அம்பாறை நகரில் ஊழித்தாண்டவம் ஆடிய இனவாதம் நேற்று முன்தினம் கண்டி தெல்தெனிய மற்றும் திகன ஆகிய முஸ்லிம் பிரதேசங்களில் மதவாதமாக உருவெடுத்து சேதங்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தி பெரும் பதற்றத்தையும் அச்சத்தையும் தோற்றுவித்திருந்தது.
இந்நிலையில் முஸ்லிம்கள் மீதான இனவாத, மதவாத தாக்குதல்களைக் கண்டித்து நேற்று செவ்வாய்க்கிழமை அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் முஸ்லிம் பிரதேசங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இதேவேளை ஹர்த்தால் நடவடிக்கையுடன் வீதித்தடை, ரயர் எரிப்பு மற்றும் பஸ்களுக்கு கல்வீச்சு போன்ற செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்கள் என்றதன் பேரில் மருதமுனை, சாய்ந்தமருது மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30 பேர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சாய்ந்தமருது பிரதேசத்தில் குழப்பங்களை விளைத்தார்கள் என்றதன் பேரில் செயற்பட்ட பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு குழப்பம் விளைவித்தோரை கலைத்தனர். அத்துடன் 30 பேரை கைது செய்துள்ள பொலிசார் எட்டு மோட்டார் சைக்கிள்களையும் ஏழு துவிச்சக்கர வண்டிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
அம்பாறை நகர் பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட இனவாத தாக்குதல் துயர் குறைவதற்கு முதலே கண்டி திகன பகுதியில் 4 பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டதுடன் வர்த்தக நிலையங்கள், வீடுகள் தாக்கி எரிக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாகவே அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் நேற்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இதேவேளை இந்த மாவட்டத்தின் சில முஸ்லிம் பிரதேசங்களில் குறிப்பாக கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர் பிரதேசங்களில் நேற்று காலை பத்து மணியளவிலேயே ஹர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னணியில் அம்பாரை மாவட்டத்தில் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, நிந்தவூர், மருதமுனை, கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களிலும் மட்டக்களப்பில் காத்தான்குடியிலும் நேற்று முழு கடையடைப்பு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
அரச அலுவலகங்கள், வங்கிகள் , பாடசாலைகள், தனியார் அலுவலகங்கள், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டும். இளைஞர்கள், பொதுமக்கள் வீதிகளில் திரண்டும் பெரும் கொந்தளிப்பு நிலைமை காணப்பட்டது. பாடசாலைகள் திறக்கப்பட்டிருந்த போதிலும் மாணவர்கள் வருகை தரவில்லை.
சில பிரதேசங்களில் வெள்ளை கறுப்பு கொடிகளைப் பறக்கவிட்டும், வீதிகளில் டயர்களை எரித்தும், ஆர்ப்பாட்டங்களிலீடுபட்ட முஸ்லிம்கள் தமது ஆக்ரோஷ உணர்வுகளை வெளிப்படுத்தினர். அத்துடன் முகத்தை மறைத்து துணிகளால் கட்டியிருந்த இளைஞர்கள் ரயர்களை வீதியில் போட்டு எரித்தனர்.
இதேவேளை போக்குவரத்திற்கு இடையூறின்றி அமைதியான முறையில் ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளில் அறிவிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மருதமுனையில் பஸ்கள் மீது
கல் வீச்சு; டயர்கள் எரிப்பு
மருதமுனை பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்கள் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் கண்ணாடிகள் உடைந்த நிலையில் குறித்த பஸ்கள் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து கல்முனையில் இருந்து மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் அக்கறைப்பற்றுக்கான பஸ் போக்குவரத்துகள் இடம்பெறவில்லை.
அதேவேளை மருதமுனையில் கல்முனை- மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் டயர்கள் எரிக்கப்பட்டும் மரக்குற்றிகள் மற்றும் கொங்க்ரீட் தூண்கள் போடப்பட்டும் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால் போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டிருந்தது. அத்துடன் அங்கு இளைஞர்கள் ஒன்றுதிரண்டு கண்டனப் பேரணி ஒன்றையும் நடத்தினர்.
மருதமுனையில்
கண்ணீர்ப்புகை
அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கலைப்பதற்காக விசேட அதிரடிப்படையினரால் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெருந்திரளான இளைஞர்கள் அங்கு திரண்டு கண்டனப் பேரணியை நடத்தியதுடன் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இவர்களை கலைப்பதற்கு பொலிஸார் மேற்கொண்ட முயற்சி பயனளிக்காமையினால் விசேட அதிரடிப் படையினரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு முற்பகல் 11.30 மணியளவில் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாயல்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வேண்டி விஷேட இறை பிரார்த்தனை நிகழ்வு, அட்டாளைச்சேனை ஜூம்மாப் பெரியபள்ளி வாயலில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாயல்கள் சம்மேளனத் தலைவரும், தென் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எல்.ஹனிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மௌலவி எம்.எஸ்.எம்.பாஹிம் (ஹூமைதி) பிரார்த்தனையை நடாத்தினார். இந்நிகழ்வில் அதிகளவிலான பொது மக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கேந்திர முக்கியத்துவமிக்க இடங்களில் ஆயுதம் தாங்கிய பொலிஸார், கலகம் அடக்கும் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர் அதிகளவில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். விஷேட பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் இளைஞன் மீது தாக்குதல்
இதேவேளை தொழில் நிமித்தம் அக்கரைப்பற்று சந்தைக்குச் சென்ற தமிழ் இளைஞர் ஒருவர் முஸ்லிம் இளைஞர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
ஹர்த்தால் காரணமாக பணிக்கு சமுகமளிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்தும் முகமாக ஹரஙத்தால் நடவடிக்கையை புகைப்படம் எடுத்த போது முஸ்லிம் இளைஞர்கள் சிலர் அவர்மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதன்போது பொலிசார் தலையிட்டதுடன் பள்ளிவாசல் நிர்வாகிகள் சம்பவத்துக்கு குறித்த இளைஞனிடம் மன்னிப்புக் கோரியதையடுத்து பதற்றநிலை தனிந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM