பாணந்துறையில் பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கொள்ளைச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை சட்டத்தை அமுலாக்கும் பொலிஸ் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நடத்திய சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் விசாரணையின் போது மேலும் தெரியவருவதாவது,
சந்தேகநபர் பாணந்துறை பிரதேசத்தில் பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த 45,000 ரூபா பெறுமதியான தங்க சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளதாகவும், களுத்துறை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளதாகவும், அமெரிக்க டொலர் உட்பட இரு தங்க நாணயங்களை கொள்ளையிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் இன்று பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது