யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் புலிகளின் தலைவர்கள் சர்வதேச சமூகம் ஊடாக சரணடையப்போவதாக எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை. எனது அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் எவருக்கும் அவ்வாறான தகவல் கிடைக்கவில்லை.
எனினும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அதிகமான புலி உறுப்பினர்கள் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்தனர். அவர்கள் தொடர்பான பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டோம் என்று முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தருமான மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
நான் தெற்கைவிட வடக்கிற்கே அதிக முக்கியத்துவம் வழங்கி அபிவிருத்தி செய்தேன். ஒரு நாடு என்ற கட்டமைப்புக்குள் பிரச்சினையை தீர்ப்பதே எனது நிலைப்பாடாகும். அரசியல் அமைப்பை சம்பந்தப்படுத்தி இந்த பிரச்சினையை தீர்க்க முயற்சித்தால் சிங்கள – தமிழ் மக்கள் மீண்டும் தூர விலகி சென்றுவிடுவார்கள் என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வீரகேசரி நாளிதழுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மஹிந்த ராஜபக் ஷ இந்த விடயத்தை குறிப்பிட்டார். செவ்வியின் முழு விபரம் வருமாறு
Q : இந்த நாட்டில் இரண்டு முறை நிறை வேற்று ஜனாதிபதியாக இருந்த நீங்கள் மூன்றாவது முறை போட்டியிட்டு தோல்வி அடைந் தீர்கள். உங்கள் தோல்விக்கு என்ன காரணம்?
A: சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாமல் யுத்தத்தை முடித்தமை, நாட்டினதும் மக்களினதும் சுயாதீனத்தை பாதுகாத்து அபிவிருத்தியை முன்னெடுத்ததே எனது தோல்விக்கு காரணம். வெளிநாட்டு சக்திகளுக்கும் அவர்களின் உள்நாட்டு முகவர்களுக்கும் எமது அரசாங்கத்தை கவிழ்க்க தேவை இருந்தது. எமது அரசாங்கத்தில் காணப்பட்ட குறைபாடுகள், பலவீனங்கள் என்பன இவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற உரம் சேர்த்தன.
உலகின் எந்தவொரு நாட்டிலும் எங்களைப் போன்று சுயாதீனமாக எழும்ப முயற்சிக்கும்போது இவ்வாறு நடைபெறுவது வழக்கம். தற்போது 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதிக்கு பின்னர் நாட்டின் பொருளாதாரம் கட்டுடைந்து போயுள்ளது. மக்கள் வாழ முடியாது திண்டாடுகின்றனர். அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை. சிறிய நாடுகள் இவ்வாறு அராஜக நிலைக்கு செல்வதை சர்வதேச சமூகம் விரும்பும். எனினும் எமது தோல்வி தற்காலிகமானது. என்ன நடந்தது என்பதை மக்கள் புரிந்து கொண்டு விட்டனர்.
Q :2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் ஏன் உங்களுக்கு கிடைக்கவில்லை?
A: இந்த நாட்டு மக்களின் தேவைக்கு அப்பால் சர்வதேச தேவைகளுக்கு அமைவாகவே இலங்கையில் இனங்களை அடிப்படையாகக் கொண்ட ஆயுத மோதல்கள் உருவாகின. இந்த நாட்டை பிரிப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால், அந்த முயற்சியை யுத்தத்தின் மூலம் நான் முடித்து வைத்தேன். எனினும் இனவாத சக்திகள் நான் தமிழ் மக்களுக்கு எதிரான ஒருவன் என்ற ஒரு பிரமையை உருவாக்கின. எனினும் யுத்தம் முடிந்ததன் பின்னர் எனது அரசாங்கம் வடக்கு, கிழக்கை கட்டியெழுப்ப எவ்வளவு வேலைகள் செய்தது தெரியுமா? தெற்கை விட வடக்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தேன். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் கடந்து விட்டன. இந்த நல்லாட்சி அரசாங்கம் வடக்கு, கிழக்கு மக்களுக்காக என்ன செய்தது? தமிழ் கூட்டமைப்பு இந்த நாட்டின் எதிர்க்கட்சியாக உள்ளது. அவர்கள் கடந்த மூன்று வருடத்தில் தம் மக்களுக்காக என்ன செய்தனர் தமிழ் அரசியல் கட்சிகள் எப்போதுமே மக்களை ஏமாற்றுவதையே செய்துவந்துள்ளன.
கவலையை விற்று வரப்பிரசாதங்கள் பெற்றதையே அவைகள் செய்தன. தெற்கு மக்களைப்போன்று வடக்கு, கிழக்கு மக்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்தவே நான் முயற்சித்தேன். அதைத்தான் நான் செய்ய வேண்டும்.முஸ்லிம் மக்களை எம்மிடமிருந்து தூர விலக்கியது யார் என்பது இன்று நன்றாகவே தெரியும். இவ்வாறு தற்காலிக அரசியல் சுயலாபத்திற்காக இன ரீதியாக மோதல்களை ஏற்படுத்துவது நீண்ட காலத்தில் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
Q : 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்ததும் இனப்பிரச்சினையை தீர்க்க உங்களுக்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்தது. நீங்கள் அதனை பயன்படுத்தவில்லையே ஏன்?
A: நீங்கள் கூறும் இந்த தீர்வு எது என்பது தெளிவாகவில்லை. பிரிவினைவாதிகள் பிரபாகரன் ஊடாக இந்த நாட்டை பிரிக்க முற்பட்டனர். யுத்தத்தில் கொடுக்க முடியாத ஈழத்தை வெறுமனே கொடுப்பதா தீர்வு. நான் தெற்கு மக்களை மட்டுமல்ல வடக்கு, கிழக்கு மக்களையும் பிரபாகரனிடமிருந்து மீட்டெடுத்தேன். நான் தோல்வி அடைவேன் என்று தெரிந்தும் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளை நடத்தினேன். அந்த மக்கள் தமது தலைவர்களை தெரிவு செய்யவே இதனை செய்தேன். யுத்தத்தில் ஆயிரக்கணக்கான புலி உறுப்பினர்களை புனர்வாழ்வளித்து விடுவித்தேன். 30 வருட யுத்தத்தினால் அழிவடைந்த தமிழ் மக்களின் வாழ்க்கையை ஒரு இரவில் முழுமையாக கட்டியெழுப்ப முடியாது. அதனை படிப்படியாகவே செய்யவேண்டும். அதனை நான் ஆரம்பித்திருந்தேன்.
Q : முன்னாள் புலி உறுப்பினர்களை சமூகம யப்படுத்திய நீங்கள் 200 தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவில்லை. ஏன்?
A: யுத்தம் முடிவடைந்தவுடன் சமாதானம் உருவாகாது. வென்றெடுத்த யுத்த வெற்றியை பாதுகாப்பதற்கு சில பரிசோதனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தமாட்டார்கள் என உறுதிப்படுத்திய பின்னரே அவர்களை விடுவித்தோம். அவை படிப்படியாகவே இடம்பெற்றன. இவர்கள் அனைவரும் பயங்கரவாத அமைப்பில் இருந்தவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. புலிகள் அமைப்பானது இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச அமைப்பிலும் தடைசெய்யப்பட்டது. அவர்களை அரசியல் கைதிகள் என்று குறிப்பிட முடியாது. எனினும் இவர்களை மேலும் உறுதிப்படுத்தியிருக்கலாம். தற்போது நான் பதவியிழந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. சக வாழ்வு தொடரில் உயர்ந்த மட்டத்தில் பேசும் இந்த அரசாங்கமும் அவர்களை விடுவிக்கவில்லையே.
Q :யுத்தத்தினால் காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு 2015ஆம் ஆண்டுவரை நீதி கிடைக்கவில்லை. அந்தப் பொறுப்பை நீங்கள் ஏன் புறக்கணித்தீர்கள்?
A: யுத்தத்தின் பின்னரான முகாமைத்துவம் என்பது சிக்கல் கொண்டது. மீண்டும் யுத்தம் இடம்பெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும். வெளிச்சக்திகளின் அழுத்தங்களுக்கு உட்பட வேண்டும். இந்த அனைத்து சவால்களுக்கு மத்தியிலும் நான் காணாமல்போனோரின் உறவுகளை மறக்கவில்லை. அதனால்தான் பரணகம ஆணைக்குழுவை நியமித்தேன்.
காணாமல்போனார் தொடர்பில் மிகவும் கவனமாகவே இறுதி முடிவுக்கு வரவேண்டும். அதற்காக நாம் சட்டங்களைக்கூட மாற்றுவதற்கு முயற்சித்தேன். எனினும் அதில் சில தாமதங்கள் இருந்தன.
Q : நீங்கள் வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்தீர்கள். எனினும் தேசிய பிரச்சி னையை
தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. உங்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு அன்று சம்பந்தன் கூட முன் வந்தார் தானே?
A: நான் தெற்கை விட வடக்கிற்கே அதிக முக்கியத்துவம் வழங்கி அபிவிருத்தி செய்தேன். யார் ஆதரவு வழங்க முற்பட்டாலும் ஒரு நாடு என்ற கட்டமைப்புக்குள் பிரச்சினையை தீர்ப்பதே எனது நிலைப்பாடாகும். அரசியல் அமைப்பை சம்பந்தப்படுத்தி இந்த பிரச்சினையை தீர்க்க முயற்சித்தால் சிங்கள–தமிழ் மக்கள் மீண்டும் தூர விலகிச் சென்றுவிடுவார்கள். சிங்கள– தமிழ்– முஸ்லிம் மக்கள் அனைவரும் தேசிய உணர்வுடன் வேலை செய்யாமல் தமது விடயங்களை மட்டும் பார்த்துக்கொள்ளும்வரை இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது.
Q : நீங்கள் இனவாதிகளுடன் கூட்டுச்சேர்ந்துள்ளதாக தமிழ் மக்கள் குற்றச்சாட்டை முன்
வைக்கின்றனர். இதற்கு உங் கள் பதில் என்ன?
A: யுத்தத்தை முடித்ததன் மூலம் சிங்கள மக்களுக்கு மட்டுமன்றி தமிழ் –முஸ்லிம் மக்களுக்கும் நான் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தேன். நாங்கள் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை செய்யவில்லை. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே யுத்தம் செய்தோம். தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கான எனது அணுகுமுறை இனவாதம் அல்ல. மாறாக அது தேசிய மட்டத்திலானது. எனினும் பிரபாகரனின் நிலைப்பாட்டுடன் இருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்த பிரச்சினையை இனவாத நோக்கிலேயே பார்க்கின்றது.
Q : அப்படியானால் தமிழ்–முஸ்லிம் மக்கள் இதற்கு பின்னரும் உங்களை நம்பவேண் டும் என கூறுகின்றீர்களா?
A: நிச்சயமாக என்னை நம்பலாம். நான் சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள– தமிழ்– முஸ்லிம் என அனைத்து மக்களதும் தலைவர்.
Q : யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் தலைவர்கள் சர்வதேச சமூகம் ஊடாக சர ணடையப்போவதாக உங்களுக்கும் உங்களது அர சாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கும் தகவல் அனுப் பியதாக கூறப்படுகிறதே. அவ்வாறான தகவல் உங் களுக்கு கிடைத்ததா?
A: அதுபோன்ற எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை. எனது அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் எவருக்கும் அவ்வாறான தகவல் கிடைக்கவில்லை. எனினும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அதிகமான புலி உறுப்பினர்கள் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்தனர். அவர்கள் தொடர்பான பொறுப்பை நாம் ஏற்றுக்கொண்டோம்.
Q :வடக்கு–கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு இந்தத் தேர்தலில் நீங்கள் கூறுவது என்ன?
A: ஆசைவார்த்தைகளை கூறும் தரப்பினரிடம் ஏமாற வேண்டாம் என்பதையே தமிழ்பேசும் மக்களுக்கு கூறுகின்றேன். இது எம் அனைவரினதும் நாடு. இது எமக்கு உரிமையான நாடு. எனவே பிரிவினைவாதிகளிடமிருந்து எமது நாட்டை பாதுகாக்க இந்தத் தேர்தலை பயன்படுத்துமாறு கோருகின்றேன்.
Q :பாரிய ஊழல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் உங்களது
பெயர், உங்களது சகோதரர்களின் பெயர்கள் முன் வைக்கப்பட்டுள்ளதே?
A: 125 இலட்சம் ரூபாவை தேர்தல் காலத்தில் விளம்பர கட்டணமாக ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு செலுத்தவில்லை என்பதே எனக்கெதிராக இருக்கும் குற்றச்சாட்டாகும். பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொலைக்காட்சிகளுடன் தனிப்பட்ட ரீதியில் விளம்பரம் கொடுப்பதற்கு முயற்சிக்கமாட்டார்கள். குறித்த அரசியல் கட்சியின் தேர்தலுக்காக நிறுவப்படும் ஊடக குழுவே விளம்பர நிறுவனங்களைக் கொண்டு இதனை செய்யும்.
ஏதாவது ஒரு தொலைக்காட்சிக்கு பணம் செலுத்தப்படாவிடின் குறித்த விளம்பர நிறுவனம் ஊடாகவே பணத்தை பெறவேண்டும். குறித்த விளம்பர நிறுவனம் அரசியல் கட்சியிடமிருந்து பணத்தை பெறவேண்டும். 2015ஆம் ஆண்டு நான் சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக வரவேண்டும் என அப்போது கட்சியின் செயலாளரான மைத்திரிபால சிறிசேனவே பிரேரணை செய்தார். எனவே குறித்த தொலைக்காட்சி நிறுவனத்திற்கு நிதி செலுத்தப்படவேண்டுமாயின் அதனை கட்சியே செலுத்தவேண்டும்.
Q :2008 முதல் 2014 ஆம் ஆண்டுவரை மத் திய வங்கியில் பிணைமுறி மோசடி இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறதே. அது தொடர்பில்?
A: எனது ஆட்சிக்காலத்தில் பிணைமுறி மோசடி எதுவும் நடக்கவில்லை. ஜனாதிபதியும் பிரதமரும் தமது விடயங்களை மூடிமறைக்க கடந்த ஆட்சியில் மோசடி இடம்பெற்றதாக கூறுகின்றனர். முன்னாள் நிதியமைச்சரின் கோரிக்கைக்கு அமைவாக 2008முதல் 2014ஆம் ஆண்டுவரை இடம்பெற்ற பிணைமுறை தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் ஏற்கனவே பரிசோதனை செய்திருக்கிறார். அது தொடர்பில் அறிக்கையும் உள்ளது. எனது அரசாங்கக்காலத்தில் தான் பிணை முறி விநியோகத்தின்போது சிறந்த முறைமை பின்பற்றப்பட்டது. தற்போதைய முறைமை மாற்றப்பட்டமையே மோசடிக்கு காரணம்.
Q : ஐ.ம.சு.முன்னணியின் 95 உறுப்பினர் களும் தன்னுடன் சேர்ந்தால் தான் தனித்து ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதாக ஜனாதிபதி கூறியிருக்கிறார். இதற்கு உங்கள் பதில் என்ன?
A: இது அரசியல் தந்திரமாகும். உள்ளூராட்சி தேர்தலில் சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு தோல்வி கிடைக்கும் என தெரிந்ததும் அரசாங்கம் அமைக்க எம்மை அழைக்கின்றனர். இங்கு நாடகமே அரங்கேற்றப்படுகிறது. இதில் மக்கள் சிக்கவேண்டியதில்லை. தேர்தல் காரணமாக ஐ.தே.க.வும் சு.க.வும் ஒரே அரசாங்கத்தில் இருந்துகொண்டு ஒருவரையொருவர் விமர்சிக்கின்றனர்.
இதற்கு மக்கள் ஏமாறக்கூடாது. இங்கு என்ன நடந்துள்ளது என்றால் பிணைமுறி அறிக்கையை ஜனாதிபதி செயலகத்திற்கு கொடுத்ததும் அதிலிருந்து சில பகுதிகள் காணாமல் போயுள்ளன. அது தொடர்பில் எமது எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியதும் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என சுதந்திரக் கட்சியினர் கூறினர். எனினும் எதிர்ப்பு வலுவாகியபோது அதிலிருந்து இரகசியப் பகுதிகள் வெளிப் படுத்தவில்லை என ஜனாதிபதி கூறினார்.
இதன்மூலம் ஐ.தே.க.வை காப்பாற் றுவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. இது ஆச்சரியத்திற்குரியதல்ல. 2015ஆம் ஆண்டு கோப் அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கவிடாமல் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தார். அதுதான் இப்போதும் நடைபெறுகிறது. சில நெத்தலி மீன்களை தண்டித்துவிட்டு சுறா மீன்களை பாதுகாப்பதற்கு முயற்சிக் கப்படுகிறது.
Q :நீங்கள் சுதந்திரக் கட்சியிலிருந்து விலக வில்லை என கூறுகின்றீர்கள். ஆனால் மொட்
டுக்கு வாக்களிக்குமாறும் கூறுகின்றீர்கள் . ஏன் இந்த
முரண்பாடு?
A: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னும் இருக்கிறது. ஆனால் அது யானையின் வாலில் கட்டிவைக்கப்பட்டுள்ளது. நாம்
இப்போது மொட்டில் வாக்கு கேட்கி றோம். மக்கள் அனைவரும் இணைந்து அவர்களின் தேவைக்காக மொட்டு கட்சியை உருவாக்கியுள்ளனர். எம்மிடம்தான் சுதந்திரக் கட்சியின் கொள்கையும் பண்டாரநாயக்கவின் கொள்கையும் இருக்கின்றன. பொதுஜன பெரமுன வெற்றிபெற்றால் அந்த கொள்கைகள் பாதுகாக்கப்படும். அதனால்தான் மொட்டுக்கு வாக்களிக்குமாறு கூறுகின்றேன்.
(ரொபட் அன்டனி )
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM