மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்தில் தெல்தெனிய பொலிஸ் பிரிவில் உள்ளது கும்புக்கந்துர எனும் அழகிய கிராமம். முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட இந்த கிராமத்தின் “பஹலகம்மெத்த” பகுதியில் கடந்தவாரம் இடம்பெற்ற கொடூரம் ஒரு கணம் முழு தேசத்தையும் பேசச் செய்தது.
ஆம். பாத்திமா சியாரா என்ற இளம் தாயை துடிக்கத் துடிக்க பெற்றோல் ஊற்றி எரித்துக் கொன்ற அந்த கொடூரத்தை எழுதும் போது பேனையே நடுநடுங்குகிறது.
அது கடந்த 11 ஆம் திகதி வியாழக்கிழமை சியாரா தனது மூன்று வயது மகளுடன், தனது உறவுக்காரரான மொஹமட்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) மற்றும் அவர் மனைவி அஸ்மியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோரை அழைத்துக் கொண்டு தான் ஏற்கனவே வாடகைக்கு இருந்த வீட்டைக் கட்ட கும்புக்கந்துர, பஹல கம்மெத்த பகுதிக்கு சென்றிருந்தார். கணவன் வெளிநாடொன்றில் வேலை செய்துவந்த நிலையில், தனது 10 வயதான மூத்த மகளும் 7 வயதான இரண்டாவது பிள்ளையும் பாடசாலைக்கு சென்றிருந்த நிலையிலேயே மூன்றாவது பிள்ளையுடன் உறவுக்காரர்களையும் அழைத்துக் கொண்டு சியாரா அவ்விடத்துக்கு சென்றுள்ளார். அதாவது பஹல கம்மெத்த பகுதியில் சில வாரங்களுக்கு முன்னர் தான் வசித்த வாடகை வீட்டை அந்த உறவுக்காரர்களுக்கு வாடகைக்கு வழங்குவதே சியாராவின் நோக்கமாகும். இதற்காகவே அவர் அங்கு சென்றிருந்தார்.
அந்த வாடகை வீடானது, ஒரு சுவரினால் பிரிக்கப்பட்ட வீட்டின் பகுதியொன்றேயாகும். அதன் முன்னால் சியாராவும் வாடகைக்கு பெறவந்த உறவுக்காரர்களும் பேசிக் கொண்டிருந்த போது, பிரிக்கப்பட்ட வீட்டின் மறு புறத்தில் வசித்துவந்த ரியால் மண்வெட்டியுடன் திடீரென ஏசிக்கொண்டே வந்து சியாராவை மண்வெட்டியால் தாக்கியுள்ளார். இதன் போது அருகில் இருந்த மொஹமட்டையும் அவர் தாக்கியுள்ளார்.
ரியாலின் மண்வெட்டி தாக்குதலால் நிலை தடுமாறி சுமார் 1 மீற்றர் வரையிலான பள்ளத்தில் சியாரா விழுந்துள்ளார். மறுகணமே வீட்டுக்குள் ஓடிச் சென்று ‘கேன்’ ஒன்றை தூக்கிவந்துள்ள ரியால் விழுந்து கிடந்த சியாரா மீது அதிலிருந்து பெற்றோலை ஊற்றி நெருப்பு வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதன்போது சியாராவை தீயிலிருந்து காப்பாற்ற அருகில் இருந்தவர்கள் முயற்சித்துள்ள போதும் அவ்விடத்திலேயே அந்த இளம் தாய் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
இதுதான் சம்பவத்தையடுத்து ஸ்தலம் விரைந்த தெல்தெனிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எம். நிஸங்க கொட முன்னவுக்கு கிடைத்த ஆரம்பகட்ட தகவல்களாகும்.
இதனைத் தொடர்ந்து மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி திஸாநாயக்க, கண்டி பிரதி பொலிஸ்மா அதிபர் பெரமுன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காமினி எல்லபொல ஆகியோரின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ராஜபக் ஷவின் நேரடி கட்டுப்பாட்டில் தெல்தெனிய பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஸங்க கொட முன்னவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பெரேரா தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் நவரட்ண, பொலிஸ் சார்ஜன் குலதுங்க (17931) பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் கீதா (2089) உள்ளிட்ட குழுவினரால் இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
சம்பவத்தையடுத்து உதவி பொலிஸ் அத்தியட்சகர் ராஜபக் ஷவும், பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஸ்ஸங்கவும் பல மணி நேரம் சம்பவ இடத்திலேயே இருந்தவாறு தேவையான அத்தனை தகவல்களையும் சேகரித்தனர்.
இதனிடையே முழு கும்புக்கந்துர கிராமமும் சம்பவ இடத்தில் கூடியது. அதனைவிட பாடசாலை சென்றிருந்த சியாராவின் பிள்ளைகளும் சம்பவத்தை நேரிலேயே கண்ட 3 வயதான மகளும் தாயின் பிரிவில் அழுத காட்சி அங்கு கூடியிருந்த அனைவரது மனதையும் உருக்கி கண்ணீரை வரவழைத்தது. உதவி பொலிஸ் அத்தியட்சகர் ராஜபக் ஷ, தலைமை பொலிஸ் பரிசோதகர் நிஸ்ஸங்க ஆகியோர் கூட ஒரு கணம் கண் கலங்கிய நிலையில் அந்த பிள்ளைகளை அரவணைத்ததையும் அவதானிக்க முடிந்தது.
இந்நிலையில் தான் இக்கொலையை நேரில் கண்ட சாட்சிகள் இரண்டு (மொஹமட், அஸ்மியா) உள்ள நிலையில் அதன் பிரகாரம் சந்தேக நபரான ரியாலை கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்தனர்.
உண்மையில் சந்தேக நபரான ரியாலும் கொலை செய்யப்பட்ட சியாராவும் ஒரே வீட்டில், இரு பிரிவுகளில் வெவ்வேறாக ஒரு காலம் வாழ்ந்தவர்கள். அந்த வீடானது சந்தேக நபரான ரியாலுக்கும் அவரது தம்பிக்கும் சொந்தமானது. இந்நிலையிலேயே அவ்வீடு 2 ஆக பிரிக்கப்பட்டு தம்பியின் பங்கு வாடகை அடிப்படையில் அப்போது சியாராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வீட்டின் நடுவில் எழுப்பப்பட்ட சுவரின் ஒரு புறத்தில் சியாராவும் மறு புறத்தில் ரியால் தனது மனைவி பிள்ளைகளுடனும் வாழ்ந்து வரலாயினர். ரியாலுக்கு 7 பிள்ளைகள். அவர்களில் சிலர் பாடசாலை கல்வியை நிறைவு செய்தவர்கள்.
இந்நிலையில் அடிக்கடி சியாராவுடன் ரியால் சண்டையிட்டு வந்த நிலையில் அது தொடர்பில் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் உள்ளன.
தொழில் அடிப்படையில், ரியால் இறைச்சிக்காக மாடுகளை கடைக்காரர்களுக்கு விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், களவாக மாடுகளை இறைச்சிக்காக கொண்டு சென்றமை தொடர்பிலும் அவருக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இத்தகைய பின்னணியில்தான் ஒரு நாள் ரியால், சியாரா தனிமையில் இருந்த சமயம் அவளது கையைப் பிடித்து இழுத்துள்ளார். இது குறித்த முறைப்பாடும் தெல்தெனிய பொலிஸாருக்கு கிடைக்க, அதனை விசாரணை செய்த பொலிஸார் ரியாலை கைது செய்துள்ளனர். அது தொடர்பிலும் அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கவும் நீதிமன்றில் பொலிஸார் கோரி அதனையும் அமுல் செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து சியாராவுக்கு பொலிஸார் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். சிறிய வயது பிள்ளைகள் உள்ளதால் கூலிக்கு இருக்கும் அந்த வீட்டிலிருந்து வேறு வீட்டுக்கு செல்லுமாறு அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதனை ஏற்றுக்கொண்டு சியாராவும் அங்கிருந்து சுமார் 1½ கி.மீ.தூரத்தில் பிறிதொரு வாடகை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையிலேயே தான் இடையில் கைவிட்டு விட்டு வந்த வாடகை வீட்டை பிறிதொருவருக்கு (உறவினர்) வழங்கும் நோக்கோடு அங்கு சென்ற போதே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதனைவிட சியாரா வீட்டில் தனிமையில் இருக்கும் சந்தர்ப்பங்களை, சந்தேக நபரான ரியால், வீட்டு சுவரில் துளைகளை இட்டு அவதானிப்பதாகவும் தெல்தெனிய பொலிஸில் முறைப்பாடுள்ளது.
எனினும் அது தொடர்பில் விசாரணை செய்துவந்த பொலிஸார், அந்த வீட்டு சுவரில் பல துளைகள் இருப்பதை அவதானித்த நிலையில்,அதனை ரியால்தான் இட்டார் என்பதற்கு சான்றுகள் இல்லாததால் அவரை அதுதொடர்பில் கைது செய்யவில்லை.
எனினும் ரியால், பெண் மோகம் கொண்ட நடத்தை ரீதியாக நல்லவர் அல்ல என தெரிவிக்கும் பொலிஸார் அதனாலேயே அவ்விடத்தைவிட்டு வேறு இடத்துக்கு செல்ல சியாராவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில்தான் விளக்கமறியலில் இருந்து பிணையில் வெளியில் வந்த ரியால், சியாராவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சியாராவை எரித்து கொலை செய்ய ரியால் திட்டம் தீட்டியமையானது அவர் முன்னேற்பாடாக பெற்றோலை கொள்வனவு செய்து வைத்திருந்தமை உள்ளிட்ட சாட்சியங்கள் ஊடாக பொலிஸாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்திட்டத்தின் பிரகாரமே சியாரா எரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சியாராவை தாக்க பயன்படுத்திய மண்வெட்டி, எரிந்த நிலை யில் இருந்த பெற்றோல் கொண்டுவரப்பட்ட கேன் ஆகியவற்றை பொலிஸார் வழக்குப் பொருட்களாக சேகரித்துள்ளனர்.
அத்துடன் மொஹம்மட், அஸ்மியா ஆகியோரின் சாட்சியங்களையும் 3 வயதான சியாராவின் மகளின் சாட்சியத்தை யும் பொலி ஸார் வழக்கின் பிரதான சாட்சியமாக பெயரிட்டுள்ளனர்.
சம்பவத்தை தொடர்ந்து ரியால், ஊரிலிருந்து தப்பிச் சென்ற நிலையில், அவரைக் கைது செய்ய பொலிஸ் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஊருக்கு சீருடை தரித்த பொலிஸாருக்கு மேலதிகமாக சிவில் உடையில் உளவுப் பிரிவினரை கடமையில் ஈடுபடுத்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஸங்க, ரியாலின் நண்பர்களை கண்காணிப்பது, விசாரணை செய்வது ஊடாக தகவல் பெறலானார். அத்துடன் ரியாலின் தொலைபேசி இலக்கத்தை பின் தொடர்ந்த போது ஒரு கட்டத்தில் அதுவும் தோல்வியடையவே, உளவுத் தகவல்களை மட்டும் மையப்படுத்தி சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே, சியாராவின் கொலையால் பொங்கியெழுந்த ஊரார் ரியாலின் வீட்டுக்குத் தீ வைத்திருந்தனர். அதனை அணைக்க பொலிஸார் கடும் பிரயத்தனம் மேற்கொண்ட நிலையில், சந்தேக நபர் மேல் உள்ள கோபத்தில் ஊரார் எவரும் அதற்கு உதவவில்லை.
இந்நிலையில் சந்தேக நபரின் உடமைகள் தீயில் கருகி சாம்பலாயின. இந்நிலையில் தெல்தெனியவுக்குள் காலடி எடுத்து வைக்க பயந்த ரியால், கடந்த செவ்வாய்க்கிழமை (16 ஆம் திகதி) கண்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து தெல்தெனிய நீதிமன்றின் கைது உத்தரவுடன் கண்டி பொலிஸ் நிலையம் சென்ற தெல்தெனிய பொலிஸார் சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது கொலை செய்தது முதல், சந்தேக நபர் ரயில் நிலையங்களிலேயே காலத்தை கடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. கொலை தொடர்பில் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றினை சந்தேக நபர் வழங்கியுள்ள நிலையில், கொலையின் பின்னரான காலப்பகுதி குறித்து சந்தேக நபர் இவ்வாறு வாக்குமூலமளித்துள்ளார்.
"சேர்... கொலையின் பின் நான் முதலில் கண்டிக்கு போனேன். கண்டி ரயில் நிலையத்தில் இருந்து கொழும்புக்கு போனேன். கொழும்பில் இருந்து அட்டன் சென்றேன். பின்னர் கண்டிக்கு வந்து அங்கிருந்து தலைமன்னார் சென்றேன். தலைமன்னாரில் இருந்து கண்டிக்கு வந்து மீண்டும் கொழும்புக்கு சென்றேன். இதன்போது கையில் இருந்த காசு முடிந்தது. இதனை தொடர்ந்து கையில் இருந்த தொலைபேசியை கொழும்பில் விற்பனை செய்தேன். அதனை தொடர்ந்து கிடைத்த பணத்தில் மது அருந்தினேன். பின்னர் கண்டிக்கு வந்து பொலிஸில் சரணடைந்தேன்" என விபரித்துள்ளார்.
சந்தேக நபருக்கு எதிராக குற்றவாளிகள் தண்டனை சட்டக்கோவையின் பல பிரிவுகளின் கீழ் பலமான ஆதாரங்களுடன் தெல்தெனிய மன்றில் பொலிஸால் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கைதான சந்தேக நபர் தெல்தெனியமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தொழில் நிமித்தம் வெளிநாட்டில் இருந்த சியாராவின் கணவர் உடன் நாடு திரும்பியுள்ள நிலையில், தாயை இழந்த சின்னஞ்சிறுசுகளான தனது பிள்ளைகளை பொறுப்பேற்றுள்ளார்.
நாடளாவிய ரீதியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், தனிமையிலோ அல்லது குடும்பத்துடனோ வாழும் பெண்கள், தனது சூழலில் உள்ள எதிர் மறையான விடயங்கள் நபர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இதுபோன்ற இன்னுமொரு கொடூரம் அரங்கேற முன்னர், இன்னுமொரு சியாரா பலியாவதற்கு முன்னர், கொடூரர்களுக்கு பாடமாக சந்தேக நபருக்கு விரைவில் அதிக பட்ச தண்டனை வழங்கப்படல் வேண்டும். அத்துடன் தாயை இழந்துள்ள மூன்று பிஞ்சுகளின் எதிர்காலம் குறித்தும் காத்திரமான நடவடிக்கைகள் அவசியமாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM