(எம்.மனோசித்திரா)
நுண்நிதிக்கடன் நிதி நிறுவனங்களின் செயற்பாடு காரணமாக வடக்கு, கிழக்கிலே நடைபெறும் அதிகரித்த தற்கொலைகள் தொடர்வதற்கு இனியும் அனுமதிக்க முடியாது என மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு, கிழக்கில் நுண்நிதிக் கடன் நிறுவனங்களின் செயற்பாட்டினால் தற்கொலைகள் அதிகரித்து வருவது தொடர்பிலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கும் வகையிலான செய்தியாளர் மாநாடு நேற்று வெள்ளவத்தை சண்முகாஸ் விடுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியாத வகையில் பெருங்கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். யுத்தங்களின்போது அங்கு சுமார் 80 ஆயிரம் தொடக்கம் 90 ஆயிரம் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டனர். இவர்கள் தங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாமல் மிகவும் அல்லற்பட்டு வருகின்றனர்.
இதேபோன்றே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டு இருக்கின்றனர் என்ற போர்வையில் அவர்களுக்கான வாழ்வாதாரத்திற்குரிய திட்டங்களோ செயற்பாடுகளோ இல்லாத நிலையில் அவர்களின் பொருளாதாரமும் அன்றாட வாழ்க்கை முறையும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
இங்கு நுண்நிதிக்கடன் நிதி நிறுவனங்களின் தேவை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. யுத்தத்தின் பின்னரான மீள் குடியமர்வில் இந்திய அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டத்தைத்தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில் மீள் குடியமர்வு செயற்படுத்தப்படாததனால் தங்களின் வாழ்விடத்துக்கான நிலையைத் தீர்மானித்தல் தொடர்பான பயம், விதவைப் பெண்களுக்கோ, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளுக்கோ இரண்டு இலட்சம் ரூபா நிதியினை இலவசமாக வழங்குவதாக அரசாங்கத்தினால் கூறப்பட்ட திட்டம் முழுமை பெறாமை, இறுதி யுத்தத்தில் பொருளாதாரம் சார்ந்த இழப்புக்கள் காரணமாக அடகு மூலம் நிதியினைப் பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை,
அடிப்படை மாதாந்த வருமானத்தைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு நிரந்தர வருமானம் உள்ள தொழில் அல்லது வேலைவாய்ப்பு இல்லாமை, காணாமல்போன குடும்பத் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாத காரணத்தினால் உடல், உள ரீதியான செயற்பாட்டுத்திறனற்று தங்கிவாழும் சூழ்நிலை ஆகியன இதற்கான காரணங்களாக கொள்ள முடியும்.
யுத்தத்தின் பின்னர் வடக்குக் கிழக்கில் இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து அவர்களைப் பொருளாதார ரீதியில் மீட்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட நுண்நிதிக்கடன் திட்டம் இன்று அவர்களையே தற்கொலைக்கு இட்டுச்செல்லும் ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு மாற்றியிருக்கிறது.
அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 14 பெண்களும் ஆண்களும் யாழ்ப்பாணத்தில் 19 பெண்களும் ஆண்களும், கிழ க்கு மாகாணத்தில் 19 பெண்களும் ஆண்களும், மன்னார், வவுனியா போன்ற மாவட்டங்களில் 10 பெண்களும் ஆண்களுமாக மொத்தம் 62 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
எனவே நுண்நிதிக்கடன் நிதிநிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்தை மறந்து குறிப்பாக வடக்கு, கிழக்கில் யுத்தத்தின் பின்னரான மீள் கட்டமைப்பு, மீள்குடியேற்றம் என்பவை பூரணப்படுத்தப்படாத நிலையில் மக்கள் மத்தியில் அதன் வலியும் சலிப்பும் தொடர்ந்திருக்கும் வேளையில் இவ்வாறான தற்கொலைகள் மிக வேதனை அளிக்கின்றன.
உடனடியாக அரசாங்கம் வடக்கு, கிழக்கில் உள்ள நுண்நிதிக்கடன் நிதிநிறுவனங்களை கடுமையான சட்டங்களின் மூலம் இலங்கை மத்திய வங்கியின் நேரடிக்கண்காணிப்பில் கொண்டுவர வேண்டும். தங்களது உயிரை நீத்த நுண்நிதிக்கடன் பெற்ற குடும்பங்களின் நுண்நிதிக்கடனை முற்றுமுழுதாகத் தள்ளுபடி செய்து தகுதி வாய்ந்த அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் நுண்நிதிக்கடன் பெற்ற ஏனையவர்களை சுயமதிப்பீடு செய்து அவர்களுக்கான வட்டிகளை முற்றாக நீக்கி அதை மீளச் செலுத்துவதற்கு குறைந்தபட்சம் 5 வருடங்களாவது கால எல்லை வழங்கப்பட வேண்டும்.
எனவே இந்த விடயம் குறித்து மத்திய வங்கியின் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வருவேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM