கடந்த 2017 ஆம் ஆண்டில் நாட்டில் நிலவிய காலநிலை மாற்றங்கள் பொருளாதாரத்தில் பாரிய அளவிலான பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதைக் காண முடிகின்றது. குறிப்பாக நாட்டின் ஒருபகுதியில் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டதுடன் வேறு சில பகுதிகளில் கடுமையான வரட்சி நிலவியது. இதனால் நாட்டில் விவசாயத்துறையானது பாரிய பாதகமான நிலையை எதிர்கொண்டிருந்ததுடன் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டது. 2017ஆம் ஆண்டின் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் விவசாயத்துறையானது வெறுமனே 7.7 வீதமான பங்களிப்பையே செய்திருக்கின்றது.
விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்ற நாடு என்ற வகையில் இலங்கையின் 2017ஆம் ஆண்டுக்கான பொருளாதார குறிகாட்டிகளில் விவசாயத்துறையின் பங்களிப்பு குறைவாக இருக்கின்றமை ஆரோக்கியமான விடயமல்ல என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
2017ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சிவீதமானது 3.1 என்ற மிகக் குறைந்தளவிலான சதவீதத்தை வெளிக்காட்டியிருக்கின்றது. கடந்த 2009ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடைந்தபோது நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 3.5 வீதமாக காணப்பட்டது.
அதன்பின்னர் 2010 ஆம் ஆண்டு 8 வீதமாகவும் 2011 ஆம் ஆண்டு 8.4 வீதமாகவும் 2012 ஆம் ஆண்டு 9.1 வீதமாகவும் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துச் சென்றது. அதன்பின்னர் பொருளாதார வளர்ச்சியானது வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. குறிப்பாக 2013ஆம் ஆண்டு 3.4 வீதமாகவும் 2014 ஆம் ஆண்டு 5 வீதமாகவும் 2015 ஆம் ஆண்டு 4.8 வீதமாகவும் 2016 ஆம் ஆண்டு 4.4 வீதமாகவும் பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளது. அந்தவகையில் பார்க்கும்போது 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிக வேகமாக அதிகரிப்பு வீதத்தைக் காட்டிய பொருளாதார வளர்ச்சி வீதமானது 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சரிவடைய ஆரம்பித்திருக்கின்றது.
இதற்கு பல்வேறு காரணங்கள் தாக்கம் செலுத்தியிருக்கின்றன. இதில் குறிப்பாக பாதகமான காலநிலை மாற்றங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. வெள்ளம், வரட்சி போன்றவையே பொருளாதார வளர்ச்சியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அதுமட்டுமன்றி முதலீடுகள் அதிகரிக்காமை, புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படாமை, கடன் நெருக்கடி, ஏற்றுமதி–இறக்குமதிக்கிடையிலான மீதி அதிகரித்து செல்கின்றமை, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, போன்ற காரணங்கள் பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவடைந்தமைக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
கடந்த 2017ஆம் ஆண்டு பாதகமான காலநிலையால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டபோதிலும் "ஜி.எஸ்.பி. பிளஸ்" வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைத்தமையானது பொருளாதாரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய சாதகமான விடயமாகக் காணப்படுகின்றது.
எனினும் அதனையும் தாண்டி பொருளாதார வளர்ச்சியானது 3.1 வீதமாக குறைவடைந்துள்ளமை நாட்டின் எதிர்கால பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அமைந்திருக்கின்றது.
தனிநபர் வருமானமானது கடந்த வருடத்தில் 4,065 டொலர்களாக பதிவாகியிருக்கிறது. இது 2016ஆம் ஆண்டிலிருந்து குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்திருக்கின்றது. அத்துடன் ஏற்றுமதி வருமானமானது 11,360 கோடி ரூபாவாக பதிவாகியிருக்கிறது.
அதேபோன்று இறக்குமதி செலவானது 20,980 கோடி ரூபாவாக அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன்மூலம் வர்த்தக நிலுவை எந்தளவு தூரம் அதிகரித்திருக்கின்றது என்பதை அறிந்துகொள்ள முடியும். அதுமட்டுமன்றி கடந்த வருடத்தில் ரூபாவின் பெறுமதியானது 2 வீதத்தால் வீழ்ச்சியடையப்பட்டிருக்கின்றது. அதேபோன்று தொழிலின்மை 4.3 வீதமாக கணிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பார்க்கும்போது பொருளாதார வளர்ச்சியானது தொடர்ந்து குறைவடைந்து செல்கின்றமை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டியிருக்கின்றது. அதாவது இந்த கட்டத்தில் அரசாங்கம் உடனடியாக விழித்துக்கொள்ளவேண்டிய தேவை காணப்படுகின்றது.
பொருளாதார வளர்ச்சி வீதமானது 4 அல்லது 5 வீதமாக இருப்பின் அதன் அர்த்தம் நாட்டின் பொருளாதாரம் மந்தகதியில் இருக்கின்றது என்பதாகும். அதாவது உணவு, வீடு, ஆடை, என்பன அனைவருக்கும் கிடைக்கும். ஆனால் அதனைத் தாண்டிய அபிவிருத்தி எதுவுமிருக்காது. அடிப்படை விடயங்கள் கிடைத்தாலும் வளர்ச்சி இல்லாத தன்மையையே 4 அல்லது 5 வீதமான பொருளாதார வளர்ச்சி கோடிட்டுக்காட்டுகின்றது.
ஆனால் 6 அல்லது 7 வீத பொருளாதார வளர்ச்சி ஏற்படின் அது அடிப்படைத் தேவைகளைத் தாண்டி அபிவிருத்தியை வெளிக்காட்டுவதாக அமைகிறது.
ஆனால் எமது நாடு தற்போது 3.1 வீத பொருளாதார வளர்ச்சியையே பெற்றுள்ளது. இதன்மூலம் நாம் அடிப்படை பொருளாதார விடயங்களுக்கும் கீழேயே இருக்கின்றோம் என்பது கோடிட்டுக் காட்டப்படுகின்றது.
இது தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் சார் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் எம்மிடம் கருத்துப் பகிர்கையில், "வேலைவாய்ப்புக்கள் அதிகரித்தல், முதலீடுகள் அதிகரித்தல், உற்பத்தி அதிகரித்தல்,ஏற்றுமதி உயர்வடைதல் போன்றவற்றினூடாகவே பொருளாதார வளர்ச்சிவீதம் அதிகரிக்கும். ஜப்பான், தாய்லாந்து, மலேஷியா போன்ற நாடுகள் 6,7,8 போன்ற வீதத்திலான பொருளாதார வளர்ச்சியைப் பெற்றே இன்று முன்னேற்றமடைந்துள்ளன. எமது கைத்தொழில்துறை, சேவைத்துறை, ஏற்றுமதித்துறை மற்றும் விவசாயத்துறை ஆகியவற்றை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பொருளாதார வளர்ச்சி என்பது சமூக– பொருளாதார–அரசியல் ரீதியான ஸ்திரத்தன்மையையும் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டுகிறது. 2011ஆம் ஆண்டில் எமது நாடு கூடிய பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்தது. அப்போது வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தமை, சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்தமை மற்றும் அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை போன்ற காரணங்களால் இந்த வளர்ச்சி பதிவுசெய்யப்பட்டது. ஆனால் தற்போது 3.1 வீதமாக பொருளாதார வளர்ச்சி குறைவடைந்திருக்கின்றது.
இது எந்தவகையிலும் திருப்தியடையக்கூடிய வளர்ச்சி வீதமாக இல்லை. இதன் ஊடாக அரசாங்கம் விழித்துக்கொண்டு பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியமாகும். குறிப்பாக அதிகளவு வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதுடன் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கவேண்டும். பல்தேசியக் கம்பனிகளுடன் உடன்படிக்கைகளை செய்து அந் நிறுவனங்களின் கிளைகளை இலங்கையில் நிறுவவேண்டும்", என்று குறிப்பிட்டார்.
அந்த வகையில் பொருளாதார வளர்ச்சிவீதம் கடந்த சில வருடங்களாகவே குறைவடைந்து செல்கின்ற நிலையில் அதுதொடர்பில் கொள்கை வகுப்பாளர்களும் தீர்மானம் எடுப்பவர்களும் கவனம் செலுத்த வேண்டும்.
இதேவேளை பொருளாதார வளர்ச்சியை நிலைபேறானதாக வைத்திருப்பதற்கும் தொழில்களை உருவாக்குவதற்கும் வறுமையைக் குறைப்பதற்கும் இலங்கை மேலும் அதிகமான தனியார் முதலீடுகளை நோக்கியும் வர்த்தகம் பண்ணக்கூடியதான துறைவழி வளர்ச்சி மாதிரியை நோக்கியும் நகர்வது அவசியமானது என உலக வங்கி கடந்த வருட நடுப்பகுதியில் சுட்டிக்காட்டியிருந்தது.
அத்துடன் உலக வங்கியானது சவால்கள் காணப்பட்டபோதிலும் 2017 இல் இலங்கை பரந்தளவில் திருப்திகரமான பொருளாதார செயல்திறனைக் காண்பிப்பதாகவும் 2017ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியானது 4.6 சதவீதத்தை அடைந்து நடுத்தர காலத்திற்குள்ளாக 5 சதவீதத்தை எட்டும் என்றும் எதிர்வு கூறியிருந்தது. ஆனால் இம்முறை உலக வங்கி எதிர்வு கூறியதையும் விட குறைவாகவே பொருளாதார வளர்ச்சி வீதம் பதிவாகியுள்ளது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த வகையில் அரசாங்கம் உடனடியாக விழித்துக் கொள்ளவேண்டியது அவசியமாகும். அதாவது தற்போது மந்தகதியிலான பொருளாதார வளர்ச்சியை தாண்டி தற்போது வீழ்ச்சிப்பாதையில் குறிகாட்டிகள் காணப்படுகின்றன. இது தொடர்பில் ஆராய்ந்து சரியான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அரசாங்கம் உடனடியாக விழித்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றது என்பதே உண்மையாகும்.
-ரொபட் அன்டனி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM