மனிதப் பண்புகளைத் தட்டியெழுப்பி நேரிய வழியில் வாழ்க்கையை அமைத்து உயர்நிலைமையை அடைவதற்கு மனிதனைப் பக்குவப்படுத்துவதே சமய நெறிகள். இந்த வகையிலே இந்து சமயம் பல்வேறு நெறிமுறைகளை முன்வைத்துள்ளது. அவற்றிலே விரதங்களும் அடங்குகின்றன.
இவ்விரதங்கள் சக்தி விரதங்கள், விநாயக விரதங்கள், திருமாலுக்குரிய விரதங்கள், முருகனுக்குரிய விரதங்கள், நவக்கிரகங்களுக்குரிய விரதங்கள் எனப்பல விரதங்கள் இந்து சமயத்தவர்களால் கைக்கொள்ளப்படுகின்றன.
விரதம் எனப்படும் போது மனவுறுதி என்ற பொருளுண்டு. உயிரினங்களுக்கெல்லாம் தமக்கென விதிக்கப்பட்ட ஒரே படிமுறையில் வாழ்ந்து மறையும்போது மனித இனம் மட்டும் சிந்தித்து வாழ்வை நெறிப்படுத்தி வாழும் தன்மையைக் கொண்டதாக விளங்குகின்றது. சிந்தனையை தூண்டி தூயவழியில் செல்ல விரதங்கள் மனிதருக்கு வழிகாட்டி நிற்கின்றன.
இந்த வகையிலே இந்துக்கள் கைக்கொள்ளும் விரதங்கள் சிவனுக்குரிய விரதமான மகா சிவராத்திரி மேன்மை பொருந்தியதாக அமைகின்றது.
மாதந்தோறும் அமாவாசையுடன் கூடிவரும் நாள் சிவராத்திரியாகக் கைக்கொள்ளப்படும்போது மாசி மாத அமாவாசையுடன் கூடிவரும் சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றது. கைக் கொள்ளப் படுகின்றது.
சிவராத்திரி தொடர்பாகப் பல கதைகளுமுள்ளன. பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் சோதிப்பிளம்பாகத் தோன்றி தனது அளப்பரிய ஆற்றலை வெளிப்படுத்திய நாளாகவும் அவர்களது ஆணவத்தை அழித்த நாளாகவும் இந்நாள் கூறப்படுகின்றது. இதுபோன்ற பல புராணக்கதைகளும் வழக்கிலுள்ளன.
இக்கதைகள் கூறும் தத்துவக் கருத்துக்களைப் புரிந்து, உணர்ந்து கொள்வதே விரதம் நோற்பதன் பயனாக அமையுமேயன்றி சம்பிரதாயச் சடங்குகளை மட்டும் கைக் கொள்வதால் பயனில்லை.
மனதைப் பக்குவப்படுத்தி நேரிய வழியில் வாழ்ந்து தாம் பெற்ற பிறவிப்பயனை அடைவதற்கான வழியை அருட் திரு இராமலிங்க வள்ளலார் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
அதுவே இன்று மகா சிவராத்திரி விரதத்தின் மூல மந்திரமாக விளங்குகின்றது. “தனித்திரு பசித்திரு விழித்திரு” என்பவையே அவையாகும். ஒரு மனிதன் இம்மூன்று விதிகளையும் தெளிவாக உணர்ந்து தினமும் கைக் கொள்வானாயின் அவன் மனிதருள் தெய்வமாக உயர முடியும்.
ஆம், இந்த மூன்று வழிகளும் மனித மனதைப் பக்குவப்படுத்தி வாழும் வழியை நெறிப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. இவற்றிற்கு மேலோட்டமாக ஒரு கருத்தும் கொள்ளப்படுவது வழக்கம். இருப்பினும் ஆழ ஆய்ந்து அவற்றினுள் பொதிந்துள்ள தத்துவக் கருத்துக்களைக் கைக் கொள்வதே மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்வதன் பயனாக அமையும்.
சம்பிரதாய சடங்குகள் மட்டுமே சமயம் என்று கருதிவிடக்கூடாது. மனிதனை, மனிதனின் மனதைப் பக்குவப்படுத்துவதே சமய வாழ்வாகும்.
‘தனித்திரு’ எனும்போது தனியாக ஒதுங்கியிருப்பது என்பது கருத்தல்ல. நல்லவற்றையே நோக்காகக் கொண்டு சிந்தித்து செயற்பட்டு தனது உயர்ந்த தனித்துவத்தைப் பேணுதல் வேண்டும் என்பதே தனித்திரு என்பதன் பொருளாக அமைகின்றது.
‘பசித்திரு’ என்னும்போது உணவைச் சில வேளைகள் கைவிட்டு இருப்பது மட்டும் என்பதல்ல. உணவைக் குறைப்பதால் உடல் நலம் பேணப்படும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. உடல் நலத்தைப்பேண உணவைத் தவிர்த்து பசித்திருப்பது போல மன நலத்தைப் பேணவும் பசித்திருக்க வேண்டும்.
அதாவது வயிறு பசித்திருக்கும்போது நல்ல உணவைத் தேடுவது போன்று உள்ளப்பசிக்கு அதாவது அறிவுப்பசிக்கு நல்லவற்றைத் தேடி அறிந்து அதன் மூலம் மனப்பசியைப் போக்கிக்கொள்ள வேண்டும்.
உடலிலுள்ள கழிவுகளை அகற்றுவதில் நான் முன்னுரிமை தந்து செயற்படுவது போன்று உள்ளத்திலே புகுந்துள்ள தீய சிந்தனைகளான ஆசை, பொறாமை, கோபம், குரோதம், வெறுப்பு, பகை, ஆணவம், அகங்காரம், மோகம் போன்ற கழிவுகளை நீக்கி வெளியேற்றி விடும்போது ஏற்படும் வெற்றிடமே மனப்பசி எனப்படுகின்றது. அந்த
மனப் பசியை உருவாக்கிக்கொள்ள வேண் டும். மனப்பசிக்கு உணவாக நல்ல சிந்தனைகளை உள்வாங்கிக் கொள்வது மனித வாழ்வின் மகத்துவமாகின்றது. அதுவே வாழ வேண்டிய சமய நெறியில் வாழ வழி வகுப்பதற்குரிய படி முறையாகின்றது.
கண்களை மூடாது, நித்திரை கொள்ளாது விழித்திருப்பது தான் மகா சிவராத்தியின் ‘விழித்திரு’ என்ற ஞானப்பதத்தின் பொருளாகக் கொள்ளக்கூடாது. ‘விழித்திரு’ என்னும் போது அதுவும் ஒரு விளக்கமாக அமைந்தபோதும் சிவராத்திரி கூறும் விழித்திரு என்பதன் விரிவான பொருள் வேறொன்றுமுள்ளது. அதாவது தீய நோக்கங்கள், சிந்தனைகள் நம்மனதில் புகாதபடி நாம் விழிப்பாயிருக்க வேண்டும் என்பதே அதாகின்றது. மனிதனின் சிந்தனையைச் சிதைத்து வாழ்வைத் துன்பத்தில் ஆழ்த்துபவை தீய சிந்தனைகள், தீய நோக்கங்கள, தீய செயற்பாடுகளே.
இத்தீய சக்திகளைக் கட்டுப்படுத்தி தூர விலக்கிவிட விழிப்பாயிருக்க வேண்டும். மனிதனின் நேர்மையான வாழ்க்கைக்கு தடையாயிருப்பவை இனங்காணப்பட வேண்டும். அவை மனதிலே புகாதிருக்க வேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் விழிப்பாயிருப்பதையே விழித்திரு என்ற பதம் விளக்குகின்றது.
ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தான் மேன்மைப்படுத்திக் கொள்ள வழியமைத்துத் தருபவை சமயங்கள் விதித்துள்ள விரதங்கள் என்பதை நாம் புரிந்து கொண்டு வாழ்வைச் செப்பனிட்டுக் கொண்டால் துன்ப, துயரங்களில் இருந்து விடுபட முடியும். ஆணவம், இறுமாப்பு, அகங்காரம், குரோதம், பகைமை போன்ற மனிதகுல நலனுக்கு ஒவ்வாத குணங்களுடன் வாழ்வது ஒரு வாழ்வாகக் கொள்ளமுடியாது தானும் சீரிய வாழ்வு வாழ்ந்து ஏனையோரும் அவ்வாறு வாழ வழிவகுப்பதே சமய வாழ்வு, விரதங்கள் நோற்பதன் மூலம் துன்பங்கள் களையப்பட்டு தூய்மையான வாழ்வு வந்து சேரும் என்பது மரபு வழியாக வரும் நம்பிக்கையாகும்.
நமக்கும் மேலாக ஒரு சக்தியுள்ளது. அது நம்மை வழிநடத்துகின்றது என்பது சமயங்களின் அடிப்படையான ஆழ்ந்த தத்துவமாகும். இவ்வாறான உறுதியான நம்பிக்கை நம்மை வந்தடைந்து விட்டால் தன்னம்பிக்கையுடன் நல்வழியில் வாழத் தலைப்பட்டு விட்டால் தன்மானம் கொண்ட மனிதனாக வாழலாம்.
ஆதியும் அந்தமுமில்லா அரும்பெருஞ் சோதியான சிவபிரானை வழிபட்டு, சிவசக்தி அருள் நாடி தனித்திருந்து, பசித்திருந்து, விழித்திருந்து, நோற்கப்படும் மகா சிவராத்திரி விரதமானது மனித குலத்தின் மேன்மையின் திறவுகோலாகும்.
இவ்விரத நாளில் அதர்மமும் ஆணவமும் அழிந்து எங்கும் நிம்மதி நிறையைப் பிரார்த்திப்போம். ‘நம்பினோர் கெடுவதில்லை’ என்ற கூற்றுக்கமைய எம்மை வாட்டும் துன்பங்கள் துடைத்தெறியப்பட எம்பெருமான் திருவருள் கிட்டும். வாழ்வு வளம் பெறும், ஒளிபெறும். அதர்ம நிலை அகன்று எங்கும் நிம்மதி நிலைக்கும் என்ற நம்பிக்கையுடன் பிரார்த்திப்போம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM