிரகணக்கான நாடக ரசிகர்கள் இவருக்கு உலகெங்கிலும் உள்ளனர்.
கிரேஸி மோகனை முதன் முதலில் தனது ‘பொய்க்கால் குதிரைகள்’ படத்துக்கு வசனம் எழுத வைத்தவர் இயக்குநர் பாலச்சந்தர். கமல்ஹாசன் நடித்த பொய்க்கால் குதிரைகள் எனும் இத் திரைப்படமானது கிரேஸிமோகனின் 'முடித்திருத்தத்தில் நிச்சயமாக திருணம்' என்ற நாடகத்தின் சினிமா வடிவமே ஆகும்.
இயல்பான வசனங்களால் நகைச்சுவை உணர்வைத் தூண்டி, ரசிகர்களைக் கட்டியிழுக்கும் கலை கிரேஸி மோகனுக்கு கைவந்திருந்தது. நடிப்பைப் பொறுத்தவரையிலும் கிரேஸி மோகனின் நடிப்பு மிக இயல்பானது. நாடகங்களிலும் சரி, திரைப்படங்களிலும் சரி, இந்த இயல்பை அவர் விட்டதில்லை.
கமலின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், இந்தியன், பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி, காதலா காதலா, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட கமலின் பல வெற்றித் திரைப்படங்களுக்கு கதை மற்றும் வசனகர்த்தாவாக பணியாற்றினார். திரைக்கதையை முழுக்கவே நகைச்சுவையாக எழுதுவதில் கிரேஸி மோகன் பெயர் பெற்றவர்.
அது மட்டும் அல்ல நடிகர் ரஜினியின் அருணாசலம் இயக்குநர் சங்கரின் காதலன், இந்தியன் உள்ளிட்ட பல படங்களுக்கு கிரேஸி மோகனே வசனகர்த்தா.
ஆன்மீக படமான ஸ்ரீ ராகவேந்திரர் திரைப்படத்துக்கு தான் வசனம் எழுதுவதாக இருந்ததாக முன்பொருமுறை ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் கிரேஸி மோகன். எழுதியிருந்தால் வேறொரு கிரேஸி மோகனையும் நாம் சந்தித்திருக்கலாம். ரட்சகன் திரைப்படத்தில் கிரேஸி மோகன் எழுதியிருந்த வசனத்தில், கொஞ்சம் கூட வழக்கமான கிரேஸியை பார்க்க முடியாது. ராஜமௌலியின் நான் ஈ மற்றும் ஆஹா போன்ற பல திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாக பணிபுரிந்துள்ளார். பல திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.ஸில் 'மார்க்க பந்து"என்ற இவரது பாத்திரம் மிக பிரசித்தி பெற்றதோடு 'தெட் -ஹவ் டூ ஐ நோ சேர்?' என்று அவர் பேசும் வசனம் அவரது அடையாளமாக மாறியது. அத்திரைப்படத்தின் மூலம் வயிறு குலுங்கும் காலத்தால் அழியா சிரிப்பை சினிமா ரசிகர்களுக்கு அவர் தந்து விட்டுச் சென்றுள்ளார்.
நடிப்பையும், வசனங்களையும்விட கிரேஸி மோகனுக்கு பன்முகத் திறமைகளும் உண்டு. நன்றாக ஓவியம் வரைவதில் கிரேஸி மோகன் கெட்டிக்காரர். மரபுக் கவிதைகளை எழுதுவதில் வல்லவர். பல வெண்பாக்களும் எழுதியுள்ளார். நல்ல இசை ஞானமும், சங்கீதமும் அவருக்கு அத்துப்படி. தமிழக அரசின் 'கலைமாமணி' விருதை பெற்றிருக்கிறார்.
எப்பொழுதும் ரசிகர்களை ரசித்து சிரிக்க வைக்கும் கிரேஸி மோகன் முதல் முறையாக தற்போது அழவைத்து சென்றுள்ளார்.
இந்நிலையில் கமலின் ஆஸ்தான வசனகர்த்தாவின் மறைவு குறித்து கமல் தெரிவித்துள்ள இரங்கலானது,
'நண்பர் கிரேஸி மோகன் அவர்கள் மீது நான் பொறாமைப்படும் பலவற்றில் மிக முக்கியமான விஷயம் அவரது மழலை மாறாத மனசு. அது அனைவருக்கும் வாய்க்காது. பல நண்பர்கள் லெளகீகம் பழகிக்கிறேன் பேர் வழி என்று அந்த அற்புதமான குணத்தை இழந்திருக்கின்றனர்.
கிரேஸி என்பது அவருக்கு பொருந்தாத படம். அவர் நகைச்சுவை ஞானி. அவரது திறமைகளை அவர் குறைத்துக்கொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சகமாக தன்னைக் காட்டிக் கொண்டார் என்பதுதான் உண்மை
பல்வேறு தருணங்களில் சாருஹாசன், சந்திரஹாசன், மோகன்ஹாசன் என்றும் வைத்துக் கொள்ளலாம் என பகிரங்கமாக தன் பாசத்தை வெளிக்காட்டியவர்.
அந்த நல்ல நட்பின் அடையாளமாக, இன்று அவரது சகோதரர் பாலாஜி அவர்களுடன் இணைந்து நண்பர் மோகன் அவர்களின் நெற்றியில் கைவைத்து பிரியாவிடை கொடுத்தோம். நட்பிற்கு முடிவு என்பது கிடையாது. ஆள் இருந்தால்தான் நட்பா என்ன? மோகன் அவர்களின் நகைச்சுவை அவரது ரசிகர்கள் மூலம் வாழும், அந்த வாழ்விற்கு நானும் துணையிருப்பேன்.
அவரது குடும்பம் ஒரு அற்புதமான கூட்டுக்குடும்பம். அவர்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது, போதாது. இந்த இழப்பை தாங்கிக்கொள்ள அவர்கள் பழகிக்கொள்வதற்கு மனோதிடம் வாய்த்திட வேண்டுகிறேன்.' இவ்வாறு கமல்ஹாசன் தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லையெனில், நான் என்றைக்கோ தற்கொலை செய்துகொண்டிருப்பேன்” என்று காந்தியடிகள் கூறியது போல இப்போதைய காலகட்டத்தில் வேலைப்பளு, குடும்பப் பிரச்சினை, பொருளாதாரச் சிக்கல் போன்ற தங்களுடைய மோசமான சூழ்நிலையில் இருந்து தங்களின் மனதை மாற்றிக்கொள்ள நகைச்சுவையை மக்கள் நாடுகிறார்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆரோக்கியமாகவும், உந்துதலாகவும் இருக்க நகைச்சுவை பெரிதும் தேவை. இன்று நாம் அனைவரும் பரபரப்பான சூழ்நிலையில் சிரிக்க மறந்து எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்நிலையில் நம்மைக் கொஞ்சமாவது இயல்பாக இனிமையாக்க வைப்பது ஆபாசம் விரசம் இல்லாத நல்ல திரைப்பட நகைச்சுவைகள். அவற்றை எமக்கு தந்த கிரேஸி மோகனுக்கு தமிழ் பேசும் நல்லுலகம் நன்றி கூற என்றும் கடமைப்பட்டுள்ளது.
'டக்னு ஒரு ஹார்ட் எட்டக்; உடனே போயிடணும்!'னு கிரேஸி மோகன் அடிக்கடி சொல்வாராம். அவர் ஆசைப்படியே அவரின் மரணம் நடந்திருக்கிறது. ஆனால் அவரது நகைச்சுவையையும் கதை வசனங்களையும் கட்டித் தழுவ மரணத்தால் முடியாது என்றும் அவை மரணங்களைக் கடந்து அமர காவியங்களாக வாழும்.
குமார் சுகுணா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM