உள்ளாடையை துவைக்காததால் அலுவலக உதவியாளருக்கு குறிப்பாணை அனுப்பிய நீதிபதி

Published By: Priyatharshan

04 Mar, 2016 | 03:47 PM
image

தனது உள்ளாடையை சரியாக துவைக்காததால்  தனது அலுவலக உதவியாளருக்கு ஈரோட்டில் உள்ள சார்பு நீதிமன்ற நீதிபதி குறிப்பாணை அனுப்பிய சம்பவம்  சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இதேவேளை, அலுவலக உதவியாளரை சொந்த வேலைகளை செய்ய சொல்வது தவறு என்ற நிலையில், ஆடைகளை துவைக்க வைத்துள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இச் சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,

சத்தியமங்கலத்திலுள்ள சார்பு நீதிமன்ற நீதிபதி, கடந்த பெப்ரவரி மாதம்  முதலாம் திகதி வசந்தி என்ற தனது அலுவலக உதவியாளருக்கு குறிப்பாணை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த குறிப்பாணையில், வசந்தி நீதிபதி வீட்டில் துவைக்க போடும் துணிகளை சரிவர துவைப்பதில்லை என்றும் குறிப்பாக உள்ளே அணியும் துணிகளை அருவருப்படைந்து தூக்கி வீசி எறிந்து விடுவதாகவும் மேலும் அதிகாரி மற்றும் துணைவியார் இது பற்றி கேட்டதற்கு எதிர்த்துப் பேசியதாகவும் உம்மீது ஏன் ஒழங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த குறிப்பாணையை வசந்தி கையொப்பமிட்டு பெற்று கொண்டுள்ளார். தற்போது இந்த குறிப்பாணை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வசந்தி அந்த குறிப்பாணைக்கு பதிலளித்துள்ள கடிதமும் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், நான் இனிமேல் வரும் காலங்களில் இம்மாதிரியான புகார்கள் வராமல் நடந்து கொள்வேன் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என வசந்தி விளக்கமளித்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு நீதிபதிகள் தங்கள் அலுவலக உதவியாளர்களை இதுபோன்ற சொந்தப்பணிகளுக்கு பயன்படுத்துவதும், அவர்கள் அதனை ஒழுங்காக செய்யாத போது குறிப்பாணை அளிப்பது, அவர்களை தொழிலில் இருந்து இடைநிறுத்துவது போன்ற செயல்கள்  பல காலமாக இடம்பெற்று வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right