பாலியல் வல்லுறவு என்றால் என்ன ? ; சட்டத்தைப் பற்றி நீங்கள் அறிய வேண்டியவை

Published By: Raam

05 Apr, 2016 | 07:18 AM
image

பாலியல் வல்லுறவு என்றால் என்ன என்பதற்கு சாதாரண மனிதன் கொண்டுள்ள விளக்கத்திற்கும் சட்டம் கூறும் விளக்கத்திற்கும் இடையேவேறுபாடுண்டு.

சாதாரண மனிதன் பாலியல் வல்லுறவு என்பது ஆண் ஒருவனின் பிரத்தியேக உறுப்பு பெண்ணின் பிரத்தியேக உறுப்புடன் இணைக்கப்பட்டு மீளப்பெறும் வரையும் நடைபெறும் ஒரு செயல் என்றே கொள்கிறான். ஆனால் சட்டம் கூறுவது என்னிவெனில் ஆணின் பிரத்தியேக உறுப்பு பெண்ணின் அந்தரங்க உறுப்புடன் இணைக்கப்பட்டு மீளப்பெறும் வரை செயல்படும் செயல் அல்ல என்றும் பெண்ணின் அந்தரங்க உறுப்புடன் இணைந்தாலே போதும் என்றாகும்.

இதிலிருந்து சட்டமானது பாலியல் குற்றத்திற்கு குற்றச் செயலை விட குற்றமனமே தேவை எனக்கருதுகிறது என ஒருவாறு கூறலாம். ஆயின் இதற்கும் புற நடையுண்டு.

சில சந்தர்ப்பங்களில் குற்றமனம் இல்லாத போது தண்டனையுண்டு

ஆண் ஒருவன் பெண்ணின் சம்மதத்துடன் பாலியல் உறவில் ஈடுபடும் போது அங்கு ஆணுக்கு குற்றமனம். இருப்பதில்லை எனலாம். ஆயினும் சில சந்தர்ப்பங்களில் குற்றமனம் இல்லாத போதும் பாலியலில் ஈடுபட்டால் அவனுக்கு தண்டனையுண்டு. உதாரணமாக 16 வயதிற்கு குறைந்த பெண் ஒருவருடன் ஒருவன் பாலியல் உறவில் ஈடுபட்டால் அவன் நியதிச் சட்ட குற்றத்திற்கு உள்ளாவான். இதனால் குற்றத்தண்டனை பெறுகிறான். இங்கு மனத்தை பார்ப்பதில்லை. செயலையே சட்டம் பார்க்கிறது. 18 வயதிற்கு மேற்பட்ட பெண்னே பாலியலுக்கு தகுதி என சட்டம் கூறுகிறது. 

பாலியல் பற்றி சில தகவல்கள்

தற்போது பலர் சிறுகுழந்தைகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தும் உள்ளன. இன்றைய பத்திரிகைகளிலும் தகப்பன் ஒருவன் வயது குறைந்த தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக செய்தி வெளிவந்துள்ளது.

நேற்றைய பத்திரிகை செய்தியின்படி தாயாருடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ள ஒருவர் அந்த தாய்க்கும் உண்மையான தகப்பனுக்கும் பிறந்த மகளை ஆண் பால் புணர்ச்சிக்கு உட்படுத்தியதாகவும் அந்த பிள்ளை இச் செயலின் வலியைத் தாங்க முடியாமல் தனது சொந்தத் தகப்பனுக்கு தொலைபேசி மூலம் இது பற்றி தெரிவித்த போது தகப்பன் பொலிசில் புகார் செய்ததால் கள்ளகாதலன் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது.

இந்தியாவில் நடைபெற்ற சம்பவம் ஒன்று பற்றியும் வாசகர்கள் அறிய வேண்டும். தாயுடன் தொடர்புவைத்துள்ள கள்ளகாதலனை வீட்டுக்கு வரவேண்டாம் என்று அந்த தாயின் மகனும் மருமகளும் தடுத்த போதும் கள்ளகாதலன் வீட்டுக்கு வந்து சென்றான். பின்னர் தாயே கூறியது என்னவெனில் இனி இப்படி தொடர்பு வேண்டாம் என்றும் வீட்டுக்கு வரவேண்டாம் என்றும் கூறினாள். இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் அவளை கத்தியால் குத்தி கொலை செய்தான். 

நீ இல்லாமல் நான் இல்லை என்று கூறியுள்ளான். இத்தகைய தகாத செயல்கள் இலங்கையில் மட்டுமன்றி உலக நாடுகள் பலவற்றிலும் நடைபெறுவதுடன் பண்டைக்காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. ‘501 உலக பிரசித்தி பெற்ற குற்றவியல் வழக்குகள்’ என்ற புத்தகத்தில் உள்ள ஒரு வழக்கையும் இவ்விடத்தில் வாசகர்களுக்கு கூறுவது நல்லது என்பதால் அதனையும் இங்கு கூறுகிறேன்.

பாலியலுக்கு என்றே பிறந்தவன் 

Joseph Fritzl 

இப்பத்திரிகையில் பிரசுரிக்கப்படும் இப்படமானது அவன் கைது செய்யப்பட்ட போது பொலிஸ் திணைக்களத்தால் (அவுஸ்திரியா) வெளியிடப்பட்ட படமாகும்.

இவன் மின்சார பொறியியலாளராவான். இவன் அவுஸ்திரியா (Austria) வில் 1935 ஏப்ரல் 9இல் பிறந்தான். 1956இல் றோஸ்மேரி என்ற பெயரையுடைய பெண்ணை மணந்தான். 1967இல் 18 மாதம் சிறையில் பாலியல் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டான். இறுதியில் ஆயுட்கால தண்டனை பெற்றான். 

இவனுக்கு எலிசபத் என்ற பெயரையுடைய அழகான மகள் இருந்தாள். இவளை 11 வயதில் இவன் பாலியல் பலாத்காரம் செய்தான். பின்னர் 16 வயதில் எலிசபத் தகப்பனிடமிருந்து தப்பி ஓட முயற்சித்தாள். ஆனாலும் அவளது திட்டம் பிழைத்து விட்டது. ஆனால் எலிசபெத் எப்படியும் தப்ப முயற்சிப்பாள் என்றும் அதனைத் தடுக்க உபாயத்தையும் தேடினான். 

ஒரு நாள் மேற்படி தகப்பன் அவனிடம் தனக்கு ஒரு உதவி தேவையாக இருக்கிறது என்றும் வீட்டில் உள்ள நிலவறையில் உள்ள கதவை தூக்குவதற்கு வருமாறு கூறினான். அவள் அங்கு சென்றதும் அவளது கைக்கு விலங்கு போட்டு அந்த நிலவறையில் 25 வயது வரையில் வைத்திருந்து பாலியல் வல்லுறவு செய்து வந்தான்.

இவளுக்கு கிட்ட யாரும் செல்லாமல் இருப்பதற்காக 5 அடி உயரமான நீண்ட நாய் ஒன்றை நிலவறையில் வாசலில் காவலுக்கு வைத்தான். 

வீட்டில் உள்ள ஏனைய பிள்ளைகள் மனைவி ஆகியோர் எலிசபெத் எங்கே என்று கேட்ட போது அவள் வீட்டை விட்டு ஓடிப் போய்விட்டாள் என்று கூறி வந்தான். நிலவறையில் உள்ள அறைகளுக்கு ஒவ்வொரு மின்சார கதவை அமைத்திருந்தான். 

ஜோட்பின் படமும் மாரின் படமும்

பிரதான கதவை திறப்பதற்கு Remote Code ஐ பாவித்து வந்தான். இதனால் குடும்பத்தவர் யாரும் இந்த நிலவறைக்கு போக முடியாது இருந்தது.

நிலவறையில் T.V, Video, Fridge, Freezer, Washing Machine, Hot Plates and Bath Room வசதிகளையும் செய்திருந்தான். அவளுக்கு சுதந்திரத்தை தவிர வேறு ஒரு குறையும் இருக்கவில்லை. 

1984இல் எலிசபெத் இவனுக்கு ஒரு குழந்தையை பெற்றாள். ஆனால் அக்குழந்தை தவறிவிட்டது. பின்னர் 1988இல் இவள் இன்னுமொரு குழந்தையை பெற்றாள். அக்குழந்தையின் பெயர் Keristin, அதன் பின்னர் 1990, 1992இல் வேறு இரண்டு குழந்தைகளையும் எலிசபெத் பெற்றாள். 1994இல் மொனிக்கா பிறந்தாள். எலிசபெத் பின்னர் இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். அவர்களது பெயர் எலெக்ஸாண்டர், மைக்கல் என்பதாகும்.

நிலவறையில் மேற்படி பிள்ளைகளில் ஒருவன் நோய் வாய்ப்பட்டான் ஆகவே Joseph Fritzl அவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அப்போது எலிசபத்தும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். இருபது வருடங்களின் பின்னர் நிலவறையிலிருந்து வெளியேறி உலகத்தை கண்டாள். உடனடியாக பொலிசுக்குச் சென்று தனக்கு நடந்ததைக் கூறினாள். பொலிஸார் Joseph Fritzl கைது செய்தனர்.

 பொலிஸார் இவனுக்கு மேல் ஆறு குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். அவற்றில் கொலையும் ஒன்றாகும். இவன் சகல குற்றத்திற்கும் குற்றவாளி என்பதை ஏற்றுக் கொண்டான். இவனுக்கு 2009ம் ஆண்டு மார்ச் 19ஆந் திகதி ஆயுட் காலத்தண்டனையை நீதிமன்றம் விதித்தது.

இன்று இவனது நிலவறை அவுஸ்திரியாவில் உல்லாசப் பிரயாணிகளின் கவனத்தை கவரும் ஒரு இடமாக விளங்குகிறது.

பாலியல் இவ்வாறு பல்வேறு குளறுபடிகளை செய்து வருகிறது. இலங்கையில் மட்டுமல்ல சகல நாடுகளிலும் இது நடைபெறுகிறது. வேதாகமங்களிலும், ஜாதக கதைகளிலும், புராணகதைகளிலும், நாட்டு வழக்குகளிலும் இப்பாலியல் சம்பந்தமான கதைகள் இடம்பெற்றிருப்பதை நாம் காணலாம். ஆகவே இத்தகைய பாலியல் தவறை சட்டத்தின் மூலம் தடுக்கலாம் என்பது பகற்கனவேயாகும். ஆயினும் அதனை தடுக்காமல் விடுவதும் சமூக அழிவிற்கு வழிவகுக்கும். எனவே சட்டம் இருக்கிறது என்பதற்காக அல்ல மனிதனாக வாழ்வதற்காக இக்குற்றத்தை செய்யாதிருக்க முயற்சிக்க வேண்டும். சில நாடுகளில் இப்பாலியல் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்குற்றத்தை தடுக்க அந்நாடுகள் முயன்றுள்ளன. ஆயின் மனிதன் ஒரு குரங்கு போன்றவன். அவனது மனம் குரங்கு போல் ஒன்றிலிருந்து இன்னுமொன்றுக்கு பாயும் தன்மை கொண்டது. இதனால் பாலியலை கட்டுப்படுத்துவது இலகுவானதல்ல.

இலங்கையில் பாலியல் சம்பந்தமாக மிகப்பாதிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றதும் பாலியல் பலாத்காரத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று உத்கோஷங்கள் எழுவது வழக்கம். இரண்டு ஒரு நாளில் அது தணித்து விடுவதை நாம் காணலாம். வித்தியா, சேயா சம்பவங்கள் இதற்கு நல்ல உதாரணங்களாகும். இப்போது அதைப்பற்றி கதைப்பவர்கள் மிக அறிது. 

பாலியல் குற்றங்களை அடியோடு தடுக்க முடியாது. ஆனால் கல்வி அறிவின் மூலம் சமுதாய பழக்க வழக்கங்கள் மூலமும் இதனை தடுக்க முயற்சிக்கலாம். இனி பாலியல் பற்றிய ஏனைய தகவல்களை பார்ப்போம்.

பாலியல் குற்றம் ஒன்று நடந்துள்ளது என்பதை எவ்வாறு கண்டறியலாம்?

 பாலியல் வல்லுறவு நடந்துள்ளது என்பதை பாதிக்கப்பட்டவளின் சாட்சியத்தாலும் வைத்திய சாட்சியத்தாலும் காணக்கூடியதாயிருக்கிறது. வைத்திய சாட்சியம் முக்கிய சாட்சியமாக விளங்குகிறது. D.N.A பரிசோதனை அதற்கு முக்கிய உதவியாயிருக்கிறது. ஒரு குழு பாலியலை புரியும் போது சில கஷ்டங்கள் உண்டு. ஆயினும் வைத்திய உதவி இல்லையேல் பாலியல் வல்லுறவை நிறுவமுடியாது.

வைத்திய அதிகாரி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் ஒருவரின் உடலை பரிபூரணமாக பரிசோதிப்பார். விசேடமாக சில குறிப்பிட்ட இடங்களை அவர் பரிசீலிப்பது உண்டு. சாதாரணமாக முகம், மார்பகம், தொடை, வயிறு மற்றும் சில பகுதிகளில் உள்ள அடையாளங்களை அவர் கவனிப்பது வழக்கம். விசேடமாக பெண்ணின் உறுப்பை மிக கவனமாக பரிசீலிப்பார்.

பாலியலால் மென்மையான அவ்வுறுப்பின் இழைகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம். சில சந்தர்ப்பங்களில் பெண்ணின் உடலமைப்பானது கடினமாக இருந்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பெரும் சேதத்திற்குள்ளாகாமலும் இருக்கலாம். இனோகா வழக்கில் இத்தகைய குறிப்பு ஒன்று இருந்தது.

சாதாரண மனிதனுக்கு இது தெரியாவிட்டாலும் வைத்தியர் ஒருவர் இதனை கண்டுபிடித்துவிடுவார். 

மேலும் பெண்ணின் உடலில் நகக் கீறுகள், பற்களால் கடித்த அடையாளங்கள் விசேடமாக மார்பகத்தில் பதிந்திருக்கும், எச்சில், ஆணின் விந்துத்துளிகள் போன்றவை உடலில் இருக்கின்றதா? என வைத்தியர் பரிசோதிப்பார். 

இறுதியில் இவை அனைத்தையும் பெற்றுக் கொண்ட பின்னர் தனது அறிக்கை ஒன்றை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்து சாட்சியமும் அளிப்பர். வைத்திய அதிகாரியின் சாட்சியத்தை முறியடிப்பது கஷ்டமான காரியமாகும். சட்டத்தரணிகள் முயற்சிப்பது பாலியல் வல்லுறவு நடைபெறவில்லை என்றும் பெண்ணின் சம்மதத்துடனேயே பாலியல் நடைபெற்றது என்பதை காட்ட முயற்சிப்பது வழக்கம்.

மிகச் சமீபத்தில் அமெரிக்க ஆய்வு  ஒன்றில் பாலியல் பலாத்காரம் நடைபெறும் போது அதன் பலனாக குழந்தை ஒன்று உருவாக இடமில்லை என கூறப்பட்டது என்ற தகவலை நான் படித்தேன். அதன் மூலம் பலாத்காரம் இல்லை என்றும் பலாத்காரம் இருப்பின் குழந்தையொன்று  உருவாக மாட்டாது ஆகையில் விருப்பத்துடனேயே பாலியல் நடந்தது என்று இனி காட்ட முற்படலாம் எனவும் கொள்ள வேண்டியிருக்கிறது.

பொதுவாக வைத்திய அதிகாரியின் சாட்சியம் பக்க சார்பற்ற சாட்சியமாக இருப்பதால் நீதிமன்றம் அச்சாட்சியத்தை செவிமடுக்கும்.

இரசாயனப் பகுதியின் அறிக்கை

இரசாயன பகுப்பாளரின் அறிக்கையும் பாலியல் வல்லுறவை நிரூபிக்க அவசியமாகிறது. பாலியல் வல்லுறவில் சம்பந்தப்பட்ட பெண்ணின் உடைகள், பலாத்காரம் செய்தவரின் உடைகளில் அவர்களது இன்திரியத் துளிகள் கட்டாயம் பதிந்திருக்கும். அவற்றை பரிசீலிப்பதால் பாலியல் வல்லுறவு நடந்தது என்பதை உறுதிப்படுத்தும் சாட்சிமாக அது அமைகிறது. எதிராளி இவர்தான் என கண்டறியவும் உதவுகிறது.

வல்லுறவு வெளி இடங்களில் பற்றைகள், மரங்களின் மறைவான இடங்கள், பாழடைந்த இடங்கள் போன்றவற்றிலேயே பெரும்பாலும் நடைபெறும். பம்பாய் அழகி என வர்ணிக்கப்பட்ட ஜோன்ரீட்டா பாலியல் வல்லுறவுக்கு காக்கைத் தீவு காட்டிற்குள்ளேயே உட்படுத்தப்பட்டிருந்தாள். மேலும் பல வழக்குகளில் பாலியல் வல்லுறவு நடைபெறும் இடம் ஒதுக்குபுறமான இடமாக மறைவான பற்றைகளால் மறைக்கப்பட்ட இடமாகவே இருப்பது வழக்கம். அப்படியான இடத்தில் பாலியல் வல்லுறவு நடக்கும் போது நிலத்தில் உள்ள புல், பூண்டு சிறுபற்றைகள் நிலத்தில் படிந்திருக்கும். மணலும் குழம்பியிருக்கும். ஆகவே அவற்றை பொலிஸார் புலன் விசாரணையில் கண்டுபிடித்து  இரசாயன பகுப்பாய்வாளர்களுக்கு விபரத்தை சொல்வதுடன் பாலியல் வல்லுறவு நடந்த இடத்தின் தளவரை படத்தையும் நீதிமன்றத்திற்கு கையளிப்பார். இவை பாலியல் வல்லுறவு நடந்ததை உறுதிப்படுத்தும் சாட்சியங்களாக மாறும்.

மேலே கூறிய சாட்சியங்கள் அனைத்தும் பாலியல் வல்லுறவு பலாத்காரமாக நடந்தது என்பதை எடுத்துக் காட்ட உதவுகிறது. அதேபோல பாலியல் உறவு ஒத்துழைப்புடன் நடந்தது என்பதை எடுத்துக் காட்டவும் சிலவேளைகளில் உதவலாம். எப்படியென்றால் பெற்றோருக்கும் மற்றோருக்கும் தெரியாமல் இது நடைபெற வேண்டும் என அவள் விரும்பியதால் இவ்விடத்தை தெரிந்தெடுத்தாக கூற இடமுண்டு.

பாலியலால் பாதிக்கப்பட்ட பெண் சாட்சியம் அளித்தால் அது எதிரியின்  குற்றமனத்தை அப்படியே எடுத்துக் காட்டுகிறது. ஆகவே அவளது சாட்சியம் மிக முக்கியம்.

வல்லுறவுக்குட்பட்ட பெண்ணின் சாட்சியம் ஏன் முக்கியமானது?

எமது சமூக அமைப்பில் பெண்ணின் பாலியல் நடத்தை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற கொள்கையை கொண்டதாகவே எமது சமூகம் விளங்கியது. இளம் வயதில் பெண்ணொருத்தியின் கணவன் இறந்தாலும் இறந்ததன் பின்னர் அவளை மறுமணம் செய்ய சமூகம் அனுமதிப்பதில்லை. இதனால் அவர்கள் கோரிக்கையற்று கிடக்கும் ஒரு நிலையிலேயே வாழ்கின்றனர். மேல் நாட்டுக் கலாசாரம் எமது நாட்டிற்குள் ஊடுறுவ முன்னர் இந்நிலையே 100% இருந்தது. ஆனால் தற்போதைய பொருளாதார கஷ்டமும் உளவியல் ரீதியான தாக்கமும் சமூகத்தை பாதித்துள்ளதால் இசைவுடன் பாலியல் உறவுக்கு பலர்  உடன்படுவதுண்டு. விசேடமாக வேலைத்தளங்களில் வீட்டு வேலை செய்பவர்களிடையே இது நடைபெறுகிறது. ஆகவே இன்றைய நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியம் எத்தகைய நம்பகத் தன்மையுடையது என்பது திட்டவட்டமானதாக இருக்க மாட்டாது. இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றங்கள் இவற்றை தெளிவாக வழக்குத் தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளன. ஆனால் பண்டைய நிலைமை அவ்வாறில்லை. பண்டைய காலத்தில் ஒரு பெண் நீதிமன்றத்திற்கு வந்து தன்னை இன்னார் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்று கூறினால் அதனை நீதிமன்றம் அப்படியே ஏற்று வந்தது. 

அதற்கு காரணம் என்னவெனில் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்ட ஒரு பெண்ணை கணவன் கூட மதிக்க மாட்டான். அவள் தவறு செய்யவில்லை என்பதை அவன் அறிந்தாலும் சமூகம் அவளை மதிக்காமல் விடுவதால் கணவன் கூட அவளை மதிக்க மாட்டான். ஆகவே அவள் கூறுகின்ற சாட்சியம் 100%  உண்மை. மதிப்பை இழந்தாலும் பரவாயில்லை. குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலையிலேயே அவள் இருப்பதால் அவளது சாட்சியத்தை நீதிமன்றம் நம்பும்.

1995 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க தண்டனைச் சட்டக் கேவையின் திருத்தம் பின்வருமாறு கூறுகிறது: 364 ஆம் பிரிவின் கீழ் பாலியல் வல்லுறவு நடந்தது என்று பெண் ஒருவர் சாட்சியம் கூறினால் அதனை உறுதிப்படுத்த சாட்சியம் தேவையில்லை என்று கூறுகிறது.

இன்னுமொரு காரணமும் உண்டு. பாலியல் வல்லுறவுக்கு உட்படும் பெண் ஒருவர் தன்னை வல்லுறவுக்கு உட்படுத்தும் ஆடவனின் முகத்தை தெளிவாக கண்டுகொள்வாள். பாலியல் நடைபெறும் போது பெண்ணும் ஆணும் மிகமிக அருகில் ஒருவருடன் ஒருவர் இணைந்து இருப்பதால் அடையாளம் காண்பதில்   சிக்கலேயில்லை. சிலவேளைகளில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துபவனின் பெயர், ஊர்,  தொழில்,  சிலேடைப்பெயர் என்பவற்றை பெண் தெரியாமல் இருக்கலாம். இதனால் சட்டத்தரணியின் குறுக்கு விசாரணையின் போது பிரச்சினைகள் ஏற்படலாம். ஆயினும் நீதிமன்றம் இவற்றை பொருட்படுத்துவதில்லை. பாலியல் துன்புறுத்துவர்களின் விபரத்தை பெண் அறிந்திருக்க தேவையில்லை. 

நீதிமன்றம் பார்ப்பது என்னவென்றால் எதிராளியை சரியாக பெண் அடையாளம் கண்டுகொண்டுள்ளாளா? என்பதையாகும். இவ்விடத்தில் இன்னுமொரு உண்மையையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். சில சமயங்களில் இசைவுடன் பாலியல் தொடர்புக்கு அனுமதி அளிக்கும் ஒருவர் பின்னர் அதனை மறுப்பதுண்டு. பலர் இதனால் தண்டனை அனுபவிக்கின்றனர். ஆனாலும் இதில் ஒரு உண்மையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது பாலியல் தொடர்பு கொள்ளாத ஒருவர் ஒருபோதும் தண்டனைக்கு ஆளாக மாட்டார். கட்டாயம் தொடர்பு இருந்திருக்க வேண்டும். ஆனால் அது இசைவு உடனானதா? பலாத்காரமானதானதா? என்பதை நீதிமன்றம் சாட்சியங்களை கொண்டு தீர்மானிக்கும். இதற்கு உதாரணமாக வழக்கு  இனோகா எதிர் கமலத்தராச்சி வழக்காகும். 2002 (1) SLR PAGE 312 இதில் இனோகா தான் இசைவுடன் தொடர்பு கொள்ளவில்லை என கூறினாள். நீதிமன்றம் கருத்தில் கொண்ட விடயம் என்னவெனில் கொன்டம் ஒன்றை ஒரு ஆடவன் தனது பிரத்தியேக உறுப்பில் போடுவதை கண்ட ஒருவர் பின்னர் நடக்க போவது என்ன என தெரியாது எனக் கூறுவதை  நம்பலாமா? எனக் கேட்டு அவளது கூற்றை ஏற்க மறுத்தது. ஆகவே பாலியல் வல்லுறவில் பெண்ணின் கூற்றை மறுக்க முடியாது. ஆனால் நீதிமன்றம் மிக கவனமாகவே முடிவுக்கு வரும். பாலியல் நடந்தது என்பதை சாட்சியம் காட்டினாலும் இசைவு இல்லாமல் நடந்ததா? என்பதையே நீதிமன்றம் கவனத்தில் எடுக்கும். 

பாலியல் வழக்கில் எதிரி எடுக்கக் கூடிய பாதுகாப்புகள்

பதினாறு வயதிற்கு கீழ்பட்ட பெண் ஒருவருடன் அவளது சம்மதத்துடன் பாலியல் வைத்தாலும் எந்த பாதுகாப்பையும் எடுக்க முடியாது. நியதிச் சட்ட குற்றமாதலில் தண்டனை கிடைக்கும். 

பதினாறு வயதிற்கு மேற்பட்ட பெண்ணொருவருடன் பாலியல் அவளது இசைவுடனேயே நடந்தது என்ற பாதுகாப்பு எடுக்கலாம். ஆயினும் வைத்திய அறிக்கையில் பாலியல் வல்லுறவு இசைவுடன் நடந்ததா? இல்லையா என்பதை இலகுவில் கண்டு கொள்ளலாம். இசைவுடன் நடக்கும் பாலியல் உறவு மென்மையானதாக இருப்பதால் பெண்ணின் பிரத்தியோக உறுப்பு கடுமையாக பாதிக்கப்பட மாட்டாது. ஆகவே எதிராளி எடுக்கும் பாதுகாப்பு பெரும் பலனை அளிக்கும் என கூறமுடியாது. 

ஆகவே பாலியல் வழக்கில் உண்மையாக பலாத்காரம் நடந்திருந்தால் எதிரி தண்டனை பெற்றே தீர வேண்டும். இதிலிருந்து தப்புவதற்கு ஒரே வழி பாலியலை மறப்பதேயாகும். 

தொகுப்புகள்

பாலியல் உலகில் இன்பம் தரும் விடயங்களில் முதன்மையானது என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. உயிரிகள் அனைத்தும் பாலியல் இன்பத்தை அனுபவிக்கின்றன.

சமூகங்கள் தமது கலாசாரத்தை பாதுகாக்கவும் சுயநலத்தை பேணவும்  பெண்கள் மீது பலவந்தமாக கட்டுப்பாட்டுகளை விதித்ததுடன் உடலானது தசைகளால் ஆனது என்பதனையும் தசைகளது அசைவுக்குத் தக்க அவை உணவை தேடுகின்றன என்பதை ஏற்றுக்கொள்ளும் சமூகம் பாலியலை பொறுத்தவரை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இது அறியாமையேயாகும்.

இவை ஆரம்பகாலத்து சமூகத்திற்கு ஏற்புடையதாக இருந்தது. ஆனால் உலகம் சுருக்கமுடைய சுருக்கமடைய பல்வேறு நாட்டு கலாசாரங்களும் அறிவுகளும் பெருகப் பெருக பாலியல் கட்டுப்பாடு தளர்வடையத் தொடங்கியது.

மேலைத்தேச நாடுகள் மட்டுமல்ல கீழத்தேச நாடுகளிலும் இது பரவத்தொடங்கியது.

பொருளாதாரவளமின்மை, கல்வியறிவு இன்மை, உலக நாகரீகங்களில் கவர்ச்சி, சமயத் தத்துவங்களில் நம்பிக்கை குறைவு என்பன இவற்றோடு காரணமாய் அமைகின்றன. அதுவே தற்காலத்தில் பாலியல் கட்டுப்பாட்டை கட்டிக்காப்பதுக் கஷ்டம்.

ஆயினும் கீழைநாடுகளில் உள்ளவர்களில் பலர் தமது குடும்பத்தினதும் சமூகத்தினதும் மதிப்பை பேணிக்காக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாழுகின்றார்கள் என்பதும்  உண்மை. பெண்களின் உள்ளம் எப்படி இருக்கின்றது? தவறு எங்கு எப்படி நடைபெறுகிறது? என்பதை பற்றி ஜெகநாதன் அவர்கள் எழுதிய "ஓயாத அலைகள்" என்ற கதை மிகத் தெளிவாக கூறுகிறது. எல்லோரும் வாசிக்க வேண்டிய நாவலாகும்.

அவை கதையில் மட்டுமல்ல நிஜவாழ்க்கையிலும் இடம்பெறுகிறது. பலர் இது மற்றவர்களுக்கு  தெரியாது என்று நினைத்து செயலாற்றுவது உண்டு. பாலியலை பொறுத்தமட்டில்  இதனை மறைக்க முடியாது.

பல உயர் தொழில், பதவி, பலம்படைத்தவர்கள் பலர் சில சமயங்களில்  மௌனியாக இருப்பதும் இதனாலேயேயாகும். கஷ்டங்களுக்கும் முகம் கொடுப்பதும் இதனைலேயேயாகும். பாலியலைப் பொறுத்தவரை உடலால் நல்லவர்களாக இருப்பவர்கள் உள்ளத்தால் நல்லவர்களாக இருக்கின்றார்களா என்பது சந்தேகமேயாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22