வாக்குரிமை நாட்டின் உரிமையுள்ள ஒவ்வொரு குடிமகனதும், குடிமகளதும் பெறுமதி வாய்ந்த அடிப்படை உரிமையாகும். அதனால் அதனை உணர்ந்து, புரிந்து ஒவ்வொருவரும் வாக்காளர் இடாப்பில் தமது பெயரைப் பதிவு செய்வதில் விழிப்பாயிருத்தல் வேண்டும். ஒவ்வோராண்டும் அந்த ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்புகள் மீளாய்வு செய்யப்படுகின்றன. அந்த முறையிலே இவ்வாண்டு அதாவது 2019 ஆம் ஆண்டிற்குரிய வாக்காளர் இடாப்பு மீளாய்வுப் பணிக்கான செயற்பாடுகள் தேர்தல்கள் திணைக்களத்தால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நாட்டு மக்களுக்குரிய உண்மையான இறைமையைச் செயற்படுத்துவதற்கான வலிமை வாக்குரிமைக்கே உள்ளது. இந்த உரிமையைப் பயன்படுத்துவதற்கு வாக்காளர் இடாப்பில் பெயர் பதியப்பட்டு இடம்பெற்றிருப்பது அவசியமாகும். வாக்காளர் இடாப்பில் பெயரில்லாதவர் நாட்டின் உரிமையுள்ள பூரண குடிமகன் என்று கூறமுடியாது. இதுவே உண்மை நிலை.
வாக்குரிமையானது நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் வாக்குச் சீட்டில் புள்ளடியிடுவதற்கு மட்டுமே அல்ல. தாம் விரும்பும் தனக்குரிய பிரதிநிதியைத் தெரிவு செய்யவும் அதேபோல் தாம் ஏற்கனவே ஆர்வத்துடன் வாக்களித்த பிரதிநிதி வழிதவறி செயற்பட்டால் அவரை மீளவும் தெரிவாகாதபடி தடுத்துக்கொள்ளவும் கூடிய வலிமை வாக்குரிமை உள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு. வாக்காளர் இடாப்பில் பெயர் இடம்பெறுவதன் மூலம் தனது இருப்பிடத்தை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும். அதேபோல் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, நற்சான்றிதழ், பரீட்சைக்கான விண்ணப்பத்தை உறுதிப்படுத்தல் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு கிராம சேவை அலுவலரிடம் சேவை பெறச்செல்லும் போது அவர் குறித்த தேவைகளை நிறைவேற்றப் பயன்படுத்துவது வாக்காளர் இடாப்பையேயாகும். வாக்காளர் இடாப்பில் பெயர் இருந்தால் மட்டுமே அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். அத்துடன் தாம் வாழும் பிரதேசத்தில் தமது சமூகப் பிரதிநிதித்துவங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாண்டு அதாவது 2019 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் மீளாய்வுப் படிவங்கள் பிரிவு கிராம சேவை அலுவலர்களூடாகவும், பெருநகரப் பகுதிகளில் விசேட கணக்கெடுப்பு அலுவலகரூடாகவும் யூன் மாதம் 14 ஆம் திகதிக்கு முன் ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் வழங்க தேர்தல்கள் திணைக்களத்தால் விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறித்த திகதி வரை வாக்காளர் இடாப்பு மீளாய்வுப் படிவம் கிடைக்கப் பெறாதவர்கள் தமது பிரிவு கிராம சேவை அலுவலரிடமோ, மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திலோ பெற்றுக்கொள்ள முடியும்.
தமக்குக் கிடைத்த படிவத்தில் வினவப்பட்டிருக்கும் அனைத்து விபரங்களையும் சரியாகப் பூர்த்திசெய்து கிராம சேவை அலுவலரிடமோ, விசேட கணக்கெடுப்பு அலுவலரிடமோ காலம்தாழ்த்தாது வழங்கவேண்டும். எவ்வாறாவது மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கு தமது படிவம் சென்று சேர்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அது வீட்டின் பிரதம குடியிருப்பாளரின் பொறுப்பாகும்.
அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்களித்தோம். அதனால் தமது பெயர்கள் மீளாய்வுப் படிவம் வழங்காவிட்டாலும் அவை இயல்பாகவே வாக்காளர் இடாப்பில் இடம்பெறும் என்று எவரும் தவறாக எண்ணி வாளாவிருந்து விடக்கூடாது. அந்தந்த ஆண்டுக்குரிய மீளாய்வுப் படிவத்தில் பதிந்து கையளிக்கப்படும் பெயர்கள் மட்டுமே அந்த ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் இடாப்பில் இடம்பெறும் என்பதை நினைவிலிருத்திக்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே வாக்காளர் இடாப்பில் இடம்பெற்றிருந்த பெயர்கள் மீளவும் மீளாய்வுப் படிவத்தில் பதியப்பட வேண்டுமென்பதுடன் இவ்வாண்டு யூன் மாதம் முதலாம் திகதியன்று பதினெட்டு வயதைப் பூர்த்தி செய்தவர்களது பெயர்களையும் பதிய வேண்டும். தொழில் மற்றும் கல்வி போன்ற காரணிகளால் குறித்த வீட்டில் தற்போது வதியாதவர்களது, வேறிடங்களிலிருப்பவர்களது பெயர்களும் பதிவு செய்ய வேண்டும். அதேபோல் புதிதாகக் குடிவந்தவர்களாக இருப்பினும் குறித்த வீட்டு முகவரியில் பதிவு செய்ய முடியும்.
இறந்தவர்கள் அல்லது நிரந்தரமாக குறித்த முகவரியிலிருந்து அகன்றவர்களின் பெயர்களைப் பதிவு செய்யக்கூடாது.
வாடகைக் குடியிருப்பாளர்களுக்கும் தாம் வசிக்கும் வீட்டின் முகவரியில் தம்மை வாக்காளராகப் பதிவு செய்துகொள்ளும் பூரண உரிமையுள்ளது. வாடகைக் குடியிருப்பாளரென்று காரணம் கூறி வீட்டுரிமையாளரோ அல்லது கிராம சேவை அலுவலகரோ எவரது பெயரையும் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்வதை மறுக்க முடியாது. அது தேர்தல்கள் சட்டப்படி குற்றமாகக் கருதப்படும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
தொடர்மாடிக் குடியிருப்புகளிலியங்கும் வீட்டு உரிமையாளர் சங்கங்கள் அவற்றில் வாடகைக்குக் குடியிருப்பவர்களின் பெயர்களை வாக்காளராகப் பதிவு செய்வதில் தடையாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதுவும் தவறான குற்றமாகவே கருதப்படும். அதேபோல் அரசியல், தொழிற்சங்க மற்றும் இன, மத, மொழி ரீதியான காழ்ப்புணர்ச்சியாலும் வாக்காளர் இடாப்பில் நியாயமாக இடம்பெற வேண்டிய பெயர்கள் பதியப்படாமல் விடப்படும் சந்தர்ப்பங்களும் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக அறிக்கையிடப்பட்டு வந்துள்ளது.
எவ்வாறிருந்த போதிலும் ஒவ்வொருவரும் தமது வாக்குரிமையின் பெறுமதியையும், வாக்காளர் இடாப்பில் தமது பெயர் இடம்பெறுவதால் கிடைக்கும் நன்மைகளையும் தவறாது கவனத்தில்கொண்டு தமது பெயர்களை மீளாய்வுப் படிவத்தில் பதிவுசெய்து உரியபடி தேர்தல்கள் அலுவலகங்களுக்குச் சென்றடைவதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அரசியல் அமைப்புகளும், தொழிற்சங்கங்களும், சமய சமூக அமைப்புகளும், சமூக நல ஆர்வமுள்ளவர்களும், ஆசிரியர்கள், அதிபர்கள் போன்ற சமூகப் பொறுப்புள்ளவர்களும் அனைவரும் வாக்காளர் மீளாய்வுப் படிவத்தில் தகைமையுள்ள அனைவரையும் இது தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். அது சமூகக் கடமை. சமூகப் பொறுப்பு.
- த. மனோகரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM