மரண ஓலங்கள் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இரத்த வாடைகள் இன்னமும் நீங்கவில்லை. உடல் சிதைந்து பலியானவர்கள் புதையுண்ட இடங்களில் பாதிக்கப்பட்ட உறவுகள் வடித்த கண்ணீர் கூட காயவில்லை. இதற்குள் இனவாதம் பேசி இனங்களுக்கு இடையில் கலவரத்தை ஏற்படுத்த ஒரு கும்பல் முயற்சித்து வருகின்றது. இந்த கும்பலின் நோக்கத்தின் பிரகாரம் நாட்டின் சில இடங்கள் கலவர பூமியாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.
கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் 250க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள்.
இந்த கோரச் சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் ஒருவேளை உணவுக்கே மற்றவர்களிடம் கையேந்தும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அசட்டையான செயற்பாடே, உண்டு குடித்து சந்தோசமாக வாழ்ந்து வந்த மக்களை இந்த பரிதாப நிலைக்கு தள்ளியுள்ளது.
இந்த இடத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக எவ்வாறு உதவிகளை வழங்க முடியும்? மரண வலியில் இருந்து எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்க முடியும்? நாட்டையே புரட்டிப் போட்டுள்ள பயங்கரவாதத்தை ஒன்றாக சேர்ந்து எவ்வாறு முறியடிக்கலாம்? நாட்டில் வாழும் இனங்களுக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டு விடாமல் எவ்வாறு ஒன்றிணைந்து செயற்படலாம் என்பது தொடர்பில் அரசியல்வாதிகளும் மதத்தலைவர்களும் இணைந்து ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்கலாம்.
ஆனால் அதற்கு அப்பால் நின்றே, சில அரசியல்வாதிகளும் சில மதத் தலைவர்களும் செயற்பட்டு வருகின்றமை கவலையளிக்கின்றது.
ஒரு கட்டத்தில் நல்லிணக்கம், ஒற்றுமை, மனித உரிமை என வாய்கிழிய பேசியவர்கள் இன்று இனவாதத்தை கக்கிக்கொண்டிருக்கின்றார்கள்.
நாடு தற்போது அசாதாரண சூழ்நிலையில் உள்ளது. ஒவ்வொரு பொது மகனும் மரண அச்சத்துடன் ஒவ்வொரு நிமிடத்தையும் கடத்திக் கொண்டிருக்கின்றான். இதற்கு மத்தியில் இனவாதம் பேசுவது என்பது எவ்விதத்தில் சாலப்பொருந்தும் என தெரியவில்லை.குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்னர்,இலங்கை ஒரு பௌத்த நாடு அல்ல எனவும் இலங்கையர்களின் நாடு எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்தார்.
என்னாலும் சிலர் போன்று கார்ட்போர்ட் வீரனாக முடியும். இலங்கை சிங்கள நாடு பௌத்த நாடு, சிங்களவர்களுக்கு விரும்பியது போன்று வாழ முடியும் என பிரசாரம் செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இலங்கை பௌத்தர்களின் நாடு அல்ல. இலங்கையர்களின் நாடு. அந்த இலங்கையர்களின் நாட்டில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
நாங்கள் பெரும்பான்மையினர் என்ற காரணத்திற்காக எங்கள் நோக்கத்தை மற்றவர்கள் மீது திணிக்க முடியாது என மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருந்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நாட்டு மக்களை ஓரணியில் இணைக்க வேண்டும் என்பதற்காகவே அரசாங்கத்தின் அமைச்சர் என்ற வகையில் மங்கள சமரவீர இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.
ஆனால்..! இதனை புரிந்துகொள்ளாத இனவாதத்தை வைத்து அரசியல் செய்யும் சில அற்ப அரசியல் வாதிகள், அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்த ஆக்கபூர்வமான கருத்தை தூக்கிப்பிடித்துகொண்டு, பெரும்பான்மை மக்கள் இடையே இனவாதத்தை தூவி வருகின்றனர்.
அதாவது இது பௌத்த நாடு. சிங்கள மக்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு. மங்கள சமரவீர எவ்வாறு இந்த கருத்தை கூற முடியும். இந்த அரசாங்கம் சிங்கள மக்களை காட்டிக் கொடுத்து விட்டது. இதற்கு எதிராக நாம் ஒன்றிணைய வேண்டும் என சில அரசியல்வாதிகளும் பௌத்த பிக்குகளும் இனவாதம் பேசி வருகின்றனர்.
உண்மையில் இந்த நாடு யாருக்கு சொந்தமானது. யார் ஆட்சி செய்ய வேண்டும் என விவாதம் செய்வதற்கான தருணம் இதுவல்ல.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை சீராக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்தின் பிரகாரம் 'நான் இலங்கையன்" என்ற எண்ணத்தை ஒவ்வொரு குடிமகன் மனதிலும் உருவாக்கவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவுமே அவர் அவ்வாறான கருத்தை வெளியிட்டிருந்தார்.
ஆனால் இனவாதிகள் எரியும் நெருப்பில் பெற்றோலை ஊற்றுவது போன்று இந்த கருத்தை வைத்து சமாதானத்தை குழப்ப முயற்சிக்கின்றனர்.
இதற்கிடையில் தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்று 1 மாதம் கடந்துள்ள நிலையில் தற்போது இனந்தெரியாத ஒரு கும்பல் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து தாக்கி வருவதோடு அவர்களின் வர்த்தக நிலையங்கள், வீடுகள், வாகனங்கள், பள்ளிவாசல்களை கடுமையாக சேதப்படுத்தி வருகின்றனர்.
நாட்டின் அச்ச நிலைமையை தமக்கு சாதகமாக்கி தமது சுய இலக்குகளை அடைந்துகொள்ள முஸ்லிம் மக்கள் மீதான காழ்ப்புணர்ச்சி தாக்குதல்களை இந்த மர்ம கும்பல் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் சுயஇலாபங்களும் மறைந்திருக்கலாம் என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நாட்டின் அமைதியை சீர்குலைத்து கலவரத்தை ஏற்படுத்த ஒரு கும்பல் முயற்சி செய்து வருகின்றது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்த கருத்தும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது பாரதூரமான விடயமாகும். இந்த மர்ம கும்பலின் இலக்கை அடைந்துகொள்ள இடமளிக்காது பாதுகாப்பு தரப்பு முன்னின்று சரியான முறையில் செயற்பட வேண்டும்.
சில இடங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போதே முஸ்லிம் மக்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பில் அரசாங்கம் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
மேலும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்த கருத்தை வைத்து 'இந்த நாடு யாருடையது?' என இனவாத அரசியலை மேற்கொள்ளாது ஜனநாயக நாட்டில் அனைவரும் சமமான உரிமை உள்ளது என்பதை பிரதிபலிகும் வகையில் அரசியல்வாதிகள் முன்னுதாரணமாக பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
எம்.டி. லூசியஸ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM