நேர்கண்டவர் : ரொபட் அன்டனி
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டால் அவர் நிச்சயம் தோல்வியடைவார். அவரினால் வெற்றிபெற முடியாது. தமிழ் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளித்தாலும் சிங்கள பெரும்பான்மை மக்களின் ஆதரவை அவர் இழந்துவிட்டார் என்று அரசாங்கத்திலிருந்து பிரிந்துசென்ற சுதந்திரக்கட்சியின் 16 எம்.பி.க்களில் முக்கியஸ்தரான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
வீரகேசரி நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
செவ்வியின் முழு விபரம் வருமாறு:
Q: தீர்க்கமான இந்த அரசியல் சூழலில் நீங்கள் 16 பேரும் அமைச்சுப் பதவியை துறந்துவிட்டு என்ன செய்துகொண்டி ருக்கின்றீர்கள்?
A: அமைச்சுப் பதவியை விட்டு விலகிய நாங்கள் வாகனங்கள் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு வெளியே வந்திருக்கின்றோம். அடுத்ததாக மே மாதம் 8ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியில் உட்காருவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். அதற்கான ஏற்பாடுகளை தற்போது செய்து வருகின்றோம்.
Q:பரபரப்பான வகையில் பேச்சுவார்த் தைகள் இடம்பெறுவதாக தெரிகின்றதே?
A: எதிர்கால அரசியல் செயற்பாடுகளில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து கலந்துரையாடி வருகின்றோம். எதிர்க்கட்சியில் சென்று எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம். அது தொடர்பாகவே பல சுற்றுப்பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
Q: பாராளுமன்ற உறுப்பினர் மஹிந் தானந்த அளுத்கமகே பிணையில் வெளியில் வந்தபோது நீங்களும் டிலான் பெரேராவும் ஏன் அங்கு சென்றீர்கள்?
A:அங்கு செல்லவேண்டிய ஒரு கடமை எனக்கு இருந்தது. நான் ஊழல் மற்றும் மோசடிக்கு எதிரானவன். எனினும் இந்த மஹிந்தானந்த அளுத்கமகே தொடர்புபடுத்தப்பட்டுள்ள சம்பவத்தில் அவர் நிரபராதி என்பது எனக்குத் தெரியும். முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில் நான் இதனைக்கூறுகின்றேன். நான் பதவிக்கு வந்ததும் இதுதொடர்பில் தேடிப்பார்த்தேன். நான் அவ்வாறு தேடிப்பார்த்தபோது அதில் மஹிந்தானந்த அளுத்கமகே தொடர்புபட்டிருக்கவில்லை என்பது தெரியவந்தது. எனவே நான் அந்த இடத்திற்கு செல்லவேண்டிய தேவை முன்னாள் அமைச்சர் என்ற வகையில் எனக்கு இருந்தது.
Q:மே 8 ஆம் திகதி சுதந்திரக்கட்சி என் றவகையில் 16 பேரும் எதிர்க்கட்சியில் அமர்வீர்களா? அல்லது கூட்டு எதிரணி யுடன் இணைந்து கொள்வீர்களா?
A: நாங்கள் சிறிலங்கா சுதந்திரக்கட்சி என்ற வகையிலேயே எதிர்க்கட்சியில் அமர்வோம். வேறு கட்சிகளுடன் இணைந்து கொள்ளும் நோக்கம் எங்களுக்கில்லை. ஆனால் இந்தக்கூட்டு எதிரணியில் உள்ள 54 பேரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்தவர்களேயாவர். எனவே பல்வேறு விடயங்களில் அவர்களுடன் இணைந்து பயணிப்போம். சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களாகவே செயற்படுவோம்.
Q: தேசிய அரசாங்கம் தோல்வி அடைந் துவிட்டதாக கூறுகின்றீர்கள். அதற்கு என்ன காரணம்?
A: அதற்கு பல ஆழமான காரணங்கள் உள்ளன. முதலாவதாக தேசிய அரசாங்கம் தொடர்பில் இரண்டு கட்சிகளிலும் அங்கம் வகிக்கும் பலருக்கு புரிந்துணர்வு இல்லாமல் இருந்தது. இது பிரச்சினைக்கு முதல் காரணமாக இருந்தது. ஐக்கியதேசியக்கட்சி .தேசிய அரசாங்கத்தை எப்போதும் ஆக்கிரமித்துக்கொண்டே செயற்பட்டது. தம்முடன் மற்றுமொரு கட்சி இணைந்து ஆட்சி நடத்துகின்றது என்பதை ஐக்கியதேசியக்கட்சி மறந்துவிட்டது. முழுமையாக பொருளாதாரத்தை ஐக்கியதேசியக்கட்சியே கையாண்டது. அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் ஐ.தே.க.வே கொண்டு சென்றது. இதன்போது தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பங்களில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டன. இதனால் தேசிய அரசாங்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்தது. தற்போதைய நெருக்கடிக்கு இதுவே காரணம்.
Q: தயாசிறி ஜயசேகர தேசிய அரசாங் கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந் தாரா?
A: இதன் முக்கியத்துவத்தை நான் உணர்ந்திருந்தேன். ஆனால் சுதந்திரக்கட்சிக்கும் கௌரவம் அளிக்குமாறு நான் ஐக்கிய தேசியக்கட்சியிடம் கோரினேன். வரலாற்றில் முதல் தடவையாக ஐக்கியதேசியக்கட்சியும் சுதந்திரக்கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்தன. ஆனால் அதன் முக்கியத்துவத்தை ஐக்கியதேசியக்கட்சி உணரவில்லை. தமது அரசாங்கத்தில் சுதந்திரக்கட்சி தொங்கிக்கொண்டிருப்பதாகவே கருதினர். சந்தர்ப்பத்தை நாங்கள் பறித்துக்கொண்டதாக எண்ணினர். அவர்கள் ஜனாதிபதியை தெரிவுசெய்யும் ஒரு பங்களிப்பை செய்தனர். எனினும் 2015 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு 106 ஆசனங்களே கிடைத்தன. அப்போது அவர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்தனர். ஆனால் அது முடியவில்லை. அதனால்தான் தேசிய அரசாங்கத்தை அமைத்தனர். அவ்வாறு அமைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைத்தது. ஆனால் அந்த அரசாங்கத்தை கொண்டுசெல்வதற்கான அர்ப்பணிப்பு அந்த அரசாங்கத்திடம் இருக்கவில்லை. தம்முடன் இணைந்து செயற்படவரும் தரப்பினரை அரவணைக்க ஐ.தே.க.விற்கு தெரியவில்லை.
Q:அப்படியானால் மூன்று வருடங்கள் எவ் வாறு பயணித்தீர்கள்?
A: பல போராட்டங்கள் பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே இப் பயணத்தைத் தொடர்ந்தோம். அதனால்தான் அரசாங்கம் நெருக்கடியை சந்தித்தது.
Q: நீங்கள் விளையாட்டுத்துறை அமைச்ச ராக இருந்தீர்கள். உங்களாலும் சுதந்தி ரமாக செயற்பட முடியாமல் இருந்ததா?
A:பொய்க்குற்றச்சாட்டை முன்வைக்கக்கூடாது. எனக்கு எந்தவிதமான பிரச்சினையும் இருக்கவில்லை. எனது அமைச்சு விடயத்தில் யாரும் தலையீடு செய்யவில்லை. எனினும் ஏனைய அமைச்சர்கள் விடயத்தில் பல பிரச்சினைகள் இருந்தன. பெற்றோலிய அமைச்சு, துறைமுக அமைச்சு என்பவற்றில் பல பிரச்சினைகள் உருவாக்கப்பட்டன. அப்போது நாங்கள் விரக்தி அடைந்தோம். ஐ.தே.க.வுடன் இது தொடர்பில் பேசினோம். அமைச்சரவையில் பேசினோம். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இதன் விளைவாகவே மக்கள் அரசாங்கத்தை விட்டு விலகினர்.
Q: பிரதமருக்கு எதிரான நம்பிக்கை யில்லாப் பிரேரணை எங்கு தொடங்கி எங்கு முடிந்தது.
A:முதலில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஐக்கிய தேசியக்கட்சியின் பக்கம் இருந்தே வந்தது. முதன்முதலாக பாலித்த ரங்கே பண்டாரவே இதுகுறித்து பேசினார். அதன் பின்னர் எமது தரப்பிலும் கூட்டு எதிரணி தரப்பிலும் இது குறித்து பேசப்பட்டது. அதனை அடுத்து கூட்டு எதிரணி நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்தது. அதில் எமது கட்சியில் நால்வரும் கைச்சாத்திட்டனர். ஆனால் இறுதியாக நடந்த விடயத்துடன் இது பின்னடைவை சந்தித்தது. அதாவது தமிழ் கூட்டமைப்பு பிரதமருக்கு ஆதரவு அளிப்பதாக கூறியதால் அனைத்தும் பிழைத்துவிட்டன.
Q: நம்பிக்கையில்லாப் பிரேரணை விட யத்தில் ஜனாதிபதி என்ன நிலைப்பாட்டில் இருந்தார். ?
A:ஜனாதிபதி இந்த விடயத்தில் உண்மையில் எந்தப்பக்கத்தையும் எடுக்கவில்லை. இது அவரின் அரசாங்கம், அடுத்ததாக அவர் சுதந்திரக்கட்சியின் தலைவர், இந்த காரணங்களினால் அவர் அப்பாவியாகவே இருந்தார். ஆரம்பத்தில் பிரதமரை நீக்கிவிட்டு ஐ.தே.க.வின் புதிய பிரதமரை நியமித்து தேசிய அரசாங்கத்தை தொடரவே ஜனாதிபதி விரும்பினார். அது முடியவில்லை. அதன்பின்னர்தான் நெருக்கடி தொடங்கியது.
Q:சுதந்திரக்கட்சியில் 16 பேர் பிரதமரை எதிர்த்தனர். 23 பேர் நடுநிலை வகித் தனர். இந்தத் தீர்மானம் எவ்வாறு எடுக்கப்பட்டது.?
A:அந்த நாட்களில் நான் இலங்கையில் இருக்கவில்லை. ஆரம்பத்திலிருந்து நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதாகவே சுதந்திரக்கட்சி தீர்மானித்திருந்தது. 41 பேரும் இந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தனர்.
Q:இது ஜனாதிபதிக்கு தெரியுமா?
A: ஜனாதிபதிக்கு இது தெரியும். முதலில் சுதந்திரக்கட்சியின் 41 பேரும் பிரதமரிடம் சென்று பதவி விலகுமாறு கோரினோம். அவர் அதனை மறுத்துவிட்டார். இதன்மூலம் சுதந்திரக்கட்சியின் 41 பேரும் பிரதமருக்கு எதிராகவே இருந்தனர். எவ்வாறெனினும் 4ஆம் திகதி காலை மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் பிரதமரை எதிர்த்து வாக்களிப்பது என்று முடிவுசெய்யப்பட்டது. அந்தக்கூட்டத்தில் ஒரு சிலர் கலந்துகொண்டிருக்கவில்லை.
Q:இதில் மஹிந்த அமரவீர கலந்துகொண்டாரா?
A:அவர் இல்லத்தில்தான் சந்திப்பு நடந்தது.
Q: அவரது இல்லத்தில் சந்திப்பு நடந்திருக் கலாம். ஆனால் மஹிந்த அமரவீர அதில் கலந்துகொண்டாரா என்பதே எனது கேள்வி?
A:மஹிந்த அமரவீர கலந்துகொண்டார். எனினும் அந்தக்கூட்டத்தில் ஒருசிலர் கலந்துகொள்ளவில்லை. குறிப்பாக மஹிந்த சமரசிங்க, விஜித் விஜயமுனி சொய்சா போன்றோர் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் தெரிந்தும் இந்தக்கூட்டத்திற்கு வரவில்லை. எவ்வாறிருப்பினும் பிரதமருக்கு எதிராக வாக்களிப்பது என்று மஹிந்த அமரவீர இல்லத்தில் வைத்து முடிவெடுத்தோம். அதன்பின்னர் நாம் கூட்டத்தை முடித்துவிட்டு பாராளுமன்றத்திற்கு சென்றுவிட்டோம். எனினும் இறுதியில் 16 பேர் மட்டுமே பிரதமரை எதிர்த்தனர் எஞ்சியோர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
Q:அப்படியாயின் இறுதி முடிவு எப்போது எடுக்கப்பட்டது? வீதியில் இருந்து எடுக்கப்பட்டிருக்குமோ?
A: சிலவேளை இருக்கலாம்.
Q: சரி மஹிந்த அமரவீரவின் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது பிரதமரை எதிர்ப்பதாக மஹிந்த அமரவீர கூறி னாரா?
A:ஆம் அவர் கூறினார். ஆனால் இறுதி முடிவு எம்மையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
Q:சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர்க ளுடன் உங்களுக்கு இருக்கும் பிரச் சினை என்ன?
A:ஒரு பிரச்சினையும் இல்லை. சுதந்திரக்கட்சியை கட்டியெழுப்ப வேண்டுமாயின் சுதந்திரக்கட்சியின் செயலாளர் பதவியை எமது இந்த 16 பேரில் ஒருவருக்கு வழங்கவேண்டும். அதனை நாம் பொறுப்பேற்று சுதந்திரக்கட்சியை கட்டியெழுப்புவோம். அப்போது கூட்டு எதிரணியும் எம்மோடு இணைந்துகொள்ளும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையும் நாம் கட்டியெழுப்பிக்கொள்ள முடியும். எனவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் பதவியையும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் பதவியையும் எம்மிடம் தந்துவிடுங்கள். இல்லாவிடின் சுதந்திரக்கட்சி ஐக்கியதேசியக்கட்சியின் ஒரு கிளையாக மாறிவிடும்.
Q: இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறி வித்தீர்களா?
A: ஜனாதிபதிக்கு இது தொடர்பில் மிகத் தெளிவாக அறிவித்திருக்கின்றோம்.
Q: அதற்கு ஜனாதிபதி என்ன கூறினார்?
A: அவர் அதற்கு சாதகமாகவே பதிலளித்தார். லண்டன் செல்வதற்கு முன்னர் சாதகமாக பதிலளித்தார். வந்த பின்னர் அவர் சரியான முடிவு எடுப்பார் என நம்புகிறோம்.
Q:சுதந்திரக்கட்சியின் செயலாளரும் ஐ.ம.சு.மு.வின் செயலாளரும் வெளியே வந்து உங்களுடன் செயற்படலாம் அல் லவா?
A: அவ்வாறு செயற்படலாம். ஆனால் அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்கள் தற்போதே எம்மைவிட்டு செல்ல ஆரம்பித்துவிட்டனர். அதனால்தான் சுதந்திரக்கட்சி அரசாங்கத்திலிருந்து விலகவேண்டும். ஐக்கியதேசியக்கட்சி கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கத்தை நடத்தட்டும். ஐ.தே.க.விற்கு இப்போது கூட்டமைப்பையும் சேர்த்து 122 ஆசனங்கள் உள்ளன. எனவே அவர்கள் அரசாங்கம் அமைக்கலாம்.
Q: துமிந்த திஸாநாயக்கவும் மஹிந்த அமரவீரவும் செயலாளர் பதவிகளிலி ருந்து விலகவேண்டும் என்று கூறுகின் றீர்களா?
A:பெரும்பான்மை கோரிக்கை அவ்வாறே இருக்கிறது. இதில் ஒருவரை நம்பலாம். மற்றுமொருவரை நம்பவே முடியாது.
Q: நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற் கடிக்கப்படும் என்று இறுதியில் தெரிந் துவிட்டது. எனவே இறுதி நேரத்தில் உங்கள் அணுகுமுறையை வித்தியாசமாக செய்தி ருக்கலாமே?
A: 3 ஆம் திகதி இரவு நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் என புரிந்துகொண்டோம். கூட்டமைப்பின் முடிவுடனேயே நாம் இதனைப் புரிந்துகொண்டோம். அதன் பின்னர் ரங்கே பண்டார தலைமையிலான 18 பேருக்கும் முடிவை மாற்றுமாறு நாம் கோரினோம். கூட்டமைப்பிலும் ஐந்து பேர் எம்முடன் இணைந்து ஆதரவளிக்க முன்வந்தனர். பின்னர் அவர்களிடமும் வேண்டாம் என்று கோரினோம். எனினும் மனச்சாட்சியுடன் அரசியல் செய்யவேண்டுமாயின் தோற்றாலும் வெற்றிபெற்றாலும் பிரதமரை எதிர்க்கவேண்டும் என தீர்மானித்தே வாக்களித்தோம்.
Q:பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாமர்த் தியமான திறமையான தலைவர் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
A:ஆம் அதனை ஏற்றுக்கொள்கின்றேன். தனது கதிரையைப் பார்த்துக்கொள்ள அவர் திறமையானவர். நாட்டைப் பாதுகாப்பதை விட கதிரையைப்பாதுகாப்பதில் திறமையானவர்.
Q: அவரின் பொறுமை
A:பொறுமை வேறு; தந்திரம் வேறு
Q:தற்போது உங்கள் தலைவராக மைத்தி ரிபால சிறிசேன இருக்கிறார். 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் உங்கள் தரப்பு வேட்பாளர் யார்?
A:அதனை தற்போது கூற முடியாது. பல்வேறு பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதைப்போன்று தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவையும் பெறக்கூடிய ஒரு தலைவரே எமக்கு தேவைப்படுகிறார். அவரை தெரிவுசெய்யவே நாங்கள் இப்போது முயற்சிசெய்கிறோம்.
Q: நீங்கள் ஒரு வேட்பாளரை களமிறக்க நிச்சயமாக கூட்டு எதிரணியுடன் இணை யவேண்டும். அப்படியாயின் யதார்த்த மாக பார்த்தால் யார் வேட்பாளராக வருவார்?
A: இன்னும் நாங்கள் யாரையும் முடிவு செய்யவில்லை. பல பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. யாராக இருந்தாலும் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறுபவராக அவர் இருக்கவேண்டும்.
Q:உங்கள் சுதந்திரக்கட்சியில் ஒருசிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வர வேண்டும் எனக் கூறுகின்றனர்? இதற்கு உங்கள் பதில் என்ன?
A:அது இதற்குப்பின்னர் ஒரு செல்லுபடியான விடயமாக இருக்காது. தற்போதைய நிலைமையில் அது சாத்தியமற்றதாகவே உள்ளது. கூட்டு எதிரணியும் நாங்களும் இணைந்தே இந்த முடிவு எடுக்க வேண்டும். அவ்வாறு அனைவரும் ஒன்றிணைந்து அவரை அழைத்தால் ஓரளவு சாத்தியமாகலாம். ஆனால் பொதுவாக தற்போது பெரும்பான்மை மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிராகரிக்க ஆரம்பித்துவிட்டனர்.
Q: உங்களின் நிலைப்பாடு என்ன?
A:எனக்குப் பிரச்சினை இல்லை. எனது கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியுடன் இணைந்து பயணிக்கலாம். ஜனாதிபதி வேட்பாளராக யாரை களமிறக்குவது என்பதை பேசியே தீர்மானிக்கவேண்டும்.
Q: கூட்டு எதிரணி பக்கத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவின் பெயர் முன்வைக்கப்படுகிறது. ? அவ்வாறான ஒரு நிலைமை வந்தால் என்ன செய்வீர்கள்?
A:அது தொடர்பில் இன்னும் கூற முடியாது. பஷில் ராஜபக்ஷவின் பெயரும் கூறப்படுகிறது. இன்னும் ஒரு சிலரின் பெயர்களும் உள்ளன. ஆனால் இங்கு மூன்று விடயங்களை பார்க்கவேண்டும், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவை பெறக்கூடியவராக ஜனாதிபதி வேட்பாளர் இருக்கவேண்டும்.
Q: தமிழ், மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெறமுடியும் அல்லவா?
A:தமிழ், மற்றும் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விரும்புகின்றனர். சிங்கள மக்களின் பாரிய எதிர்ப்பு அவருக்கு இருக்கின்றது.
Q: கோத்தபாய மற்றும் பஷில் ராஜபக்ஷ தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?
A:அதுதொடர்பில் தற்போது கூற முடியாது.
Q: ஆனால் நீங்கள் 16 பேரும் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அந்த இலக்கின் அடிப்படையிலேயே உங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக நான் கூறுகிறேன். இது சரியா?
A:தற்போதைய நிலைமைகளை வைத்தே நாங்கள் இந்த முடிவை எடுத்தோம். எதிர்காலத்தில் செயற்படுவது என்பதை மே 8ஆம் திகதியே தீர்மானிப்போம்.
Q: ஏதோ ஒருவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வந்தால் என்ன நடக்கும்?
A:அவரால் வெற்றிபெற முடியாது. சிங்கள பௌத்த மக்களின் ஆதரவு அவருக்கு கிடைக்காது.
Q: அவர் கடந்த தேர்தலில் 62 இலட்சம் வாக்குகளைப் பெற்றவர்.
A:அது அன்றைய நிலைமை இன்று அந்த நிலைமை மாறிவிட்டது. அன்று வாக்களித்த மக்களும் இன்று விமர்சிக்கின்றனர். அதற்கு அவரை மட்டும் குறைகூற முடியாது. ஐக்கியதேசியக்கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தமையே இதற்கு காரணம். கடந்த மூன்று வருடங்களில் அவர் பணியாற்றுவதற்கு ஐ.தே.. க.இடமளிக்கவில்லை. அவரை சிறைப்படுத்தியே வைத்திருந்தனர். அதுமட்டுமன்றி அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதும் சுதந்திரக்கட்சியின் தலைமை பதவியை எடுத்திருக்கக்கூடாது. அது ஒரு தவறான தீர்மானமாகும். அவர் நல்லநோக்கத்துடனேயே அதனை செய்தார். அது வெற்றியளிக்கவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சி சாராத ஒரு தலைவராக இருந்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் சுதந்திரக்கட்சி இன்று நல்ல நிலைக்கு வந்திருக்கும் ஆனால் மறுபுறம் ஐ.தே.க.வின் சிறை கைதியாக இருந்திருப்பார். அவர் சுதந்திரக்கட்சியின் தலைமை பதவியை எடுத்திருக்காவிடின் நாங்கள் சுதந்திரக்கட்சி என்ற ரீதியில் பாரிய பயணத்தை சென்றிருப்போம் கட்சி பிளவுபட்டிருக்காது. இதற்கு மக்களும் பொறுப்புக்கூறவேண்டும். ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெறச் செய்த மக்கள் அதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கும் வெற்றியை கொடுக்கவில்லை. அந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு மக்கள் அதிகாரத்தை வழங்கியிருக்கலாம். எந்தக்கட்சிக்கட்சிக்கும் அதிகாரம் கிடைக்கவில்லை. இதனால் தான் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது.
Q:எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுமா?
A:எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து அவரை நீக்கவேண்டும் என நான் விரும்பவில்லை. எமது பலத்தை பாராளுமன்றத்தில் காட்டி நாம் அந்த பதவியை பெற்றுக்கொள்ளலாம். வரலாற்றில் அவ்வாறு நடைபெற்றதாக இல்லை.
Q: அரசியல் தீர்வை எதிர்பார்த்து எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கடந்த மூன்று வருடங்களாக தென்னிலங்கை அரசாங்கத்திற்கு பாரிய ஆதரவை வழங்கினார். ஆனால் அவரது முயற்சியும் வீணாகிவிட்டதா?
A:இந்த இடத்தில் தமிழ் கூட்டமைப்பும் பாரிய சிக்கலுக்குள் இருக்கின்றது. வடக்கில் இன்று பல கட்சிகள் பலமடைந்து வருகின்றன. கஜேந்திரகுமார், விக்கினேஸ்வரன், புலம்பெயர் தமிழர்களின் பிடிக்குள் கூட்டமைப்பு சிக்கியுள்ளது. மக்கள் கூட்டமைப்பு தென்னிலங்கை அரசாங்கத்துடன் செயற்பட்டு அரசியல் தீர்வைக் கொண்டுவரும் என நம்புகின்றனர். ஆனால் அதுவும் தற்போது நெருக்கடியான நிலைமைக்கு வந்துவிட்டது. இறுதியில் தற்போது 10 விடயங்கள் தொடர்பில் கூட்டமைப்பு ஐ.தே.க.வுடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் அதில் உள்ள பல விடயங்கள் பிரதமர் ஊடாக செய்துகொள்ள முடியாதவை. பல விடயங்கள் ஜனாதிபதியின் கீழ் வருகின்றன. எப்படியிருப்பினும் கூட்டமைப்பு பிரதமர் ரணிலுடனேயே இருக்கின்றது. என்பது தெளிவாகின்றது. அவர்கள் ரணிலையே நம்புகின்றனர். ஆனால் தெற்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கையான தலைவர் அல்ல அதனால்தான் கூட்டமைப்பும் ஐ.தே.க.வும் இணையட்டும் என்று நாங்கள் கூறுகின்றோம். அப்போது கூட்டமைப்பு, ஐ.தே.க. என்ற இரண்டு கட்சிகளும் இல்லாமல் போய்விடும். அப்போது வடக்கு, கிழக்கில் புதிய அமைப்பு உருவாகும். அந்த அமைப்புக்களுடன் நாங்கள் பேசி தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கலாம். கூட்டமைப்பு இன்று ஐ.தே.க.வின் கைபொம்மையாக உள்ளது.
Q:இந்த ஆட்சிக்காலப்பகுதியில் அரசியல் தீர்வு சாத்தியமில்லையா?
A:சாத்தியமில்லை என்றே கருதுகின்றேன். அதற்கான அனைத்து சந்தர்ப்பங்களும் மறைந்துபோய்விட்டன. இதற்கு கூட்டமைப்பு மட்டும் பொறுப்புக்கூறவேண்டும் என்று கூறவேண்டும். இதற்கு தெற்கிலும் சில இனவாத அமைப்புக்களும் பொறுப்புக்கூறவேண்டும். கூட்டமைப்பு சிங்கள மக்களின் உணர்வைப் புரிந்துகொள்ளாமல் செயற்பட்டது. அவர்கள் தங்கள் மக்களை வெற்றிகொள்வதற்காக சமஷ்டியைப் பெற முடியும் எனக்கூறினர். ஆனால் கொழும்பில் வந்து வேறுவகையில் பேசினாலும் தென்னிலங்கை மக்கள் மத்தியில் சந்தேகம் வலுவடைந்தது. ஆனால் சுதந்திரக்கட்சியைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அதாவது பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கி 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும். ஆனால் ஒற்றையாட்சியில் மாற்றம் வரக்கூடாது. இதுவே சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடு. ஆனால் அந்த எமது யோசனையை கூட்டமைப்பு பயன்படுத்திக்கொள்ளவில்லை. கூட்டமைப்பு எம்மை புரிந்துகொள்ளாமல் சுதந்திரக்கட்சிக்கு கௌரமளிக்காமல் பிரதமர் ரணில் கைபொம்மையாக மாறினர். அதுதான் எமக்குள்ள கவலையாகும். அவர்கள் ஜனாதிபதியின் மனதை வெல்ல முயற்சித்திருக்கலாம்.மாறாக ரணில் பக்கமே அவர்கள் சார்ந்திருக்கின்றார்கள்.
Q:நீங்கள் சுதந்திரக்கட்சியிலிருந்து ஐ.தே.க.விற்கு சென்றீர்கள். பின்னர் ஐ.தே.க.வில் இருந்து சுதந்திரக்கட்சிக்கு சென்றீர்கள். உங்கள் முடிவு சரியானதா?
A:நான் எப்போதும் நாட்டைப் பற்றி சிந்தித்தே முடிவெடுத்தேன் அதனால் தான் சஜித் பிரேமதாஸவை தலைவராக்கவேண்டும் என்று போராடினோம். ஆனால் அவர் இறுதியில் ரணிலுடன் இணைந்துகொண்டார். அவர் அதனை முதலில் கூறியிருந்தால் நாங்கள் அவருக்காக போராடியிருக்கமாட்டோம். எப்படியிருப்பினும் தற்போது நாங்கள் சுதந்திரக்கட்சியுடன் பயணிக்கின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM