உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல பரம் பொருளான சிவபெருமானுக்குரிய விரதங்களுள் சிறப்புமிக்க விரதம் சிவராத்திரி விரதமாகும். இது மிக்க மகிமையும் மகத்துவமும் நிறைந்து விளங்குவதால் மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகின்றது.
சைவ சமயிகளால் பெரிதும் விரும்பி இன்று அனுஷ்டிக்கப்படுகின்ற இந்த சிவராத்திரி விரதம் மாசி மாதத்திலே வருகின்ற அபரபக்க சதுர்த்தசி தினத்தன்று இரவு வழிபாட்டுக்குரியது.இந்த விரதத்தில் நள்ளிரவு பன்னிரண்டு மணி லிங்கோற்பவ காலமாகும்.
இன்றைய சிவராத்திரி பற்றிய ஒரு வரலாறு தொன்றுதொட்டு நிலவி வருகின்றது. அதாவது சிவபெருமான் சோதிவடிவினராகி ஒளிப்பிழம்பாக நின்ற நாளே சிவராத்திரியாகும். இந்த சிவராத்திரி விரதத்தை முறையாக அனுட்டிக்கவேண்டும். விளையாட்டாக எண்ணக்கூடாது. நித்திரை செய்யாது கண் விழித்திருந்தால் மட்டும் போதாது. இன்று மதியம் ஒருபொழுது மட்டும் உணவெடுத்து இரவு சிவாலயத்திற்குப் போய் சிவ வழிபாடு செய்தல் வேண்டும்.
இயன்றவரை தேவாரபாராயணஞ் செய்து சிவ தோத்திரங்களைப் பாடிக்கொண்டோ அல்லது புராண படன விரிவுரைகளைக் கேட்டுக்கொண்டோ காலங்கழிக்கலாம். துளியேனும் கெட்ட எண்ணங்கள் வரக்கூடாது. பக்தி நிறைந்த சிவ சிந்தனையுடன் ஸ்நானஞ்செய்து சந்தியா வந்தனம் முடித்துத் திருநீறு தரித்து நான்கு ஜாமங்களும் சிவவழிபாடு செய்தல் வேண்டும்.
முதலாம் ஜாமத்திலே பஞ்ச கவ்வியத்தால் அபிஷேகித்து சந்தனக் குழம்பு சாத்தி வில்வம் அல்லது தாமரைப் பூவால் அர்ச்சித்து அமுது படைத்து, தூபதீப வழிபாட்டியற்றி வணக்கஞ் செலுத்துதல்வேண்டும். இரவு நடுநிசியில் லிங்கோற்பவ காலத்திலே சிவ தோத்திரம் பாடி இறை தியானத்துடன் எல்லாம் வல்ல சிவபெருமானை வணங்கி நிற்க வேண்டும். முழு இரவும் கண் விழிக்க முடியாதவர்கள் நள்ளிரவு வரை விழித்திருந்து வணங்குதல் வேண்டும்.
இன்றைய சிவராத்திரி பற்றிய வரலாற்றுச் சான்றாக பிரம்மா விஷ்ணுவும் அடிமுடிதேடிய விடயம் கூறப்படுகின்றது. ஒரு கற்பாந்த காலத்திலே படைத்தல் தொழில் செய்யும் பிரம்மாவும் காத்தல் தொழில் செய்யும் விஷ்ணுவும் தாமே பெரியவர் என்று கூறி சண்டையிட்டுக்கொண்டார்களாம்.
அப்போது பரம்பொருளான சிவபெருமான் அவர்களின் முன்னே ஒரு சோதிப் பிழம்பாகத் தோன்றி "இந்தச் சோதியின் அடியையோ அன்றி முடியையோ யார் காண்கின்றார்களோ அவர்களே பெரியவர்" என்று அசரீரியாகவும் சொல்லி வைத்தாராம். அதைக் கேட்டவுடனே பிரம்மா தான் முடியைக் கண்டு வருவதாகச்சொல்லி அன்னப்பட்சி உருவமெடுத்து வானத்தின் மீது பறந்து சென்றார்.
விஷ்ணு தான் அடியைக் கண்டு வருவதாகக் கூறிப் பன்றி உருவம் எடுத்துக் கொண்டு நிலத்தைக் குடைந்து கொண்டு கீழே சென்றார். இருவராலும் எதையுமே காண முடியவில்லை.
ஆனால், பிரம்மாவோ தான் முடியைக் கண்டதாகப் பொய் கூறியது மட்டுமல்லாமல் தாழம்பூவையும் பொய் சாட்சி சொல்ல வைத்தார். இவ்வாறு பொய் பேசிய காரணத்தால் பிரம்மாவுக்குக் கோயிலே இல்லாமற் போயிற்று. தாழம்பூ பூசைக்கு எடுக்கப்படுவதில்லை. மகா விஷ்ணுவோ தன்னால் முடியாது என்று பணிந்து வணங்கினார். அவர் உண்மை பேசிய காரணத்தால் விஷ்ணுவுக்குக் கோயில் இருக்கின்றது. இப்படி இறைவன் சோதியாக நின்ற நாளே சிவராத்திரி.
இது ஒரு புறமிருக்க, இன்னொரு கதையும் இருக்கிறது. முன்னொரு காலத்திலே ஒரு நாள் பிரம்ம தேவரிடம் சென்ற முனிவர்கள் தாங்கள் தவஞ்செய்ய ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்துத் தருமாறு வேண்டினார்களாம். அதற்கு அவர் ஒரு தருப்பையை எடுத்து வளைத்து உருட்டி"இது எங்கு போய் விழுகின்றதோ அந்த இடத்தில் தவஞ்செய்யலாம்" என்று சொன்னாராம்.
முனிசிரேஷ்டர்களும் அந்தத் தருப்பை வீழ்ந்து கிடந்த இடத்தை அடைந்து தவத்தை மேற்கொண்டார்கள். அந்த இடம் நைமிசவனம் என அழைக்கப்பட்டது. ஒருமுறை அந்த வனத்துக்கு சூதமகா முனிவர்வந்தார். அவரை எதிர்கொண்டு வரவேற்ற முனிவர்கள் அவரிடம் "சுவாமி! சிவகதி பெற எளிதாக அனுட்டிக்கக் கூடிய விரதம் ஏதாவது உண்டா?” என்று பணிந்து கேட்டனர். அதற்கு அவர் "நன்று கேட்டீர்கள். சிவபெருமானுடைய திவ்ய திருவருளைப் பெறுவதற்கு சிவராத்திரி விரதமே சிறந்த விரதம். இந்த விரதத்தை முறைப்படி அனுட்டித்தால் அந்தணர்களுக்கு தானம் கொடுத்த பலனும் அநேக யாகங்களைச் செய்த பலனும் கங்கை முதலான தீர்த்தங்களில் மூழ்கி நீராடிய பலனும் கிடைக்கப்பெறும்" என்றாராம்.
மேலும் இப்படியும் கூறப்படுகின்றது.
இந்த விரதத்தை மேற்கொண்ட உமாதேவியார் வேதாகம விதிப்படி நாலு சாமமும் சிவனை அர்ச்சித்து வணங்கி "பிராணநாயகரே! நான் தங்களைப்பூசித்த இந்த ராத்திரியே சிவராத்திரியாகும். இன்று தேவரீரைப் பூசித்தவர்கள் பரமானந்த முத்திப் பேற்றினைப் பெறவேண்டும். அதற்கு நீங்கள் திருவுளமிரங்க வேண்டும்" என்று பணிவோடு கேட்டுக்கொண்டார். இப்படி உமையாள் கேட்டவுடனே சிவனும் புன்முறுவல் பூத்தவண்ணம் "அப்படியே ஆகட்டும்" என்று விடை பகர்ந்து திருவாய் மலர்ந்தருளினார் அன்று முதல் சைவ சமயிகள் இவ்விரதத்தை விரும்பி அனுட்டித்து வருவதாகக் கூறப்படுகின்றது. இப்படிச் சிவராத்திரி பற்றிப் பலவிதமாகக் கூறப்படுகின்றது.
எனவே, இந்தச் சிவபிரானுக்குரிய இன்றைய சிவராத்திரி விரதத்தை நாங்கள் அனைவரும் முறைப்படி அனுட்டித்து எம் பெருமானுடைய திருவருட் கடாட்சத்துக்கு ஆளாகி அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு நற்கதி அடைவோமாக.
தெய்வத் தமிழ்ச் சுடர்
இராசையா ஸ்ரீதரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM