தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹம்மட் சஹ்ரான் எனப்படும் சஹ்ரான் ஹாசிம் - பொலிஸ் விசாரணையில் தகவல்

Published By: Priyatharshan

23 Apr, 2019 | 07:07 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

தொடர் தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி ஷங்ரில்லா ஹோட்டல் தற்கொலைதாரியான சஹ்ரான் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ள நிலையில், இதுவரை 55 பேர் வரைக் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சி.ஐ.டி.யின் பிரதான விசாரணைகளில் 26 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.

 நாட்டில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 7 சம்பவங்கள் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் என அரச இரசாயன பகுப்பயவுகள் ஊடாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஏ.வெலி அங்க தலைமையிலான குழுவினர் உறுதி செய்துள்ளனர். 

இந் நிலையில் இந்த தொடர்  தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக ,  ஷங்ரில்லா ஹோட்டல் தாக்குதல் தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான  தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் மொஹம்மட் சஹ்ரான் எனப்படும் சஹ்ரான் ஹாசிம் என்பவர் செயற்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக  பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரி ஒருவர் வீரகேசரிக்கு தெரிவித்தார்.

 இந் நிலையில் நாடளாவிய ரீதியில் இந்த குண்டுத் தககுதல்கள்  தொடர்பில் 55 சந்தேக நபர்கள்  பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அதில் பிரதானமான விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனயவுப் பிரிவின் பொறுப்பில் 26 சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர வீரகேசரிக்கு தெரிவித்தார்.  

இந்த 26 பேரில்  சி.சி.டி.யால் கைதுசெய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்கள் பலரும், தம்புள்ளையில் வைத்து நேற்று காலை கைது செய்யப்பட்ட இரு முக்கிய சந்தேக நபர்களும் அடங்குகின்றனர்.  தம்புள்ளையில் கைதுசெய்யப்பட்ட இருவரும், மாவனெல்லை பகுதியில் கடந்த வருடம் இடம்பெற்ற புத்தர் சிலை  உடைப்பு விவகாரத்தில் அவசியமான சந்தேக நபர்கள் என பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.

இதனைவிட கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் 3 சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,  வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்த இருவர் அந்த பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர  தெரிவித்தார். 

இதனைவிட ஷங்ரில்லா ஹோட்டலில்  பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடாத்தியதாக கூறப்படும் இன்சான் சீலவன் என்பவரின் தொழிற்சாலையில்  சேவையாற்றிய ஒன்பது பேரை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்திருந்தனர். அவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் மே 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைவிட தெஹிவளை பகுதியில்  முன்னெடுக்கப்பட்ட தற்கொலை தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினர் முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளில்  வெல்லம்பிட்டிய - லன்சியாஹேன பகுதியில் வைத்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குனசேகர வீரகேசரிக்கு உறுதி செய்தார்.

 இவற்றை விட  மாதம்பை  பகுதியில் வைத்து 5 சந்தேக நபர்களும், கம்பளை, கட்டுகஸ்தோட்டை பகுதிகளில் வைத்து 4 சந்தேக நபர்களும்  கந்தானை பகுதியில் தொலைதொடர்பு உபகரணங்களுடன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதனைவிட வத்தளை - எந்தேரமுல்ல பகுதியில் வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமான முறையில் தங்கியிருந்த இருவரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கைது செய்திருந்தனர்.

இந் நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,  சர்வதேச  பொலிசார் சி.ஐ.டி. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர்.

 வெள்ளவத்தை பொலிஸார் கைப்பற்றிய வேனும், சோதனை செய்த வீடும்

 இதேவேளை கொழும்பு தாக்குதல்களுக்கு வெடிபொருட்களை எடுத்து வந்ததாக கூறபப்டும் வேனை நேற்று முன் தினமே வெள்ளவத்தை பொலிசார், தமது பொலிச் பிரிவின் இராமகிருஷ்ண மிஷன் பகுதியில் வைத்து கைது செய்திருந்தனர்.  இந் நிலையில்  அந்த வேனின் சாரதி கொடுத்த வாக்கு மூலத்தின் படி, ஷெங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை தககுதல் நடாத்த வந்த  தற்கொலைதாரிகளில் ஒருவர்  தங்கியிருந்து தாக்குதல்களை திட்டமிட்டு தயாரானதாக கூறப்படும் பாணந்துறை, சரிக்காமுல்ல பகுதியைச் சேர்ந்த  வீடு கண்டுபிடிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

இதன்போது அந்த வீட்டை வாடகைக்கு கொடுத்த வீட்டு உரிமையாளரையும் வெள்ளவத்தை பொலிசார் கைது செய்தனர். அவரிடம் ஷெங்ரில்லா தற்கொலை குண்டுதாரியின் தலைப் பகுதி புகைப்படத்தை காட்டி  விசாரிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கே தான் வீட்டை வாடகைக்கு கொடுத்ததாகவும், வாடகைக்கு பெறும் போது உயர்ந்த மெல்லிய தோற்றம் உடைய மற்றொருவரும்  உடன் வந்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

இந் நிலையில் அந்த வீட்டில் இருந்து ஷெங்ரில்லா தாக்குதலுக்கு பயன்படுத்தி வெடிபொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில திரவியங்கள்,  குண்டு கையாளும் திட்டம் அடங்கிய ஆவணம்,  கையடக்கத் தொலைபேசி பாகங்கள் என பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் நேற்று அவ்வீடு அரச இரசாயன பகுப்பாய்வாளரின் சோதனைக்குட்பட்டதுடன்  தற்போது அவ்வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

பிரதான சூத்திரதாரி

 இந் நிலையில் ஷெங்ரில்ல ஹோட்டலில் இரு தர்கொலை குண்டுதற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில்,  அவர்களில் மொஹம்மட் சஹ்ரான் எனும் நபரே தொடர் குண்டுவெடிப்புக்களை நெறிப்படுத்திய சூத்திரதாரி என இதுவரையிலான விசாரணைகளை வைத்து பாதுகாப்புத் தரப்பு சந்தேகிக்கின்றது. அவர் தேசிய தெளஹீத் ஜமா அத் தலைவர் எனும் பெயரில் தோன்றியவர் எனவும்  உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

இந் நிலையில் இவர் தொடர்பிலேயே கடந்த 11 ஆம் திகதி தேசிய புலனயவுப் பிரிவு இந்த தாக்குதல் திட்டம் குறித்து  எச்சரிந்திருந்தது. எனினும்  அந்த உளவுத்துறை எச்சரிக்கை பொலிஸ் மா அதிபர் ஊடாக விஷேட பாதுகாப்பு விவகாரங்களை கையாளும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியலால் தசநாயக்கவுக்கு அனுப்பட்டு  அதிதிகளின் பாதுகாப்பு மட்டுமே உறுதி செய்யப்பட்டிருந்தது.

 குறித்த உளவுத்துறை அறிக்கையில் சஹ்ரானின் கீழ் அவரது குழ்வினர் கிறிஸ்தவ தேவாலயங்கள், இந்திய உயர்ஸ்தானிகராலயம் மீது தககுதல் நடத்தும் திட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தெமட்டகொடை சம்பவமும், சின்னமன் கிரான்ட் - கிங்ஸ்பெரி தககுதல்களும்

 இதனிடையே தெமட்டகொட மஹவில கார்ட்டின் சொகுசு வீட்டில் நேற்று முன்தினம் இரு வெடிப்புக்கள் பதிவாகின. அதில் ஒன்று  பொலிச் அதிகாரிகள் மூவரை இலக்கு வைத்து  குண்டுத் தாக்குதல் எனவும் மற்றையது தற்கொலை குண்டுத் தாக்குதல் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது. 

இதனிடையே வெடிப்பு இடம்பெற்ற குறித்த வீட்டின் உரிமையாளரின்  33 வயது மகனான இம்சான் மொஹம்மட் இப்ராஹீம், 31 வயதான இல்ஹாம் அஹமட் இப்ராஹீம்  ஆகியோரே சினமன் கிரான்ட் மற்றும் கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் தற்கொலை தாக்குதல்களை நடாத்தியவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

கிங்ஸ்பெரி ஹோட்டல் மீது தாக்குதல் நடாத்திய சந்தேக நபர் அந்த ஹோட்டலில்  8 ஆம் மாடியில் 819 ஆம் இலக்க அறையில் தங்கிருந்தமை விசாரணையாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.  அதே போல் சினமன் கிராண்ட் ஹோட்டல் தாக்குதல் தாரியின் பயணப் பாதையும் கண்டறியப்பட்டது. இதனை மையப்படுத்திய விசாரணைகளிலேயே அவர்கள் வந்த சொகுசு காரின் பயணப் பாதை தொடர்பில் சி.சி.ரி.வி. சாட்சிகளை அடிப்படையாக கொண்டே பொலிசார் மூவர் அவ்வீட்டுக்கு விசாரணைக்கு சென்றுள்ளனர்.

 தெமட்டகொடை வீட்டில் நடந்தது என்ன ?:

இதன்போதே   பொலிசார் அவ்வீட்டின் மேல் மாடியை சோதனை இடச் சென்ற போது கீழ் மாடியில் இருந்த நபர் ஒருவர் ரிமோர்ட் ஊடாக மெல் மாடியில் குண்டை வெடிக்கச் செய்து பொலிசாரை கொலை செய்துள்ளார் என சந்தேகிக்கபப்டுகின்றது.  இந் நிலையில் வீட்டு உரிமையாளரின் மகனான 30 வயதுடைய இஜாஸ் அஹமட் இப்ராஹீம்,  பொலிசாரால் கைது செய்யப்ப்ட்டுள்ள நிலையில்  அவரது இளைய சகோதரரான இஸ்மாயீல் அஹமட் இப்ராஹீம் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக அறிய முடிகின்றது. 

இந் நிலையில் அவ்வீட்டில் இடம்பெற்ற முதல் வெடிப்பின் பின்னர் பொலிஸ் அதிரடிப் படை வீட்டை சோதனையிடச் சென்றிருந்தது. இதன்போது அங்கிருந்த , செங்ரில்லா ஹோட்டல்  தாக்குதலின் தற்கொலை குண்டுதாரியான இன்ஹாம் என்பவரின் மனைவி 25 வயதுடைய பாத்திமா ஜிப்றி மற்றும் இரு குழந்தைகளுடன் தற்கொலை  குண்டை வெடிக்கச் செய்ததாக நம்பபப்டுகின்றது. இக்குண்டு அவரால் வெடிக்கச் செய்யப்பட்டதா அல்லது அதுவும் ரிமோர்ட் கொன்ட்ரோல் ஊடாக வேறு ஒருவரால் இயக்கப்பட்டதா என்பது குறித்தும் அந்த விசாரணைகளில் அவதானம் வெலுத்தப்பட்டுள்ளது. 

 இந் நிலையிலேயே  இரு நட்சத்திர ஹோட்டல்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய சந்தேக நபர்களின் தந்தையான , தேர்தல் ஒன்றிலும் போட்டியிட்டுள்ள 65 வயதுடைய வர்த்தகர்  யூசுப் மொஹம்மட் இப்ராஹீம்  என்பவரையும் பொலிசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். 

இந் நிலையிலேயே இந்த தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை பல பகுதிகளிலும் மொத்தமாக 55 பேர் வரையில் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். 

 நட்சத்திர ஹோட்டல்கள் மீதான  தாக்குதல்களின்  தற்கொலை குண்டுதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு தேவாலயத்தில் தாக்குதல் நடாத்திய தற்கொலை குண்டுதாரியின் உருவத்தை சி.சி.ரி.வி. கமராவில் இருந்து கண்டுபிடித்து அவரையும் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.

 எனினும் நீர்கொழும்பு, கட்டான - கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடாத்தியதாக சந்தேகிக்கப்படும் தற்கொலை குண்டுதாரியின் உருவம் அடங்கிய சி.சி.ரி.வி. காணொளியை வைத்து பொலிசார் தேடி  விசாரித்து வருகின்றனர். அத்துடன் கொச்சிக்கடை தேவாலயத்தில் தாக்குதல் நடாத்திய நபர் தொடர்பிலும் சி.ஐ.டி. நேற்றும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது. 

தெஹிவளை சம்பவம்:

 இந் நிலையில் தெஹிவளை யில் இடம்பெற்ற வெடிப்பு தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு பொலிசார் முன்னெடுத்துள்ள விசாரணைகளில்,  குறித்த தங்குமிடத்தின் சேவையாளர்கள் சந்தேகத்துக்கு இடமான  இருவரை சோதனை செய்ய முற்பட்ட போது அவர்கள் குண்டை வெடிக்கச் செய்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. எவ்வாறயினும் அது தொடர்பில் மூவர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15