நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களை கண்டித்தும், முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென்றும், முழு முஸ்லிம் சமூகத்தையும் பயங்கரவாதிகள் போன்று சித்திரித்துக் கொண்டிருக்கும் நடவடிக்கைகளைக் கண்டித்தும், முஸ்லிம்களின் மீது மற்றுமொரு வன்முறை கட்டவிழ்த்து விடக் கூடாதென்பதற்காகவுமே முஸ்லிம் அமைச்சர்கள் தங்களின் பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளார்கள்.
முஸ்லிம் அமைச்சர்களின் இந்த முடிவு ஆளும், எதிர்த் தரப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா சிங்கள இனவாதிகளினால் இனநல்லுறவை சீர்குலைத்து குளிர்காய்ந்து கொள்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சியை தோல்வி அடையச் செய்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது பாரபட்சமற்ற விசாரணையை ஒரு மாத காலத்திற்குள் மேற்கொள்ளுமாறும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தையும், பாதுகாப்பு தரப்பினரையும், புலனாய்வுப் பிரிவினையையும் கேட்டுள்ளனர்.
உண்ணாவிரதம்
முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த இனவாத பிரசாரத்திற்கு ஏப்ரல் 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலை தாக்குதல்களையும் பௌத்த இனவாதிகளும், தேரர்களும் சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஆளுநர்கள் அஸாத்சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் மீது பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளதென்று குற்றச்சாட்டுகளை முன் வைத்தாலும், அக்குற்றச்சாட்டுகள் ஆதாரபூர்வமாக முன் வைக்கப்படவில்லை. இவர்களின் மீதான குற்றச்சாட்டுகள் முஸ்லிம் விரோத இனவாத பிரசாரத்திற்கு கருப் பொருளாக கையாளப்படுகின்றதே அல்லாமல் வேறொன்றுமில்லை.
பௌத்த இனவாதிகளின் துணை யோடு இனவாதத்தையும், வன்முறையையும் தூண்டி ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் முஸ்லிம்களின் மீதும் இனவாதக் கருத்துகள் முன் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த வழிமுறையின் மூலமாக ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டாலும் அது நாட்டின் பொருளாதாரத்திற்கும், அமைதிக்கும் நீண்ட காலத்திற்கு துணை செய்யாது. இனவாதம், மதவாதம், வன்முறை ஆகியன நாட்டின் பொருளாதாரத்தையும், அமைதியையும் அழித்துவிடும். மிக மோசமான இந்த ஆயுதங்கள் எந்த வேளையில் யாரைப் பலியாக்கும் என்றும் சொல்ல முடியாது.
1956ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பௌத்த தேரர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக தனிச் சிங்கள சட்டத்தைக் கொண்டு வருவேன் என எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா கொள்கைப் பிரகடனம் செய்தார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும் 1956 ஆம் ஆண்டு தேர்தலில் சிங்கள தனிச் சட்டத்தை கொண்டு வருவோம் என்று தெரிவித்திருந்தது. ஆயினும், தனிச் சிங்கள சட்டத்தை கொண்டு வருவேன் என்று பண்டார நாயக்க முதலில் தெரிவித்தமையால் பெரும்பான்மையான பௌத்த தேரர்களின் ஆதரவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்தது. இந்தப் பின்னணிதான் இலங்கையின் அரசியலில் பௌத்த தேரர்களின் ஆதிக்கம் அதிகரிப்பதற்கு காரணமாகும்.
1956ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. தனிச் சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ் அரசியல்வாதிகள் இதனை எதிர்த்தார்கள். இதனால், பண்டா – செல்வா உடன்படிக்கை செய்யப்பட்டது. இவ்வுடன்படிக்கையில் தமிழுக்கும் அந்தஸ்தும், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குதல் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து பண்டார நாயக்காவுக்கு ஆதரவாக செயற்பட்ட பௌத்த தேரர்கள் அவரது வீட்டின் முன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்கள். ஜே.ஆர். ஜயவர்த்தன கண்டியிலிருந்து கொழும்புக்கு யாத்திரை மேற்கொண்டார். இதன் பின்னர் பண்டா – செல்வா உடன்படிக்கை கிழித்து எறியப்பட்டது. ஆயினும், 1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்மொழி விசேட சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனை பௌத்த தேரர்கள் எதிர்த்தார்கள். 1959ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் திகதி பௌத்த தேரர் ஒருவர் பண்டார நாயக்காவை சுட்டுக் கொன்றார்.
ஆகவே, சிறுபான்மையினருக்கு எதிராக இனவாதம் பேசுவது, வன்முறையை மேற்கொள்வது, உண்ணாவிரதம் இருப்பது என்பது இலங்கையின் அரசியல் வரலாற்றில் புதியதல்ல.
ஆனால், தற்போது அரசியலில் பௌத்த இனவாதிகளின் ஆதிக்கம் கட்டுக்கு அடங்காத நிலையில் இருப்பதாகவே உள்ளது. பௌத்த தேரர்களின் முன்னிலையில் சட்டமும், ஒழுங்கும் கைகட்டி நிற்கும் நிலைமையே உள்ளது. பௌத்த தேரர்கள் நினைத்தால் எதனையும் சாதிக்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலை நீடிக்குமாயின் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென்பதற்காக இன்றைய இனவாதத்திற்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கும் இனவாத அரசியல்வாதிகளின் மீதும் பௌத்த இனவாதம் தமது கொடூரத்தைக் காட்டும். அதாவது, வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாகவே பௌத்த இனவாதத்தை மூலதனமாகக் கொண்டு செயற்படும் அரசியல்வாதிகளின் நிலைமாறும்.
ரிஷாத் பதியுதீன் மீது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று முன் வைக்கப்பட்டது. இதன் மீதான விவாதத்தை ஜுன் மாதம் 18ஆம், 19ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி அடைந்துவிடுமென்ற காரணத்தினால் அத்துரலியே ரத்ன தேரர் 2019 மே 31ஆம் திகதி கண்டி தலதா மாளிக்கைக்கு முன்பாக ரிஷாத் பதியுதீன், ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அஸாத் சாலி ஆகியோர் பதவி விலக வேண்டுமென்று சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். தனது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வலுச்சேர்ப்பதற்காகவே உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். இதன் மூலமாக அத்துரலியே ரத்ன தேரர் தமது போராட்டத்தை பௌத்த துறவிகளின் போராட்டமாக மாற்றினார்.
இந்நிலையில்தான் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் 2019.6.02ஆம் திகதி பகல் 12 மணிக்கு முன்னர் மூன்று பேரும் தங்களின் பதவிகளை இராஜினாமாச் செய்யாது விட்டால் நாடு பூராகவும் பெரும் கொண்டாட்டம் இடம்பெறும் என்று தெரிவித்திருந்தார். இவரின் இந்த அறிவிப்பு கண்டியில் மாத்திரமின்றி முழு நாட்டையும் பதற்ற நிலைக்குள் தள்ளியது. கண்டி முஸ்லிம்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கொண்டார்கள்.
இந்நிலையில் மூவரும் தமது பதவிகளை இராஜினாமாச் செய்யாது போனால் முஸ்லிம்களின் மீது வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெறக் கூடியதொரு சூழல் ஏற்படலாமென்றும் கருதப்பட்டது.
இதேவேளை, சிங்கள அரசியல்வாதிகள் பலர் ஊழல் குற்றச்சாட்டுகளிலும், வேறு குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகியுள்ளார்கள். கடந்த காலங்களில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் கூட அமைச்சர்களாக இருந்துள்ளார்கள். அவர்களுக்கு எதிராக பௌத்த இனவாதம் தனது முகத்தை காட்டவில்லை. உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை மேற்கொள்ளவில்லை. இதன் மூலமாக முஸ்லிம் அரசியல் தலைவர்களின் மீது குற்றச்சாட்டுகளை வைப்பதன் நோக்கத்தை புரிந்து கொள்ளலாம்.
அமைச்சர்கள் இராஜினாமா
இந்நிலையில்தான் 2019.06.03ஆம் திகதி சிரேஷ்ட அரசியல்வாதி ஏ.எச்.எம்.பௌஸியின் தலைமையில் அவரது இல்லத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடினார்கள். மிக நீண்ட நேரமாக கலந்துரையாடினார்கள். பின்னர் அனைவரும் இராஜினாமா செய்ய முடிவெடுத்தனர்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால் தமது சமூகத்திற்காக இவ்வாறனதொரு முடிவினை எடுப்பார்கள் என்று நாட்டில் யாரும் எதிர்பார்க்கவில்லை. பௌத்த இனவாதிகளுக்கும், தேரர்களுக்கும், ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவியை இராஜினாமாச் செய்தமை ஊடாக பௌத்த துறவிகள் நினைத்தால் முஸ்லிம்களுக்கு எதிராக மாத்திரமல்ல யாருக்கு எதிராகவும் எதனையும் சாதித்துக் கொள்ளலாமென்ற நிலையையும், தைரியத்தையும் பௌத்த இனவாதிகளுக்கும், தேரர்களுக்கும் கொடுத்துள்ளது. இது ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய சாபமாகவே அமையும். உண்ணாவிரதம் மூலமாக பௌத்த தேரர்கள் சாதிக்கலாம் என்றால் நாட்டின் அரசியல் யாப்பும், சட்டமும், ஒழுங்கும் தேவையற்ற ஒன்றாகும். அவை பௌத்த துறவிகள், இனவாதிகளை எதுவும் செய்து விட முடியாதென்ற அகங்காரத்தை பௌத்த இனவாதிகளுக்கும், தேரர்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது.
குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குற்றம் செய்யாதவர்கள் தண்டிக்கப்படக் கூடாது. இதுதான் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவாகும். ஆனால், அதனை சட்டத்தில் உள்ள வழிமுறைகளின் ஊடாகவே மேற்கொள்ள வேண்டுமென்பதும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடாகும். ஆனால், சட்டம், ஜனநாயகம், அவசரகாலச் சட்டம் ஆகிய எதனையும் கணக்கில் எடுக்காது, நான் சொன்னால் செய்ய வேண்டுமென்ற கோணத்தில் அத்துரலியே ரத்ன தேரர் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டம் ஜனாதிபதி, பிரதமர், ஜனநாயகம் ஆகிய எல்லாவற்றையும் அடிபணிய வைத்துள்ளது
உண்ணாவிரதத்தின் மூலமாக தங்களுக்கு நீதியை பெற்றுக் கொள்ளலாமென்ற நப்பாசையில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உண்ணாவிரதங்களை மேற்கொண்ட போதெல்லாம் அதனை அரசாங்கம் கணக்கில் எடுக்கவில்லை. ஆனால், அத்துரலியே ரத்ன தேரர் உண்ணாவிரதம் இருந்த போது, அதனை கவனத்திற் கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
இதே வேளை, ஆளுநர் பதவி, அமைச்சர் பதவிகளின் மூலமாக முஸ்லிம்களை பாதுகாத்துக் கொள்ள முடியாதென்பது தெளிவாகியுள்ளது. அதுமட்டுமன்றி பௌத்த இனவாத தேரர்களை மீறி எந்தப் பேரினவாதக் கட்சிகளின் தலைவர்களும், ஆட்சியாளர்களும் செயற்படமாட்டார்கள் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும், முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா நடவடிக்கையை பலவீனமானதொரு முடிவாக யாரும் கருதி விடமுடியாது. முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா பௌத்த இனவாதிகளினதும், தேரர்களினதும், கூட்டு எதிர்க்கட்சியினரதும் திட்டமிட்ட பல நடவடிக்கைகளை தவிடு பொடியாக்கியுள்ளது. அது மட்டுமன்றி பெரியதோர் இனக்கலவரத்தை தடுத்துள்ளது. ஆதலால், வெளிப்படையாக பார்க்கின்ற போது முஸ்லிம்களுக்கு தோல்வியாக இருந்தாலும், சமூகத்திற்கு கேடு என்றால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒற்றுமைப்படுவார்கள், தீர்க்கமான முடிவுகளை எடுப்பார்கள், அமைச்சர் பதவிகளுக்காக சமூகத்தை அடமானம் வைக்கமாட்டார்கள் என்று காட்டப்பட்டுள்ளன. இதனால், முஸ்லிம் சமூகம் வெற்றி பெற்றுள்ளது என்பதே உண்மையாகும்.
பின்விளைவுகள்
முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா மூலமாக கிணறு வெட்டப் போய் பூதம் கிளம்பிய கதையாகியுள்ளது. இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக முஸ்லிம் பிரதிநிதியில்லாத அமைச்சரவை காணப்படுகின்றது. அத்தோடு, சர்வதேசத்தின் கவனம் முஸ்லிம்களின் மீதும் திரும்பியுள்ளது. இந்நிலை இலங்கைக்கு இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒன்றாகியுள்ளது.
இதே வேளை, நாங்கள் முஸ்லிம் அமைச்சர்கள் எல்லோரையும் இராஜினாமாச் செய்ய வேண்டுமென்று கேட்கவில்லை. ஹிஸ்புல்லாஹ், அஸாத்சாலி, ரிஷாத் பதியுதீன் ஆகியோர்களையே இராஜினாமாச் செய்யுமாறு வலியுறுத்தினோம் என்று கூட்டு எதிர்க் கட்சியினர் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அத்தோடு அவர்களின் பேச்சுகளில் முன்பு இருந்த வீரியத்தைக் காண முடியவில்லை. முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா மூலமாக ஹிஸ்புல்லாஹ், அஸாத்சாலி, ரிஷாத் பதியுதீன் ஆகியோர்களின் மீதான குற்றச்சாட்டுகள் இனவாதமானது என காட்டப்பட்டுள்ளது.
இதே வேளை, இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடக்கும் வன்முறைகள் தொடர்ந்தும் அதிகரிக்குமாயின், அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறுமாயின் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் நிலை ஏற்படலாமென்று சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த அமைப்பு உலகில் பலமிக்க முஸ்லிம் நாடுகளின் அமைப்பாகும். இதில் 57 முஸ்லிம் நாடுகள் அங்கம் வகிக்கின்றன. சவூதி அரேபியாவில் நடைபெற்ற இவ்வமைப்பின் கூட்டத்தில் 57 நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தார்கள். இதன்போது இலங்கை முஸ்லிம்களின் நிலைபற்றி ஆராயப்பட்டுள்ளது. இதன் பின்னரே இந்த அறிவிப்பை சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு செய்துள்ளது.
முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமாவை யாரேனும் இனரீதியாக கையாள முற்படுவார்களாயின் அதனை தமிழ் மக்களும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளுமாகிய நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இதே வேளை, முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தங்களது அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று மகா சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் அமைச்சர்கள் விலகியமை இடம்பெற்றிருக்கக் கூடாது. குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதனை அரசுக்கும், பாதுகாப்பு பிரிவுக்கும் நிரூபியுங்கள். நாட்டின் இன்றைய நிலையை புரிந்து கொள்ளாவிடின் நாட்டிற்கு அழுத்தங்கள் ஏற்படும். நாட்டின் அமைதி குலைந்து பாரிய அபாயம் ஏற்படும் என்றும் மகா சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு நிலைமைகள் இருந்தாலும், பௌத்த இனவாதத்தின் பின்புலத்தில் இனவாத அரசியல்வாதிகள் உள்ளமையால் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் வரைக்கும் முஸ்லிம்களின் மீது மட்டுமன்றி ஏனைய சிறுபான்மையினர் மீதும் இனவாதக் கருத்துகள் முன் வைக்கப்படலாம்.
இதே வேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொது மன்னிப்பால் விடுதலையான கலகொட அத்தே ஞானசார தேரர் மீண்டும் தமது கடும்போக்கு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளார். இதனால், ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு அர்த்தமற்ற ஒன்றாகிவிட்டது.
முஸ்லிம்களின் பாதுகாப்பு, இனவாதம், தேவையற்ற கைது என்பவற்றை மையப்படுத்தி அமைச்சர்கள் பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தாலும், இதன் பின்னர் முஸ்லிம்களுக்கு அநியாயம் நடக்காதென்பதற்கு உத்தரவாதமில்லை. குற்றச்சாட்டுகளை முன் வைத்துக் கொண்டாலும், ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்துக் கொண்டாலும் ஆதாரங்கள் முறையாக முன் வைக்கப்படவில்லை என்பதன் மூலமாக குற்றச்சாட்டுகளின் பின்னால் உள்ள முஸ்லிம் விரோதத்தை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
- சஹாப்தீன்-
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM