வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு ஒன்றை இலங்கையில் அமைக்க வேண்டும் எனவும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் ஐ.நா. செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்ரஸுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
வடக்கு, கிழக்கில் பெருமளவில் இராணுவம் குவிக்கப்பட்டு தமிழர் நிலங்களில் இராணுவ அனுசரணைகளுடன் குடியேற்றங்கள் நடைபெறுவதாகவும் பௌத்த மேலாதிக்கத்தைத் தொடர்ந்து ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் விக்னேஸ்வரன் இந்தக் கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
விக்னேஸ்வரன் எழுதிய கடிதத்தின் விபரம் வருமாறு,
இராணுவமானது வடக்கு மற்றும் கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளமையானது நாட்டின் ஏனைய பகுதிகளை பயங்கரவாத அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் அதன் தன்மையை விட்டுக்கொடுக்கும் வகையில் அமைகின்றது. அதேவேளை, தமிழ் மக்களை அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அடக்குமுறைக்குட்படுத்தும் வகையில் அவசர கால சட்டத்தை அரசாங்கம் துஷ்பிரயோகம் செய்வதுடன், தமிழர் நிலங்களில் இராணுவ அனுசரணையுடன் குடியேற்றங்கள் நடைபெறு வதற்கும் பௌத்த மேலாதிக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்துவதற்கும் அனுமதிக்கின்றது.
இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு ஒன்றை அமைப்பதற்கான அவசியம் குறித்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் உங்களிடம் விடுத்த கோரிக்கையை அவசரமாக உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன். அத்துடன் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கைக்கான விசேட பிரதி நிதி ஒருவரை ஐ.நா. மனித உரிமைகள் சபை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்.
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் தற்போது 10 வரையிலான இராணுவக் காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், வவுனியாவுக்கும் கொழும்புக்கும் இடையில் அநேகமாக அப்படியான எந்தக் காவலரண்களும் அமைக்கப்படவில்லை. இந்த இராணுவக் காவலரண்கள் எண்ணற்ற மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் இடங்களாகவும், தமிழ் மக்கள் குறிப்பாக பெண்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்படும் இடங்களாகவும், தன்னிச்சையாக தடுத்துவைக்கப்படும் இடங்களாகவும் இருக்கின்றன.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சமர்ப்பித்துள்ள ஏராளமான மனுக்களைக் கவனத்தில் எடுத்து இலங்கைக்கான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்துகின்றேன். கடந்த 10 வருடங்களில் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள மனித உரிமை மீறல்களையும் இந்த விசேட பிரதிநிதி கவனத்தில் எடுக்க வேண்டும். இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரால் கொல்லப்பட்ட மற்றும் கணக்கில் வராமல் காணாமல் போயுள்ள 70,000க்கும் அதிகமான மக்களை 10ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் நினைவுகூர்ந்தது. இந்த அப்பாவி மக்கள் தவிர, அரசாங்கப் படைகளிடம் வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஆகவே, இந்தத் தருணத்தில் இலங்கை யில் யுத்தத்தின்போதும் யுத்தத்துக்குப் பின்னரும் நடைபெற்ற, நடைபெறும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை நான் வலியுறுத்துகின்றேன். இது சர்வதேசச் சட்டம், பாதுகாப்பு ஆகியவற்றின் ஆட்சிக்கும் பிராந்தியத்தின் செம்மைக்கும் மிகவும் முக்கியமானது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM