ஐரோப்பிய யூனியலிருந்து பிரித்தானியா விலகுவது என்கின்ற செய்தி முடிவில்லாமல் ஊடகங்களில் தொடர்கிறது என்பது பலவிதமான கருத்துக்கள், விமர்சனங்கள், ஊகங்கள், செவ்விகள் ஆகியவற்றுக்கு களமாக அமைகின்றது.
பிரித்தானியா என்பது சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என முன்னர் புகழ்பெற்ற நாடு என்பதும், பாராளுமன்ற ஜனநாயகம், சட்ட ஆட்சி, மனித உரிமை மேம்பாடு, கைத்தொழில் செழிப்பு, வந்தோரை வரவேற்கும் நாடு எனவும் பல பெருமைகளை தன்னகத்தே கொண்டநாடு. ஏன் பிரித்தானியாவிலிருந்து விலகுதல் என்ற கொள்கை சார்ந்த விடயத்தில் முடிவில்லாமல் இழுபடுகிறது என்கின்ற வினா அரசியல் விடயங்களை பின்பற்றுவோர்க்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்பது யாரும் மறுக்க முடியாத விடயமாகவுள்ளது. பிரித்தானியாவின் உள்ளார்ந்த ஜனநாயகம், இரு சபைகளைக் கொண்ட பாராளுமன்றம், பிரித்தானிய மக்களின் விழிப்புணர்வு, தொடர்ச்சியான ஜனநாயக பாரம்பரியம், பொதுக்கொள்கை விடயங்களை அரசியல் கட்சி என்கின்ற குறுகிய வட்டத்துக்குள் மட்டுப்படுத்தாமை, நாட்டு நலனை முன் வைத்தல் ஆகிய சீரிய கொள்கைகளின் வெளிப்பாடு தான் பிரெக்சித் எனக் கூறப்படும் பிரித்தானிய விலகல் இழுபடுவதற்கான காரணம் என துணிந்து கூறலாம்.
ஒன்றுபட்ட ஐரோப்பா என்கின்ற சித்தாந்தம் ஐரோப்பிய நாடுகளின் 28 நாடுகள் ஒன்றாக இணைந்து செயல்படவைத்த காரணியாகும். ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்கின்ற உண்மையை உணரவைத்த வெற்றிகரமான பல்புடை அமைப்பு ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐரோப்பிய யூனியன் என்று சொல்வது மிகையாகாது. பிரித்தானிய மக்களும் சரி, ஐரோப்பாவின் மேற்கு நாடுகளும் சரி, மக்களின் பொருளாதார செழுமை, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றுக்கு முதன்மை கொடுக்கும் மனப்பான்மை உள்ளவர்கள். பொருளாதாரத்துக்கு வழங்கப்படும் முக்கியத்துவமே அரசியல் கொள்கை வகுத்தலுக்குக் காரணமாக அமைகின்றது.
ஐரோப்பியத் தலைவர்களின் அயராத முயற்சியினாலேயே ஐரோப்பிய ஒன்றியம் உருவாகியது எனக் கூறினாலும் ஐரோப்பிய ஒன்றியம் முன்னைய ஐரோப்பிய சமுதாயம் என்ற அமைப்பில் தொடர்ச்சியே என்பது தான் யதார்த்தமாகும். ஒன்றுபட்ட ஐரோப்பாவில் அரசியல் பொருளாதார சமூக ஒன்றிணைப்பை ஒருகாலத்தில் வரித்து நின்ற பிரித்தானியாவின் கொள்கை வகுப்பாளர்கள் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் தொடர வேண்டுமா என வேறுபாடாக சிந்திக்கத் தொடங்கினர். அதன் விளைவாகவே 13.06.2016 இல் பிரிட்டனில் சர்வஜன வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. பிரித்தானிய வாக்காளர்களில் 51.9 வீதத்தினர் விலகுதல் என்ற தெரிவுக்கு வாக்களித்து விலகுதல் நடவடிக்கையில் முதலாவது அடியை எடுத்துவைத்தனர். ஐரோப்பிய யூனியனின் ஒப்பந்தம் என்கின்ற சட்டத்தில் 50 ஆவது பிரிவு எவ்வாறு அங்கத்துவ நாடு விலக வேண்டுமென எடுத்துரைக்கிறது.
அந்த விதியின் பிரகாரமே பிரித்தானியாவில் சர்வஜன வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. 29 பங்குனி 2017 இல் பிரிட்டன் அரசாங்கம் பிரிவு 50 இன் பிரகாரம் விலகுவதற்கான ஒப்புதலை வழங்கியது. பிரிவு 50 இன் பிரகாரம் பிரித்தானிய விலகல் பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்த திகதியிலிருந்து இரண்டு வருடங்களில் பூர்த்திசெய்யப்பட வேண்டும். எனவே பிரித்தானிய விலகலுக்கான வெட்டுத்தினம் அல்லது இறுதித்தினம் 29 பங்குனி 2019 என்பது விதிப்பிரகாரமானது. பிரித்தானிய பிரதமர் பிரித்தானியா விலகுவது எவ்வாறு என்ற யோசனையை பிரித்தானிய பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து இன்றுவரை அங்கீகாரம் பெறத் தவறியதாலேயே பிரிட்டன் விலகும் விவகாரம் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்படுகிறது. ஐரோப்பிய யூனியன் பிரித்தானியாவின் காலநீடிப்புக்கான கோரிக்கையை ஏற்று விலகுவதற்கான இறுதித் திகதியாக 31 ஐப்பசி 2019 இனை குறித்தொதுக்கியுள்ளது.
பிரித்தானிய விலகலை உறுதியாகச் செயற்படுத்துவதில் பிரதமர் தெரெசா மே பல தோல்விகளைச் சந்தித்துள்ளார்.
இந்தப் பின்னணியில் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல் 23 வைகாசி 2019 இல் நடைபெறவுள்ளது. ஐக்கிய இராச்சியமான பெரிய பிரித்தானியா தேர்தல் இத்திகதியில் நடைபெறவுள்ளது. முன்னர் பிரித்தானியாவின் விலகல் பங்குனி
29க்கு முன்னர் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டதால் பிரித்தானியாவின் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல் திட்டமிடப்படவில்லை. எவ்வாறாயினும் ஐரோப்பிய யூனியனும் பிரித்தானியாவும் விலகலுக்கான கால நீடிப்பு திகதியாக 31 ஐப்பசி 2019 ஆம் திகதி எல்லையை ஏற்றுக்கொண்டதால் பிரித்தானியாவில் 23 ஆம் திகதி தேர்தல் நடைபெற வேண்டும் என்பது ஐரோப்பிய யூனியன் விதியாகும். பிரித்தானிய பிரதமர் 23 வைகாசிக்கு முன்னர் பிரித்தானிய விலகலை வெற்றிகரமாக நிறைவேற்றினால், பிரித்தானியாவில் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை தவிர்க்க முடியும். அவ்வாறு நிகழாவிடின் பிரித்தானியாவில் தேர்தல் நடைபெற்று ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு பிரித்தானிய ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற அங்கத்தவர்கள் தெரிவாவர். எனினும் குறிப்பிட்ட காலக்கெடுவிக்குள் பிரித்தானியாவின் விலகல் நிகழ்ந்தால் பிரித்தானிய பிரதிநிதிகள் அங்கத்துவம் முடிவடையும்.
இம்முறை நடைபெறும், ஐரோப்பிய யூனியன் தேர்தலில் பிரதான பேசும் பொருளாக பிரெக்சிற் இடம்பெறும் என அரசியல் அறிஞர்கள் கூறுகின்றனர். 751 பாராளுமன்ற அங்கத்தவர்களைக் கொண்ட ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் அந்தந்த நாடுகளின் கட்சிகள் ரீதியாக போட்டிகள் இடம்பெறுவதில்லை. ஐரோப்பிய யூனியன் பிரதேசத்திற்குள் இயங்கும் பொதுவான கட்சிகளின் கீழ் போட்டிகள் இடம்பெறும். ஐரோப்பிய மக்கள் கட்சி, ஐரோப்பிய சோஷலிஸ்ட்டுகளின் கட்சி, ஐரோப்பிய பழைமைபேண் கட்சி, ஐரோப்பிய பசுமைக் கட்சி, ஐரோப்பிய சுதந்திரக் கூட்டணி ஆகியவை சில கட்சிகளாகும். தற்போதைய ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பிரித்தானியாவுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் 73. பிரிட்டன் விலகிய பின் அந்த 73 ஆசனங்களையும் ஏனைய நாடுகள் மத்தியில் எவ்வாறு பகிர்வது என பின்னர் தீர்மானிக்கப்படும். ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் சுற்றாடல் பாதுகாப்பு பிரதான இடத்தை வகிக்கவிருக்கின்றது.
அதாவது புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றங்களை உள்ளடக்கிய விவகாரமே சுற்றாடல் பாதுகாப்பு. இதற்கு அடுத்ததாக குடிவரவு, வேலைவாய்ப்பு போன்ற விவகாரங்கள் முன்னிலை பெறும். அண்மைய வருடங்களில் ஈராக், ஈரான், சிரியா போன்ற நாடுகளிலிருந்தும் வேறு சில நாடுகளிலிருந்தும் ஐரோப்பிய நாடுகளுக்கு படையெடுத்துவரும் சட்டவிரோத குடியேறிகளினால் உள்ளூர் மக்களின் பொருளாதாரச் சுமைகள் அதிகரித்துவிட்டதென்றும், வேலைவாய்ப்புக்கான சந்தர்ப்பங்களும் குறைந்து வருவதாகவும் ஐரோப்பிய மக்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். இதன் காரணமாகவே ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் சுற்றாடல் பாதுகாப்பு, குடிவரவு, வேலைவாய்ப்பு ஆகிய விடயங்கள் முன்னுரிமை பெறுகின்றது.
ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் பிரதமர் தெரெசா மே விலகல் தொடர்பான முயற்சியை இன்னும் கைவிடவில்லை. பல முயற்சிகளும் தோல்வி அடைந்த நிலையில் பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோபினுடன் இணக்கப்பாடு ஒன்றை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றார். எதிர்க்கட்சித் தலைவருடன் இணக்கப்பாடொன்றை அடையும் கட்டத்தை தாம் நெருங்கிவிட்டதாக பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். அரசியல் வேறுபாடுகளைப் புறந்தள்ளி இருவரும் பிரெக்சிற் திட்டத்தை பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெற உழைக்கவேண்டும் என கேட்டுள்ளார்.
வைகாசி மாதத்தில் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் நாள் நெருங்கிவருவதால், அதற்கு முன்னதாக பாராளுமன்றில் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சங்கடமுண்டு. பிரதமரின் சமரச திட்டத்தில் ஐரோப்பிய யூனியனுடன் விலகலுக்குப் பின்னரும் சுங்க ஏற்பாடுகள் தொடர வேண்டும் என்ற திருத்தத்தை உள்ளடக்க தயாராகவுள்ளார். ஆனால் சுங்க யூனியன் ஏற்பாடு பிரதமரின் சொந்தக் கட்சியான பழைமைபேண் கட்சியில் அதிருப்தியினை ஏற்படுத்தும் சாத்தியம் தெரிகிறது. அதுமட்டுமல்ல பழைமைபேண் கட்சியில் தெரெசா மேயின் தலைமைத்துவத்திற்கு சவால் ஏற்படும் நிலையும் தெரிகிறது. 2019 ஆம் ஆண்டு வைகாசி 2 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளும் பிரெக்சிற் விவகாரத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் பழைமைபேண் கட்சிக்கும் தொழிற்கட்சிக்கும் எதிர் வலைகளை உருவாக்கியுள்ளது.
“தெரெசா மேயின் பழைமைபேண் கட்சி மீது வாக்காளர்களின் எதிர்ப்பு காட்டப்பட்டுள்ளது.
பிரெக்சிற் விவகாரத்தில் தீர்க்கமான தீர்மானமொன்றைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றவில்லை என்ற சீற்றத்தை வாக்காளர்கள் வெளிக்காட்டியுள்ளனர். அதேபோன்று 9 வருடங்களாக எதிர்க்கட்சியாகவிருக்கும் தொழிற்கட்சி ஆட்சியில் அமர்வதற்கான அறிகுறிகள் தெரியவில்லை என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள், பிரெக்சிற் விவகாரத்தில் தொழிற்கட்சித் தலைவர் ஜெரொமி கொபின் நாட்டை முதன்மைப்படுத்தி கையாளவில்லை என்கின்ற அதிருப்தியை வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர் என உள்ளூராட்சி முடிவுகளை ஆய்வு செய்யும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிரதமர் தெரெசா மே எதிர்க்கட்சித் தலைவரை ஒத்துழைக்கும் வண்ணம் மீண்டும் கேட்டிருக்கிறார்.
பிரெக்சிற் தாமதம் பொருளாதார ரீதியாக பிரிட்டனுக்கு எவ்விதமான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது என்பது நோக்கப்பட வேண்டியதாகும். நிலபுலன் துறை, வாகன உற்பத்தி, குறைந்துவரும் முதலீடு, பெரும் கம்பனி அதிபர்களிடம் காணப்படும் உற்சாகமின்மை, பிரித்தானிய பொருளாதாரத்திற்குத் தற்காலிகப் பின்னடைவுகளை உருவாக்கும். அரசியலுக்கும் பொருளாதாரத்திற்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது என்பதை பிரெக்சிற் இழுபறி விவகாரம் தெளிவாகக் காட்டுகிறது. பங்குனி 29 இற்கு முன்னர் விலக வேண்டும் என்கின்ற நிபந்தனையை பிரித்தானிய பாராளுமன்றம் நிறைவேற்ற முடியவில்லை என்பதும் அதே பாராளுமன்றம் பிரேரணைகள் மூலம் ஐரோப்பிய யூனியனிடம் கால நீடிப்புக்கோரியமையும் ஐரோப்பிய யூனியன் ஐப்பசி31 வரை தற்போது காலநீடிப்பு வழங்கியமையும் முற்றுமுழுதான அரசியல் தீர்மானங்களாகும்.
இந்த வகையான அரசியல் தீர்மானங்கள் எவ்வாறு பொருளாதாரத் துறையில் செல்வாக்கு செலுத்துகின்றதென்பது தற்போது நேரடியாக அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. ஏனெனில் அரசு – அரசாங்கம் என்ற இரு பதங்களும் மானிடவாழ்வினை பிரதானமாக நிர்ணயிக்கும் காரணிகள் என்பது மீண்டும் நிரூபிக்கப்படுகிறது. நிலையான அரசாங்கம் – நிலையான தீர்மானங்கள் – சுற்றாடலுக்கு சிநேகிதமான பொருளாதாரக் கொள்கைகள், அச்சுறுத்தலாக உருவாகி வரும் பயங்கரவாதத்துக்கு முகம் கொடுப்பதற்கான கொள்கைகள், அபிவிருத்தியடைந்த நாடுகள் அபிவிருத்தியடையும் நாடுகள் தொடர்பாக கடைப்பிடிக்கும் வர்த்தக கொள்கைகள் யாவும் அரசியல் தீர்மானங்களால் நெறிப்படுத்தப்படுகின்றன. அரசியற் கொள்கை எவ்வாறு மக்களின் குடிவரவு, குடியகல்வில் செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதற்கும் பிரெக்சிற் உதாரணமாகும்.
ஐரோப்பிய யூனியன் அமைப்பு ஏற்பாடுகளுக்கமைய ஒரு நாட்டின் பிரஜைகள் இன்னொரு நாட்டுக்குச் செல்லவோ, வேலை செய்யவோ, முதலீடு செய்யவோ ஒரு தடையும் கிடையாது. பிரெக்சிற் நிகழ்ந்தால், பிரிட்டனுக்கு வெளியே வாழும் அந்நாட்டுப் பிரஜைகளும், அங்கு வாழும் ஏனைய நாடுகளின் பிரஜைகளும் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை அறிவது அவசியமாகும். பிரித்தானியாவில் வாழும் 3.8 மில்லியன் EU பிரஜைகள் 29.03.2019 க்கு முன்னர் நாட்டுக்குள் பிரவேசித்திருந்தால் தொடர்ந்து வாழமுடியும். தொழில் செய்யமுடியும் என்ற ஏற்பாடு உண்டு. அதேபோன்று பிரித்தானியாவின் 1.3 மில்லியன் பிரஜைகள் EU நாடுகளில் வாழ்கிறார்கள். அவர்கள் தொழில் செய்யும் உரிமை உட்பட சகல உரிமைகளையும் தொடர்ந்து அனுபவிக்க முடியும். பிரெக்சிற்றுக்குப் பின்னரும் இந்த நிலை தொடரும். 31.12.2020 வரை இந்நிலை தொடரும். பிரெக்சிற் விலகல் பலதுறைகளிலும், அரசியல், பொருளாதார, சமூக விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
எது எவ்வாறாயினும் பிரெக்சிற் விவகாரம் பிரித்தானியாவில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது திண்ணம். பிரதான கட்சிகளான பழைமைபேண் கட்சி தொழிற்கட்சி ஆகியவை 2016 சர்வஜன வாக்கெடுப்பில் ஐக்கிய இராச்சிய மக்களின் ஆணையை, விலகுதலை முறைப்படி நிறைவேற்றவில்லை என்பது 2 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி முடிவுகளில் மக்களின் தீர்ப்பில் வெளிப்படுத்தப்பட்டது. பிரதமர் தெரெசா மே விரைவில் பிறெக்சிற் விலகலை நடத்தினாலும் சரி, ஐப்பசி 30 க்கு முன்னர் நடத்தினாலும் சரி, பழைமைபேண் கட்சியின் தலைவராகத் தொடர்வதில் பெரும் சவால்கள் உண்டு என்பது மட்டும் நிஜமானது.
(ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM