சவூதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் மரணம் குறித்து சவூதி அரேபியாவின் பொறுப்புக்கூறல் தொடர்பில் தான் திருப்தியடையவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
கஷோக்கி இறந்தமை தொடர்பில் சவூதி அரேபியா முதல் தடவையாக கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டிருந்தது.
துருக்கிய இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி தூதரகத்தில் இடம்பெற்ற கைகலப்பொன்றில் அவர் உயிரிழந்துள்ளதாக சவூதி கூறுகிறது.
கஷோக்கி துருக்கியிலுள்ள மேற்படி தூதரகத்திற்குள் பிரவேசித்தவேளை காணாமல் போயிருந்த நிலையில் அவர் அந்தத் தூதரகத்திற்குள் வைத்துப் படுகொலை செய்யப்பட்டதற்கான சான்றுகள் தம்மிடமுள்ளதாக துருக்கிய அதிகாரிகள் ஏற்கனவே உரிமைகோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சவூதி அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்தவரான கஷோக்கி தூதரகத்திற்குள் வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட பின்னர் அவரது சடலம் துண்டுகளாக்கப்பட்டு அங்கிருந்து அகற்றப்பட்டதாக துருக்கி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தூதரகத்திலான கைகலப்பில் கஷோக்கி கொல்லப்பட்டதாக சவூதியால் தெரிவிக்கப்பட்ட பதிலில் தான் திருப்தியடையவில்லை என டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.
இதன் பிரகாரம் சவூதிக்கு எதிராக தடைகள் விதிக்கப்படும் சாத்தியப்பாடு உள்ளதாக கூறிய டொனால்ட் ட்ரம்ப், ஆனால் சவூதி அரேபியாவுடனான ஆயுத உடன்படிக்கையை நிறுத்துவது அவர்களை விடவும் அமெரிக்கர்களையே பாதிக்கும் எனத் தெரிவித்தார்.
அதேசமயம் இந்தப் படுகொலை தொடர்பில் சவூதியின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் அறியாதிருப்பதற்கும் சாத்தியப்பாடு உள்ளதாக அவர் கூறினார்.
சவூதி அரேபியா கடந்த வெள்ளிக்கிழமை வரை காணாமல்போன கஷோக்கிக்கு என்ன நடந்தது என தனக்குத் தெரியாது என்றே சாதித்து வந்தது. அவர் அந்தத் தூதரகத்திலிருந்து உயிருடன் வெளியேறியிருந்ததாக அந்நாடு வாதிட்டு வந்திருந்தது.
தற்போது கஷோக்கி மரணமடைந்துள்ளதை ஏற்றுக்கொண்டுள்ள சவூதி அரேபியா, துருக்கியிலுள்ள தூதரகத்திற்குள் கஷோக்கியை எதிர்கொண்டவர்களுடன் இடம்பெற்ற கைகலப்பிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கிறது.
இந்தப் படுகொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கும் சவூதி அரேபியா, அதனுடன் தொடர்புபட்ட 18 பேரைக் கைதுசெய்துள்ளதாக கூறுகிறது.
கஷோக்கியின் உடல் உள்நாட்டைச் சேர்ந்த ஒருவரிடம் கையளிக்கப்பட்ட பின் அந்த உடலுக்கு என்ன நடந்தது என்பதை சவூதி அதிகாரிகள் அறியாதுள்ளதாக பெயரை வெளியிட விரும்பாத அதிகாரிகள் ராய்ட்டர் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளனர்.
மேற்படி விவகாரம் குறித்து இந்தக் கைதுகளுக்கு மேலதிகமாக பிரதிப் புலனாய்வுத் தலைவர் அஹ்மட் அல் அஸ்ஸிரி மற்றும் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானின் சிரேஷ்ட உதவியாளரான சவுத் அல் கஹ்தானி ஆகிய இரு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜேர்மனிய அதிபர் அஞ்ஜெலா மெர்கல் கஷோக்கியின் மரணம் குறித்து சவூதி அரேபியாவால் அளிக்கப்பட்ட விளக்கம் சரியான முறையில் அமையவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் பல கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்கப்படாதுள்ளதாக பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர் ஜீன் கிளோட் தெரிவித்துள்ளார்.
அது மோசமான செயற்பாடு எனவும் இந்தப் படுகொலைக்குப் பின்னாலுள்ளவர்கள் பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்டும் எனவும் பிரித்தானிய வெளிநாட்டு செயலாளரின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் படுகொலை குறித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் வலியுறுத்தியுள்ளன.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்க்ள உட்பட அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சவூதிக்கு எதிராக கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
அதேசமயம் அவுஸ்திரேலியாவானது சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள முதலீட்டு உச்சிமாநாடொன்றிலிருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
கஷோக்கி விவகாரம் குறித்து அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள் ஏற்கனவே இந்த உச்சிமாநட்டைப் பகிஷ்கரிப்புச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM