விளம்பி வருடம் சித்திரை மாதம் 01 ஆம் நாள் அதாவது ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி சனிக்கிழமை வாக்கியப் பஞ்சாங்கப்படி காலை 07.00 மணிக்கு பிறக்கின்றது.
விளம்பி என்பதை தமிழில் பிரகாசமான, ரம்யமான வருடம் என கொள்ளலாம்.
இது இந்துக்களின் 60 வருட சுற்று வட்டத்தில் 32 ஆவது வருடமாகும். முதனாளிரவு அதாவது 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பின் இரவு 03. 00 மணிமுதல் சனிக்கிழமை முற்பகல் 11. 00 மணிவரை விஷு புண்ணிய காலமாகும்.
இப்புண்ணிய காலத்தில் வைகறையில் துயிலெழுந்து மனத்தூய்மையுடன் இஷ்ட தெய்வங்களை, குல தெய்வங்களை மனதார பிரார்த்தனை செய்து கண்ணாடி, தீபம், நிறைகுடம், தன் வலக்கை, திருமறைப் புத்தகம், வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், சந்தனம் முதலான மங்களப் பொருட்களை தரிசனம் செய்து, நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்து, மருத்து நீர் தேய்த்து சிரசில் கொன்றையிலையும் காலில் ஆலிலையும் வைத்து ஸ்நானம் செய்து, சிகப்பு நிற பட்டாடையாயினும் அல்லது சிகப்பு, கறுப்பு கரையமைந்த புதிய பட்டாடையாயினும் அணிந்து, விநாயகர் மற்றும் குலதெய்வ வழிபாடு, சூரிய நமஸ்காரம் செய்து, குரு, பெற்றோர் முதலிய பெரியோரை வணங்கி, அவர்களின் ஆசி பெற்று, உற்றார், உறவினர், நண்பர்களுடன் அளவளாவி, அருசுவை உணவுடன் வேப்பம்பூ, நெல்லிக்கனி போசனம் செய்து, புதுவருடத்தில் தாங்கள் ஆற்றக்கூடிய, தாங்கள் செய்யக்கூடிய குடும்ப, சமய, சமூகப் பணிகளை மனதில் திட்டமிட்டு, உறுதிப் பூண்டு மங்களகரமாக வாழ்வோமாக.
விளம்பி புதுவருட கைவிஷேடம் வழங்கும் நேரங்கள்
14 ஆம் திகதி சனி பகல் 12 மணி 15 நிமிடம் முதல் 02.10 தொடக்கம் மாலை 6 மணி 21 நிமிடம் முதல் 8 மணி 13 நிமிடம் வரை 16 ஆம் திகதி திங்கட்கிழமை பகல் 12 மணி 30 நிமிடம் முதல் 02 மணி 02 நிமிடம் வரையாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜாதக ரீதியாக, நட்சத்திர ரீதியாக மற்றும் நவக்கிரக கோள் சஞ்சாரங்களின் அடிப்படையில் ஏற்படக் கூடிய பலன்களே நமக்கு விதிக்கப்பட்ட விதியாவதோடு பூர்வஜென்ம பாவ புண்ணிய வினைப்பயனாகவும் அமைகிறது. எனினும் இவற்றை மாற்றக் கூடிய வல்லமை இறை வழிபாட்டுக்கும் நமது முயற்சிக்கும் உண்டு. வாழ்வில் நாம் இறைவழிபாட்டுடன் தாய், தந்தை, பெரியோர், குரு ஆசியுடன் உண்மையாக, நேர்மையாக மதப்பற்றுடன் ஒழுக்கமாக வாழ்வோமேயாயின் எந்த நாளும், எந்த வருடமும், நமக்கு சாதகமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இவ்விளம்பி வருடம் தமிழுக்கு புரட்டாதி மாதம், ஆங்கில திகதிப்படி 2018 ஒக்டோபர் 4 ஆம் திகதி விடியற்காலை குரு பகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியடைகிறார். பின் 2019 மார்ச் 13 ஆம் திகதி தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி வருடாந்தம் வரை தனுசு ராசியிலே நிற்கிறார்.
2017 டிசம்பர் மாதம் சனிமாற்றம் நடைபெற்றது. இவ்வருடம் சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலேயே நிற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
04.10.2018 வியாழக்கிழமை இரவு 9.42க்கு துலாம் – விருச்சிகம் பெயர்ச்சி. பின் 13.03.2019 புதன்கிழமை விருச்சிகம் – தனுசு.
பூசம், மகம், பூரம், உத்தரம் 1, அனுசம், பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி.
இவற்றில் பிறந்தோர் தவறாது மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து தம்மால் இயன்ற தான தருமங்களை செய்து சங்கிரம தோஷ நிவர்த்தி அடையலாம்.
27.07.2018 வெள்ளி பூரண சந்திர கிரகணம் – 11.54 பி.ப – 28.07.2018 சனிக்கிழமை 03.49 காலை. இவ்விளம்பி வருடம் வைகாசி மாதம் இரண்டு அமாவாசை வருவதால் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்ப்பது உத்தமமாகும்.
(அச்சுவினி, பரணி, கார்த்திகை 01 ஆம் பாதம்)
புத்தாண்டின் ஆரம்பம் முதலே மனதில் நிம்மதியும், உற்சாகமும், எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையும் உண்டாகும். இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்கள் அதிக நன்மையாகவும் மீதி ஆறு மாதங்கள் மத்திமமாகவும் அமையப்போகிறது.
குடும்பத்தில் உறவுகள் மேம்படும். கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவுகள் மேம்பட சில விடயங்களில் நீங்களும் விட்டுக்கொடுப்புடன் செயற்படுவது நல்லது. தொழில், வியாபார, உத்தியோக ரீதியாக பாதிப்பில்லை. எனினும் குறுகிய கால புதிய முதலீடுகளே உத்தமம். ஒக்டோபர் 04 இல் நடைபெறும் குருமாற்றம் உங்களுக்கு அட்டமத்து வியாழனாக வருவதால் அதன் பின் புதிய முதலீடுகளை தவிர்த்து செயற்படுவதுடன் பண விடயங்களில் பொறுப்பு நிற்பதை தவிர்க்கவும்.
பெண்கள் யாரின் மனதையும் வீணாக நோகச் செய்யாது பேசுவது நல்லது. மாணவர்களுக்கு வருட முற்பகுதியில் கல்வியில் கவலையீனம் வருட பிற்பகுதியில் பாதிப்பைத் தரலாம். பண கொடுக்கல், வாங்கல்களை உடனுக்குடன் தீர்ப்பது நன்மை. சுபகாரியங்கள் மற்றும் திருமண பலன்களை எதிர்பார்த்திருப்போர் வருட ஆரம்பத்திலேயே அதற்கான கடும் முயற்சி செய்தால் நற்பலன் உண்டு. வயதானோர் தேக ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவதோடு தொடர்ந்து மருந்து, மாத்திரைகளை விடாது பாவிப்பது நன்மையாகும். ஒக்டோபர் 04 ஆம் திகதிக்குப் பின் குரு தட்ஷணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் தொடர்ந்து கடலை மாலை சாத்தி, மஞ்சள் பூவால் அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி, வழிபட பாதிப்புக்கள் குறையும்.
மாவிட்டபுரம் கந்தசாமி முருகப்பெருமான் வழிபாடு உத்தமம் மேஷ ராசியுடைய அச்சுவினி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் கொண்ட உங்களுக்கு பொதுப் பலன்படி 100 க்கு 65வீதம் உத்தமமாகும்.
(கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2)
தொடரும் அட்டமத்துச் சனியும் 06 ஆம் இட வியாழனும் உங்களை படாதபாடு படுத்துவது வருட நடுப்பகுதி வரையே தொடரும். அதுவரை எதிலும் அவசரப்படாமல் சற்று பொறுமையுடன் சிந்தித்து நிதானமாக செயற்படவும். பொருளாதார, தொழில், பண பிரச்சினைகளை, வீட்டில் வீண்கோபமாக காட்டாமல் பொறுமையுடன் உறவுகளை அனுசரித்து செல்லவும். பதவி உயர்வு, தொழில் மேன்மையினை எதிர்பார்ப்போர் வருட பிற்பகுதியில் அதற்கான முயற்சி சாதகமாகும். புதிய பண முதலீடுகளை தவிர்ப்பதுடன், பண விடயங்களில் பொறுப்பு நிற்பதை தவிர்க்கவும்.
பெண்கள் குடும்ப செலவீனங்களை திட்டமிட்டு கட்டுப்படுத்தி செயற்பட வேண்டும். பேச்சில் யார் மனதையும் புண்படுத்தாது பேசுவது பிரச்சினைகளை குறைக்கும். மாணவர்கள் கல்வி தவிர்ந்த ஏனைய விடயங்களில் கவனம் செலுத்துவதைக் கட்டாயமாக தவிர்க்கவும்.
அட்டமத்து சனி தொடர்வதால் சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு எள் எண்ணெய் தீபமேற்றி தொடர்ந்து வழிபட்டு வர பாதிப்புக்கள் குறைவடையும்.
வாகனம் வைத்திருப்போருக்கு அதன் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வீண், பிரயாண பயணங்கள் ஏற்படும். சுபகாரிய, திருமண பலன்களை எதிர்பார்த்திருப்போருக்கு அக்டோபர் 04 இன் பின் வாய்ப்புக்கள் உண்டு.
திருக்கேதீஸ்வரப் பெருமான் வழிபாடு மற்றும் தரிசனம் உத்தமம்
இடப இராசியினையுடைய கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2 ஆம் பாதம் கொண்ட உங்களுக்கு 100 க்கு 45 வீதமே நன்மையாகும்.
(மிருகசீரிடம் 3, 4ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 01, 02, 03ஆம் பாதங்கள்)
வருட ஆரம்பம் முதலே குரு பகவான் திரிகோண ஸ்தானமான 05 ஆம் வீட்டிலும் சனி பகவான் 07 ஆம் வீட்டிலும் உள்ளார். இவை நற்பலன்களையே கொடுக்கும். தொழில், வியாபார, உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதையும் திட்டமிட்டு, சிந்தித்து செயற்படுத்துவதால் பிரச்சினைகள் குறையும். பண விடயங்கள் சாதகமாகும். எதிர்பார்த்திருந்த வங்கிக்கடன் சரி வரும். புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் உருவாகும். எதிலும் மனக்குழப்பமின்றி உறுதியான முடிவுகளை எடுப்பதுவே சாதகமாகும்.
சிறு தொழில் முயற்சிகள் பெண்களுக்கு சாதமாகும். ஆடைகள், தைத்த ஆடைகள், ஆபரணங்கள் வாங்கி விற்போர் பயனடைவர். மாணவர்கள் கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
புதிய வாகனம் வாங்க முயற்சி செய்து வருவோர் கனவு சாதகமாகும்.
சுபகாரிய, திருமண தடை தாமதங்கள் நிவர்த்தியாகி மணம் போல் நல்வாழ்வு அமையும். வாய்ப்பு ஏற்படும். வயதானோருக்கு தேக ஆரோக்கியம் பாதிப்பில்லை. வைத்திய செலவுகள் குறைவடையும்.
வியாழக்கிழமைகளில் நல்லூர் முருகப்பெருமானை தரிசனம் செய்வது மனதார பிரார்த்திப்பது என்பன மேலும் நற்பலன்களைத் தரும்.
மிதுன ராசியினையுடைய மிருகசீரிடம் 3, 4 ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 ஆம் பாதத்தினை கொண்டவர்களுக்கு 100 க்கு 65வீதம் உத்தமமாகும்.
(புனர்பூசம் 04 ஆம் பாதம், பூசம், ஆயிலியம்)
தன்னம்பிக்கையும் உழைப்பில் அதிக ஈடுபாடும் கொண்ட கடக ராசியுடைய நீங்கள், பொருளாதார ரீதியான கடும் பாதிப்பு இல்லாவிட்டாலும் வரவுக்கு அதிகமான செலவை கட்டுப்படுத்த முடியாமலும் தொடர்ந்தும் இவ்வருட நடுப்பகுதிவரை வரவை மீறிய செலவாலும் அவ்வப்போது ஏற்படும் உடல் உபாதைகளாலும் சோர்வடைந்திருந்த காலம் முடிந்து ஒக்டோபர் 04 இல் நடைபெறும் குரு மாற்றத்தால் குருபகவான் 5 ஆம் வீட்டுக்கு பெயர்ச்சியடைவது பாரிய அளவில் முன்னேற்றமான பலன்களைத் தரும்.
அதுவரை ஒரே சீராகவே தொழில், வியாபார உத்தியோக முன்னேற்றம் காணப்படும். வைத்திய செலவுகளுக்கும் குறைவிருக்காது. எனினும் பெரிய வருத்தம், வியாதி என்று ஏதும் ஏற்படாது. எந்த விடயத்திலும் கூடுதல் அக்கறை, கவனம் தேவை. பெண்கள் வீட்டு, குடும்ப செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. சேமிப்புக்கான வழியை தேட வேண்டிய காலம். வீண் வார்த்தைகளை விடாது பொறுமையுடன் செயற்படுவது உத்தமம்.
மாணவர்களின் கல்வி நிலை ஒரே சீராகவே இருக்கும். எனினும் ஒக்டோபர் 4 இன் பின் உங்களின் கடின உழைப்பு நல்ல பெறுபேறுகளைத் தரும்.
வயதானவர்கள் இறைவழிபாடு மன அமைதி தரும். உணவுக்கட்டுப்பாடு, நடைப்பயிற்சி, யோகா என்பன உடல், மன ஆரோக்கியத்திற்கு சாதகமாகும்.
நயினை நாகபூசணி அம்பாளை வழிபடுவதுடன் மனதார பிரார்த்தனை செய்வது பாதிப்புக்களை குறைக்கும்.
கடக ராசியினையுடைய புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் நட்சத்திரங்களையுடைய நேயர்களே இவ்விளம்பி வருட பொதுப் பலனின் படி உங்களுக்கு 100 க்கு 75வீதம் உத்தமமாகும்.
(மகம், பூரம், உத்தரம் 01 ஆம் பாதம்)
வருட ஆரம்பத்திலிருந்தே குரு 03 ஆம் வீட்டிலும் சனி 5 ஆம் வீட்டிலும் உள்ளது. வருட நடுப்பகுதி வரை சற்று பாதிப்புக்களையும் பின் மத்திமமான பலன்களையுமே காட்டும்.
தேக ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. உஷ்ண மற்றும் கண் நோய் பாதிப்புக்கள் ஏற்படலாம். மருந்து மாத்திரைகளையும் தெரிவு செய்து பாவிக்கவும். பண கொடுக்கல், வாங்கல், பொறுப்பு நிற்பது என்பவற்றில் அதிக கவனம் தேவை. தொழில், வியாபார உத்தியோகத்தர்கள் அதிக கவனத்துடன் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் செயற்பட்டு உங்களை காத்துக்கொள்ள வேண்டிய காலம்.
புதிய முதலீடுகள், காணி, வீடு, நிலம், வாகனம் இவற்றை வாங்குவது விற்பதில் பாதிப்புக்கள் ஏற்படலாம்.
மாணவர்கள் கல்வி விடயங்களில் அதிக அக்கறையுடன் செயற்பட்டால் மாத்திரமே சுமாரான பெறுபேற்றைக் கூட எதிர்பார்க்கலாம். வீண் பொழுதுபோக்கில் கவனம் செலுத்துவதை தவிர்த்து கல்வியில் ஊக்கம் தேவை.
சுபகாரிய, திருமண பலன்கள் சற்று தடை, தாமதங்களையே காட்டும். ஒக்டோபர் 04 இன் பின் முயற்சிகள் சாதகமாக வாய்ப்புண்டு.
கீரிமலை நகுலேஸ்வரம் பதி நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரப் பெருமானை தரிசனம் செய்வதோடு மனதார பிரார்த்தனை செய்ய நற்பலன் உண்டாகும்.
சிம்ம ராசியுடைய மகம், பூரம், உத்தரம் 01 ஆம் பாதத்தினை கொண்ட உங்களுக்கு 100 க்கு 40 வீதம் உத்தமமாகும். முயற்சியும் இறைவழிபாடும் நன்மை தரும்.
(உத்தரம் 2, 3, 4 ஆம் பாதம், அத்தம், சித்திரை 01 ஆம், 02 ஆம் பாதம்)
கடந்த ஆறுமாதமாக நடைபெற்று வரும் ஒக்டோபர் 04 ஆம் திகதி வரை குரு 02 ஆம் வீட்டிலேயே இருக்கிறார். எனவே வீடு, குடும்பம் என உங்களின் முயற்சிகள் சாதகமாகும். எண்ணங்கள், திட்டங்கள் செயல் வடிவம் பெறும். தேக ஆரோக்கியம் பாதிப்பில்லை. குடும்பத்தில், வீட்டில் சுபகாரிய நற்பலன்கள் நிறைவேறும். வரவேண்டிய கடன் பணம் வந்து சேரும். முதலீடுகள், தொழில், வியாபாரங்கள் இலாபம் தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டும், சிபாரிசும் பதவி உயர்வான நிலையினைத் தரும். புதிய தொழில் முயற்சிகள் நன்மையாகும். குடும்பத்தில் நீடித்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி புரிந்துணர்வு அதிகரிக்கும். இவை அனைத்தும் 02 ஆம் இட குருவால் உங்களுக்கு ஏற்படும் நன்மையே. ஒக்டோபர் 04 இன் குருமாற்றத்தால் குருபகவான் 3 ஆம் இடம் வருவதால் வருட இறுதிவரை எதிலும் கவனத்துடன் நிதானமாக செயற்படுவது உத்தமம்.
பெண்களுக்கு சிறுதொழில், பண கொடுக்கல், வாங்கல்கள் சாதகமாகும். சுபகாரிய திருமண பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் உங்களின் சில முயற்சிகள் முன்னேற்றம் தரும்.
மாணவர்களுக்கு நன்மையே, எனினும் மனக்கட்டுப்பாட்டுடன் செயற்பட்டாலேயே ஒக்டோபர் 4 இன் பின் எண்ணியதை சாதிக்கலாம்.
பொன்னாலை வரதராஜப் பெருமாளை வழிபடுவதுடன் மனதாரப் பிரார்த்தனை செய்வது நன்மை தரும்
கன்னி ராசியினையுடைய உத்தரம் 2, 3, 4 ஆம் பாதம், அத்தம், சித்திரை 1, 2 ஆம் பாதம் கொண்ட உங்களுக்கு 100 – 55 வீதம் நன்மையாகும்.
சித்திரை 3,4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள்.
கடந்த குரு மாற்றம் முதல் ஜன்ம குருவும் 03 ஆம் இடத்தில் சனியும் இருப்பினும், வலுவான துலா ராசியுடையோரே அசராது இருங்கள். படிப்படியான பெரும் நன்மையும், பாரிய சுப மாற்றங்களும் உண்டாகும். ஒக்டோபர் 4 இன் குரு மாற்றம் 02 ஆம் இடத்திற்கு வருவதால் குரு பகவான் அதிக நன்மை தரும் பலன்களையே செய்வார்.
வருட ஆரம்பம் முதல் ஒக்டோபர் 4 வரை உங்களின் கடின முயற்சியே நன்மை தரும். கடின உழைப்பு, ஓய்வின்மை, உடல், தேக ஆரோக்கியத்தில் கவலையீனம் பாதிப்பைத் தரலாம். எனவே அதிக யோசனைகளைத் தவிர்த்து உழைப்புக்கு நடுவே தேக ஆரோக்கியத்திலும் மருந்து மாத்திரைகளைப் பாவிப்பதிலும் அதிக கவனம் செலுத்துக. சமூகத்தில் அந்தஸ்து, கௌரவம் அதிகரிக்கும். சுயகௌரவத்துடன், தன்மானத்துடன் உறுதியாக செயற்படுவீர்கள். மாணவர்களின் கல்வி நிலையில் முன்னேற்றம் உண்டு. கலைத்துறையில் சாதிக்கும் வாய்ப்பு தேடிவரும்.
பெண்கள் தொழில், உத்தியோக உயர்வுக்கான வாய்ப்பு வருட நடுப்பகுதியின் பின் சாதகமாகும். சேமிப்பு அதிக நற்பலன் தரும். வீட்டுச் செலவுகள் தலையைச் சுற்றினாலும் சந்தோஷமாகவே சமாளிப்பீர்கள். கணவன் மனைவி வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
முருகப் பெருமானை வழிபடுவதுடன் மனதார பிரார்த்தனை செய்வது உத்தமமான பலன்களைத் தரும்.
துலாம் ராசியினையுடைய சித்திரை 3,4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதம் கொண்ட உங்களுக்கு 100 க்கு 80 வீதம் உத்தமமாகும்.
விருச்சிகம்
விசாகம் 4 பாதம், அனுஷம், கேட்டை
7 ½ சனியுடன் 12 இல் வியாழன் தொடர்வது வருடாரம்பம் முதல் அக்டோபர் 4 வரை தொடர்வதால் வரவை மீறிய செலவீனங்களும், கடன் சுமைகளும், பண முடக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து சமாளிக்க முடியாது துவண்டுபோய் இருப்பது தொடர்ந்தாலும் உங்கள் விடா முயற்சி, இறைவழிபாடு என்பன உறுதுணையாகும். 12 இல் குரு அக்டோபர் 04 இல் ஜன்ம குருவாக வருவதால் இப்போதைக்கு சுமார் 1 ½ வருடம் அமைதியாக, பொறுமையுடன் அகலக்கால் வைக்காமல் ஒரு சிறிய வட்டத்திற்குள் சமாளிக்க பழகிக்கொள்ளுங்கள். பொறுப்புகளை கவனமாக நிறைவேற்றுங்கள். பண விடயங்களில் அதிக நேர்மையுடன் நடவுங்கள். வீட்டில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது பிரச்சினைகளைக் குறைக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டிய காலமாகும். கல்வியில் மாத்திரம் கவனம் தேவை. வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். அவதானம்.
பெண்கள் வீட்டின் செலவைக் கட்டுப்படுத்துவது அவசியம். வீட்டில் அனைவருடனும் அனுசரித்துச் செல்லும் மனநிலை நன்மை தரும். பணம், பொருள் தவறலாம். எதிலும் அதிக கவனம் தேவை. வயது முதியோர் தேக ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவதோடு தேவையில்லாத குடும்ப, வீட்டு விடயங்களில் தலையிடாது செயற்படுவது மன நிம்மதி தரும்.
திருகோணமலை லக்ஷ்மி நாராயணப் பெருமாளை ஒரு முறை தரிசனம் செய்வதோடு மனதார பிரார்த்தனை செய்ய இன்னல்கள் நீங்கி அருள் உண்டாகும்.
விருச்சிக இராசியினையுடைய விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை நட்சத்திரங்களையுடைய நேயர்களே இவ் விளம்பி வருடம் 100%க்கு 35% வீத நன்மையே ஆகும். எனினும் உங்கள் முயற்சி இறை அருள் தரும்.
தனுசு
மூலம், பூராடம், உத்தராடம் 1 ஆம் பாதம்
ஏழரைச் சனி நடைபெற்றாலும் 11 இல் குரு சஞ்சரிப்பதால் வருட ஆரம்பம் முதல் அக்டோபர் 4 வரை எந்த சிக்கல்களையும் மனவலிமையுடன் சமாளிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் அதிகபட்ச உற்சாகத்துடன் செயற்பட்டு இனி வரக்கூடிய ஆறு மாத காலப்பகுதியில் அடையக்கூடிய அதிகபட்ச நற்பலன்களை உங்கள் முயற்சியால் பெறலாம். குறுகியகால முதலீடுகள் நன்மை தரும். உத்தியோகம் பார்ப்போர் அதிக பொறுப்புணர்ந்து கடமையில் அதிக சிரத்தையுடன் செயற்படுவது உத்தமம். தேச ஆரோக்கியம் பாதிப்பில்லை எனினும் தொழில், பண விடயங்கள் எதிர்வரும் மாதங்களில் யோசனை தரும்.
மாணவர்கள் வருட ஆரம்பத்தில் காணப்படும் அதே உற்சாகத்துடன் தொடர்ந்து இரண்டு வருடங்கள் கூடுதல் கவனம் செலுத்தி படிப்பதுவே உயர்வு தரும்.
பெண்கள் சிறு முதலீடுகள், கைத்தொழில் விடயங்களில் கவனம் செலுத்த, அதனால் வருமானம் ஏற்படும். வீட்டுப் பொறுப்புகளை பகிர்ந்து கொண்டு செயற்பட பிரச்சினைகள் குறையும். யாருக்கும் பிணை நிற்பது, பணம் வாங்கிக்கொடுப்பது போன்ற விடயங்களில் ஈடுபட வேண்டாம். எந்த விடயத்திலும் யாருக்கும் வாக்குறுதி வழங்காதீர்கள்.
சுபகாரிய திருமண பலன்களை எதிர்பார்ப்போர் சில விட்டுக்கொடுப்புகளுக்கு மத்தியில் அதிக முயற்சி செய்தால் தடை, தாமதங்கள் நீங்கி சுபகாரிய பலன்கள் சாத்தியமாகும். தனிப்பட்ட ஜாதக பலனின்படி வழிபாடு, பரிகாரம் என்பன உத்தமம்.
உலகம் துதிக்கும் அலங்காரக் கந்தனாம் நல்லூர் முருகனை ஒருமுறை நேரில் சென்று தரிசிப்பதுடன் மனதார பிரார்த்தனை செய்ய, எதிர்காலம் நலன்பெறும்.
தனுசு இராசியினையுடைய மூலம், பூராடம், உத்தராடம் 01 ஆம் பாத நேயர்களே இவ் விளம்பி வருடம் உங்களுக்கு 100% க்கு 60% நன்மையாகும்.
மகரம்
உத்தராடம் 2,3,4 ஆம் பாதம் திருவோணம், அவிட்டம் 1ஆம், 2 ஆம் பாதம்
வருட ஆரம்பம் முதல் 7 ½ சனி தொடர்வதாலும் குரு 10 இல் சஞ்சரிப்பதாலும் தடை, தாமதங்கள், வீண்விரயங்கள், செலவீனங்கள், இடமாற்றங்கள் என்பன அதிக மனவிரக்தியை இதுவரை தந்தாலும் அக்டோபர் 4 இல் குரு மாற்றம் 11 க்கு வரும் குருவால் சற்று ஆறுதல் தரும். அதுவரை தேவையில்லாத விடயங்களில் தலையிடாது. அவதானத்துடன் செயற்படுங்கள். குடும்பத்தில், வீட்டில் எதையும் பொறுமையுடன் கையாள்வது புத்திசாலித்தனமாகும். புதிய தொழில் முயற்சி, பணம் செலவு செய்து எதிர்பார்ப்புடனான பெரிய தூரதேச பிரயாணம், பயணம் வேண்டாம்.
மாணவர்கள் கல்வியில் வருட ஆரம்பத்தில் அதிக கவனத்துடன் செயற்பட வேண்டும். மன, புலன் அடக்கம் அவசியமாகும். காணி, வீடு, மனை விடயங்கள் வாங்குவது, விற்பது பாதகமாகலாம். கோட்,வழக்குகள் என்பன தொடர்ந்து இழுபறியாகவே இருக்கும்.
பெண்களே, உங்கள் கவலையீனத்தால் பணம், பொருள் இழப்புகள் ஏற்படலாம். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகளும் கூடும். தேவையற்ற பிரயாண, பயண செலவுகள் ஏற்படலாம்.
திருமண சுபகாரிய நற்பலன்களை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு அக்டோபர் 04 ஆம் திகதி குரு மாற்றம் சுமார் ஒரு வருடத்திற்குள் நற்பலன் தரும்.
மட்டக்களப்பு, மயிலம்பாவெளி ஸ்ரீ காமாட்சி அம்பாளை ஒரு முறை நேரில் சென்று தரிசனம் செய்வதுடன் மனதார வேண்டி பிரார்த்திக்க பிரச்சினைகள் குறைந்து நன்மை உண்டாகும்.
மகர இராசியினையுடைய உத்தராடம் 2,3,4 ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் இராசிகளையுடையோருக்கு இவ் விளம்பி வருடம் 100% க்கு 60% நன்மையாகும்.
கும்பம்
அவிட்டம் 3, 4 ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதங்கள்.
வருட ஆரம்பம் முதல் குரு பகவான் 9 ஆம் வீட்டிலும் சனி 11 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சாதகமாகும். திட்டமிட்டபடி வியாபார, தொழில், உத்தியோக விடயங்களில் சாதிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். தேக ஆரோக்கியம் உற்சாகம் தரும். தடைப்பட்டு வந்த சில பூர்வீகச் சொத்து விடயங்கள் சாதக பலன் தரும். வெளிநாட்டு தொடர்புகள் தொழில் மேன்மைக்கான வாய்ப்பாகும். உயர் அதிகாரிகளின் பாராட்டு, பதவி உயர்வுக்கான வாய்ப்பைத்தரும்.
மாணவர்களுக்கு நன்மையே எனினும் தொடர்ந்து அக்கறையுடன் செயற்பட, வருட பிற்பகுதியில் நற்பலன் தரும். கணனி மற்றும் நவீன தொழிற்துறைக்கான பயிற்சிகள் நன்மை தரும். சேமிப்புகள் வீட்டில் பெரும் உதவியாகும். பெண்கள் தமது சுய முயற்சியுடன் செய்யும் தொழில் முயற்சி இலாபம் தரும்.
சுபகாரியம், திருமணத்தடைகள் விலகும். வெளிநாட்டு வரன் சம்பந்தங்கள் பேசி வரும். அதிக சிரத்தையுடன் செயற்பட்டால் அக்டோபர் 4 க்கு இடையே சுபகாரிய திருமண பலன் கைகூடும்.
முதியவர்கள் தொடர்ந்து தாம் பாவித்து வரும் மருந்து மாத்திரைகளுடன் உடற்பயிற்சி, தியானம் என்பன செய்துவர எதிர்காலம் நன்மை தரும்.
மாத்தளை முத்துமாரி அம்பாளை நேரில் சென்று தரிசனம் செய்வதோடு மனதார பிரார்த்தனை செய்தால் இம்மையிலும் நன்மை உண்டாகும்.
கும்ப ராசியினுடைய அவிட்டம் 3,4 ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதத்தினரே உங்களுக்கு இவ் விளம்பி வருடம் 100% க்கு 60% நன்மையே.
மீனம்
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி.
வருட ஆரம்பம் முதலே அட்டமத்து வியாழனும் 10 இல் சனியும் தொடர்வது காரியத்தடை, வீண் விரயங்கள், செலவீனங்கள், பிரயோசனம் இல்லாத பிரயாண பயணங்கள், புதிய திட்டங்களில் இழுபறி நிலை என்பன தொடரும். எனவே யாரையும் நம்பி பண, பொருள், வீட்டு விடயங்களில் கொடுக்கல்– வாங்கல்கள் செய்வது பாதகமாகலாம். தீர்மானங்கள் எடுப்பதில் மனக்குழப்பம் ஏற்படும். உறவுகளிடையே, நண்பர்களிடையே கருத்து வேறுபாடு மனவேதனை தரும். தொழில் வியாபாரமும் மோசமாக பாதிக்கப்படலாம்.
மாணவர்கள் மேலதிகமாக நேரத்தை ஒதுக்கி அதிக நேரம் அக்கறையுடன் செயற்பட்டாலேயே ஒரளவு பெறுபேறுகளை எதிர்பார்க்கலாம்.
உறவுகள் பாதிக்கப்படும் வகையில் வீட்டில் பெண்கள் வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவது பாதகமாகும். வீண் கோபத்தைத் தவிர்க்கவும். யாரையும் நம்பி பண கொடுக்கல் வாங்கல் செய்வது நஷ்டமாகும்.
எனினும் அக்டோபர் 04 இன் பிறகு படிப்படியாக மேற்படி பலன்களில் மாற்றம் உண்டாகும். தடை தாமதங்கள் விலகும். எதிர்காலம் தொடர்பில் சற்று நம்பிக்கை உண்டாகும்.
திருமண விடயங்கள் அக் 4 இன் பின் சுமார் ஒரு வருடத்திற்குள் நிறைவேறும். பழைய பாக்கி, கடன் வந்து சேரும்.
கதிர்காம கத்தனை ஒருமுறை நேரில் சென்று தரிசிப்பதுடன் மனதார பிராத்தனை செய்ய எதிர்காலம் நற்பலன்கள் நிறைந்ததாகும்.
மீனம் இராசியினையுடைய பூரட்டாதி 4 ஆம் பாதம் உத்திரட்டாதி, ரேவதி இந் நட்சத்திரத்தையுடைய நேயர்களே உங்களுக்கு இவ் விளம்பி வருடம் 100% க்கு 65 நன்மையாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM