உலக பொருளாதார சிக்கல், ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் நாட்டில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமற்ற நிலை காரணமாக அண்மைக்கால வீழ்ச்சியிலிருந்து சற்றுத் தலைதூக்கிக் கொண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதல் பேரிடியாக அமைந்துள்ளது.
இந்த தாக்குதலினால் இலங்கையின் பாரிய தொழில்துறை முதல் பெட்டிக்கடை வியாபாரம் வரை நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. அதே போல் நாட்டுமக்களும் பொருளாதார ரீதியிலும் வாழ்வாதார ரீதியிலும் பாரிய இன்னலுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இலங்கையில் கடந்த மூன்று தசாப்த காலமாக நிலவிய உள்நாட்டு யுத்தத்தின் போது முகம் கொடுக்காத பொருளாதார சிக்கலுக்கு நாடு தற்போது முகம் கொடுத்து வருகின்றது. இதற்கு காரணம் எமது நாடு சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளமையாகும். இந்நிலை இலங்கைக்கு குறுகிய கால பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்துவதை போன்று நீண்ட காலத்திற்கும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
இந்த தாக்குதல் சம்பவமானது எதிர்காலத்தில் இலங்கையின் சென்மதி நிலுவையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுகின்றது.
வெளிநாட்டுத்துறை செயற்பாட்டில் தாக்கம்
வெளிநாட்டுத்துறை செயற்பாடுகளுக்கும் இதன் தாக்கம் நேரடியாக உள்ளதை அவதானிக்க முடிகின்றது. இது நீண்டகால அடிப்படையில் தாக்கம் செலுத்தும் ஒரு காரணியாகும். இலங்கையின் ஏற்றுமதி இறக்குமதி கட்டமைப்பை எடுத்து நோக்கும் போது ஏற்றுமதியை விஞ்சிய இறக்குமதி செலவே பதிவாகி வருகின்றது.
இவ்வாறான நிலையில் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தை கொண்ட எமது நாட்டில் எப்பொழுதும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதில் முனைப்புக்காட்டப்படும்.
இவ்வாறான நிலையில் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் குழப்பகரமான சூழல் இலங்கையில் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் ஆடை உற்பத்தி துறையின் உற்பத்தி மட்டத்தை பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. ஏப்ரல் மாத தாக்குதலுக்குப் பின்னர் உருவாகியுள்ள அச்ச நிலையினால் பல ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் இன்னும் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கவில்லை. மேலும் பல தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் அங்கு ஊழியர்களின் வருகை மிகக் குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றது. இதனால் ஆடை உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை இழக்கும் அபாயம் காணப்படுகின்றது.
ஆடை உற்பத்தி ஏற்றுமதியினால் கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 465.6 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு வருமானமாகக் கிடைத்திருந்தது. இது கடந்த 2018 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட 407.0 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் 14.4 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அதே போல் இவ்வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் 941.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஆடை உற்பத்தி ஏற்றுமதியினால் வருமானமாக கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 11.8 சதவீத வளர்ச்சியாகும்.
இத்தரவுகளை வைத்து நோக்கும் போது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு இலங்கையின் ஆடை உற்பத்தி துறை வளர்ச்சிப் போக்கில் நகர ஆரம்பித்ததை அவதானிக்க முடிந்தது. இவ்வாறான நிலையில் இந்த தாக்குதலின் பின்னர் பாதிக்கப்பட்டுள்ள ஆடை உற்பத்தி துறையினால் எதிர்வரும் காலத்தில் இதன் மூலம் கிடைக்கும் வருமானம் பாரிய அளவு குறைவடையும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இது எதிர்காலத்தில் வர்த்தக நிலுவையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
வெளிநாட்டு முதலீடுகளின் தாக்கம்
இந்த தாக்குதலை அடுத்து இலங்கைக்கான வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கணிசமான அளவு குறைவடைவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன. யுத்தத்திற்கு பின்னர் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு படையெடுக்க ஆரம்பித்து சேவைத்துறை, கைத்தொழில் துறை என பல துறைகளில் தமது முதலீடுகளை மேற்கொண்டனர். இதனால் இலங்கைக்கு கணிசமான அளவு அந்நிய செலாவணி கிடைத்து அந்நிய செலாவணி கையிருப்பு வீதமும் அதிகரிக்க ஆரம்பித்தது. அதேபோல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நேரடி முதலீடுகள் மூலம் இலங்கையில் பல தொழில்வாய்ப்புக்கள் புதிதாக உருவாகி வேலையற்றிருந்த இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெற்று நாட்டின் வேலையில்லாப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பெற்றது. மேலும் இந்த முதலீடுகளினால் உருவான கைத்தொழில் மற்றும் சேவைத்துறைகளினால் உள்நாட்டு உற்பத்திக்கு கணிசமாக பங்களிப்பு கிடைக்கப்பெற்றது.
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரன சூழ்நிலை காரணமாக புதிய முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருவதற்கு எந்த அளவு முனைப்பு காட்டுவார்கள் என்பது கேள்விக்குறியே.
அதே போல் தற்போது இலங்கையில் முதலிட்டுள்ளவர்கள் இலங்கையில் தமது முதலீடுகளைத் தொடர்வது தொடர்பில் இருமுறை சிந்திக்க ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறான நிலை தொடருமானால் வெளிநாட்டு முதலீடுகள் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் பாரிய அளவான அந்நிய செலாவணி கிடைக்காமல் போய் செலாவணி கையிருப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் அதன் காரணமாக நாட்டில் பணவீக்கம் மேலும் அதிகரிப்பதற்கு ஏதுவான காரணியாக அமையும். மேலும் இந்த முதலீடுகள் மூலம் மறைமுகமாக நன்மையடையும் சிறு தொழிலில் முயற்சியாளர்களும் பாதிக்கப்படுவர்.
அதே போல் இந்த முதலீடுகள் மூலம் கைத்தொழில் துறையில் மற்றும் சேவைத்துறையில் தொழில் வாய்ப்பை பெற்றுள்ள பல்லாயிரக் கணக்கானவர்களின் எதிர்கால தொழில் வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளதுடன் எதிர்காலத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்படவிருந்த முதலீடுகளின் வாயிலாக தொழில் வாய்ப்பை பெறவிருந்த பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் போகக்கூடும். இது இலங்கையில் வேலையற்றோர் தொகை அதிகரிப்புக்கு ஏதுவாக அமையும்.
இலங்கையில் வேலையற்றோர் தொகையில் தாக்கம்
இலங்கையில் வேலையற்றோர் தொகை கடந்த வருடம் 4.4 சதவீதமாக காணப்பட்ட நிலையில் யுத்தம் இடம் பெற்ற காலப்பகுதியான 2007ஆம் ஆண்டை எடுத்து நோக்கும் போது அத்தொகை 5.9 சதவீதமாக காணப்பட்டது. 2009 ஆம் ஆண்டு காலம் வரை அது 5 சதவீதத்திற்கு குறையாமல் காணப்பட்டது. அதனை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து அத்தொகை 4 சதவீதத்திற்கு கீழிறங்கியே பாதிவாகிவருகின்றதை அவதானிக்க முடிகின்றது. இதன் அடிப்படையில் நோக்கும் போது யுத்தத்திற்கு பின்னர் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு முதலீடுகள் எமது நாட்டுக்கு தொழில் வாய்ப்பினை உருவாக்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான நிலையில் நாட்டின் அசாதாரன நிலை இவ்வாறே நீடித்து முதலீடுகள் குறைவடையுமாயின் இலங்கையில் வேலையில்லா தொகை பழைய நிலைக்கு திரும்பும்.
மேலும் அண்மைக்காலமாக பங்குச்சந்தை முதலீடுகள் அரச முறிகள் மீதான முதலீடுகளிலும் வெளிநாட்டவர்களின் முதலீட்டு நாட்டம் அதிகரித்து காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
தற்போதைய நிலையில் இலங்கையில் நீண்டகால முதலீடுகளை மேற்கொள்வதற்கு வெளிநாட்டவர்கள் எந்த அளவு முன்வருவார்கள் என்பது கேள்விக்குறியே
பங்குச்சந்தை முதலீட்டின் தாக்கம்
பங்குச்சந்தை முதலீட்டை எடுத்து நோக்கும் போது ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையை (பாதுகாப்பு மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை) அடிப்படையாக கொண்ேட வெளிநாட்டவர்கள் முதலீடு செய்வதற்கு முன்வருவர் இதன் படி எமது நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால் பங்குச்சந்தையிலிருந்து அதிகளவான வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியமையை அவதானிக்க முடிந்தது. அதே போன்ற ஒரு நிலையைத்தான் எமது நாட்டுப்பங்குச்சந்தையும் தற்போது எதிர்நோக்கி வருகின்றது. இதனால் பங்குச்சந்தையில் முதலீடுகள் குறைவடைந்து பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு தேவையான முதலீடு கிடைக்காமல் போய்விடும் அபாயம் காணப்படுகின்றது.
அதே போன்றே அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக விநியோகிக்கப்படும் திறைசேறி முறிகள் மற்றும் திறைசேறி உண்டியல்கள் மீது வெளிநாட்டு முதலீடு குறைவடைந்து நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுகின்றது.
சுற்றுலாத்துறையின் தாக்கம்
இதே போன்றே இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பிரதான துறையாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது. கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 473 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்த சுற்றுலாத்துறையிலிருந்தான வருமானம் இவ்வருடத்தின் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 932 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இருப்பினும் ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் இலங்கையின் சுற்றுலாத்துறையை தலை கீழாக மாற்றிப்போட்டுள்ளது. இதனால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதை போன்று அத்துறையின் நேரடியாகவும் மறைமுகமாகவும் நன்மையடைந்த பல தொழில் முயற்சியாளர்களின் எதிர்க்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த தாக்குதலின் பின்னர் தற்போது வரை சுற்றுலாத்துறையின் வருமானம் 7.5 சதவீத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும்.
இவ்வாறான நிலையில் சுற்றுலாத்துறையில் இருந்து இவ்வருடம் எதிர்பார்க்கப்பட்ட 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருமான இலக்கு எட்டாக்கனியாகிவிடுமா என்பதே தற்போதுள்ள கேள்வியாகும்.
இவ்வாறான செயற்பாடுகளின் தாக்கம் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி பொருளாதார வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் மேற்குறிப்பிட்ட காரணிகள் சென்மதி நிலுவையில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தி அந்நிய செலாவணி கையிருப்பை பாதிக்கும்.நாட்டின் பணவீக்கத்தை தீர்மானித்தல், இறக்குமதிகளை மேற்கொள்ளுதல், வெளிநாட்டு கடன் செலுத்தல் உள்ளிட்ட முக்கிய செயற்பாடுகளுக்கு அந்நிய செயலாவணியின் கையிருப்பு தாக்கம் செலுத்துகின்றது.கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு 6.3 பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது. இத் தொகை கடந்த வருடத்தில் இதே காலப்பகுதியில் காணப்பட்ட 9பில்லியன் அமெரிக்க டொலருடன் பாரிய வீழ்ச்சியாக பதிவாகியுள்ள நிலையில் இனி வரும் காலங்களில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை காரணமாக இத் தொகை மேலும் வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுகின்றது.
இலங்கை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடனுக்காக இவ்வருடத்தில் 4.2 பில்லியன் அமெரிக்க டொலரை மீள செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறான பின்புலத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவடையும் பட்சத்தில் கடன் செலுத்த வேண்டிய தொகையை முழுமையாக செலுத்த முடியாமல் போய் கடன் தொகை அதிகரிப்பதுடன் அரசாங்கத்தின் இதர செயற்பாடுகளை பூர்த்தி செய்வதற்காக வெளிநாடுகளில் மேலும் அதிகளவான கடனை பெறவேண்டி ஏற்படும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும்.
எனவே நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் முதல் கடமையாகும். மேலும் குண்டுவெடிப்பை அடுத்து ஆங்காங்கே அவ்வப்போது ஏற்படும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அடிக்கடி ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்துவதானது தேசிய உற்பத்தியின் வளர்ச்சிக்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். அதே போன்றுதான் வெளிநாட்டவர்கள் மத்தியில் அவ நம்பிக்கையை ஏற்படுத்தும். நாடு இயல்பு நிலைக்கு கொண்டுவந்து பாதிக்கப்பட்டுள்ள துறைகளை மீளக்கட்டியெழுப்ப துரித கதியில் செயற்படுவது எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் பாரிய பொருளாதரா பின்னடைவை ஓரளவேனும் தவிர்க்க முடியும்.
எஸ். வினோத்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM