"கட்சியை ஆரம்பித்து தமிழ் தேசிய கோட்பாடுகளின் கீழ் ஒன்றிணைப்பது அவசியம்" (பகுதி 1)

Published By: Vishnu

25 Oct, 2018 | 09:48 AM
image

அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து தமிழ் தேசிய கோட்பாடுகளின் பால் பற்றுறுதியுடன் இருக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாட்டை முன்னெடுக்கும் தெரிவே சிறந்ததும் அவசியமானதும் என்று உணர்கின்றேன் முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 

நல்லூர் நடராஜா பரமேஸ்வரி திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட மாகாண முதலமைச்சராக எனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த நான் எனது முதலமைச்சர் பதவிக்காலம் பூர்த்தியாகிவரும் நிலையில் எனது எதிர்கால செயற்பாடுகள் எப்படி இருக்கப்போகின்றன என்பது தொடர்பாக தெளிவுபடுத்தும் நோக்கத்தில் தமிழ் மக்கள் பேரவையினூடாக உங்கள் அனைவரையும் இன்று சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 

இலங்கையின் சுதந்திரத்துக்காக சிங்களச் சகோதர்களுடன் தோளோடு தோள்நின்று போராடியவர்கள் தமிழர்கள். ஆனால் 1920 ஆம் ஆண்டளவில் நாட்டை முழுமையாகத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய நடவடிக்கைகளில் சிங்கள அரசியல் தலைவர்கள் ஈடுபட்டமை கவலைக்குரியது. சிங்களத் தலைவர்கள் நாடுமுழுவதிலும் சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்துவதற்கு ஏற்றவாறு 'ஒரு நபருக்கு ஒரு வாக்கு' என்ற வழிமுறையை பிராந்தியப் பிரதி நிதித்துவம் வேண்டும் என்ற முறையில் ஆங்கிலேயரிடம் கோரினர். 

அது எமக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற விதத்தில் அதை எதிர்த்த கௌரவ சபாபதியின் தலைமையிலான வடமாகாண தமிழ்த் தலைவர்கள், தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடங்களில் அவர்களது வரலாற்று ரீதியான சுய நிர்ணய ஆட்சிமுறை, அடையாளம் மற்றும் இருப்பு என்பவற்றை பாதுகாக்கும் நோக்கத்தில் இன அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தினர். 

மகாவம்ச மனநிலையில் இருந்துகொண்டு தமது அடையாளத்தை நாடு முழுவதிலும் ஏற்படுத்தி சிங்கள இனத்தை வியாபிக்கச் செய்யும் சிங்கள அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளுக்கும் பூர்வீகக் குடிகள் என்ற அடிப்படையில் 'தமிழர் என்ற அடையாளத்தை பாதுகாக்கும் பொருட்டான தமிழ் அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளுக்கும் இடையில் அன்று முதல் உருவான  சிங்கள- தமிழ் இன முரண்பாட்டு நிலை அடுத்துவரும் 2019 ஆம் ஆண்டில் 100 வருடங்களை எட்டப்போகின்றது . 

இந்த இன முரண்பாடானது அது தோன்றுவதற்கு காரணமான நோக்கங்கள் மற்றும் காரணிகளில் எந்தவித மாற்றமும் இன்றி தொடர்ந்துகொண்டிருக்கிறது. தமிழ் மக்களின் இந்த போராட்டமானது ஒரு அஞ்சல் ஓட்டமாக பின்னர் தந்தை செல்வா வழியாக முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஏற்படுத்தப்பட்ட பல உடன்படிக்கைகள் பௌத்த பேரினவாத சக்திகள் காரணமாக கிழித்தெறியப்பட்டு தொடர்ந்து ஏமாற்றப்பட்டோம்.

பின்னர் 1970 களின் ஆரம்பத்தில் ஆயுத வழிமுறைகளினூடாக நகர்த்தப்பட்ட இந்தப் போராட்டம் 2009 ஆம் ஆண்டின் பின்னர் ஒரு அரசியல் ராஜதந்திர போராட்டமாக பரிணாமம் பெற்று இன்று எமது கைகளை வந்தடைந்திருக்கின்றது. 

இது ஒரு சுய பாதுகாப்பு போராட்டம். இதன் அடிப்படை விடயங்களில் விட்டுக்கொடுப்பு செய்வதற்கு இந்த போராட்டத்தில் பங்குகொண்டிருக்கும் எவருக்கும் உரிமை இல்லை. அதேசமயம் இந்த 99 வருட கால சுய பாதுகாப்பு போராட்டத்தில் எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட எண்ணற்ற வன்முறைகள் அரசியல் பாகுபாடுகள் மற்றும் இறுதியாக 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு, யுத்தம் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டு 2 இலட்சத்துக்கும் அதிகமான எமது மக்களை நாம் இழந்துள்ளோம். பல ஆயிரம் உயிர்களை தியாகம் செய்துள்ளோம். 

புலர் ஊனமாகியுள்ளர். சுமார் 15 இலட்சம் மக்கள் சொந்த இடங்களைவிட்டு வெளிநாடுகளுக்கு வெளியேறியுள்ளனர. அதைவிட பெருமளவிலான எமது பூர்வீக நிலங்களை இழந்து கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்து நெருக்கடியான ஒரு நிலைமையில் இன்று நாம் நிற்கின்றோம். ஆனாலும் நாங்கள் சோர்வடையவில்லை. நம்பிக்கையைத் தளர விடாமல் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றோம். ஒன்றைமட்டும் நாம் நினைவில் வைத்திருக்கவேண்டும். 

அதாவது நாம் எமது தனித்துவத்தை வலியுறுத்திப் போராடாமல் இருந்திருந்தால் எப்போதோ எமது இனம் இலங்கையில் படிப்படியாக அழிவடைந்துபோயிருக்கும். இவ்வாறு இலங்கை பூராகவும் அழிந்துபோன தமிழ்க் குடும்பங்கள் பற்றி வரலாற்றாசிரியர்கள் பலர் குறிப்பிட்டுள்ளார்கள். தமிழ் மக்களுடன் உரிய அதிகாரங்களை பகிர்ந்துகொள்வதன் மூலம் தாங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ளாமல் தொடர்ந்தும் தீர்க்க தரிசனம் அற்ற வகையில் சிங்கள பௌத்தத்தை முதன்மைப்படுத்தும் அதே மகாவம்ச மனநிலையுடன்தான் இன்றைய சிங்களத் தலைவர்களும் செயற்படுகின்றார்கள். தொடரும் இந்த இன முரண்பாடு சிங்கள மக்களையும் பாதித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் இன்று அதல பாதாளத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அன்று பொருளாதாரத்தில் எம்மைவிட பின்தங்கி இருந்த சிங்கப்பூர் இன்று நாம் நினைத்தாலும் எட்டமுடியாத உயரத்தில் இருக்கிறது. எல்லா இன மக்களும் அங்கு சமமாக மதிக்கப்படுவதுடன் சம வாய்ப்புக்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மிகச் சிறிய எண்ணிக்கையில் அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் சுதந்திரத்துக்காக தோளோடு தோள் நின்று போராடியமைக்கு அங்கீகாரமாகத் தமிழை ஆட்சிமொழி ஆக்கி சிறப்பித்துள்ளார்கள்.

இதுதான் இன ஐக்கியம். இங்கிருந்துதான் நல்லிணக்கம் ஏற்படும். ஒரு இனத்துக்கும் ஒரு மதத்துக்கும் முதன்மை என்ற நிலை இருக்கும் வரை பாரிய முரண்பாடுகள் இந்நாட்டில் இருந்து கொண்டேயிருக்கும். கற்பனைக் கதைகளுடன் எழுதப்பட்ட மகாவம்சத்தை தொடர்ந்தும் வரலாறாக சிங்கள சிறார்களுக்கு பாடசாலைகளின் ஊடாக போதிக்கும் வரையிலும் தமிழ் மக்கள் பூர்வீக குடிகள் என்பதை மறுத்து அவர்கள் வந்தேறுகுடிகள் என்று பொய்யான வரலாற்றைப் போதிக்கும் வரையிலும் இனப்பிரச்சினை இலங்கையில் இருந்துகொண்டேயிருக்கும். 

இதுவரை காலமும் வட கிழக்கு மாகாண தமிழ் மக்களின் தொன்மை பற்றி எம்மவர் உரையாதிருந்ததால் சிங்கள மக்கள் அதை அறியாதவர்களாகவே இருந்து வந்துள்ளார்கள். இப்பொழுது தான் அவர்கள் அதிர்ச்சி அடையத் தொடங்கியுள்ளார்கள். சிங்களமொழி கி.பி. 6ம் 7ம் நூற்றாண்டுகளிலேயே ஜனித்தது என்று நாம் கூறும்போது அதற்கு முன் வாழ்ந்த துட்டகைமுனு என்ற சிங்கள மன்னன் சம்பந்தமான கதைகள் எல்லாம் கேள்விக்குரியதாக ஆக்கப்படுகின்றன.

பாகுபாடுகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான எமது சுய பாதுகாப்பு போராட்டம் வன்முறை வழிகளில் அடக்கப்பட்டமையும் தொடர்ந்து அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு நாம் ஏமாற்றப்பட்டமையுமே இளைஞர்கள் மத்தியில் விரக்தி நிலையை ஏற்படுத்தி அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடக் காரணங்கள் ஆகின என்பது வரலாறு. பல சிங்களத் தலைவர்களே இதனை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் ஜூலை 2009 இல் ஒரு கருத்தைக் கூறியிருந்தார் தற்போதைய கௌரவ நிதி அமைச்சர் மங்கள சமரவீர 'தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்த ரீதியாக தோற்கடித்ததன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு விட்டதாக எவரேனும் கருதினால் அது முட்டாள்தனமான கருத்தாகவே நோக்கப்பட வேண்டும். 30 வருட காலமாக நீடித்த தேசிய இனப்பிரச்சினைக்கான சமாதானத் தீர்வுத் திட்டமே தற்போது விஞ்சி நிற்கும் தேவை.

விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் கடுமையான நோயின் நோய்க்குறிகள் மட்டுமே. இன்னமும் நோய்க்கான மருந்து வழங்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.

2009 இல் ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்த போது தமிழ்த் தலைவர்கள் தனி நாட்டு கோரிக்கையை கைவிட்டபோதுரூபவ் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு இனப்பிரச்சினையைத் தீர்த்துவைப்பதற்கான பொன்னான சந்தர்ப்பம் கிடைத்திருந்தும் அதனை அவர் பயன்படுத்த விரும்பவில்லை. அவருக்குப்பின்னர் வரலாற்றில் என்றும் இல்லாதவகையில் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றுசேர்ந்து ரூசூ39;நல்லாட்சி' அரசாங்கத்தை அமைத்த போதும் இனப்பிரச்சினையை தீர்க்கும் ஒரு அரிய சந்தர்ப்பம் அப்போதைய சிங்களத் தலைவர்களுக்கு ஏற்பட்டது. அவர்களும் அதை செய்யவிரும்பவில்லை.

மாறாக முன்னைய ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு யுத்தம் காரணமாக சர்வதேச ரீதியில் ஏற்பட்டிருந்த போர்க்குற்ற விசாரணை மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்படுத்தப்பட்ட முட்டுக்கட்டைகளை நீக்குவதற்கு ஏற்ற வழிவகையாகவே நல்லாட்சி' எனும் பெயரை பயன்படுத்தினார்களே தவிர இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சந்தர்ப்பமாக இதயசுத்தியுடன் செயற்படவில்லை. ஆகக்குறைந்தது போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வினைத்திறனான ஒரு பொறிமுறையைக்கூட ஏற்படுத்த அவர்கள் முயலவில்லை. அதிகாரமற்ற வடமாகாண சபை ஊடாக எமக்கு ஒதுக்கப்பட்ட சிறிய அளவிலான நிதியைப் பயன்படுத்தி எம்மால் முடிந்தளவுக்கு எமது மக்களின் துயர் துடைக்கும் பணியைச் செய்துள்ளோம்.

இது யானைப் பசிக்கு சோளப் பொரி போட்டது போன்றது. இது எமது மக்களைப் பொறுத்தவரை நாம் எதுவும் செய்யவில்லை என்ற தோற்றப்பாட்டையே ஏற்படுத்தியுள்ளது. எமது செயற்பாடுகள் மற்றும் திட்டங்களுக்குப் பல்வேறு முட்டுக்கட்டைகளும் சிக்கல்களும் கடந்த 5 வருட காலங்களில் ஏற்படுத்தப்பட்டன. வட மாகாண சபையில் நேற்று ஆற்றிய இறுதி உரையில் இது தொடர்பில் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளேன்.

தமிழ் மக்களின் ஆயுத போராட்டம் இடைக்காலத்தில் இருந்தபோது 1987ஆம் ஆண்டு எம் மீது திணிக்கப்பட்ட ஒரு தீர்வு முறைமையே இந்த மாகாண சபைக் கட்டமைப்பு. பலவீனமான அதிகாரம் அற்ற இந்த கட்டமைப்பு இனப்பிரச்சினைக்கான ஒரு ஆரம்ப புள்ளியாகக் கூட இருக்க முடியாது என்று எங்கள் தமிழ்த் தலைவர்கள் அன்றே நிராகரித்துவிட்டார்கள். அதன் பின்னர் இனப்பிரச்சினை மேலும் சிக்கலடைந்து ஒரு இன அழிப்பு யுத்தத்தில் முடிவடைந்தது.

எந்த வகையிலும் எமது மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாத ஒரு கட்டமைப்பே மாகாண சபைக் கட்டமைப்பு என்ற யதார்த்தம் தெரிந்திருந்தபோதிலும் பிழையானவர்களின் கைகளில் அதிகாரம் சென்று எமது மக்களுக்கு மேலும் ஆபத்தாக முடியக்கூடாது என்ற காரணத்தினாலேயே தேர்தலில் போட்டியிட்டு வட மாகாண சபையைக் கைப்பற்றினோம். கைப்பற்றிவந்தபின் நாம் எதுவும் செய்யவில்லை என்று கொக்கரிப்போர் யார் என்று பார்த்தால் 'பிழையானவர்கள் கைகளுக்கு செல்லக்கூடாது' என்று யாரை அன்று அடையாளப்படுத்தினோமோ அவர்களே அவர்கள் அரசாங்கத்திற்கு மண்டியிட்டு அல்லது பிச்சை கேட்டு ஏன் உங்கள் காரியங்களை நீங்கள் இயற்றவில்லை என்றே கேட்கின்றார்கள். பணிந்துபோய் பகடைக் காயாகி பல நூறு வேலைத்திட்டங்களை ஏன் இயற்றவில்லை என்றே அவர்கள் கேட்கின்றார்கள். அவர்களுக்கு பதில் சொல்வதானால் எமக்கு எமது உரிமைகள் முக்கியம். சலுகைகள் அன்று என்ற படியால்த்தான் எமக்கு எமது வருங்கால நிரந்தரத் தீர்வு அவசியம். இன்றைய ஒரு அடிமைப்பட்ட சொகுசு வாழ்க்கையல்ல.

தீர்வு முயற்சியில் உண்மையான அக்கறை கொண்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் உண்மையான கரிசனை கொண்டிருந்தால் அதிகாரங்கள் கொண்ட இடைக்கால நிர்வாகத்தை அரசாங்கம் யுத்தம் முடிந்தகையோடு ஏற்படுத்தியிருந்திருக்கவேண்டும் . 

ஆனால் அவ்வாறு செய்யவில்லை. வட மாகாண சபைக்கு மத்திய அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்காத நிலையில் புலம்பெயர் உறவுகளின் நிதி பங்களிப்பை பெற்று எமது வேலைத்திட்டங்களைச் செயற்படுத்துவதற்காக முதலமைச்சர் நிதியத்தை அமைப்பதற்கு முயற்சித்தபோதிலும் அரசாங்கம் அதற்கு அனுமதிக்கவில்லை. ஏன் வேறு நிதியங்களைப் பாவிக்கவில்லை என்று கேட்கின்றார்கள் சிலர். எமது உரித்தைக் கைவிட்டு விட்டு கரவாக ஏன் பணத்தை வெளிநாடுகளில் இருந்து வருவிக்கவில்லை என்பதே அவர்கள் கேள்வி. கரவான எமது செயல்கள் மத்திய அரசாங்கங்களினால எவ்வாறு எமக்கெதிராகத் திசை திருப்பப்படும் என்பது எமக்குத் தெரியும். தமிழர் புனர்வாழ்வு அமைப்பின் நிதிகள் இன்னமும் முடக்கி விடப்பட்டே இருக்கின்றன.

முதலமைச்சர் நிதியத்தை வழங்குங்கள் என்று அரசாங்கத்துக்கு கூற வக்கில்லாதவர்களே கரவு முயற்சிகளில் எம்மை சொல்கின்றார்கள். நாங்கள் வேறு நிதியங்களைப் பாவித்து பணத்தை வருவிக்கின்றோம் என்று கண்டால் அவற்றை மூடி விட உடனே நடவடிக்கை எடுக்கும் அரசாங்கம். அண்மையில் பிரித்தானியாவுக்கு சென்ற வட மாகாண ஆளுநர் உதவிகளை செய்யுமாறும் முதலீடுகளை செய்யுமாறும் புலம்பெயர் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்தமை வேடிக்கையாக இருக்கிறது.

அதே ஆளுநர் தான் எமது நிதியத்தை எமக்குக் கிடைக்கவிடாமல் நாடகமாடி வந்தவர். ஆவா குழு போன்ற வன்முறை குழுக்களை 3 மாதங்களுக்குள் தன்னால் இல்லாமல் ஒழிக்க முடியும் என்று ஆளுநர் அங்கு தெரிவித்திருப்பது பல சந்தேகங்களை எமக்கு ஏற்படுத்துகிறது. ஆளுநரால் 3 மாதங்களுக்குள் ஆவாக் குழுவை இல்லாமல் செய்ய முடியும் என்றால் ஏன் அதனை அரசாங்கம் ஆளுநர் ஊடாகக் கடந்த 5 வருடங்களில் செய்யவில்லை? அல்லது ஆளுநருக்கும் அரசாங்கத்துக்கும் ஆவா குழுவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா? என்ற கேள்வி தவிர்க்கமுடியாமல் எழுகின்றது.

ஒரு புறம் வட மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து வந்த அதேவேளை மறுபுறம் சிங்கள குடியேற்ற திட்டங்களையும் பௌத்த மயமாக்கலையும் தமிழ் மக்களின் கடும் எதிர்ப்புக்கள் மத்தியிலும் நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்து வந்துள்ளது. இதற்கு ஆளுநர் உடந்தையாக இருந்துள்ளார். இராணுவத்தை வடக்கில் இருந்து அகற்ற மறுத்து வருவதுடன் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வன்முறை கும்பல்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதிலும் அசட்டையீனமாக இருந்துவருகிறனர் அரசாங்கமும் ஆளுநரும். அரசாங்கத்தின் செயற்பாடுகள் இப்படி இருக்கும்போது தமிழ் தேசியக் கூட்டமைப்போ இந்த அரசாங்கத்தை நல்லாட்சி அரசு என்று சர்வதேச சமூகத்துக்கு நற்சான்றிதழ் கொடுத்துவருவதுடன்ரூபவ் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்கும் என்றும் ஏமாற்றி வருகிறது. முதலில் 2016 என்றார்கள். பின்னர் 2017 என்றார்கள். 

இப்பொழுது 2018 என்கின்றார்கள். விந்தையிலும் விந்தை இந்தச் செயல். நிலைமைகள் இவ்வாறு நெருக்கடி மிகுந்ததாகவும் சிக்கலாகவும் இருக்கும் ஒரு சூழ்நிலையில்தான் முதலாவது வட மாகாண சபையின் 5 வருட காலம் முடிவுக்கு வந்துள்ளது. எனது முதலமைச்சர் பதவிக் காலத்தின் பின்னர் எனது செயற்பாடுகள் எப்படி இருக்கமுடியும் என்பது தொடர்பில் 4 தெரிவுகள் இருப்பதாகக் கூறிவந்தேன்: 

1.அமைதியாக வீட்டுக்குச் செல்லுதல் 2. ஒரு கட்சியுடன் இணைந்து தேர்தலில் நிற்பது 3. ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து செயற்படுவது. 4. ஒரு மக்கள் இயக்கத்திற்கு தலைமை தாங்குவது என்பவையே அவை.

"கட்சியை ஆரம்பித்து தமிழ் தேசிய கோட்பாடுகளின் கீழ் ஒன்றிணைப்பது அவசியம்" (பகுதி 2)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14