ஐஎஸ். ஐஎஸ். பயங்கரவாதிகளின் வழிநடத்தலில் அல்லது தூண்டுதலில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் தற் கொலைக்குண்டுத் தாக்குதல்களையடுத்து, முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகள் நாட்டின் ஸ்திரநிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன.
தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெற்று மூன்று வாரங்களின் பின்னர் சிலாபம் மற்றும் குருணாகல் மாவட்டங்களில் முஸ்லிம்கள் மீது மிக மோசமான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதனால் பெரும் எண்ணிக்கையான முஸ்லிம்கள் தமது வீடுகளை இழந்து அகதிகளாகியுள்ளனர். அவர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்து, நொறுக்கி தீயிடப்பட்டிருப்பதனால், அந்த சமூகத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பதால், அவர்கள் ஆன்மீக ரீதியான பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதல்களை தீவிர மதவெறிகொண்ட முஸ்லிம்களாகிய சிறு குழுவினரே நடத்தியிருந்தாலும், முஸ்லிம்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகப் பயங்கரவாதிகளாகவும், பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களாகவுமே ஏனைய சமூகங்களினால் - குறிப்பாக – பௌத்த சிங்களவர்களினால் நோக்கப்படுகின்றார்கள். சந்தேகிக்கப்படுகின்றார்கள்.
தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் கிறிஸ்தவ தேவாலயங்களிலும், உல்லாசப் பயணிகளின் ஆடம்பர ஹோட்டல்களிலுமே நடத்தப்பட்டன. இந்த கொடூரத் தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டவர்கள் கோரமாகக் கொல்லப்பட்டார்கள். அவர்களில் 40க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டவர்கள். அதேவேளை, கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவர்கள்; தமிழர்கள்.
இந்தத் தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் முஸ்லிம்கள் என்று பொதுவாக விரல் நீட்டப்பட்ட போதிலும், தாக்குதல்களில் கூட்டுப் படுகொலை செய்யப்பட்ட கிறிஸ்தவர்களோ அல்லது கிறிஸ்தவர்களை உள்ளடக்கிய தமிழர்களோ, முஸ்லிம்களுக்கு எதிராக வன்மம் தீர்க்கும் வகையில் அல்லது பழிதீர்க்கும் வகையில் எதிர்த்தாக்குதல்கள் எதனையும் நடத்தவில்லை. ஆத்திரமுற்று கட்டுமீறி நடந்து கொள்ளவும் இல்லை.
கொடூரமான குண்டுத் தாக்குதல்களுக்கும், கோரக்கொலைகளுக்கும் எதிராக பாதிக்கப்பட்ட சமூகத்தினர் உணர்ச்சி வசப்பட்டு கிளர்ந்து எழுந்துவிடக் கூடாது. நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வன்முறைகளில் ஈடுபட்டுவிடக் கூடாது என்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பகிரங்க கோரிக்கை விடுத்திருந்தார். அதேபோன்று பௌத்த மதத் தலைவர்கள் உள்ளிட்ட ஏனையோரும் அமைதி காக்க வேண்டும். சமாதானத்திற்குப் பங்கம் ஏற்படுத்திவிடக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
இதன் காரணமாக தற்கொலைக் குண்டுத் தாக்குதல் கோரக்கொலைகளுக்கு எதிர் வினையான வன்முறைகள் எதுவும் இடம் பெறவில்லை. மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை துரிதமாகவும் நிதானமாகவும், பொறுப்போடும் செயற்பட்டதைப் பலதரப்பினரும் பாராட்டினார்கள். நாடாளுமன்றத்திலும் அவருடைய செயற்பாடு குறித்து பெருமையாகக் கருத்துரைக்கப்பட்டது. அத்துடன், சமாதானத்திற்கான நோபல் பரிசுக்காக அவரைப் பரிந்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கையும்கூட முன்வைக்கப்பட்டிருந்தது.
உடல்கள் சிதறி பரவ, ஆலயங்கள் இரத்த வெள்ளத்தில் தோய்ந்ததனால், கிறிஸ்தவர்கள் ஆறாத் துயரில் ஆழ்ந்து போனார்கள். தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களினால் நாட்டு மக்கள் அனைவருமே அச்சத்தில் உறைந்து போனார்கள். அந்த அளவுக்கு மோசமான சம்பவமாக அந்தத் தாக்குதல்கள் அமைந்திருந்தன.
ஆனால் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு மூன்று வாரங்கள் கழிந்த பின்னர், வடமேல் மாகாணத்தின் பல இடங்களில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது ஏன்? இதற்குக் காரணம் என்ன? - இந்தக் கேள்விகள் பலருடைய மனங்களிலும் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன.
முகப்புத்தகப் பக்கத்தில் சிலாபத்தைச் சேர்ந்த ஒருவர் பதிவிட்ட கருத்து பல்வேறு விதமாக இனவாத ரீதியில் அர்த்தப்படுத்தப்பட்டதையடுத்து, சிலாபத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதல்கள் நடைபெற்றன. அதனால், அங்கு ஏற்பட்ட பதட்ட நிலைமையைத் தணிப்பதற்குப் பொலிசாரும் படையினரும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஊரடங்கு உத்தரவும் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
எதிர்பார்த்தவாறு அந்த வன்முறைகள் சிலாபத்துடன் கட்டுக்கடங்கவில்லை. மினுவாங்கொட, ஹெட்டிப்பொல, பிங்கிரிய போன்ற கிராமிய நகர்ப்புறங்களுக்கும், உட்புற கிராமங்களுக்கும்கூட முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் பரவின. இதன்போது முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அவர்ளுக்குச் சொந்தமான வர்த்தக நிiலையங்கள் கொள்ளையிடப்பட்டு, எரியூட்டப்பட்டன. வன்முறைகள் மிக மோசமாக இடம்பெற்றதையடுத்து, அந்தப் பகுதிகளில் முழுநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வன்முறைகள் கட்டுக்கடங்காமல் நிலைமைகள் மோசமாகிவிடாமல் தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் அரசு இரவு நேர ஊரடங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
தனிச்சிங்களச் சட்டமும் ஸ்ரீ எழுத்து வன்முறையும்
முஸ்லிம்களுக்கு எதிரான இந்தத் தாக்குதல்களை சிங்கள பௌத்த தீவிரவாதிகளே நடத்தினார்கள் என்று பரவலாக நம்பப்படுகின்றது. சிங்கள பௌத்த தேசியவாத அரசியல் நிலைப்பாடு இதன் பின்னணியில் தூண்டுதலாக இருந்தது என்ற சந்தேகமும் உள்ளது. இது முதற் தடவையல்ல. இதற்கு முன்னரும் பல தடவைகள் முஸ்லிம்களை சிங்கள பௌத்த தேசிய தீவிரவாதிகள் இதையும்விட மோசமாகத் தாக்கியிருக்கின்றார்கள்.
அந்த வகையில் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பௌத்த தீவிரவாதத்தின் தொடர்ச்சியான வன்மத்தின் அடையாளமாகவே இப்போதைய தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தத் தாக்குதல்களின் பின்னால் நீண்டதோர் எதிர்ப்பு அரசியல், மதவாத அரசியல், இனவாத அரசியல் என்ற பல்வேறு முகங்கள் மறைந்திருக்கின்றன.
ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரமடைந்தபோது, தமிழர்கள் உயர் அதிகார பீடங்களிலும், துறைசார்ந்த பதவிகளிலும், பொருளாதாரத்திலும் உயர்ந்த நிலையில் இருந்தார்கள். மன்னராட்சிக்கு முடிவேற்பட்டு மக்களாட்சியாகிய ஜனநாயக ஆட்சி மலர்ந்தபோது, பெரும்பான்மையான இனம் என்ற வகையில ஆட்சி நிர்வாகம் சிங்களவர்களின் கைகளில் சென்றடைந்தது. அந்த ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி படிப்படியாக சிங்கள மக்களை முன்னேற்றி முதல் நிலைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அன்றைய தேசியத் தலைவர்கள் என கருதப் படுகின்ற பெரும்பான்மை இன அரசியல் தலைவர்கள் முன்னெடுத்திருந்தனர்.
சீரான திட்டத்துடன், அரசியல் இராஜதந்திரப் போக்கில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக அரச மற்றும் தனியார் துறைகளில் செல்வாக்கு பெறுவதற்கான வழிவகைகள் செய்யப்பட்டன. இதனை அடியொட்டியே சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்ற அரசியல் நிலைப்பாடு கடைப்பிடிக்கப்பட்டது. எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் ஆட்சியில் 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து 1958 ஆம் ஆண்டு ஸ்ரீ என்ற சிங்கள எழுத்தை முதன்மைப் படுத்தி சிங்கள மொழியைத் தமிழ் மக்கள்மீது திணிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அரச மொழி என்றதனாலும், தனிச்சிங்களச் சட்டம் என்றதனாலும் தமிழ் அரச ஊழியர்கள் பதவி உயர்வுக்காக சிங்களமொழி கற்றிருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து பாடசாலைகளில் மாணவர்கள் சிங்கள மொழி கற்க வேண்டும் என்ற கட்டாய நிலைமையும் உருவாக்கப்பட்டது. இதனால் இனக்கலவரம் பெரிய அளவில் நாட்டில் மூண்டது.
இந்த இனக்கலவரத்தின்போது ஸ்ரீ என்ற சிங்கள எழுத்து வாகனப் பதவிலக்கத்தில்; இணைக்கப்பட்டது. வர்த்தக நிலையங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளிலும், பொது இடங்களில் வைக்கப்படுகின்ற பொது அறிவித்தல் பலகைகளிலும் தமிழ் எழுத்துக்களை, தார் பூசி அழித்து, அவமானப்படுத்துவதன் மூலம் வன்முறைகள் தூண்டி விடப்பட்டன. பதிலடியாக வெகு சில இடங்களில் சிங்கள எழுத்துக்கள்மீதும் தார் பூசப்பட்டது. சிங்களவர்கள் தமிழர்களைப் பல இடங்களிலும் தாக்கினார்கள், கடைகள் வீடுகளும் எரியூட்டப்பட்டன.
வீதிகளின் திருத்த வேலைக்காக வைக்கப்பட்டிருந்த தார் நிறைந்த தகரக் கொள்கலன்களைக் கொதிக்க வைத்து திரவ வடிவில் தார் எடுக்கப்பட்டு பெயர்ப்பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் மீது பூசுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. அவ்வாறு தார் கொதிக்கவைக்கப்பட்ட தகரக் கொள்கலன்களில் கையில் அகப்பட்ட தமிழர்களைத் தூக்கிப் போட்டு சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவங்களும் அப்போது இடம்பெற்றிருந்தன.
தொடரும் மத, இனவாத வன்முறைகள்
சிங்களத்தையும் சிங்களவர்களையும் முதன்மை நிலைக்கு உயர்த்தி, சிறுபான்மையினராகிய தமிழ் மக்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக வைத்திருக்க வேண்டும் என்பதே இந்த தனிச்சிங்கள சட்ட உருவாக்கத்தின் பின்னரான இன வன்முறையின் நோக்கமாகும். சிங்களம் மட்டும் என்ற புதிய அரச நிலைப்பாட்டைத் தொடர்ந்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் அத்துடன் நிற்கவில்லை. அவ்வப்போது குறிப்பாக தேர்தல்களின்போது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. அதன் நீட்சியாகவும் உச்ச கட்டமாகவும் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் இன அழிப்பு நடவடிக்கையாக கொழும்பிலும் நாட்டின் முக்கியமான மாகாணத் தலைநகரங்கள், சிறுநகரங்களிலும் மிக மோசமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
நாடெங்கிலும் பரந்து வாழ்ந்து வர்த்தக நடவடிக்கைகளிலும் வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்த தமிழர்கள் வடக்கு நோக்கியும் இந்தியாவை நோக்கியும் துரத்தியடிக்கப்பட்டார்கள். அவர்களின் இருப்பும், தமிழர்களின் பொருளாதாரமும் நிர்மூலமாக்கப்பட்டன. மறுபக்கத்தில் அந்த பொருளாதார வாய்ப்புக்கள் சிங்களப் பேரினவாதிகளினால் கபளீகரம் செய்யப்பட்டன.
மறுபுறத்தில், அரசியல் உரிமைக்கான தமிழர்களின் தொடர்ச்சியான போராட்டங்கள், ஆயுதப் போராட்டத்தை நோக்கி நகர்ந்ததையடுத்து, நாட்டின் அரசியல் கொதிநிலைக்குத் தள்ளப்பட்டது. பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்பட்ட தமிழர்களின் அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட்டமாகிய யுத்தம் 2009 ஆம் ஆண்டு சூட்சுமமான முறையில், அனைத்துலக நாடுகளின் உதவியுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. யுத்த வெற்றி அரச வெற்றிவாதமாகவும் சிங்கள பௌத்த தேசியத்தின் எழுச்சி மிக்க வெற்றியாகவும் கொண்டாடப்பட்டு, அது வளர்ச்சிப் போக்கில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்தப் பின்னணியிலேயே, யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பௌத்த தேசிய தீவிரவாதிகளின் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டன. தொடக்கத்தில் சிங்களவர்கள் மதம் மாற்றப்படுகினறார்கள் என்ற குற்றச்சாட்டில் கிறிஸ்தவ அமைப்புக்களுக்கு எதிராக ஆங்காங்கே நடத்தப்பட்ட தாக்குதல்கள் பின்னர் முஸ்லிம்களின் முன்னேற்றகரமான வர்த்தக நிலையங்கள் மீது இனந் தெரியாத வகையிலான தாக்குதல்களாக மாறின.
இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து சிங்கள பௌத்த தேசியத்தை வரித்துக்கொண்டு தோற்றம் பெற்ற பௌத்த மத தீவிரவாத அமைப்புக்கள் பகிரங்கமாகவே முஸ்லிம்களின் நடைஉடை கலாச்சாரங்களுக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பி, மத ரீதியான வெறுப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுத்தன. குறிப்பாக பொதுபல சேனா இந்த மத வெறுப்புணர்வுப் பிரச்சாரத்திலும், முஸ்லிம்களுக்கு எதிரான மதவாத நடவடிக்கைகளிலும் முன்னணியில் திகழ்ந்தது. முஸ்லிம்களுக்கு எதிராக 2012 ஆம் ஆண்டில் ஆரம்பமாகிய மதவாத, இனவாத போக்கு 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி பெரும் வன்முறையாக வெடித்தது.
தென்மாகாணம் களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்ற இந்த வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர். எண்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அளுத்கம, பேருவளை, தர்கா நகர் ஆகிய நகரங்களில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் வீடுகள் என்பன தாக்கி நிர்மூலமாக்கப்பட்டன. இந்த வன்முறைகளில் 2 ஆயிரம் சிங்களவர்கள் உட்பட 10 ஆயிரம் பேர் அகதிகளாக்கப்பட்டனர். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான உடைமைகள் சேதமாக்கி அழிக்கப்பட்டன.
ஒரு சிறிய சம்பவத்தின் எதிரொலியாக பொதுபல சேனா அமைப்பினர் அளுத்கம, பேருவளை, தர்காநகர் போன்ற நகர வீதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத, மதவாத கோஷங்களை எழுப்பிய வண்ணம் நடத்திய பேரணிகளைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் ஆரம்பமாகின.
தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கிழக்கு மாகாணம் அம்பாறையில் உள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருடைய உணவகத்தில், கருத்தடை மருந்து கலந்த உணவு சிங்கள மக்களுக்கு விற்கப்படுவதாகப் பரப்பப்பட்ட வதந்தியையடுத்து, முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதனையடுத்து, மார்ச் மாதம் மத்திய மாகாணத் தலைநகராகிய கண்டியில் தெல் தெனிய உடிஸ்பத்துவ, திகன, தென்னக் கும்புர ஆகிய இடங்களில் இடம்பெற்ற வன்முறைகள் வர்த்தக பொருளாதார ரீதியாகவும், சமூகம் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் முஸ்லிம்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. இந்த வன்முறைகள் இடம்பெற்று சுமார் 12 மாதங்களின் பின்னர் உயிர்த்த ஞாயிறுதின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையடுத்து, இப்போது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் வடமேல் மாகாணத்தின் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன.
பேரின வன்முறையா, சிங்கள பௌத்த தேசிய பயங்கரவாதமா?
பேரினவாத மேலாதிக்க அரசியல் வழித் தடத்தில் சிறுபான்மை இன மக்கள் தங்களுக்குட்பட்டவர்களாக, ஆட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற கொள்கை பிடிப்பில் பேரினவாத அரசியல் தலைமைகள் பல்வேறு நடவடிக்கைகளைக் கடைப்பிடித்து வருகின்றன. அந்த நடவடிக்கைகள் பகிரங்கமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதேவேளை மறைமுக நிகழ்ச்சி நிரல்களின் ஊடாக இராஜதந்திர உத்திகளையும், பல்வேறு பல்வேறு தந்திரோபாய அரசியல் நுணுக்கங்களையும் பயன்படுத்தி காரியங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைகளும், பேரினவாத அரசியல் போக்கும் நாட்டின் பன்முகத் தன்மையைக் குழிதோண்டிப் புதைத்திருக்கின்றன. இனம், மதம், மொழி சார்ந்த மேலாண்மை அரசியல் போக்கில் தமது கொள்கைகளை நடைமுறைப்படுத்தி, இலக்குகளைச் சென்றடைவதற்காக எதனையும் செய்ய பேரினவாதிகளான அரசியல் தலைவர்கள் தயாராக இருக்கின்றார்கள். இதற்காக உண்மையை இல்லை என்பார்கள். பொய்யை அப்பட்டமான உண்மையென வலியுறுத்துவார்கள்.
தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய மூன்று சமூகத்தினரும், ஐக்கியமாகவும், சமாதானமாகவும் ஒத்திசைந்து சகவாழ்வு வாழ்க்கை வாழ்ந்து வந்த போதிலும், மேலாதிக்க நிலைப்பாட்டில் காதல் கொண்டுள்ள பேரினவாதிகள், பெரும்பான்மை இனம், செல்வாக்குமிக்க வளத்தைப் பயன்படுத்தி சுய அரசியல் இலாபத்திற்காக இனவாத, மதவாத அரசியல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றார்கள்.
குறிப்பாக முஸ்லிம் மக்களின் இயல்பான இனப் பெருக்க நடைமுறையானது, இனப் பரம்பல் அடிப்படையிலான தமது மேலாண்மை சம நிலையைக் குலைத்துவிடுமோ என்ற அச்சம் சிங்கள பௌத்த தேசியவாதிகளிடம் நிறையவே உண்டு. அத்துடன் சிறுவியாபாரம் தொடக்கம் பாரிய வர்த்தக நடவடிக்கைள் வரையிலான அனைத்து வணிகச் செயற் பாடுகளிலும் முன்னணியில் திகழ்கின்ற முஸ்லிம்களின் போக்கு வளர்ச்சிப் பாதையில் செல்வதால், தாங்கள் பொருளாதாரத்திலும் வணிகத்துறையிலும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்ற கரிசனையும் அவர்களிடம் உள்ளது.
மூன்றாவது முக்கியமான காரணம். இது பேரினவாதிகளின் இருப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. குறிப்பாக சவூதி அரேபிய நாட்டின் முஸ்லிம் கலாச்சாரமும், பண்பாடும் இலங்கை முஸ்லிம் மக்களுடைய வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதேவேளை மதரீதியான அவர்களின் அரேபிய நாட்டுச் சாயல் கொண்ட வளர்ச்சியும் தங்களுக்கு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தவல்லது என்ற உணர்வும் சிங்கள பௌத்த தேசியவாதிகளான அரசியல் தலைவர்களிடம் நிறையவே உண்டு.
முஸ்லிம்களின் மத வளர்ச்சிக்கும் மதரீதி யான கலாசாரம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கும் சவூதி அரேபிய நாட்டின் நிதியுதவி மற்றும் பங்களிப்பு என்பன சிங்கள பௌத்த தேசியவாதத்திற்கு அச்சுறுத்தலாகவே கருதப்படுகின்றது.
சவூதி அரேபியா நாட்டின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்படுகின்ற பள்ளிவாசல்கள், அவர்களின் சமய காலாச்சார முன்னேற்ற நடவடிக்கைகள் என்பன சிங்கள பௌத்த பேரினவாதி களுக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவே அவர்கள் கருதுகின்றார்கள். அத்துடன், முஸ்லிம் பெண்களின் கலாசார ரீதியான உடைகளும்கூட, ஓர் அச்சுறுத்தலாகவே நோக்கப்படுகின்றது. இந்த நிலையில்தான் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாகக் கருதப்படுகின்றது.
அதேவேளை, அண்மையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் மூலம் நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குலைத்து, அதனை ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் கையாள முடியாமல் போயுள்ளதாகக் குற்றம் சாட்டி, அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கும் தொடர்ந்து உடனடியாகப் பொதுத் தேர்தல் நடத்துவதற்குமான ஓர் உத்தியாகவே இந்த வன்முறைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும் ஓர் அரசியல் பார்வை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எது எப்படி இருப்பினும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட் டத்தைப் பயங்கரவாதமாக சித்திரித்த பேரின அரசியல்வாதிகளும் அரச தலைவர்களும், நாட்டில் புலிப்பயங்கரவாதம் இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்து பத்து வருடங்களாகிவிட்ட நிலையில் தொடர்ச்சியாக சிறுபான்னை இன மக்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுகின்ற ஒரு போக்கில் திளைத்திருந்த அவர்கள், ஐஎஸ்ஐஎஸ் உலக பயங்கரவாத அமைப்பின் உலக பயங்கரவாதம் உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதல்களுடன் நாட்டில் கரையேறியிருப்பதைக் கண்டு திகைத்துப் போனார்கள். ஆயினும், அந்த உலக பயங்கர வாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்து கொண் டிருக்க, இந்த பயங்கரவாதத் தாக்குதல்களைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, முஸ்லிம்கள் இனவாத போக்கி லும், மதவாத போக்கிலும் தட்டி, அடக்கி வைத்திருப்பதற்கான ஒரு முயற்சி மேற் கொள்ளப்பட்டிருக்கின்றது.
புலிப் பயங்கரவாதத்தை வெற்றிகரமாக முறியடித்துவிட்டோம். அந்த வழியில், ஐஎஸ் பயங்கரவாதத்தை முற்றாக இல்லா தொழிப்போம் என கூறிக்கொண்டு, முஸ்லிம் களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு இடமளித் திருப்பதை வெறுமனே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை என்று வரையறுத்துவிட முடியாது.
எந்தவித தூண்டுதலுமின்றி அப்பா விகளை, உயிர்த்த ஞாயிறுதின தற் கொலைத் தாக்குதல்களின் மூலம் கொன் றொழித்திருப்பது பயங்கரவாதம் என்றால், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தியவர்களையும் அவர்களின் பின்னணியில் உள்ளவர்களையும் அரச படைகள் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் ஒரு சந்தர்ப் பத்தில், பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படாத அப்பாவிகளான முஸ்லிம்களைத் தேடிச் சென்று தாக்குவதும், அவர்களின் உடைமைகளை சேதப்படுத்தி நிர்மூலமாக்குவதும் பயங்கர வாதம்தானே? இதனை சிங்கள, பௌத்த தேசியவாதப் பயங்கரவாதம் என்று கருதுவதில் தவறிருக்க முடியாதல்லவா?
பி.மாணிக்கவாசகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM