பெண்களின் வாழ்க்கைக் காலத்தில் 40 வயது தாண்டியவுடன் கர்ப்பப்பை தொடர்பான பல நோய்கள் ஆரம்பிப்பது வழக்கம். இதில் அதிகரித்த மாதவிடாய்ப் போக்கு, தாங்கமுடியாத வயிற்றுவலி மற்றும் மாதவிடாய் கால வயிற்றுவலி, கர்ப்பப்பை கட்டிகள், பைபுரோயிட் கட்டிகள், சூலகக் கட்டிகள் என்பன முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. இவற்றில் எவை பெண்களுக்கு ஆபத்தானவை அல்லது ஒரு புற்று நோயாக மாறக்கூடியவை என ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு ஆராய்ந்து பார்ப்பதற்கு 3D SCAN பாவிக்க முடியும். 3D ஸ்கானில் கர்ப்பப்பையில் எந்த இடத்தில் என்ன பிரச்சினை என்பதைச் சரியாகக் கண்டறிய முடியும்.
கர்ப்பப்பையில் உள்ள பிரச்சினைகளை சரியாக அறிந்தால் கர்ப்பப்பையை எடுக்காமல் சரியான தீர்வு வழங்க முடியும். அதாவது கர்ப்பப்பையில் உள்ள ஒரு சிறிய பொலிப் (POLYP) போன்ற ஒரு சதை வளர்ச்சியால் அதிகப்படியான மாதவிடாய் ஏற்படுவது வழக்கம். இது மருந்து மாத்திரைகளுக்கு கட்டுப்படுத்த முடியாது. ஆனால் கடந்த காலங்களில் இதனைக் கட்டுப்படுத்த கர்ப்பப்பையை அகற்றுவதுதான் வழக்கமாக இருந்தது. ஆனால் இதற்கான சரியான காரணம் சதைவளர்ச்சியான பொலிப் (POLYP) தான் என கண்டறிந்தால் இதனை மட்டும் அதாவது பொலிப் என்ற சதையை மட்டும் அகற்றலாம். இவ்வாறு அகற்றும்போது கர்ப்பப்பை அகற்றப்படாமலே சரியான தீர்வு கிடைக்கின்றது. எனவே கர்ப்பப்பை அகற்ற வேண்டி உள்ளதே என கவலைப்படும் பெண்களுக்கும் சத்திரசிகிச்சையை நினைத்து பின்வாங்கும் பெண்களுக்கும் இவ்வாறு கர்ப்பப்பையை எடுக்காமல் நோய்க்கு மட்டும் சரியான தீர்வு கொடுப்பது பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.
கர்ப்பப்பையில் பைபுரோயிட் கட்டி பெரிதாக வளர்ந்திருந்தால் 40–45 வயதுடைய பெண்களின் கர்ப்பப்பையை முழுதாக எடுப்பது வழமையாக இருந்தது. ஆனால் இன்றைய தொழில்நுட்பத்தில் கிடைக்கப்பெற்ற 3D–4D ஸ்கான் மூலம் பைபுரோயிட் கட்டி என்பதனை சரியாக உறுதி செய்து, பின்னர் கட்டியை மட்டும் எடுத்தால் போதும் என்ற முறையில் கர்ப்பப்பையை அகற்றாமல் சத்திரசிகிச்சை மேற்கொள்ள முடியும். இதனையும் இப்பொழுது லப்ரஸ்கோப்பி முறைமூலம் (Laparoscopy) சிறிய ஒரு துளையில் செய்யக்கூடியதாக மாற்றம் வந்துள்ளது. எனவே வயிற்றை வெட்ட வேண்டுமா என்ற ஏக்கம் இல்லாது இம்முறையில் ஒரு சிறிய துளையைப் போட்டு கர்ப்பப்பையில் எந்த அளவு பெரிய கட்டியாக இருந்தாலும் சரி எடுக்ககூடியதாக உள்ளது.
அடுத்ததாக கர்ப்பப்பை கூடுதலாக அகற்றப்பட்டு வருவது சூலகங்களில் ஏற்படும் கட்டிகளுக்காகும். இவ்வாறு சூலகத்தில் கட்டி என்றவுடன் பெரிதளவில் பதற்றப்படாது சரியான விபரங்களை 3D ஸ்கானில் பெறுவதன் மூலம் இவை சாதாரண நீர் நிறைந்த கட்டிகளா அல்லது சிக்கல் தரக்கூடிய கட்டிகளா என அறியக் கூடியதாக உள்ளது. சாதாரண நீர் நிறைந்த சூலகக் கட்டிகள் என்றால் இதற்காக கர்ப்பப்பையை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இவற்றையும் லப்ரஸ்கோப்பி துளை மூலம் நீர் நிறைந்த கட்டிகளை இலகுவாக அகற்ற முடியும். எனவே கர்ப்பப்பை அகற்றாமலே சிகிச்சை வழங்கக்கூடியதாக உள்ளது.
அடுத்ததாக குடும்பத்தில் குழந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்து இரண்டு, மூன்று பிள்ளைகளுக்குத் தாயாக இருந்து வரும் 40 தொடக்கம் 50 வயது வரையான பெண்களை எடுத்தால் எண்டோ மெற்றியோசியஸ் (Endometriosis) மற்றும் அடினோமயேசிஸ் (Adenomyosis) கர்ப்பப்பை நோயால் வயிற்றுவலி வந்து அவதிப்படுகின்றனர். கர்ப்பப்பையை எடுத்தால்தான் இந்த நோய் குணமாகும் என நினைக்க வேண்டாம். ஏனெனில் கர்ப்பப்பையை எடுக்காமலும் GNRH ஊசி மூலமாகவோ லப்ரஸ்கோப்பி சிகிச்சை மூலமாகவோ சிகிச்சைகள் வழங்கக் கூடியதாக உள்ளது.
ஆகையால் கடந்த காலங்களைப்போல் அல்லாது கர்ப்பப்பை பிரச்சினைகளை குணப்படுத்த ஏராளமான மாற்று வழிமுறைகளும் சிகிச்சைகளும் வந்துள்ளன. ஆதலால் இவற்றுக்கு கர்ப்பப்பையை அகற்றுவது தான் உரிய தீர்வு என நினைக்க வேண்டாம் . இவற்றை தீர்மானிக்க 3D மற்றும் 4D ஸ்கான் முறைகள் பெரிதும் உதவும். எனவே கர்ப்பப்பையை எடுக்க விரும்பாது நோயால் அவதிப்படும் பெண்களுக்கு நோய்களில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ்க்கையைத் தொடர புதிய சிகிச்சை முறைகள் பெரிதும் உதவுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM