நாட்டில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்திய மக்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் இழப்புகளைக் கொடுத்த 30 வருடகால யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அதனால் பாதிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளனவா என்று பார்த்தால் அது விடை கிடைக்காத ஒரு கேள்வியாகவே இருக்கும். காரணம் கடந்த 10 வருடங்களாக பாதிக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். அவர்களின் பிரச்சினைகளும் இன்னும் பிரச்சினைகளாகவே நீடித்துக்கொண்டிருக்கின்றன. அரசியல் தீர்வு, காணாமல் போனோர் விவகாரம், அரசியல் கைதிகள், கணவனை இழந்த பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பொறுப்புக் கூறல் விடயம், இழப்பீடு தாமதம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளும் இதுவரை தீர்க்கப்படாமலேயே காணப்படுகின்றன.
இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து இந்த நாட்டின் தமிழ் மக்கள் தமக்கான அரசியல் உரிமைகளை கோரி போராடி வந்திருக்கின்றனர். எனினும் இந்தக் கோரிக்கைகள் பெரும்பான்மை சமூகத்தினரால் மறுக்கப்பட்டது மட்டுமன்றி அவை கவனத்தில் கொள்ளப்படவுமில்லை. இந்த நிலையிலேயே அரசியல் அபிலாஷைகள் தொடர்பான உரிமைகளை கோரிய தமிழ் மக்களின் போராட்டம் ஒரு கட்டத்தில் வேறொரு பரிணாமத்தை அடைந்தது. அதனடிப்படையில் இந்த நாட்டில் 30 வருடகால சிவில் யுத்தம் இடம்பெற்றது.
யுத்த காலத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணும் நோக்கில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அந்த முயற்சிகள் அனைத்தும் இதுவரை வெற்றிபெறவில்லை. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உறுதிப்படுத்துகின்ற அரசியல் தீர்வொன்றைக் கோரிேய போராட்டங்கள் இடம்பெற்றன. ஒரு கட்டத்தில் இந்தியாவின் தலையீட்டுடன் .இனப்பிரச்சினைக்கு தீர்வு என்ற பெயரில் 13ஆவது திருத்தச் சட்டம் ஊடாக மாகாண சபைகள் முறை கொண்டுவரப்பட்டபோதிலும் அதனூடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதே உண்மையாகும்.
இவ்வாறான பின்னணியிலேயே இந்த நாட்டில் 30 வருடகால யுத்தம் நடைபெற்றது. பல்வேறு வலிகள், வடுக்கள், இழப்புகளுக்கு மத்தியில் கடந்த 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தது. இப்போது இங்கு எழும் கேள்வியானது யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்துவிட்டன. இந்த 10 வருட காலத்தில் இந்த யுத்தம் ஏற்படுவதற்கான காரணம் குறித்து ஆராயப்பட்டதா அல்லது யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் இதுவரை ஆராயப்பட்டு கவனத்தில் கொள்ளப்பட்டனவா என்பதாகும்.
இந்த இரண்டு விடயங்களுக்கும் இதுவரை தமிழ் மக்கள் மகிழ்ச்சியடையக்கூடியதான பதில்கள் கிடைக்கவில்லை என்பது யதார்த்தமாகும். தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான ஒரு தீர்வுத் திட்டத்தை எதிர்பார்த்தே இந்த போராட்டங்கள் இடம்பெற்றபோதிலும் யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்துவிட்டபோதிலும் அவ்வாறு ஒரு தீர்வுத் திட்டத்துக்கான முயற்சிகள் சரியான முறையில் இடம்பெறவில்லை.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததும் 2010ஆம் ஆண்டு ஏன் இந்த யுத்தம் நடைபெற்றது என்பது குறித்து ஆராய கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் என்ற பேரில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அந்த ஆணைக்குழு நாடு முழுவதும் அமர்வுகளை நடத்தி மக்களிடம் சாட்சியங்களைப் பெற்று இறுதியில் தமது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது. எனினும் அதில் முன்வைக்கப்பட்டிருந்த பரிந்துரைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அதன் பின்னர் 2011ஆம் ஆண்டளவில் தீர்வுத் திட்டம் தொடர்பில் ஆராய அப்போதைய மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தில் பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. அதனூடாகவும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.
இந்தப் பிரச்சினை இழுத்தடித்துக்கொண்டே செல்லப்பட்டது. இதற்கிடையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. இதற்காக ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டன. எனினும் எந்த ஒரு முயற்சியினூடாகவும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. எப்படியிருப்பினும் 2015ஆம் ஆண்டு உருவாக்கிய அரசாங்கத்தின் மீது தமிழ் பேசும் மக்கள் பாரிய நம்பிக்கையை வைத்திருந்தனர்.
அதாவது புதிய அரசாங்கத்தினூடாக நிலுவையில் இருக்கின்ற தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு காணப்பட்டது. எனினும் கடந்த 4 வருடங்களின் நிலைமையை எடுத்துப் பார்க்கும்போது பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளோ தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளோ உரிய முறையில் தீர்க்கப்படாமலேயே உள்ளன. இந்த அரசாங்கத்தில் அரசியல் தீர்வைக் காணும் நோக்கில் சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக பாராளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் அந்த முயற்சி தற்போது இடை நடுவில் கைவிடப்பட்டு ஸ்தம்பிதமடைந்துள்ளது. அதேபோன்று காணாமல் போனோர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக காணாமல் போனோர் குறித்து ஆராய அலுவலகம் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகம் தற்போது இயங்கிவருகின்ற போதிலும் இதுவரை காணாமல் போனோரின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
அரசியல் கைதிகள் விவகாரமும் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினையாகவே நீடித்து வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக இழப்பீட்டு அலுவலகம் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகம் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கிறது. எனினும் இதுவரை மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்துகின்றனர். வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் கணவனை இழந்து குடும்பத்தலைவிகளாக இருக்கும் பெண்கள் தமது குடும்பங்களை கொண்டு நடத்தவும் வாழ்க்கையைக் கொண்டு நடத்தவும் பல இன்னல்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். பலர் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டுநடத்துவதற்கே திண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
அதேபோன்று புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளும் தமது வாழ்க்கையை கொணடுநடத்துவதில் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். ஒருசிலர் சுயதொழில்களை மேற்கொண்டுவருகின்றபோதிலும் பலர் பொருளாதார ரீதியான பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தவகையில் கடந்து போன 10 வருடங்களை நாம் நோக்கும்போது பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதை காண முடிகின்றது. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கடந்த 10 வருட காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை வெற்றிபெறவில்லை என்பதே உண்மையாகும். பிரச்சினைகள் பிரச்சினைகளாகவே நீடிக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்ட மக்களாகவே இருக்கின்றனர். அரசியல் தீர்வு விடயமும் எட்டாக்கனியாகவே நீடிக்கின்றது.
இந்நிலையில் இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வைக் காண்பதற்கு அரசியல் தலைமைத்துவங்கள் இதயசுத்தியுடன் செயற்படவேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதுடன் அந்த மக்கள் நீண்டகாலமாக கோரி வருகின்ற அரசியல் தீர்வுத் திட்டத்தைக் காண்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்த செயற்பாடுகள் இதயசுத்தியுடன் முன்னெடுக்கப்பட வேண்டும்.பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதை மனதில் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும்.
ஏற்கனவே பாரியளவில் தாமதிக்கப்பட்டு விட்டது. தொடர்ந்தும் இந்த விடயங்களை தாமதித்து மக்களுக்கான நீதியை மறுக்கும் நிலைமைக்கு சென்றுவிடக்கூடாது. 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில் நாடு மீண்டும் ஒரு இக்கட்டான நிலைமைக்கு வந்திருக்கிறது என்பது உண்மையாகும். எதிர்பாராத பல நெருக்கடிகளை நாடு சந்தித்திருக்கிறது. அந்தப் பிரச்சினைகளின் ஆழத்தையும் தாற்பரியத்தையும் தமிழ் பேசும் மக்கள் உணர்ந்திருக்கின்றனர். எனினும் அதற்காக அவர்களின் நீண்டகால பிரச்சினைகளை தீர்க்காமல் இழுத்தடிப்பது முறையானது அல்ல என்பதை புரிந்து அரசியல் தலைவர்கள் செயற்படவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM