இலங்கையின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவிடத்தையும் பொருளாதார உள்ளார்ந்த ஆற்றலையும் அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் இலங்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பங்கைக்கொண்டிருக்கிறது என்று அமெரிக்கா கூறியிருக்கிறது.
" இந்தோ - பசுபிக் இணைத்தொடர்பில் அமைந்திருக்கும் இலங்கையை நாம் முக்கியமான பங்காளியாக நோக்குகிறோம்.பிராந்தியத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கக்கூடிய வாய்ப்பை இலங்கை கொண்டிருக்கிறது " என்று அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் பதில் பிரதம பிரதி செயலாளர் தோமஸ் எல்.வஜ்டா கொழும்பில் தெரிவித்திருக்கிறார்.
' அமெரிக்காவின் இந்தோ -- பசுபிக் நோக்கும் இலங்கையின் வகிபாகமும் ' என்ற தொனிப்பொருளில் பாத்பைஃன்டர் பவுண்டேசனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் ஒன்றில் வஜ்டா உரையாற்றியாற்றினார். இந்தோ -- பசுபிக் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் பொருளாதார மற்றும் வர்த்தக தந்திரோபாயத்தின் அம்சங்கள் கலந்துரையாடலின்போது விரிவாக ஆராயப்பட்டன.
இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் பிணக்குகளை அமைதியான முறைகளில் தீர்த்துவைத்தல், சுதந்திரமான கடல்வழிப் போக்குவரத்து, திறந்ததும் ஔிவுமறைவு அற்றதுமான முதலீட்டுச் சூழல், வலுவானதும் பொறுப்பு வாய்ந்ததுமான ஆட்சிமுறை நிறுவனங்கள் ஆகியவற்றை மதிக்கின்ற சட்டவிதிகளை அடிப்படையாகக்கொண்ட ஒழுங்குமுறையை பாதுகாத்து மேம்படுத்துவதற்கு இலங்கை போன்ற முக்கிய பங்காளிகளுடன் சேர்ந்து அமெரிக்கா பணியாற்றிக்கொண்டிருக்கிறது.
இந்த கோட்பாடுகள் பல தசாப்தங்களாக இங்கும் பிராந்தியத்தின் வேறு பகுதிகளிலும் பெருமளவு வளர்ச்சியையும் சுபிட்சத்தையும் கொண்டுவர வசதியாக அமைந்த சூழ்நிலைகளை தோற்றுவித்தன.அத்துடன் பிராந்தியத்தின் எதிர்காலத்துக்கு அவை முக்கியமானவை என்று நாம் நோக்குகிறோம்' என்றும் அவர் கூறினார்.
இந்த கலந்துரையாடல் பாத்பைஃன்டர் பவுண்டேசனி்ன் தலைவர் பேர்னாட் குணதிலக தலைமையில் நடைபெற்றது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. ரெப்லிஸும் கலந்துகொண்டார்.
“ இலங்கை சுயாதிபத்தியம் கொண்ட ஒரு நாடு. அதன் சுயாதிபத்தியத்தையும் இந்தோ -- பசுபிக் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளினது சுயாதிபத்தியத்தையும் நாம் மதிக்கிறோம்.இலங்கை அமெரிக்காவுடன் செயற்படுவதைப்போன்று பிராந்தியத்தில் உள்ள சகல நாடுகளுடன் மாத்திரமல்ல உலகம் பூராவும் உள்ள நாடுகளுடனும் பரஸ்பரம் பயன்தரக்கூடியதான கூட்டுப்பங்காண்மையை கட்டியெழுப்பிப் பேணவேண்டும் என்று நாம் முழுமையாக எதிர்பார்க்கின்றோம். ஆனால், அத்தகைய சகல உறவுகளும் ஔிவுமறைவு அற்றவையாகவும் உண்மையிலேயே பரஸ்பரம் நீண்டகாலத்துக்கு பயன்தருபவையாகவும் இருக்கவேண்டும்.வெறுமனே வர்த்தக சுய நலனையும் மறைமுக நிகழ்ச்சித்திட்டங்களையும் அடிப்படையாகக்கொண்ட கொடுக்கல்வாங்கல்கள் எதிர்காலத்தை அடகுவைப்பவையாகவும் பிராந்தியத்தின் நீண்டகால உறுதிப்பாட்டையும் உள்ளுரத்தையும் மலினப்படுத்துபவையாகவும் அமைந்துவிடும்.
" இரு தரப்பு உறவுகளைப் பொறுத்தவரையிலும் இந்தோ -- பசுபிக் கட்டுக்கோப்பின் அடிப்படையிலும் அமெரிக்காவின் இலக்கு எம்முடனான கூட்டுப்பங்காண்மையின் ஊடாக இலங்கையின் ஆற்றல்களை வலுப்படுத்துவதும் பரந்தளவு வளர்ச்சியின் ஊடாக சகலருக்கும் வாய்ப்புக்களைக்கொடுக்கக்கூடிய இலங்கையை உருவாக்குவதுமேயாகும்.
" இந்தோ -- பசுபிக் பிராந்தியத்தில் பொருளாதார கூட்டுப்பங்காண்மையையும் முதலீடுகள் மற்றும் இரு வழி வாணிபத்தையும் விரிவுபடுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் தோன்றும்.குறிப்பாக , அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இத்தகைய செயற்பாடுகளின் மூலமாக பிராந்தியத்தில் பாரிய செல்வாக்குமிக்க பாத்திரமொன்றை வகிப்பதற்கான வாய்ப்புகள் இலங்கைக்கு இருக்கிறது. இந்த வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்தினால் கணிசமான பயன்களைப் பெறக்கூடியதாக இருக்கும்"
" இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா அதன் ஊடாட்டங்களை கூடுதலான அளவுக்கு துடிப்பானதாக்குவதில் கவனத்தைக் குவித்திருக்கும் நிலையில், வாஷிங்டன் இலங்கையை பெறுமதியான ஒரு நட்புநாடாகவும் முன்னரங்க நாாகவும் நோக்குகிறது" என்றும் வஜ்டா கலந்துரையாடலின்போது மேலும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM