நாட்டில் தற்போது மாற்றமடைந்திருக்கும் அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கும் பொதுபலசேனா பொதுச்செயலாளர் வண கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைப் பெற்று விடுதலையாகக்கூடும் என்கிற அதேவேளை, சர்ச்சைக்குரியவராக மாறியிருக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பதவி விலகுமாறு கேட்கப்படக்கூடும் என்று தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
ஞானசார தேரரை கடந்த சனிக்கிழமை வெசாக் பண்டிகையை முன்னிட்டு 734 சிறைக்கைதிகளுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்யும் வைபவத்தில் பங்கேற்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்தச் சந்திப்பிற்கு நிச்சயமான ஒரு அரசியல் அர்த்தம் இருக்கின்றது என்று அந்த வட்டாரம் கூறியிருக்கிறது.
சிங்கள பௌத்த பெரும்பான்மை சமூகத்தின் மத்தியிலும், கத்தோலிக்கர்கள் மத்தியிலும் கூட ஞானசார தேரருக்கு ஆதரவு பெரிதும் அதிகரித்திருப்பதாக அமைச்சரவையின் ஒரு உறுப்பினரான அந்த வட்டாரம் சுட்டிக்காட்டியது.
முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அதிகரித்துவந்த தீவிரவாதப்போக்கு குறித்து, அதிலும் குறிப்பாக அந்தச் சமூகத்தின் ஒரு பிரிவினர் பயங்கரவாதத்தை நோக்கி என்று இல்லாவிட்டாலும் அதிதீவிரமான போக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஞானசார தேரர் கடந்த சில வருடங்களாக எச்சரிக்கை செய்ததை சிங்கள பௌத்த சமூகமும், கத்தோலிக்க சமூகமும் இப்போது விளங்கிக் கொண்டிருக்கும்.
அந்த எச்சரிக்கைக்கு ஆதாரம் என்ன என்று அப்போது ஞானசார தேரரிடம் கேட்ட போது, முஸ்லிம்களிடமிருந்தே வந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் தான் அவ்வாறு எச்சரிக்கை செய்ததாகக் கூறினார்.ஆனால் அவர் கூறியதை அரசாங்கத்திலிருக்கும் எவரும் அக்கறையுடன் நோக்கவில்லை.
ஆனால் நீதிமன்ற அவமதிப்புக்காக ஆறு வருட சிறைவாசத்தை தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் தேரரை விடுதலை செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்குப் பிறகு கிளம்பின என்பது குறிப்பிடத்தக்கது.
வெசாக் தினத்தில் ஏனைய நூற்றுக்கணக்கான கைதிகளுடன் சேர்த்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் ஞானசார தேரரும் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்தக் கைதிகளின் பட்டியலில் அவரின் பெயர் இருக்கவில்லை. எவ்வாறெனினும் வெசாக் கைதிகள் விடுதலை வைபவத்திற்குத் தலைமை தாங்குவதற்காகக் கடந்த சனிக்கிழமை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்ற ஜனாதிபதி,தேரரை சந்தித்ததையடுத்து அவருக்கு மன்னிப்பு அளிக்கப்படக்கூடும் என்ற ஊகங்கள் புதிதாகக் கிளம்பின.
இவ்வாரம் அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த விவகாரம் குறித்துப் பேசப்படக்கூடிய சாத்தியமிருப்பதாக அமைச்சரவை வட்டாரமொன்று கூறியது.
இது இவ்வாறிருக்க இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் தொடர்புகளைக் கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் கதி குறித்து அந்த அமைச்சரவை வட்டாரம் கூறுகையில்,
அவரைப் பதவி விலகுமாறு கேட்பதன் மூலம் நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்துக் கொண்டிருக்கின்றது என்று தெரிவித்தது.
முன்னரொரு தடவை இதேபோன்றே நிதியமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக எதிரணியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்படவிருந்த நிலையில், அவர் பதவி விலகுமாறு கேட்கப்பட்டார் என்பது தெரிந்ததே.
'அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரசாங்க எம்.பிக்கள் ஆதரவளிக்கக்கூடிய அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருக்கக்கூடிய ஆபத்தொன்று இருக்கிறது. அவ்வாறு நடைபெறுமானால் பிரேரணை நிறைவேறக்கூடும்.
ஆனால் அதை எந்த அரசாங்கமும் விரும்பாது. இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு வழி ரிஷாட் பதியுதீனை அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு கேட்பதேயாகும்.
கலாசார ரீதியில் பிரத்யேகமானவர்களாக மாறுகின்ற போக்கு இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அதிகரித்து, ஏனைய சமூகங்களுடனான பிணைப்புக்கள் பலவீனப்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு எதையும் செய்வதற்கு முஸ்லிம் அமைச்சர்கள் உட்பட முஸ்லிம் அரசியல் தலைவர்கள் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
அல்லது அவ்வாறு நடவடிக்கை எடுப்பதற்கு விருப்பத்தை வெளிக்காட்டவில்லை என்று சிங்கள பௌத்த மற்றும் கிறிஸ்தவ அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உணருகிறார்கள். முஸ்லிம்கள் மத்தியிலான அத்தகைய போக்குகளே தீவிரவாதத்தினதும், பயங்கரவாதத்தினதும் வளர்ச்சிக்கான களத்தைத் தயார்ப்படுத்திக் கொடுத்தன" என்று அந்த வட்டாரம் கூறியது.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் கொடூரத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் மத்தியில் ஏற்பட்ட ஆழமான மனப்பாதிப்பை ஆசுவாசப்படுத்துவதற்கு முஸ்லிம் தலைவர்கள் பெரிதாக எதையும் செய்யவில்லை என்று முஸ்லிம் அல்லாதவர்கள் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.
வட இலங்கையின் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவரான ரிஷாட் பதியுதீன் முஸ்லிம்கள் மத்தியிலான தீவிரவாதமயத்தை ஆதரித்ததுடன் தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் சந்தேகநபர்களை விடுதலை செய்விப்பதற்காக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவுடன் தொடர்புகொண்டு தலையீடு செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகின்றது.
பதியுதீன் இராணுவத் தளபதியினால் தெரிவிக்கப்பட்ட அந்தக் குற்றச்சாட்டை மறுத்ததுடன், சம்பந்தப்பட்ட நபர் இராணுவக்காவலில் இருக்கிறாரா என்று அறிய மாத்திரமே விரும்பியதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.
(டெய்லி எக்ஸ்பிரஸ்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM