2016ஆம் ஆண்டு 12ஆம் இலக்க தகவல் அறியும் உரிமை சட்டத்தினை இலங்கையில் வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்தும் பொறுப்பை உடைய தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு மக்களின் தகவல் அறியும் உரிமையினை நிலைநிறுத்துவதே அச்சட்டத்தின் முக்கிய கொள்கை என்பதனை வலியுறுத்துகின்றது.
தகவல் அறியும் உரிமை சட்டமானது சில குறிப்பிட்ட விடயங்கள் (தேசிய பாதுகாப்பு, அகவுரிமை, சட்டம் மற்றும் ஒழுங்கு) ஆகியன தவிர்ந்த ஏனைய விடயங்கள் தொடர்பான தகவல்களை இயன்றளவு வெளியிடுவது தொடர்பில் செயற்படுகிறது. இந்த விடயங்கள் தொடர்பான தகவல் கோரிக்கையிலும் பொது நலன் அதிகமாக காணப்படின் அத்தகைய தகவல்களும் வெளியிடப்படலாம். இதன்மூலம் குறிப்பிட்ட பிரிவுகள், ஆவண வகைப்படுத்தல்கள் மற்றும் குறிப்பிட்ட அலுவலகங்களை தகவல் அறியும் உரிமைக்கான சட்டமானது தகவல் கோரிக்கையாளர்களின் கோரிக்கை எல்லைக்கு அப்பாலான விடயமாக வைக்கவில்லை.
இந் நிலையில் சில அரச அலுவலகங்களை தகவலறியும் உரிமையில் இருந்து விலக்களிக்கும் வகையில் சிறப்புரிமை அளிக்கும் வகையிலான சட்டமூலங்கள் தற்போது வரையப்பட்டு வருகின்றன. இந்த செயற்பாடு குறித்த நிறுவனங்களின் வெளிப்படையான செயற்பாட்டை பாதிக்கும் நடவடிக்கையாகும்.
இந்த விடயம் தொடர்பில் ஆணைக்குழு குறிப்பாக முன்வரைபு நிலையில் உள்ள முன்மொழியப்பட்டுள்ள கணக்காய்வு சட்டமூலத்தின் 9(1)(ஆ) பிரிவு (16.03.2018 வெளியிடப்பட்ட அரச வர்த்தமானியின் படி) தொடர்பில் தனது கவனத்தை செலுத்துகின்றது. குறித்த பிரிவு கணக்காய்வு ஆணைக்குழு உறுப்பினர்கள், அந்த சட்டத்தின் கீழ் ஏதாவது பதவிக்கு நியமிக்கப்படுபவரும், அல்லது அந்த சட்டத்தின் பிரிவுகளை நடைமுறைப்படுத்த மேற்சொன்னவாறு நியமிக்கப்பட்டவர்களுக்கு உதவுபவரும், அல்லது கணக்காய்வாளர் நாயகத்தினால் பணிக்கமர்த்தப்படும் தகைமைபெற்ற கணக்காய்வாளரும் பணியின்போது தமக்கு கிடைத்த தகவல்களை அது சம்பந்தமான ஆவணங்கள் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும்வரை வெளியிடப்படலாகாது எனத் தெரிவிக்கின்றது. இதற்கான ஒரே விதிவிலக்கு பாராளுமன்றத்தின் கோரிக்கை அல்லது நீதிமன்றத்தின் ஆணை ஆகியனவே என அந்தச் சட்டமூலம் தெரிவிக்கின்றது.
குறித்த முன்மொழியப்பட்ட சட்டமூலமானது ஒரு ஜனநாயக சமூகத்தில் இவ்வாறான பாரிய தடையின் தேவை தொடர்பில் எவ்வித மதிப்பீடுகளையும் மேற்கொள்ளாது, தகவலை அளிப்பதன் மூலம் எவ்வாறு கடும் பாரபட்சம் ஏற்படும் என்பதனையும் ஆராயாமல், குறித்த அறிக்கைகள் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கால எல்லை போன்றவையும் தெளிவாக குறிப்பிடப்படாமல் நிபந்தனையற்று இப்பாதுகாப்பை அளிக்கின்றது.
இந்த பொது தடை அச்சமூட்டும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனத் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு எண்ணுகின்றது. குறித்த சட்டமூலத்தில் ஏதேனும் விடயத்தை எவரேனுமொருவருக்கு அறிவிக்கின்ற அல்லது அத்தகைய ஏதேனும் விடயம் தொடர்பான எவையேனும் புத்தகங்களை, பத்திரங்களை அல்லது வேறு பதிவேடுகளை அணுகுவதற்கு எவரேனும் அதிகாரமளிக்கப்படாத ஆளை விடுகின்ற அல்லது அனுமதிக்கின்ற அத்தகைய எவரேனும் உறுப்பினர் அல்லது ஆள் அல்லது தகைமைபெற்ற கணக்காய்வாளர் குற்றமொன்றை புரிகின்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குறித்த தகவல் வெளியிடுவதை தடுப்பதும் தகவல் வெளியிடுவதை குற்றமாக குறிப்பிடுவதும் தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அதன் நோக்கங்களுக்கு முரணாக உள்ளது என்பதை ஆணைக்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.
இவ்வாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இருந்து சில அலுவலகங்களுக்கும் தனி நபர்களுக்கும் விலக்களிக்கும் முன்னுதாராணமானது தகவல் சுதந்திரம் தொடர்பில் இலங்கை மக்கள் பெற்றுக்கொண்ட வெற்றியை கேள்விக்குறியாக்குகின்ற அதேவேளை உலகாளாவிய அளவில் எமது நாட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு உள்ள அங்கீகாரத்தையும் கேள்விக்குறியாக்கும் என ஆணைக்குழு நம்புகிறது. அத்துடன் இவ்விடயம் தகவலறியும் உரிமை சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் பகிரங்க அதிகார சபைகள் தாம் பாரம்பரியமாக பின்பற்றி வந்த தகவல்களை இரகசியமாக பேணல் மற்றும் வெளியிட மறுத்தல் ஆகிய செயற்பாடுகளில் இருந்து விடுபட்டு தகவல்களை வெளியிட தொடங்கியுள்ள புதிய கலாசார அத்தியாயத்தையும் பாதிக்கும் என ஆணைக்குழு ஆணித்தரமாக நம்புகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM