Published by R. Kalaichelvan on 2018-10-17 12:32:16
வவுனியா மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேச செயலகப்பிரிவுகளிலும் 2370 குடும்பங்களைச் சேர்ந்த 8583 பேர் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் சட்டத்தினூடாக கேட்கப்பட்ட தகவல்களுக்கு வழங்கப்பட்ட பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வரட்சி நிவராண செயற்பாடுகள் 2018 வவுனியா மாவட்டத்திலுள்ள செட்டிகுளம், நெடுங்கேணி, வவுனியா தெற்கு, வவுனியா ஆகிய நான்கு பிரதேச செயலகப்பிரிவுகளிலும் புரட்டாசி மாதம் வரை வரட்சியினால் பாதிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள 2370 குடும்பங்களைச் சேர்ந்த 8583 அங்கத்தவர்களுக்கு ஏப்ரல் மாதத்திலிருந்து புரட்டாதி மாதம் வரையான காலப்பகுதிகளில் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.
இக்குடிநீர் விநியோகத்திற்காக 1.742 மில்லியன் ஒதுக்கீட்டினை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் வழங்கியுள்ளதுடன் புரட்டாசி மாதம் வரை அதற்கான மொத்த செலவீனமாக 616.774.70 காணப்படுகின்றது.
மேலும் வரட்சி உலர் உணவு நிவாரணம் முதலாம் கட்டம் வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயக்கூலியாட்கள் மற்றும் மேட்டு நிலப்பயிர்ச் செய்கையாளர்களுக்கான நிவாரண உதவிகள் இரண்டாம் கட்டம், வரட்சியினால் பாதிக்கப்பட்டு குடிநீர் விநியோகம் நடைபெறும் பிரதேசங்களில் காணப்படும் பொதுக்கிணறுகள் ஆழப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.