சிறைச்சாலை கதவுகளுக்கு பின்னால் சொல்ல முடியாமல் மறைக்கப்பட்ட எத்தனையோ சோக கதைகள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன. வாழ்க்கைப் போராட்டத்தின் மத்தியில் கனவுகள் அனைத்தும் சிதைந்த நிலையில், வழி தவறிச் சென்ற பலர் தமக்கொரு விடிவு வராதா? என்ற ஏக்கத்துடன் காத்திருக்கின்றார்கள்.
அந்தவகையில் மெழுகுவர்த்தியைப் போல் தன்னை உருக்கி தனது குடும்பத்தினரின் வாழ்வில் ஒளியூட்டிய பிரியந்த (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) தனக்கென்று ஒரு வாழ்வை அமைத்து கொள்ள நினைத்த போது அவனுடைய எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் ஏமாற்றங்களிலேயே நிறைவுற்றன. இன்று காதல் தந்த வலிகளையும், ஏமாற்றங்களையும் சுமந்தவாறு தனது குடும்பத்தினருடன் வாழும் எதிர்பார்ப்பில் தனது விடுதலை நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றான் பிரியந்த.
பிரியந்த மனம் திறந்து தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொண்ட போது,
எனது குடும்பத்தில் நான் மூத்த பிள்ளை. எனக்கு மூன்று தங்கைகள்.
தந்தைக்கு நிரந்தரமான தொழிலொன்று இருக்கவில்லை. ஆங்காங்கே கிடைக்கும் கூலி வேலைகளைச் செய்து வந்தார். அம்மா பல வருடங்களாக நோய்வாய்ப்பட்டு படுக்கையிலேயே கிடந்தார். எனவே, அப்பாவுக்கு வீட்டு வேலைகள், அம்மாவை பார்த்துக்கொள்வது ,தங்கைகளை பார்த்து கொள்வது என்று நேரம் சரியாகவிருந்தது. கூலி வேலைகளைச் செய்து அப்பா சம்பாதிக்கும் பணம் அம்மாவின் வைத்திய செலவுகளுக்கே போதுமானதாகவிருக்கவில்லை. இதனால் வீட்டில் வறுமை தலைவிரித்தாடியது. இதை உணர்ந்த நான் 13 வயதிலிருந்தே வீடு வீடாகச் சென்று பழைய பத்திரிகைகளை சேகரித்து எடுத்துவந்து அவற்றை, பழைய போத்தல், பத்திரிகைகள் எடுக்கும் வியாபாரிகளிடம் விற்றுப் பணம் சம்பாதித்தேன். அந்தப் பணத்திலேயே என் பாடசாலை செலவுகளையும் பார்த்துக்கொண்டேன். இவ்வாறு குடும்ப கஷ்டத்துக்கு மத்தியில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை எழுதினேன். அதன்பின்னரும் எனது தொழிலைக் கைவிடாது செய்து வந்தேன். இதனிடையே, அம்மாவும் இறந்துவிட்டார். அப்போது தங்கைகள் மூவரும் சிறியவர்கள். எனவே, அப்பாவால் தனியாக குடும்பத்தைக் கொண்டு நடாத்த முடியாததால் எனக்கு உயர்தரத்தை (A/L) தொடரும் எதிர்பார்ப்பு இருக்கவில்லை.
நானும் நிரந்தரமான தொழிலொன்றை தேடிச்சென்றேன். எனினும், என்னிடம் பெரிதாக தொழில் அனுபவம் இல்லாத காரணத்தினால் எனக்கு யாரும் வேலை வழங்க தயாராகவிருக்கவில்லை. நான் தொழில் தேடி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தேன். இறுதியில் கராஜ் ஒன்றிலேயே எனக்கு வேலை கிடைத்தது. அங்கு செய்யும் வேலைகள் என்னவென்றும் எனக்கு தெரியாது. போன புதிதில் எனக்கு சற்று சிரமமாகவிருந்தது. எனினும், போகப் போக நான் அவற்றை பழகிக்கொண்டேன். அதன்பின் கராஜ் வேலைகளின் மூலம் எனக்கு நல்ல வருமானம் கிடைத்தது. எனவே, தந்தையின் வருமானமும் எனது வருமானமும் குடும்பத்தின் செலவுகளுக்கு போதுமானதாகவிருந்தது. தங்கைகளும் மிகுந்த திறமையுடன் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். என்னுடைய சகோதரிகளில் இருவர் உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகம் சென்றார்கள். கடைசி தங்கைக்கு பல்கலைக்கழகம் செல்லும் அளவுக்கு பெறுபேறுகள் போதாமையால் உயர் தர (A/L) பரீட்சை எழுதிய கையோடு வீட்டிலிருந்தார்.
நான் கராஜ் வேலைகளில் திறமையுடன் ஈடுபட்டதால் எனது சம்பளமும் உயர்ந்தது. இதனால், அப்பா வயதானவர் என்பதால் நான் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி, வீட்டில் இருக்க வைத்தேன். அவர் அடிக்கடி உடல் உபாதையொன்றின் காரணமாக அரசாங்க வைத்தியசாலையில் மருந்து எடுத்தும் வந்தார்.
விடுமுறை நாட்களில் மட்டுமே சகோதரிகள் இருவரும் பல்கலைக்கழகத்திலிருந்து வீட்டுக்கு வருவார்கள். ஏனைய நேரங்களில் நானும் அப்பாவும் கடைசி தங்கையும் வீட்டிலிருந்தோம். அம்மா இல்லாத குறையை தவிர வேறு எந்தக் குறையும் எங்களுக்கு இருக்கவில்லை. நானும் எனது தங்கைகளும் நண்பர்களைப்போலவே பழகி வந்தோம். தங்கைகள் இருவரும் விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் சந்தர்ப்பங்களில் பல்கலைக்கழகத்தில் நடக்கும் சுவராஷியமான சம்பவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்வார்கள்.
அன்றைய நிலையில் நான் திருமணத்தை பற்றி எல்லாம் பெரிதாக சிந்திக்கவில்லை. தங்கைகள் மூவருக்கும் சந்தோஷமான அழகான வாழ்க்கையொன்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது குறித்து மட்டுமே நான் சதா சிந்தித்தேன். அதற்கேற்றாற் போல் எனது மூத்த சகோதரி பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்று வெளியேறியவுடன் தனியார் நிறுவனமொன்றில் வேலைக்கு சென்றாள். அதன்பின் அவள் காதலித்த பையனுக்கே அவளை திருமணம் செய்து வைத்தேன். அதனை தொடர்ந்து எனது இரண்டாவது தங்கைக்கும் நல்ல படித்த மாப்பிள்ளையொருவரை பார்த்து திருமணம் செய்து வைத்தேன். அவர்கள் இருவரும் திருமணம் முடித்த கையோடு தனது புகுந்த வீட்டை நோக்கிச்செல்ல நானும் அப்பாவும், கடைசி தங்கையும் வீட்டில் இருந்தோம். தங்கைமார்களுக்கு திருமணம் முடிந்து ஒரிரு மாதங்களில் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அப்பா இறந்துவிட்டார்.
இறுதியாக நானும், எனது கடைசி தங்கையுமே வீட்டில் எஞ்சியிருந்தோம். தங்கை அழகுக் கலை டிப்ளோமா ஒன்றை முடித்து மணமகள் அலங்காரங்கள் என்பவற்றை வீட்டிலிருந்து செய்து பணம் சம்பாதித்தாள். எனவே, நான் வேலைக்குச் சென்றவுடன் தங்கை தனியாக வீட்டிலிருக்கின்றாளே என்ற கவலை எனக்கு இருக்கவில்லை. அவளின் வேலைகளுக்கு உதவியாகவும், அவளுக்குத் துணையாகவும் அவளுடைய தோழிகள் பகல் வேளைகளில் வீட்டிலிருப்பார்கள். நாளடைவில் தங்கையின் தோழிகளில் ஒருவரான இந்துனியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) எனக்குப் பிடித்து போக நான் அவளை காதலிக்க ஆரம்பித்தேன். அவள் ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்து வந்தார். எனினும், முதலில் என் காதலை அவளிடம் நான் வெளிப்படுத்தவில்லை. நேராக அவர்களின் வீட்டுக்கு சென்று அவளின் பெற்றோரிடம் முறைப்படி பெண் கேட்டேன். அவளின் பெற்றோரும் என்னுடைய விருப்பத்துக்கு எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அவளை எனக்கு திருமணம் செய்து வைக்க சம்மதித்தனர். அதுமட்டுமின்றி, இந்துனிக்கும் என்னைப் பிடித்துபோக அவளும் என்னை காதலிக்க ஆரம்பித்தாள்.
எனினும், எனது கடைசி தங்கைக்கு திருமணம் முடிந்த பின்னர் நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வோம் என்று முடிவெடுத்தோம். அவள் எனக்கு இன்னுமொரு தாயைப் போலவே இருந்தாள். இதனிடையே, எனது கராஜ் உரிமையாளர் திடீரென்று சுகவீனமுற்று இறந்து விட்டார். அதன்பின்னர் அவருக்கு பிள்ளைகள் யாரும் இல்லாத காரணத்தினால் கராஜை என்னுடைய பெயரில் அவர் எழுதி வைத்திருப்பது எனக்கு தெரிந்தது. முதலாளியின் இறுதிக் கிரியைகள் நிறைவடைந்த பின்னர், முதலாளியின் மனைவி கராஜை என்னிடம் ஒப்படைத்தார். அதன்பின்னர் எனக்கு முதலாளியின் மனைவியையும் கடைசிக் காலத்தில் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமையிருந்தது. ஆகவே, முதலாளி என்னிடம் ஒப்படைத்த கராஜை நான் நல்லமுறையில் செய்து வந்தேன். அதன்மூலம் காணியொன்றை வாங்கி புதிதாக வீடு ஒன்றைக் கட்ட ஆரம்பித்தேன்.
எனது கடைசி தங்கையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி முதலாளியம்மாவை சென்று பார்த்து வருவாள். இதனிடையே, தங்கையும் ஒருவரை காதலிக்க ஆரம்பித்தாள். எனினும், அவனுக்கு நிரந்தரமான தொழிலொன்று இல்லாத காரணத்தினால் எனக்கு ஆரம்பத்தில் அவனை பிடிக்கவில்லை. எனினும், தங்கையின் விருப்பத்துக்கு தடையாக இருக்கக் கூடாது என்ற காரணத்தினால் என்ன செய்வதென்று நானும் சம்மதித்தேன்.
இது இவ்வாறிருக்க நான் திருமணம் முடிக்க இருந்த இந்துனி வேலைக்குச் சென்று வீடு திரும்பும் வழியில் யாரோ அவளைக் கடத்திச்சென்று விட்டார்கள். எனினும், அது தொடர்பில் நான் அறிந்திருக்கவில்லை. வெகு நேரமாகியும் அவள் வீட்டுக்கு வராத காரணத்தினால் அவளுடைய அப்பா என்னைத் தேடி வந்து விஷயத்தை சொல்லி அழைத்துச் சென்றார். நானும் அவரும் சேர்ந்து எல்லா இடங்களிலும் தேடினோம். எனினும், அவள் எங்குமே இருக்கவில்லை.அன்றிரவு நானும் தங்கையும் அவளின் வீட்டில் தான் இருந்தோம்.
இறுதியில் நள்ளிரவு 12.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த இனம் தெரியாத நபர்கள் சிலர் அவளை வீட்டு வாசலில் போட்டு விட்டு, வந்த வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்கள். அதுமட்டுமின்றி இந்துனி அந்த காமுகனின் காமப் பசிக்கு இரையாகி அலங்கோலமான நிலையில் கிடந்தாள். அவளின் உடலில் உயிர் மட்டுமே எஞ்சியிருந்தது. அவளால் முழுமையாக எதையும் பேச முடியவில்லை. அவள் நிலைகுலைந்தவளாய் இருந்தாள். அவளை எண்ணி நான் உள்ளுக்குள் புலம்பினேன்.
எனவே, என்னுடைய இந்துனியை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை சட்டம் தண்டிக்க முன்னர் நானே என்னுடைய கையால் பழிதீர்க்க வேண்டும் என்று நினைத்தேன். அதன்படி இது பற்றி பொலிஸ் நிலையத்தில் நாங்கள் முறைப்பாடு செய்யவில்லை. இரண்டு மூன்று நாட்களின் பின்னர் இந்துனி தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது தன்னுடைய வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் தினேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தான் என்று கூறினாள். எனவே அந்தப் படுபாதகன் யார் என்பதை அறிந்த நான் அவனை தேடிச் சென்று பழிதீர்க்க முடிவெடுத்தேன். அதன்படி அவன் இருக்கும் இடத்தை அறிந்துகொண்டு அங்கு சென்று அவனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு பொலிஸில் சரணடைந்தேன்.
பொலிஸாரின் விசாரணையில் என்னுடைய குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நான் சிறையில் அடைக்கப்பட்டேன். இந்தக் காலப்பகுதியில் என்னுடடைய தங்கைகள் மூவரும் என்னை பார்க்க வருவார்கள். அவர்கள் என்னை நினைத்து சரியாக கவலைப்படுவார்கள். பார்க்க வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அழுதுகொண்டு தான் இங்கிருந்து செல்வார்கள். நான் சிறைக்கு வந்து மூன்று மாதங்கள் நிறைவில் இந்துனி ஒரு நாள் என்னைப் பார்க்க வந்தாள்.
அவள் என்னிடம் நான் கர்ப்பமாகவிருக்கின்றேன் என்று கூறி அழுதாள். நான் அவளிடம் உன்னுடைய குழந்தைக்கு நான் அப்பாவாகின்றேன். நீ தைரியமாக உன் குழந்தையை பெற்றெடு என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தேன். எனினும், அந்த முட்டாள் பெண் நான் கூறியதை கேட்காமல் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டாள். அவளுடைய இறுதிக் கிரியைகளுக்கு கூட என்னால் செல்ல முடியாமல் போனது. இந்துனியின் அன்பை மிஞ்சும் அளவுக்கு என்னை யாரும் காதலித்ததில்லை. அவள் கரம் பற்றும் நாளுக்காக தான் ஒவ்வொரு நாளும் காத்திருந்தேன். எனினும் அவளுடன் வாழும் அதிஷ்டம் எனக்கு இறுதிவரை கிடைக்கவில்லை. என்னுடைய வேதனைகளை வெளியில் யாரிடமும் சொல்லி ஆறுதல் தேட முடியாமல் இந்த நான்கு சுவர்களுக்குள்ளேயே நான் அடைக்கப்பட்டு விட்டேன். இன்று இந்துனியின் நினைவுகள் மட்டுமே என் வாழ்க்கையென்று ஆகிவிட்டது.
இன்று என் தங்கைகள் மூவரும் நல்லதொரு இடத்தில் திருமணம் முடித்து சந்தோஷமாகவிருக்கின்றார்கள். சட்டத்தின் முன் நான் குற்றவாளியாகவிருந்தாலும் என்னை பொறுத்தவரை நான் செய்தது எனக்கு குற்றமாக தெரியவில்லை. என்னுடைய இந்துனிக்கு நடந்த அநியாயம் இன்னுமொரு பெண்ணுக்கு ஏற்படக்கூடாது என்று நினைத்து தான் நான் அவ்வாறு செய்தேன். எனது தண்டனை காலம் நிறைவுற்று இங்கிருந்து விடுதலையாகி என் தங்கைகளுடனும், அவர்களின் பிள்ளைகளுடனும் சேர்ந்து வாழும் எதிர்பார்ப்பிலேயே இன்று வரை காத்திருக்கின்றேன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM