ஒரே பார்வையில் இலங்கையின் கறுப்பு நாள் ! உயிரிழந்தோரின் எண்ணிக்கை 207 ஆக உயர்வு 

Published By: Priyatharshan

21 Apr, 2019 | 06:35 PM
image

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களையடுத்து நண்பகல் 12.30 வரையான காலப்பகுதியில் 207 பேர் உயிரிழந்துள்ளதுடன்  450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு, சியோன் தேவாலயம், கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டல், கொழும்பு, சங்கரில்ல ஹோட்டல், கொழும்பு, சினமன் கிராண்ட் கொழும்பு, தெஹிவளை ட்ரொபிகல் இன் , கொழும்பு, தெமட்டகொடை மகவில பூங்காவில் இரு வெடிப்பு மற்றும் தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

மட்டக்களப்பில் இடம்பெற்ற சம்பவத்தில்  29 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் நீர்கொழும்பில் இடம்பெற்ற சம்பவத்தில் 111 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் இடம்பெற்ற சம்பவத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் 51 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனைய 13 பேர் இவ்வனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, தெமட்டகொடைப் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 3 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேரை கைதுசெய்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 11 நாடுகளைச் சேர்ந்த 27 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

குறிப்பாக போலந்து, டென்மார்க், சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, மொறோக்கோ, மற்றும் பங்ளாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

நாட்டில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு மற்றும் தற்கொலைத் தாக்குதலுக்கு எந்தவித பயங்கரவாத அமைப்போ அல்லது எந்த அமைப்போ உரிமைகோரவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கொழும்பு சங்கரில்ல ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் சி-4 ரக வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்ட 25 கிலோகிராம் நிறையுள்ள குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஹோட்டலில் இரு நபர்கள் நேற்றையதினம் (20.04. 2019) அறை இலக்கம் 616 இல் தங்கியிருந்துள்ளதாகவும் குறித்த இரு நபர்களே இவ்வாறு தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

தற்கொலை தாக்குதல் தாரிகளின் செயற்பாடுகள் ஹோட்டலின் உணவகப்பகுதி மற்றும் விறாந்தைப் பகுதிகளிலுள்ள சி.சி.ரி.வி. கமராக்களில் பதிவாகியுள்ளது.

வெளிநாட்டவரா அல்லது உள்ளூரைச் சேர்ந்தவர்களா ஹோட்டல் தற்கொலைத்தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ளனர் என இது வரை தெரியவரவில்லை.

இந்நிலையில் நாட்டின் பாதுகாப்புக் கருதி சமூகவலைத்தளங்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் போலிச் செய்திகள் மற்றும் வதந்திகள் பரவுவதை தடுக்கும் நோக்கில் சமூகவலைத் தளங்களின் செயற்பாடுகுள் முடக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

குறிப்பாக முகப்புத்தகம், இன்ஸ்ரகிராம், வட்ஸ்அப், வைபர் போன்ற சமூக ஊடகங்களின் செயற்பாடுகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக முடக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் மற்றும் வெடிப்புச் சம்பவங்களையடுத்து நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு இன்னு மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறிப்பாக கிறிஸ்தவர்களின் முக்கிய நாளான உயிர்ப்பு ஞாயிறு தினமான இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் உயிர்ப்பு ஞாயிறு வழிபாகளில் ஈடுபட்டிருந்த தருணம் குறித்த குண்டுத்தாக்குதல்கள் ஆலயங்களில் நடத்தப்பட்டது மிகவும் கொடூரமானதும் மிலேச்சத்தனமானதுமான செயல் என பல உலகநாடுகளும் அரசியல் தலைவர்களும்  கண்டனங்களையும் கவலையையும் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை பரிசுத்த பாப்ரசரும் இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் கவலை தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள பாடசாலைகள் நாளை 2 ஆம் தவணைக்காக ஆரம்பமாகவுள்ள நிலையில், நாளையும் நாளை மறுதினமும் பாடசாலை விடுமுறைநாளாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.

இதேவேளை அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் தற்காலிகமாக இரத்துச்செய்யப்பட்டுள்ளன.

நாட்டிலுள்ள பல தேவாலயங்களுக்கு ஆயுதமேந்திய பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையிலீடுபட்டுள்ளனர்.

தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஏனை இலங்கையின் அரசியல்வாதிகள் கண்டனங்களையும் கவலையையும் வெளியிட்டுள்னர்.

வடமாகாண சபைக்குட்பட்ட அனைத்து அரச அலுவலகங்களுக்கும் நாளை (22) விடுமுறை வழங்குமாறு வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பணித்துள்ளார். 

நாட்டின் நிலைமை கருதி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அத்துடன் நாளை மற்றும் நாளை மறுதினம் நடக்கவிருந்த பல்கலைகழக பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட சகல துறைகளினதும் தலைமை அதிகாரிகளின் பங்குபற்றலில் விசேட கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றது.

இதன்போது, பொலிஸார், முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தி மத வழிபாட்டு தலங்கள், சுற்றுலா விடுதிகள், வைத்தியசாலைகள், தூதரகங்கள், கத்தோலிக்க மதகுருமார்கள், கத்தோலிக்க வணக்கஸ்தலங்கள் மற்றும் முக்கியத்துவமிக்க அரச நிறுவனங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் அரசினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08