அமெரிக்காவிலும், இந்தியாவிலும் ஏற்கனவே அதிகரித்து வருகின்ற இஸ்லாமியரைப் பற்றிய பீதி (இஸ்லாமிய அச்சக்கோளாறு) இலங்கையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு வேரூன்ற அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கும் இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரும் ஒபாமா நிர்வாகத்தில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்க அமைச்சருமான ரொபேட் ஓ பிளேக், இலங்கை இன்று எதிர்நோக்குவதைப் போன்ற நெருக்கடிகளுக்கான எந்தவொரு நாட்டினதும் பிரதிபலிப்பு தனிப்பட்ட நலன்களையும் குறுகிய கட்சி நலன்களையும் பாதுகாப்பதில் அக்கறை கொண்டு செயற்படக்கூடிய அரசியல்வாதிகள் மீது தங்கியிருக்கக்கூடாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட தலைமையிலான "பார்த் பைன்டர்" அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் "சீனா மற்றும் தெற்காசியா நோக்கிய அமெரிக்க வெளியுறவுக் கொள்கையும் இலங்கை மீதான அதன் தாக்கமும்" என்ற பொருளில் உரை நிகழ்த்திய ரொபேட் பிளேக், உள்நாட்டுப் போரின் முடிவிற்குப் பின்னரான பத்து வருடங்களில் இலங்கை கண்டிருக்கக்கூடிய முன்னேற்றங்களை நிலைபேறானதாக்குவதற்கும், புதிதாகத் தோன்றியிருக்கும் குண்டுத்தாக்குதல் பயங்கரவாத சம்பவங்களின் விளைவான அச்சுறுத்தலை எவ்வாறு வெற்றிகரமாகச் சமாளிப்பது என்பது பற்றியும் விரிவாகக் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவின் "மக்லாட்டி அசோஸியே ட்ஸ்" என்ற நிறுவனத்தில் இந்தியா மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பணிப்பாளராகத் தற்போது பணியாற்றும் ரொபேட் பிளேக் தனது உரையில் இலங்கையின் தற்போதைய நெருக்கடி குறித்து கூறியிருக்கும் முக்கிய அம்சங்கள் வருமாறு:
நான் இலங்கைக்கு மகிழ்ச்சி மிக்கதும், விசனம் நிறைந்ததுமான கலப்பான உணர்வுடனேயே வந்திருக்கிறேன். இலங்கையிலிருந்து நான் அமெரிக்காவுக்குச் சென்ற பிறகு பத்து வருடகாலத்தில் இங்கு ஏற்பட் டிருக்கும் பல நேர்மறையான மாற்றங்களைக் காண்பதில் மகிழ்ச்சியடைகின் றேன். ஆனால் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரமான குண்டுத்தாக்குதல்கள் நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலி கொண்டிருப்பது குறித்தும், இந்தப் பயங்கரம் இலங்கையில் புதிய பிளவுகளைத் திறக்கும் அச்சுறுத்தலைத் தோற்றுவித்திருப்பது குறித்தும் நானும் அமெரிக்காவிலுள்ள இலங்கையின் பல நண்பர்களும் மிகுந்த வேதனையடைந்திருக்கிறோம்.
அமெரிக்க இராஜதந்திரிகள் ஆலோ சனை வழங்குவதற்கு ஒருபொழுதும் வெட்கப்படுவதில்லை. விரும்பப்படாத வேளையில் கூட அந்த ஆலோசனைகளைக் கூற அவர்கள் தயங்குவதில்லை என்று எனது பழைய ஆசானும், இந்தத் தலைமுறையில் மிகவும் மதிக்கப்பட்டிருக்கக்கூடிய அமெரிக்க இராஜதந்திரியுமான முன்னாள் உதவி இராஜாங்கச் செயலாளர் பில் பேன்ஸ் பகிடியாகக் கூறுவதை இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூருகிறேன்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அவற்றில் கொல்லப்பட்டவர்களினதும், காயமடைந்தவர்களினதும் குடும்பங்களின் தனிப்பட்ட அனர்த்தங்கள் என்றில்லை. அந்தத் தாக்குதல்கள் 26 வருடகால உள்நாட்டுப் போரிலிருந்து மீண்டுவந்து கொண்டிருக்கின்ற இலங்கையில் பழைய புண்களைத் திறந்து விட்டிருக்கின்றன. அந்தத் தாக்குதல்கள் இலங்கையில் தொழில்துறை முயற்சிகளில், வர்த்தக முயற்சிகளில் ஈடுபடுவது எந்தளவிற்கு விவேகமானது என்பது பற்றிய கேள்வியை வர்த்தகப் பங்காளிகள் மனதில் எழுப்பியிருக்கிறது.
அமெரிக்காவிடமிருந்து படிக்க வேண்டிய பாடம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் யார், வெளிநாடுக ளில் இருக்கக்கூடிய பயங்கரவாத குழுக்களுடன் அவர்கள் கொண்டிருந்திருக்கக்கூடிய தொடர்புகள் எவை, இலங்கையில் புலனாய்வுத் துறையினாலும் பாதுகாப்புப் படைகளினாலும் கண்டுபிடிக்கப்படாத முறையில் மிகவும் நவீன யுக்திகளுடன் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட குண்டுத்தாக்குதல்களைப் பல்வேறு நகரங்களில் எவ்வாறு அவர்களால் நடத்த இயலுமாக இருந்தது. பயங்கரவாதிகளின் கட்டமைப்புக்களில் எஞ்சியிருக்கக்கூடியவை எவை என்பவை பற்றிய விசாரணைகள் சுறுசுறுப் பாக உறுதிப்பாட்டுடன் முன்னெடுக்கப்பட வேண்டும்.
2001 செப்டெம்பர் 11 அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலும், வாஷிங்டன் நகரிலும் பயங்கரவாதிகள் மேற்கொண்ட படுமோசமான தாக்குதல்களுக்குப் பின்னரான சூழ்நிலைகளில் அமெரிக்கா இழைத்த தவறுகளிலிருந்து இலங்கையால் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள முடியும். அரசியலமைப்பு ரீதியான உகந்த தடுப்புக்கள் எதுவுமில்லாமல் அமெரிக்க அரசாங்கம் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் அதீதமான முறையில் அதன் பிரதிபலிப்பை வெளிக்காட்டியது என்றே நிபுணர்கள் விளம்புகிறார்கள். கியூபாவின் குவாண்டனாமோவில் தடுப்புக்காவல் நிலையங்களை ஏற்படுத்தி அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் சட்டபூர்வமான உரிமைகள் மறுக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த நிலைவரம் நெருக்கடியான தருணங்களில் அரசாங்கத்திற்கு இருக்கக்கூடிய அதிகார எல்லைகளைப் பற்றிப் பெருமளவு கேள்விகளை எழுப்பியது. எமது ஆட்சி முறையிலிருக்கக்கூடிய உரிமை மீறல்களுக்கு எதிரான தடுப்புக்க ளும் சமப்படுத்தல்களும் பின்னர் தவறுகளை நாம் திருத்திக்கொள்ள வழிவகுத்தன. அத்துமீறல்களையும் தவறான நடவடிக்கைகளையும் அம்பலப்படுத்துவதில் பத்திரி கைகள் பலமான பாத்திரமொன்றைக் கொண்டிருந்தன.
9/11 இற்குப் பின்னரான அனுபவங்க ளின் அடிப்படையில் இலங்கை அமெரிக்காவிடமிருந்து இன்னொரு பாடத்தையும் கற்றுக்கொள்ள முடியும். சி.ஐ.ஏ., எப்.பி.ஐ. மற்றும் புலனாய்வு அமைப்புக்களுக்கிடையே தகவல்களைப் பகிர்ந்துகொள்வதில் குறைபாடு மிக்க தொடர்பாடல் இருந்தது. புலனாய்வு நிறுவனங்களுக்கு இடையிலான தொடர்புகளையும், ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்கு அன்றைய புஷ் நிர்வாகம் சகல புலனாய்வு மற்றும் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களையும் சேர்ந்த சிரேஷ்ட நிபுணர்களை உள்ளடக்கிய செயற்பாட்டுக் குழுவொன்றை அமைத்தது. இந்தக்குழு விசேட அச்சுறுத்தல்கள் பற்றி ஆராய்வதற்குக் கிடைத்திருக்கக்கூடிய சகல தகவல்களையும் மதிப்பீடு செய்வதற்கு கிரமமாகக் கூட்டங்களை நடத்தியது.
இஸ்லாமிய அரசு இயக்கமோ அல்லது ஏனைய இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களோ வேரூன்றாத வகையில் மிகவும் கவனமாக இலங்கை செயற்பட வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் இஸ்லாமிய அரசிற்கு இருந்திருக்கக்கூடிய துல்லியமான பாத்திரம் குறித்து இன்னமும் விசாரிக்கப்பட வேண்டியிருக்கின்றது என்ற போதிலும், இன்றைய சந்தர்ப்பத்தில் இல ங்கை ஏன் ஒரு இலக்காகத் தெரிவு செய்யப்பட்டது என்ற கேள்வி எழவே செய்கிறது. முதலாவதாக இஸ்லாமிய சமூகத்திற் கும், கிறிஸ்தவ சமூகத்திற்கும் இடையிலான உறவுகள் இலங்கையில் வரலாற்று ரீதியாக நலமாகவே இருந்து வந்திருப்பதாலும், தீவிர இஸ்லாமிய சிந்தனை இலங்கையில் ஒருபோதும் பெரும் ஆதரவைப் பெறவில்லை என்பதாலும் நாங்கள் தீட்டக்கூடிய தாக்குதல் திட்டங்கள் தேவையற்ற கண்காணிப்புக்கு உட்படுத்தப்படாது என்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்காரர்கள் கணிப்பிட்டிருக்கக்கூடும்.
இரண்டாவதாக 2009 மேயில் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னர் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் தங்களது கடுமையான பாதுகாப்புக் கண்காணிப்புக்களைத் தளர்த்தி இருப்பதாகவும், விடுதலைப் புலிகள் மீண்டெழுவதைத் தவிர்ப்பதிலேயே பாதுகாப்புப் படைகள் தமது கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தாக்குதல்தாரிகள் கணிப்பிட்டிருக்கக்கூடிய சாத்தியமும் இருக்கிறது.
அதேவேளை இத்தகைய குண்டுத்தாக்குதலை நடத்தி முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் ஏனைய சமூகங்களுக்கிடையே பகைமையை விதைத்தால் அதைத் தங்களது கெடுதியான நோக்கங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் தாக்குதல்தாரர்கள் எதிர்பார்த்திருக்கக்கூடும். இலங்கை இதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இச்சந்தர்ப்பத்தில் நான் இலங்கைக்கு முன்வைக்கக்கூடிய சிபாரிசு நல்லி ணக்கத்துக்கும், நல்லாட்சிக்கும் முன்னுரிமை கொடுத்து புதிய கவனம் செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது என்பதேயாகும்.
புதிய பிளவு
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் ஏற்கனவே சிக்கலானதாக இருக்கும் இலங்கையின் இனத்துவ உறவுமுறைகளில் புதிய பிளவைத் திறக்கக்கூடிய சாத்தியமிருக்கிறது. சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை நோக்கிய சீர்திருத்தங்களின் வேகம் மற்றும் வீச்செல்லை குறித்து இலங்கை தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருக்கின்றது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, இழப்பீடு மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற முக்கியமான விவகாரங்கள் குறித்து இன்னமும் ஆராயப்பட்டுவரும் நிலையில் இன்னும் சிலவகைப் பதற்றங்களும் தொடர்ந்திருக்கவே செய்கின்றன.
சிங்கள, - தமிழ் நல்லிணக்கம் தொடர்பிலான செயன்முறைகள் முன்னெடுக்கப்பட வேண்டியவையாக இருக்கின்ற நிலையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் இலங்கை சமூகத்தில் புதிய காயங்களையும் பிளவுகளையும் திறக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன. அத்துடன் புதிய கேள்விகளையும் கிளப்புகின்றன.
தமிழ் - முஸ்லிம் வன்முறை நிகழ்வுகள்
மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் உள்நாட்டுப்போர் காலகட்டத்தில் கிழக்கில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான வன்முறைகள் பற்றிய நினைவு களை மீளக்கிளறி விடுமா? உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்து மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கக்கூடிய சீற்றத்தைத் தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்தி தீவிரவாத சிங்கள, பௌத்த அமைப்புக்கள் (கடந்த வருடம் மே மாதம் கண்டியில் நாம் கண்டதைப் போன்று) முஸ்லிம்கள் மீது தாக்குதல்களை மீண்டும் ஆரம்பிக்குமா? முஸ்லிம்களினதும் சிங்கள பௌத்தர்களினதும் வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ சமூகம் பழிவாங்கலில் நாட்டம் காட்டுமா?
சிக்கலானதும் எளிதில் தீப்பற்றக்கூடியதுமான இந்த நிலைவரம் தேசிய கலந்துரையாடல் ஒன்றுக்கு நாடு ஒன்றுபட வேண்டிய தேவையை உணர்த்தி நிற்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான அரசியல் வேறுபாட்டையும் மனக்கசப்பையும் அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், அத்தகைய தேசிய கலந்துரையாடலுக்குத் தலைமை தாங்கக்கூடியவர் யார் என்பது குறித்து உன்னிப்பாகச் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
மதத்தலைவர்களின் பங்களிப்பு
இதுவிடயத்தில் முன்னுதாரணமாகப் பின் பற்றக்கூடிய நடத்தைகளை மதத் தலைவர்களும், அவர்களைப் பின்பற்று கின்ற இளைஞர் குழுக்களும் வெளிக்காட் டியிருக்கிறார்கள். குண்டுத்தாக்கு தல்களுக் குப் பின்னரான சூழ்நிலைகளில் அதிமேற் றானியார் கர்தினால் மல்கம் ரஞ்சித் கடைப் பிடித்த அணுகுமுறை நிறைவமைதியுடை யதும், பெருமைப்படத்தக்கதுமாகும்.
இஸ்லாமிய அச்சக்கோளாறு
இந்தியாவிலும், எனது சொந்த நாட்டிலும் ஏற்கனவே அதிகரித்து வந்திருக்கின்ற இஸ் லாமிய அச்சக்கோளாறு இலங்கையில் வேரூன்றுவதற்கு அனுமதிக்கக்கூடாது. தற் போதையதைப் போன்ற நெருக்கடியான நிலைவரத்தைக் கையாள்வதற்கு அரசியல் தலைவர்கள் மீதல்ல, நாட்டின் ஜனநாயக நிறுவனங்களின் பலத்தின் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் தங்களது தனிப்பட்ட நலன்களையும் குறுகிய நோக்குடனான கட்சி நலன்களையும் மனதிற்கொண்டு செயற்படுவதில் நாட் டம் காட்டக்கூடியவர்கள். கடந்த வருட இறுதியில் இலங்கையில் மூண்ட அரசி யல் மற்றும் அரசியலமைப்பு நெருக் கடி, அரசியலமைப்புப் பேரவை மற்றும் நீதித் துறை போன்ற சுயாதீன மான நிறுவனங் கள் வகிக்கக்கூடிய முக்கியத்துவமான பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதிலும், சுபீட்சமடைவதிலும் இலங்கைக்கு இருக் கக் கூடிய நம்பிக்கையை மீள நிலை நிறுத்த வேண்டுமானால் இந்த சுயாதீனமான நிறுவனங்கள் தொடர்ந்தும் சுயாதீனமாக இருக்க வேண்டியது மிக முக்கியமானதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM