அரசியலில் அவ்வப்போது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்துவது வைகோவுக்கு ஒன்றும் புதியதல்ல. ஆனால் இம்முறை வைகோ ஒரு புரட்சியை நடத்தியிருக்கிறார். இதில் ஆடிப்போயிருப்பது. ம.தி.மு.க.வினரும் அவரது கூட்டணி கட்சிகளும் மட்டும் அல்ல. முழு தமிழக அரசியல் வட்டாரமும்தான்.
தமிழகத்தை பொறுத்தவரையில் கட்சித் தலைவர்கள் தமது வேட்பாளர் பட்டியலை மாற்றுவது வழமையான ஒரு விடயம். இத்தேர்தலில் கூட ஆளும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகளின் தலைமைகள் தாம் முன்னர் அறிவித்த வேட்பாளர்களை மாற்றி புதிய வேட்பாளர்களை அறிவித்துள்ளார். ஆனால் தமிழக வரலாற்றில் முதல்முறையாக ஒரு தலைவர் தனது பெயரை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கியிருக்கிறார். இது யாருமே செய்யத் துணியாத ஒரு காரியம். அதனால்தான் வைகோ புரட்சி செய்துவிட்டார் என்கிறேன்.
தமிழர்கள் தனது உயிர் என்று வார்த்தை ஜாலம் காட்டும் அரசியல் தலைமைகளுக்கு மத்தியில் தமிழனுக்கு உலகின் எந்த மூலையில் எந்த துன்பம் ஏற்பட்டாலும் உடனே அதற்கெதிராக கிளர்ந்தெழுந்து குரல் கொடுப்பவராக வைகோ உள்ளார். ஈழப்பிரச்சினை, காவிரி பிரச்சினை என எந்த பிரச்சினையாக இருந்தாலும் முதல் குரல் கொடுப்பவர்களில் ஒருவராக வைகோ உள்ளார். 50 வருட கால அரசியல் ஞானம் உள்ள இந்த தமிழன் தமிழகத்தின் ஆளும் சக்தியாக மாறுவதை வெறுப்பவர்கள் இருப்பது குறைவே. ஆனால், திறமை, ஆளுமை என அனைத்தும் இருந்தும் அதனை சரிவர பயன்படுத்தக் கூடிய அரசியல் சாணக்கியம் அற்றவராகவே வைகோ காணப்படுகின்றார். அவரது அரசியல் வாழ்க்கையைப் புரட்டிப்பார்த்தால் அவரது தெளிவற்ற முடிவுகளினால் அவர் இழந்த சந்தர்ப்பங்களே அதிகமாக உள்ளது என்பதனை நாம் கண்கூடாக அறியலாம்.
தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்நேரத்தில் வைகோ வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்காக தேர்தல் அலுவலகம் வரை சென்று கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றியமை அவரை சார்ந்தவர்களை மட்டும் அல்லாது முழு அரசியல் வட்டாரத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு எதிராக ஒருமாற்று அணியை தமிழகத்தில் உருவாக்கி ஆட்சியைக் கைப்பற்றுவோம், புரட்சியை ஏற்படுத்துவோம் என்று உரக்க குரல் கொடுத்து புதிய கூட்டணியை உருவாக்கியவர் இன்று சாதி மோதல் வந்துவிடும் என்று தேர்தலுக்கு முழுக்கு போட்டுள்ளார்.
1964 ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா முன்னிலையில் சென்னை கோகலே மன்றத்தில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு தனது பேச்சாற்றல் மூலமாக வைகோ அரசியல் வாழ் வில் தன் முதல் அடியை எடுத்து வைத்தார்.
பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக மாறிய வைகோ 1978 -ஆம் ஆண்டு முதன் முதலாக மாநிலங்களவை உறுப்பினராகவும் 1984 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராகவும் 1990 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராகவும் 18 ஆண்டுகள் பதவியில் இருந்தார். ஆயினும், 1992 ஆம் ஆண்டு தி.மு.க. தலைவர் கருணாநிதியைக் கொலை செய்ய முயற்சித்தார் என்று கொலைப்பழி சுமத்தப்பட்டு தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை 1994 ஆம் ஆண்டு தொடங்கினார்.
தி.மு.க.வில் ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் நடத்த முயற்சிப்பதாக சொல்லி தனிக்கழகம் கண்ட வைகோ, 1996 ஆம் ஆண்டு ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தார். அ.தி.மு.க. ஊழல் கட்சி, தி.மு.க. குடும்ப கட்சி என்ற விமர்சனத்தை முன்வைத்து சட்டப்பேரவைக்கும் பாராளுமன்றத்துக்கும் ஒருசேர போட்டியிட்டார். இரண்டிலுமே கிடைத்தது தோல்விதான். இத்தேர்தலில் அ.தி.மு.க. வரலாறு காணாத தோல்வியை கண்டதோடு, தி.மு.க. ஆட்சிப்பீடம் ஏறியது. இதன்போது ‘காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது சில சந்தன மரங்களும் அடித்துச் செல்லப்படும். அப்படித்தான் அ.தி.மு.க.வுக்கு எதிரான அலையில் நாங்களும் அடித்துச் செல்லப்பட்டு விட்டோம்’ என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்ட வைகோ பின்னர் 1998 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் வாஜ்பாயை பிரதமராக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. -– பா.ஜ.க. கூட்டணியில் இணைந்தார். ஊழல் கட்சி என்று அ.தி.மு.க. வை விமர்சித்த வைகோ அ.தி.மு.க.வுடனேயே கூட்டு சேர்ந்து அத்தேர்தலில் சிவகாசியில் போட்டியிட்டார். அதில் வைகோ வெற்றியும் பெற்றார். அதன்போது வாஜ்பாய் தலைமையிலான அரசில் வைகோவுக்கு அமைச்சரவை பொறுப்பு வழங்க தயாராக இருந்தனர். ஆனால் வைகோ அதனை தவறவிட்டார். இந்நிலையில் வாஜ்பாய் தலைமையிலான அரசை 13 மாதங்களில் அ.தி.மு.க. கவிழ்த்தது. இதனையடுத்து ‘ஜெயலலிதா தமக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக கூறி அந்தக் கூட்டணியில் இருந்து வைகோ விலகினார்.
பின்னர் 1999 ஆம் ஆண்டு பாராளு மன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி அமைத்தது. தன்மீது கொலைபழி சுமத்திய தி.மு.க.வின் அந்த அணி யில் வைகோ இடம்பெற்றமை விமர்சனத்துக்கு உள்ளாகியது. ஆயினும் அப்போது ‘‘நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இணையவில்லை. தி.மு.க. தான் எங்கள் கூட்டணியில் இணை ந்துள்ளது என்றார்.
1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட வைகோ அதில் வெற்றிபெற்றார்.
ஆனால், 2001 ஆம் ஆண்டு மீண்டும் தி.மு.க.வுடன் தேர்தலில் கூட்டணி அமைக்க முயற்சித்தார். 21 தொகுதிகளை ம.தி.மு.க."வுக்கு வழங்க தி.மு.க. சம்மதித்தது ஆனாலும், 25 தொகுதிகளைக் கேட்ட வைகோ, சங்கரன்கோவில் தொகுதியை தர மறுக்கிறார்கள் என்ற ஒரு காரணத்தைக் கூறி தி.மு.க.வுடனான கூட்டணிப் பேச்சை முறித்தார். கடைசியில், பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட ம.தி.மு.க, அத்தேர்தலில் தோல்வியை தழுவியதோடு பெரும்பாலான இடங்களில் தேர்தல் வைப்பு பணத் தொகையை பறிகொடுத்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தொடர்ச்சியாக ஆதரவளித்து வரும் வைகோ அவர்களுக்கு ஆதரவாகப் பேசியதாக கூறி 2001 ஆம் ஆண்டு பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 19 மாதங்கள் வேலூர் சிறையிலிருந்தார். அதன்போது தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெற்றது. அக்காலப்பகுதியில் தமிழக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி இரண்டு முறை வேலூர் சிறைக்கும் ஒருமுறை பொடா நீதிமன்றத்துக்கும் நேரில் சென்று வைகோவை சந்தித்தார். இதன்விளைவு 2004 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு அச்சாரமானது. கருணாநிதியின் வேண்டுகோளை பிணையில் ஏற்றுவெளியில் வந்த வைகோ, வீட்டுக்குக்கூட போகாமல் அண்ணா அறிவாலயம் சென்றார். அவரை வரவேற்று முரசொலியில் கவிதை எழுதிவிட்டு, சால்வையோடு காத்திருந்தார் கருணாநிதி. ''என் வாழ்நாளில் இனி அண்ணன் கலைஞரை எதிர்க்கமாட்டேன். அரசியல் அனுபவம் எனக்கு கற்றுத் தந்த பாடம் இது’’ என்று அறிவாலயத்தில் நின்று உறுதிபடக் கூறினார் வைகோ. 2004 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் சிவகாசி, பொள்ளாச்சி, வந்தவாசி, திருச்சி ஆகிய தொகுதிகளை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கியது தி.மு.க. ஆனாலும் பழநியை கேட்டு முரண்டு பிடித்தார் வைகோ. அவரை சமாதானப்படுத்த கருணாநிதி முயற்சித்தார். ஆனாலும் சமாதானத்தை ஏற்றுக்கொண்டதுபோல இருந்த வைகோ, கடைசி நேரத்தில் சிவகாசியில் தான் போட்டியிடாமல் சிப்பிப்பாறை ரவிச்சந்திரனை நிறுத்தினார்
இந்தத் தேர்தலில் 4 தொகுதிகளில் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. அதன்போது காங்கிரஸ் தமது அமைச்சரவையில் வைகோவுக்கு இடமளிக்கத் தயாராக இருந்தது. ஆயினும் வைகோ அதனை ஏற்கமறுத்து, அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தார். இதுபோன்ற சந்தர்ப்பங்களை எந்த அரசியல் தலைவனும் அத்தனை இலகுவில் தவறவிடமாட்டான். ஆனால் வைகோ 2 ஆவது முறையாக தனக்கு கிடைக்கவிருந்த அமைச்சரவை பதவியை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் தி.மு. க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தார் வைகோ. திருச்சியில் தேர்தல் சிறப்பு மாநாடு கூட்டிய தி.மு.க., அங்கே வைகோவுக்கும் மிகப்பெரிய உருவ பதாகைகள் வைத்து அழைப்பிதழிலும் முக்கியத்துவம் தந்தது. ஆனால், மாநாட்டுக்கு ஒருநாள் முன்னதாக போயஸ் கார்டனுக்கு போன வைகோ, பாராளுமன்றத் தேர்தலில் நான் சிறையில் இருக்கும்போது தன்னை கட்டாயப்படுத்தி கூட்டணி உடன்பாட்டில் தி.மு.க. இணைத்து விட்டது எனவும், பட்டத்து இளவரசருக்கு அதாவது ஸ்டாலினுக்கு பட்டம் சூட்டுவதற்காக என் கட்சியை நசுக்கப் பார்க்கிறார்கள் என்று பரபரப்பாக பேட்டியளித்தார்.
அதன் பின்னர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தார். அத் தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு 35 தொகுதிகளை அ.தி.மு.க ஒதுக்கியது. அப்போதும் சிவகாசியில் வைகோ போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு ஆர்.ஞானதாஸை நிறுத்தினார். அந்தத் தேர்தலில் 6 தொகுதிகளில் மட்டுமே ம.தி.மு.க. வெற்றிபெற்றது. 2009 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியில் நீடித்த ம.தி.மு.க. 4 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது.
இதனையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.விடம் 25 தொகுதிகளை வைகோ கேட்டு முரண்டுபிடித்தார். ஆனால் 12 தொகுதிக்கு மேல் கொடுப்பதற்கு ஜெயலலிதா மறுத்துவிட்டார். இதனால் ஜெயலலிதாவுடன் முரண்பட்ட வைகோ அ.தி.மு.க. கூட்டணியை முறித்துக் கொண்டார்.
ஆனால் அத்தேர்தலில் அ.தி.மு.க.வுடன் இணைந்து ஜெயலலிதா தமக்கு ஒதுக்கிய தொகுதிகளில் போட்டியிடுவோம், சில தொகுதிகளில் மட்டும் தனித்துப் போட்டியிடலாம் என்று ம.தி.மு.க.வினர் கருத்து தெரிவித்தனர். ஆனால் அவை இரண்டையும் புறக்கணித்துவிட்டு, தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடவில்லை என்ற புதிய முடிவை எடுத்தார் வைகோ. உண்மையில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக தேர்தலில் ஈழத்தின் இறுதி யுத்தம் பெரும் செல்வாக்கை செலுத்தியது. இலங்கையில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு தி.மு.க. – காங்கிரஸ் கட்சியின் கூட்டணியே காரணம் தமிழின துரோகிகள் என தெரிவித்தே எதிர்க்கட்சிகள் அனைத்தும் பிரசாரத்தில் ஈடுபட்டன. இத்தேர்தலில் தொடர்ந்து ஈழப்பிரச்சினைக்கு வெளிப்படையாக குரல் கொடுத்து வரும் வைகோ களம் இறங்கியிருந்தால் நிச்சயமாக வெற்றிப்பெற்றிருப்பார். ஆனால் அவர் தேர்தலை புறக்கணித்துவிட்டார். இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்த வைகோ, 7 தொகுதிகளை பெற்று போட்டியிட்டார். ஆனால், ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை. பதவியேற்பு விழாவுக்கு வைகோவையும் அழைத்தார் மோடி. ஆனால், அந்த பதவி ஏற்பு விழாவில் இலங்கையில் தமிழின அழிவுக்கு காரணமான அப்போதைய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு மோடி அழைப்பு விடுத்ததைக் கண்டித்து, மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளாத வைகோ அன்றைய தினம் டில்லியில் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினார். அதன்பின்னர் கூட்டணியைவிட கொள்கைதான் முக்கியம் என்று சொல்லி, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் தமிழகத்தில் மதவாத, சாதி பிரச்சினைகள், ஊழல் என்பன நிறைந்து விட்டதாக கூறிய வைகோ மக்கள் நலக் கூடியக்கத்தை கடந்த ஆண்டு தொடங்கினார், பின் தேர்தலுக்காக அதை மக்கள் நலக் கூட்டணியாக மாற்றினார். விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூ. கட்சி மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் ஆகிய நால்வரையும் ஒன்றாக்கி வைகோ உருவாக்கியதுதான் மக்கள் நல கூட்டணி. நால்வர் அணி என்று இதனை அழைத்த வைகோ தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தே.மு.தி.க.வை இக் கூட்டணியில் இணைக்க கடும் முயற்சி செய்தார். இதன்போது தி.மு.க.வும் விஜயகாந்தை தம்முடன் இணைக்க பெரும் பிரயத்தனம் செய்தது. கடைசியில் வைகோ வென்றார். தமது கூட்டணியை பஞ்சபாண்டவர் அணி என மாற்றினார். கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கினார். ஆனால் இந்த ஐவர் அணியை தமிழகத்தில் புதியதொரு மாற்று சக்தியாக மாற்ற வைகோ முயற்சித்தார். அதன் விளைவு பழம்பெரும் தமிழக தலைவர்களில் ஒருவரான மூப்பனாரின் மகன் வாசன் தலைமையிலான த.ம.கா.வும் இக் கூட்ணியில் இணைந்தது. தற்போது அறுவர் அணி ஆறுமுகம் என்றெல்லாம் இக் கூட்டணி அழைக்கப்படுகின்றது. இக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ.
இக் கூட்டணி தமிழகத்தின் ஆட்சியை கைப்பற்றுமா என்பது கேள்விக்குறியே. ஆனால் ஒரு மிகச்சிறந்த மாற்று சக்தியாக 2 ஆம் அல்லது 3 ஆம் சக்தியாக உருமாற கூடிய வாய்ப்பு உள்ளது. ஏனெனில் தமிழகத்தை வெள்ளம் புரட்டி போட்டாலும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்று வந்தாலும் அவரது வாக்கு வங்கி பலமாகவே உள்ளது. அதேவேளை குடும்ப ஆட்சி, 3 ஜி ஊழல் மற்றும் ஈழத் தமிழர்களின் படுகொலை என்பன தி.மு.க. கூட்டணியை மீண்டும் மீண்டெழவிடாது பாதகம் விளைவிக்க கூடும்.
இத் தேர்தல் மூன்றாம் சக்தி ஒன்றுக்கு களமாக அமையும். அது ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம். விஜயகாந்த் ஒரு நட்சத்திர போட்டியாளர். அவரை முதல்வராக்குவோம் என்பதில் குறித்த கூட்டணியில் உள்ள அனைவரும் முனைப்பாக உள்ளனர். ஆயினும் ஜெயலலிதாவின் 'பீ' அணியாக வைகோ செயற்பட்டே மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கினார். 1500 கோடி ரூபா இதற்காக கைமாறியதாக தி.மு.க. குற்றம் சுமத்தி வந்தது. இந்நிலையில் வைகோ இந்த தேர்தலில் இருந்து விலகியமை எதிர்க்கட்சியினரின் விமர்சனத்துக்கு மேலும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. கருணாநிதியை சாதியம் கூறி பேசியதாக வைகோவுக்கு எதிராக தி.மு.க.வினர் கொடும்பாவி எரித்து போராட்டகள் நடத்தினர். பின்னர் வைகோ, கருணாநிதியிடம் மன்னிப்பு கோரினார். அத்தோடு காங்கிரஸ் மாநில தலைவர் இளங்கோவன் ஜெயலலிதாவை தாக்கிபேசியமைக்கு கண்டனம் வெளியிட்டிருந்தார். இது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வைகோ செயற்படுகிறார் என்ற குற்றச்சாட்டடை எதிரணியினர் சுமத்துவதற்கு மேலும் வழிவகுத்து கொடுத்துள்ளது. தேர்தலில் போட்டியிட்டால் தோற்று விடுவோம் என வைகோவுக்கு பயம் ஏற்பட்டதாலேயே அவர் போட்டியில் இருந்து விலகியுள்ளார் என்றும் விமர்சிக்கப்படுகின்றது. வைகோவின் உணர்ச்சிவசப்பட்ட நடவடிக்கைகள் கூட்டணியை ஏற்கனவே சங்கடத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், தற்போது தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளமை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் மறுப்பு இல்லை. இது கூட்டணி வெற்றிவாய்ப்பையும் பாதிக்கலாம்.
வைகோ எடுத்த முடிவு சரியா தவறா என்பதனை விட இது ஒரு உணர்ச்சிவசப்பட்ட நடவடிக்கையே ஆகும். தி.மு.க. கோவில்பட்டியில் சாதி மோதலை ஏற்படுத்த முனைகிறது. என்னால் இங்கு சாதிக் கலவரம் ஏற்படக் கூடாது. அதனால்தான் தேர்தலில் இருந்து விலகுகிறேன். போட்டியிடவில்லை என்று வைகோ அறிவித்து விட்டார். உண்மையில் வைகோ வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு முதல்நாள் அவர் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றிருந்த போது அவருக்கு எதிராக சிலர் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தினர். ஆனால், அதனைப் பெரிதாக பொருட்படுத்தாத வைகோ மறுநாள் வேட்பு மனுதாக்கல் செய்ய சென்ற போதிலும் அவருக்கு எதிராக ஒரு கூட்டம் போராட்டம் நடத்தியது. இது வைகோவை உளவியல் ரீதியாக நிச்சயமாக பாதித்திருக்கக் கூடும். ஆனால் கோவில்பட்டியை பொறுத்தவரையில் ம.தி.மு.க.வின் வாக்கு வங்கி பலமாக உள்ள இங்கு கடந்த தேர்தல்களில் ம.தி.மு.க. வெற்றிபெற்றுள்ளது. அத்தோடு கடந்த தேர்தலில் கூட அனைத்து தேர்தல் மாவட்டங்களும் அ.தி.மு.க.வின் அலையில் அடித்து செல்லப்பட்டபோது கூட ம.தி.மு.க. 27000 வாக்குகளை பெற்றது. ஆனால் தற்போது சாதிக் கலவரம் ஏற்பட்டு விடும் என்று கூறி வைகோ பின்வாங்குகிறார். எப்படியோ தெரிந்தோ தெரியாமலோ வைகோ, கருணாநிதியை நாதஸ்வரம் வாசிப்பவர் என்று கூறிவிட்டார். அதற்கு மன்னிப்பு கேட்டும் பயனில்லை. சாதியம் கூறி வைகோ பேசியதாக தி.மு.க.வினர் ஏற்கனவே பல எதிர்ப்புகளை தெரிவித்துவிட்டனர். இதன் தாக்கம் கோவில்பட்டியில் தொடரலாம் என்ற அச்சத்தில் கூட வைகோ போட்டியிலிருந்து விலகியிருக்கலம். ஆனால் இது ஒரு தெளிவற்ற தரமற்ற முடிவே ஆகுமா.
வைகோ, தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித் ததற்கான உண்மைக் காரணம் எதுவாக இருந்தாலும் இந்த முடிவு தேர்தல் களத்தில் தனது கூட்டணியை பலவீனப்படுத்தும் என்பதை உணராதவராக வைகோ உள் ளாரா என கேள்வி எழும்புகிறது. தமது தலைமையான வைகோவே எதிர்ப்புக்கு பயந்து ஒதுங்கினால், பாவம் அவரது கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் என்ன செய்வார்கள்? உளவியல் ரீதியாக இந்த பாதிப்பு அவர்க ளையும் தொடரும் அல்லவா. கல்லூரி பருவத்தில் அண் ணாவின் மனதை வென்றவர். மோடி உட்பட இந்திய பிரதமர்கள் பலருடன் நேரடி தொடர்பில் இருந்தவர். யுத்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனை யாருக்கும் தெரியாமல் இலங்கை வந்து இரகசியமாக சந்தித்து விட்டு தமிழகம் திரும்பி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் பாராட்டைப் பெற்ற வர். அவரது துணிவு இன்று என்னவானது? வைகோ உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு இதுவென்றால் இந்த முடிவு தன்னை நம்பி வந்தவர்களின் அரசியல் வாழ்க்கையையும் பாதித்து விடும் என்பதை வைகோ அறியாதவரா? இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் எந்த ஒரு அரசியல் தலைவனும் தன் வாழ்நாள் முழுவதும் வெறும் போராட்டங்களை மட்டும் நடத் திக்கொண்டிருக்க விரும்பமாட்டான். அதனால் எந்த நன்மையும் விளையாது. ஆனால் இலக்கை அடையலாம். அதாவது, மக்களுக்கான போராட்டங்கள் மூலம் மக்களது செல்வாக்கினை பெற்று அதன்மூலம் அரசியலுக்குள் நுழைந்து ஆட்சி அதிகாரத்தை பெற்று அதன் மூல மாகத்தான் மக்களுக்கு சேவையாற்ற முடியும். 50 வருடங்கள் அரசியல் வாழ்க்கையில் உள்ள தலைவன் வைகோ, இந்த அரசியல் சாணக்கியத்தை அறியாத வராகவா இருப்பார்?
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM