முள்ளிக்குளக் கிராமத்தில் கடற்படையினர் குடும்பங்களுடன் ; ஊர் மக்களோ யானைக் காட்டில்

Published By: Vishnu

18 Oct, 2018 | 02:34 PM
image

மன்னார் முள்ளிக்குளத்தில் ஊர் மனை வீடுகளில் கடற்படையினர் குடும்பங்களுடன் இருக்க, அவற்றின் உரிமையாளர்களான குடும்பங்கள் காட்டுப் பிரதேசத்தில் தரப்பாள் கொட்டில்களில் தஞ்சமடைய நேர்ந்துள்ளது. இந்த அவலம் ஆறு வருடங்ளுக்கு மேலாகத் தொடர்கின்றது. 

யுத்தம் முடிவடைந்த பின்னர் 2012 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்திற்காகத் திரும்பி வந்த மக்களை கடற்படையினர் ஊருக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கவில்லை. 

ஊருக்கு வெளியே மலங்காடு என்ற காட்டுப்பிரதேசத்தில் கொட்டில்களை அமைத்துத் தங்கிய அந்த மக்களை அங்கிருந்து வெளியேறிச் செல்லுமாறு கடற்படையினர் பல்வேறு வழிகளில் அச்சுறுத்தினர். அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும் எனக் கோரி அந்த மக்கள் தொடர்ச்சியாகப் போராடினார்கள். 

அந்த போராட்டத்தின் விளைவாக முள்ளிக்குத்தில் உள்ள பூர்வீக ஆலயமாகிய பரலோகமாதா ஆலயத்தையும். அருகில் உள்ள பாடசாலை சூழலையும் கையளித்த படையினர், ஊருக்குள் 100 ஏக்கர் காணிகளை விடுவிப்பதாக உறுதியளித்தார்கள்.

 

கடந்த வருடம் அளிக்கப்பட்ட இந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. நூறு ஏக்கருக்கப் பதிலாக குளத்துப்பிரதேசத்தை உள்ளடக்கிய பள்ளமான பிரதேசத்தில் 70 ஏக்கர் காணிகள் மாத்திரமே கையளிக்கப்பட்டுள்ளது. 

சிறிய மழை பெய்தாலும் வெள்ளக்காடாக மாறுகின்ற அந்தப் பிரதேசத்தில் கொட்டில்கள் அமைத்து வாழ முடியாத நிலையில் தமது ஆலயச் சூழலில் காடடர்ந்த பிரதேசத்தில் அவர்கள் தரப்பாள் கொட்டில்களை அமைத்துத் தங்கியிருக்கின்றார்கள்.  

அந்தி வேளையிலும் இரவிலும் காட்டு யானைகள் உலாவும் அந்தப் பிரதேசத்தில் மிகுந்த அச்சத்துடனேயே அவர்கள் தங்கியிருக்கின்றார்கள்.

ஊருக்குள் செல்வதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. வெறும் உறுதிமொழிகள் மாத்திரமே வழங்கப்படுகின்றன. ஆனால் மீள்குடியேற்றத்திற்கு வழிசெய்யப்படவில்லை என அவர்கள் மிகுந்த கவலையோடு கூறுகின்றார்கள்.

மன்னாரில் இருந்து சிலாவத்துறை வழியாக வில்பத்து சரணாலயம் ஊடாக கற்பிட்டிக்கும் புத்தளத்திற்கும் செல்கின்ற நெடுஞ்சாலையில் உள்ள மறிச்சுக்கட்டி கிராமத்திற்கு அடுத்ததாக முள்ளிக்குளம் அமைந்துள்ளது. கடலோரக் கிராமமாகிய இங்கு செல்கின்ற பிரதான நுழைவாயிலில் கடற்படையினர் முகாம் அமைத்துள்ளார்கள். 

அந்த முகாமுக்கு அருகில் சேறும் சகதியுமுள்ள ஒரு பாதையை அமைத்து அந்தப் பாதையின் ஊடாகவே ஊர் மக்கள் போய்வர வேண்டும் என்று கடற்படையினர் கண்டிப்பாக உத்தரவிட்டிருக்கின்றார்கள். ஊர் மனையில் உள்ள வீடுகளுக்குச் செல்வதற்கு அவர்கள் செப்பனிடப்பட்ட வீதியைப் பயன்படுத்துகின்றார்கள். 

தேசிய பாதுகாப்புக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினர் பொதுமக்களுக்குப் பாதகமான முறையில் ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்று ஊர் மக்கள் கேள்வி எழுப்புகின்றார்கள். படையினர் பயன்படுத்தும் வீதியில் பொதுமக்கள் போய்வருவது எந்த வகையில் தேசிய பாதுகாப்புக்குப் பாதகமாக அமையும் என்றும் அவர்கள் வினவுகின்றார்கள்

பரலோகமாதா ஆலயச் சூழலில் விடுவிக்கப்பட்டுள்ள காட்டுப்பிரதேசத்தை தொண்டு நிறுவனம் ஒன்ற காடழித்து தற்காலிகக் கொட்டில்கள் அமைப்பதற்கு வசதி செய்ய முன்வந்துள்ளது. 

முள்ளிக்குளத்தில் 27 ஏக்கர் உட்பட வடக்கு கிழக்கில் 79 ஏக்கர் காணிகளை மக்கள் பாவனைக்கு விடுவிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இதுவரையில் உரிய காலத்தில் நிறைவேற்றப்படாத நிலைமையும் தொடர்கின்றது.

இந்த நிலையில் முள்ளிக்குளம் கிராமத்தின் மீள்குடியேற்றப் பிரச்சினைக்கு எப்போது தீர்வு காணப்படும் என்பது விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிலையான தீர்வுகளுக்கான தேசிய கொள்கை அவசியம்...

2025-02-07 11:00:58
news-image

பிள்ளையானிற்கு பிணை கிடைக்க உதவிய பசில்...

2025-02-06 16:41:49
news-image

வலிமையானவர்கள் தோல்வியுற்ற இடத்தில் - இலங்கையில்...

2025-02-05 21:23:34
news-image

ஊடகவியலாளர்களே அலட்சியப்படுத்தாது உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்...

2025-02-05 17:05:14
news-image

பாராளுமன்றத்துக்கு வெளியே சுத்தப்படுத்த வேண்டியவை…!

2025-02-05 17:19:24
news-image

லசந்தவின் வாகனச்சாரதியை கடத்தியவர் ; லசந்தவின்...

2025-02-05 16:21:31
news-image

பாரதிய ஜனதாவின் உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சி...

2025-02-05 09:56:52
news-image

எதிர்காலத்துக்காக ஈரநிலங்களைப் பாதுகாப்போம்!

2025-02-04 17:15:47
news-image

இராணுவத்தை போற்றி பாதுகாக்கும் பாரத இந்தியா

2025-02-04 13:34:29
news-image

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயமும் அதன் தாக்கங்களும்

2025-02-04 10:59:53
news-image

முன்னெச்சரிக்கையால் பாதிப்பை குறைத்து புற்றுநோயை வெல்வோம்!...

2025-02-04 11:05:21
news-image

2025க்கான ஒதுக்கீடு சட்டமூலமும் பொருளாதார நோக்கும்

2025-02-03 20:08:27