நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜரமாகுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக, மாகல்கந்த சுதத்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான சுனில் பெரேரா ஆகியோர் உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், கடந்த 2017 ஆகஸ்ட் 21 ஆம் திகதி ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ரஞ்சன், நாட்டில் பெரும்பாலான சட்டத்தரணிகள் ஊழல் வாதிகள் என குறிப்பிட்டுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கூறியமையானது, மக்களுக்கு நீதித்துறை தொடர்பில் இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் விசாரணை நடத்தி பிரதி அமைச்சருக்கு எதிராக உரிய தண்டனையை வழங்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
அத்துடன் ரஞ்சன் ராமநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து தொடர்பான காணொளியை பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் மேலோட்டமாக பார்க்கும் போதே, அவர் நீதிமன்றத்தை அவமானப்படுத்தும் விதமாக பேசுவது தெளிவாக தெரிவதால் ரஞ்சன் அவருக்கு எதிராக குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.
அதனடிப்படையில் சட்டமா அதிபரினால் முதலில் குற்றப்பத்திரிகை வரைவு முன் வைக்கப்பட்டதுடன் அவருக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.