மதரீதியான அடிப்படைவாத குழுக்களின் உறுப்பினர்கள், உதவி ஒத்தாசை புரிபவர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாரபட்சமின்றி கைதுசெய்ய வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.
அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு:
கேள்வி:- நாட்டின் தேசிய பாதுகாப்பில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இடம்பெற்றன என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
பதில்:- ஆம், பாதுகாப்பு சரியாக இருந்திருந்தால் இத்தகைய தாக்குதல்களை யாராலும் செய்திருக்க முடியாது.
கேள்வி:- தேசிய பாதுகாப்பு கட்டமைப்பில் எத்தகைய குறைபாடுகள் காணப்பட்டன என்று கூறுவீர்களா?
பதில்:- பல காரணங்கள் உள்ளன. நாட்டிற்கு தலைமை தாங்கும், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை ஆகிய தரப்புக்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கொண்டிருக்கும் மனநிலை, அனுபவம், புரிதல், இலக்கு ஆகியவற்றில் பல குறைபாடுகள் உள்ளன. இது மிகப்பெரும் பிரச்சினையாகும்.
அடுத்து, எமது நாட்டில் தேசிய பாதுகாப்பு குறித்த விசேட கலாசாரமொன்று காணப்பட்டது. அந்த கலாசாரம் போர் நிறைவின் பின்னரான சூழலில் பாரியளவில் சிதைய ஆரம்பித்தது.
இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து தலைவர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என அனைவரினதும் அவதானம் இல்லாது போகும் சூழல் மேலெழுந்திருந்து. இந்த சூழலைத் தான் அடிப்படைவாதிகளாக இருந்தவர்கள் தீவிரவாத தாக்குதல்களை நடத்துவதற்காக பயன்படுத்தியுள்ளார்கள். இராணுவத்தில் சேவையாற்றிய ஒருவர் என்ற அடிப்படையில் தாக்குதல் சம்பவம் குறித்து நான் கொண்டுள்ள புரிதலாக உள்ளது.
கேள்வி:- குண்டுத்தாக்குதல் குறித்த தகவல்கள் ஏற்கனவே கிடைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற பாரிய குற்றச்சாட்டு உள்ள நிலையில் புலனாய்வு தகவலொன்று கிடைக்கப்பெற்றால் அது எவ்வாறு பரிமாற்றத்திற்கு உள்ளாகுமெனக் கூறுவீர்களா?
பதில்:- முதலாவதாக எமக்கு தகவல் தான் கிடைக்கும். தகவல் கிடைத்ததும் அதனை ஆய்வுக்கு உட்படுத்துவோம். அதனையடுத்து, தலைமையொன்றால் அத்தகவலை புலனாய்வு செய்வதற்கான வழிகாட்டுதல் செய்யப்படும். அதனடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டு புலனாய்வு கட்டமைப்புக்கள் ஊடாக உரிய தரப்புக்களுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவிப்புச் செய்யப்படும். கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் இது பொறுப்பான கடமையாகும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து எமக்கு முன்கூட்டியே தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆனால், அதற்கு சட்டச் செயற்பாடுகள் முறையாக இடம்பெற்றிருக்கவில்லை. கிடைக்கப்பெற்ற தகவல்களை நகைச்சுவையாக பார்த்தமையால் பாரிய அழிவுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகியுள்ளது.
கேள்வி:- உள்நாட்டு புலனாய்வாளர்களின் தகவல்களுக்கு அப்பால் இந்திய புலனாய்வுத் தரப்பிலிருந்து மூன்று தடவைகள் முன்னெச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதல்லவா?
பதில்:- ஆம், இந்திய புலனாய்வுத் துறையினாலும் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் நாட்டில் உள்ளவர்களின் பொருட்படுத்தாத தன்மையே விளைவுகளுக்கு காரணமாகின்றது. தேசிய பாதுகாப்பு விடயத்தினை பொருட்படுத்தாது இருக்கமுடியாது. மிகமுக்கியமான-விரிவான தகவல் கிடைத்துள்ளபோதும் மக்களை குழப்பக்கூடாது என்ற அடிப்படையில் பொருட்படுத்தாது விடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு விடயத்தில் அவ்வாறு சிந்திக்க முடியாது. தீவிரமாக கவனம் செலுத்தி பாதுகாப்புத்துறை, பொதுமக்களுக்கு அறிவித்திருக்க வேண்டும். அவ்வாறான எந்த செயற்பாடும் நடைபெற்றிருக்கவில்லை.
கேள்வி:- பாதுகாப்புத்துறையின் தலைமையை ஜனாதிபதி கொண்டிருக்கின்ற நிலையில் அவருக்கு இத்தகைய தகவல் தெரிவிக்கப்படவில்லை என்கிறார். பிரதமர் தனக்கும் தெரிவிக்கப்படவில்லை என்கிறார். பாதுகாப்பு செயலாளரே தவறிழைத்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலைமைகளை எப்படி பார்க்கின்றீர்கள்?
பதில்:- ஜனாதிபதி, பிரதமர் தமக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கூறினாலும் பாதுகாப்புச் செயலாளர் தகவல் தெரிவித்ததாக கூறுகின்றார். இதில் யார் சரி, யார் தவறு என்று என்னால் கூறமுடியாதுள்ளது. மிக முக்கியமான விடயமொன்றில் நாட்டின் தலைவர்கள் பொறுப்பற்ற வகையில் செயற்படுகின்ற சூழல் எதனையும் செய்ய முடியாது.
பாதுகாப்புச் செயலாளருக்கு தகவல் கிடைத்து, அதனை அவர் ஜனாதிபதி உள்ளிட்ட உரிய தலைவர்களுக்கு மறைத்திருந்தால் அது தேசத்துரோகமாகும். அதனடிப்படையில் அவரை சிறைக்கு அனுப்பி இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறான எந்த செயற்பாடுகளும் இடம்பெறவில்லையே. பரஸ்பர கருத்துக்களே வெளியிடப்படுகின்றன. ஆகவே, நாட்டை சரியாக நிர்வாகம் செய்பவர்களை ஆட்சிக்கு கொண்டு வருவதுதான் மக்களுக்கு உள்ள ஒரே தெரிவாகும்.
கேள்வி:- உங்களுடைய பார்வையில் இலங்கை இலக்கு வைக்கப்படுவதற்கு என்ன காரணம் என்று கருதுகின்றீர்கள்?
பதில்:- போரின் பின்னரான சூழலில் இலங்கை முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டமையால் அரசுக்கு எதிரான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று கொள்ளமுடியாது. உலகத் தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் உள்ளூரில் உள்ளவர்களை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஐ.எஸ் அமைப்பு ஈரான், சிரியா போன்ற நாடுகளில் தோல்விகளைக் கண்டுள்ளது. அதற்கு பழி தீர்க்க வேண்டும் என்பது அவர்களின் மனநிலை.
ஆகவே, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்பதே இலக்காகும். இதற்காக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றில்லை. தீவிரவாதிகளின் பார்வையில் இலங்கை போன்று வேறெங்கும் வாய்ப்புக்கள் நிறைந்த நாடு இல்லாமல் இருந்திருக்கலாம்.
தேசிய பாதுகாப்பு என்பதையே நாம் மறந்திருந்தோம். ஆகவே, மிகவும் சாதுரியமாக செப்டெம்பர் 11 இரட்டைக்கோபுர தாக்குதலுக்கு பின்னர் மிகப்பெரும் அளவில் நடைபெற்ற தாக்குதலொன்றாகும். அத்துடன் சொற்ப இடைவெளியில் பாரிய இழப்பினை ஏற்படுத்தும் வகையில் உலகத்திலேயே முதற்தடவையாக இடம்பெற்ற தாக்குதல்களாகவும் காணப்படுகின்றது. உலகத்தில் முதல்நிலை போராட்ட அமைப்பாக காணப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பு கூட இவ்வாறான தாக்குதல்களை மேற்கொண்டதில்லை. ஆகவே, எமது தவறினாலேயே இத்தகைய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
கேள்வி:- ரி.ஏ.ரி.பி எனப்படும் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், இவ்வாறான குண்டுகள் இலங்கையினுள் தயாரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளனவா?
பதில்:- இந்தக் குண்டுகள் பாரிய பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டவை அல்ல. சாதாரணமாக தயாரிக்க கூடியவை தான். எமது நாட்டில் முப்பது வருட போர் நடைபெற்றது. தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்காக குண்டுகள் இங்கு தான் முதலில் செய்யப்பட்ட வரலாறும் இருக்கின்றது. குண்டுகள் தொடர்பிலான விடயங்களை அன்றாடம் கேட்டறிந்தும், நேரடியாக பார்த்தும் பல அனுபவங்கள் உள்ளவர்கள் இல்லாமலில்லை.
எனவே, இத்தகைய குண்டுகளை தயாரிப்பதற்கு வெளியில் இருந்து தான் நபர்கள் வரவேண்டும் என்றில்லை. மேலும் இந்தக் குண்டுகள் சிறிய அளவிலேயே உருவாக்கப்பட்டுள்ளமையால் இவற்றை ஓரிடத்திலிருந்து பிறிதொரு இடத்திற்கு கொண்டு செல்வதிலும் பிரச்சினைகள் காணப்பட்டிருக்கவில்லை. குண்டு தயாரிப்பதற்கான நிதி பிரச்சினையும் இருந்திருக்காது என்று கருதுகின்றேன்.
கேள்வி:- விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கும் தற்போதைய தாக்குதல்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருப்பதனை உணர்கின்றீர்களா?
பதில்:- விடுதலைப்புலிகள் இனப்பிரச்சினையை முன்னிலைப்படுத்தி தனி இராஜ்ஜியம் ஒன்றைக் கோரியே போராட்டத்தினை நடத்தியிருந்தார்கள். ஆனால், ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மதத்தின் மீதான நம்பிக்கையில் அடிப்படையில் கருத்தியல் ரீதியாக தீர்மானித்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுவே பிரதான வேறுபாடாக இருக்கின்றது. சாதாரண மக்களை படுகொலை செய்வது தீவிரவாத செயற்பாடேயாகும். ஆனால், பயங்கரவாதச் செயற்பாடுகள் என்ற அடிப்படையில் நோக்கினால் இரண்டும் சமனாகவே உள்ளன.
கேள்வி:- விடுதலைப்புலிகளின் போர் அணுகுமுறைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் தீவிரவாத தாக்குதல்கள் நேரெதிராக இருக்கையில், அதற்கு முகங்கொடுக்கக் கூடிய ஆற்றல் படைத்தரப்புக்கு உள்ளதா?
பதில்:- விடுதலைப்புலிகளுடன் தரை, ஆகாய, கடல் மார்க்கமாக போரிட்டு வெற்றி பெற்ற படையினருக்கு தீவிரவாதக் கும்பல்களை ஒழிப்பதென்பது பெரிய விடயமன்று. ஆனால் படையினர் ஆயுதரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முன்னதாக புலனாய்வுக் கட்டமைப்பு, பாதுகாப்பு துறை அதிகாரிகள், அரசியல் தரப்பினர் ஆகியோர் சரியாக செயற்பட்டாலே தீவிரவாதத்தை கட்டுப்பாட்டுக்குள் கொள்ளக்கூடிய நிலைமைகளே தற்போதுள்ளன. இந்தச் சூழலை சரியாக கையாள்வதே புத்திசாதுரியமான விடயமாகும்.
1983இல் உருவான பிரச்சினையை சரியாக கையாண்டிருக்காததன் விளைவு 2009 வரையில் நீடித்திருந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான நாட்டு மக்கள் உயிரிழக்க நேரிட்டது. 30 ஆயிரம் படை வீரர்கள், 34 ஆயிரத்திற்கு மேற்பட்ட விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஆயுதப்படையினர் மரணிக்க நேரிட்டது. நாட்டிற்காக செயற்படவல்ல சிறந்த பலரை இக்காலத்தினுள் இழக்க நேரிட்டுள்ளது.
போரின் காரணமாக தமிழ் மக்களின் கலாசாரம், கல்வி உள்ளிட்ட பல விடயங்கள் பாரியளவில் சிதைவுக்குள்ளாகியுள்ளன. உலகத்தில் சிறந்த ஒழுக்கம், குணாம்சங்கள், நெறிகளுடன் மேலாண்மையுடன் வாழ்ந்த சமூகமே தமிழினத்தவர்கள். போரினால் அவர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று சிங்கள சமூகத்திலும் ஆயிரக்கணக்கான இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இப்படியிருக்க, மீண்டும் முஸ்லிம் சமூகத்துடன் மோதலுக்குச் செல்வது பொருத்தமற்ற செயற்பாடாகும். இதனை முஸ்லிம் தலைமைகள் புரிந்து கொண்டு தமது சமூகம் சார்ந்த உரிய வழிகாட்டல்களை செய்வதற்கு முன்வர வேண்டும்.
கேள்வி:- தாக்குதலின் பின்னர் படையினர் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- குண்டுத்தாக்குதலின் பின்னர் உடனடியாக செயற்பட்டு வரும் படையினர் ஆயுதங்கள், குண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் கண்டறிந்து அவற்றை கைப்பற்றி வருகின்றனர். அத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டும் வருகின்றார்கள். ஆகவே, தீவிரவாத தரப்பினர் மீண்டும் குழுவாக இணையாத வகையிலும், மற்றுமொரு தாக்குதலை செய்ய முடியாத வகையிலுமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டனர். தற்காலிகமாக இந்த விடயம் சிறப்பான மட்டத்தில் இருக்கின்றது.
கேள்வி:- தீவிரவாத தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு உடனடியாக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்?
பதில்:- மதரீதியான அடிப்படைவாத தீவிரவாதக்குழுக்கள் ஒரே இரவில் உருவாக்கப்படுபவை அல்ல. ஆகவே உடனடிச் செயற்பாடுகளாக, தாக்குதல்கள் மேற்கொள்ள தயாராக இருப்பவர்களை பாரபட்சமின்றி, கைதுசெய்ய வேண்டும். அத்துடன் அவர்களுக்கு உதவி ஒத்தாசை புரிபவர்கள் என அனைவரையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும்.
இதனைவிட, தீவிரவாதச் செயற்பாடுகளுக்குள் சாதாரணமானவர்களை மூளைச் சலவை செய்து உள்ளீர்க்கும் கருத்தியில் ரீதியான விடயங்களை முற்றாக நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பிரச்சினைகள் காணப்படுபவர்களே தீவிரவாதகுழுவில் இணையும் அளவிற்கு சிந்திப்பார்கள். அவர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வுகளை வழங்க வேண்டும். பொறுப்புள்ள நாட்டின் தலைவர்கள், அதிகாரிகள் தமது பொறுப்புக்களிலிருந்து தவறுகின்றபோது அவர்களை சட்டத்தின் முன்நிறுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளையும் ஏற்படுத்த வேண்டும்.
மேலும், போர்க்காலத்தில் நாம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி அவர்களின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு வலையமைப்பு செயற்பாடுகளை முறையாக அமைத்து செயற்படுத்தி வந்திருந்தோம். அத்தகைய வலையமைப்பினை செயற்படுத்துவதும் அத்தகைய திட்டமிட்ட தாக்குதல் செயற்பாடுகளை கட்டுப்படுத்த உதவும்.
கேள்வி:- ஆனால், தற்போது இனமுறுகலை ஏற்படுத்தும் வகையில் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றனவே?
பதில்:- இருப்பினும், பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், இனங்களுக்கு இடையிலான முறுகல்களை கட்டுப்படுத்துவதற்கான செயற்றிட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். தாக்குதல்களின் பின்னர் அரசாங்கம் அந்த விடயத்தில் போதியளவு கவனம் எடுத்து செயற்படவில்லை என்பதையே அவதானிக்க முடிகின்றது. இதனால் தான் முரண்பாடான, மோதல் நிலைமைகள் தோற்றம் பெறுகின்றன. இந்த விடயத்தினை மிகக் கவனமாக கையாளுவதிலிருந்து விலகி நின்றால், இந்த நாட்டில் மீண்டும் 1983ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரம் போன்று மீண்டுமொரு மோசமான நிலைமைக்கு வித்திடுவதாக அமைந்து விடும். போர் எமக்கு வேண்டாம் என்ற மனநிலையில் தற்போது உள்ளோம். எனவே, மீண்டும் வன்முறைச் சூழலுக்கு இடமளிக்கக் கூடாது என்பதை அனைவரும் மனரீதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கேள்வி:- குண்டுத்தாக்குதல்கள் மீண்டும் நிகழ்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாக சில தரப்புக்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள். உண்மையில் நாடு இன்னமும் அச்சுறுத்தல் நிலையில் தான் உள்ளதா?
பதில்:- நான் சான்றிதழ் வழங்க முடியாது. எனினும், தீவிரவாத செயற்பாடுகளை முடக்கும் வகையில் நான் ஏற்கனவே கூறியவாறான உரிய நடவடிக்கைகள் முழுமையாக முன்னெடுக்கப்பட வேண்டும். நாட்டின் தலைமை நேர்த்தியாக செயற்படுவதுடன், இதற்கான கொள்கையொன்றை வகுத்து அதன் பிரகாரம் செயற்பட வேண்டும். மக்கள் அச்சத்துடன் இருக்கின்ற இந்த தருணத்தில் வெவ்வேறு பட்ட கருத்துக்கள் வெளிப்படுவதானது நிலைமைகளை மோசமாக பாதிப்படையச் செய்துவிடும். ஆகவே, அரசாங்கம் சரியான நிருவாக கட்டமைப்பில் அவற்றைக் கையாள வேண்டும். தற்போதைய தருணத்தில் சரியான தீர்மானங்களை எடுக்கத்தவறுகின்ற பட்சத்தில் நிலைமைகள் கை மீறிச் சென்று கட்டுப்படுத்த முடியாத சூழலை உருவாக்கி விடும். இது முழு நாட்டின் நடைமுறையையும் பாதிக்கும் ஆபத்துள்ளது.
- நேர்காணல் - ஆர். ராம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM