கட்சி தொடங்க ரசிகர்கள் அளித்த ரூ.30 கோடியை வாங்க மறுத்த கமல் ஹாசன்

17 Nov, 2017 | 04:34 PM
image

இரசிகர்கள் வழங்கிய ரூ.30 கோடியை கமல் ஹாசன், கட்சி தொடங்கும் முன் பணம் வாங்குவது சட்ட விரோதம் எனக்கூறி திருப்பி அளித்திருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசன் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

கட்சிக்கு என்ன பெயர் சூட்டுவது? எத்தகைய கொள்கைகளை வரையறுப்பது? கட்சியை எப்படி வழி நடத்தி செல்வது? என்பது உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கமல்ஹாசன் புதிய கட்சி தொடங்குவது உறுதியாகி விட்டதால் அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர்கள் கமலை வரவேற்று முக்கிய நகரங்களில் போஸ்டர்கள், பதாகைகள் அமைத்துள்ளனர்.

அது மட்டுமின்றி கமல் ஹாசனுக்கு உதவும் வகையில் செயல்பட அவரது நற்பணி மன்ற நிர்வாகிகளும் களத்தில் குதித்துள்ளனர். இந்த நற்பணி மன்றம் கடந்த 37 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இவர்கள் இதுவரை தமிழ் நாடு முழுவதும் பல்வேறு நற்பணிகளுக்காக ரூ.30 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளனர்.

சமீபத்தில் கமல்ஹாசன் தனது புதிய கட்சி தொடக்கம் பற்றி கூறுகையில், “நான் கட்சி நடத்துவதற்கான பணத்தை மக்கள் தருவார்கள்” என்று கூறினார். மக்களிடம் இருந்து கட்சிக்காக ரூ.30 கோடி திரட்ட போவதாகவும் தெரிவித்திருந்தார். இதை கேட்டதும் அவரது நற்பணி மன்ற நிர்வாகிகள் பணம் திரட்டியதாக கூறப்படுகிறது.

அவர்கள் ரூ.30 கோடியையும் வசூலித்து இருப்பதாக தெரிகிறது. இது தவிர ரசிகர்களும், பொதுமக்களும் கமல் ஹாசனுக்கு பணம் அனுப்பத் தொடங்கியுள்ளனர். ஆனால் இந்த பணத்தை ஏற்றுக் கொள்ள கமல்ஹாசன் விரும்பவில்லை.

தனக்கு வந்துள்ள பணத்தை யார் - யார் அனுப்பினார்களோ, அவர்களுக்கே திருப்பி அனுப்ப அவர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நற்பணி மன்றத்தினரின் ரூ.30 கோடி மற்றும் மக்கள் அனுப்பிய பணத்தை திருப்பி கொடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கமல் ஹாசன் விளக்கம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது,

கட்சி நடத்துவதற்கான பணத்தை மக்கள் தருவார்கள் என்று நான் சொன்னதை “ரசிகர்கள் கொடுப்பார்கள்” என்று ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. எனவே எனது நற்பணி மன்ற நிர்வாகிகளும், மக்களும் குழம்பி விடக்கூடாது என்பதற்காக இந்த விளக்கத்தை வெளியிடுகிறேன்.

எனக்கு கடிதங்கள், பணம் வரத் தொடங்கிவிட்டது. ஆனால் நான் இப்போது பணம் வாங்கினால், அது சட்ட விரோதமாகி விடும். அதை நான் விரும்பவில்லை.

எனக்கு வந்துள்ள பணத்தை நான் வெறுமனே சும்மாவும் வைத்துக் கொண்டிருக்க முடியாது. ஆகையால் அந்த பணத்தை ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.

எனது இந்த செயலால் நான் பணத்தை வாங்க மாட்டேன் என்று அர்த்தம் இல்லை. முன் வைத்த காலை பின் வைத்து விட்டேன் என்றும் அர்த்தம் இல்லை. கட்சித் தொடங்குவதற்கான சரியான கட்டமைப்பு இல்லாமல் அந்த பணத்தைத் தொடக்கூடாது.

இப்போதைக்கு அந்த பணத்தை என்னுடைய பணம் என்று நினைத்து நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அதற்குள் நீங்கள் அந்த பணத்தைத் செலவு செய்து விட்டால், அதற்கான பாக்கியம் எனக்கு இல்லை என்று நினைத்துக் கொள்கிறேன்.

நீங்கள் பணம் அனுப்பிய அன்றே கட்சி உருவாகிவிட்டது. ஆனால் கட்டமைப்பு சரியாக இருக்க வேண்டும். இப்போது சில இயக்கங்களில் நடக்கும் குளறுபடிகள் போல நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் பணத்தை திருப்பி அனுப்புகிறேன்.

இவ்வாறு நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

இந்த விளக்கம் தொடர்பாக கமல்ஹாசனிடம் கேட்கப்பட்டபோது அவர் கூறியதாவது:-

இவ்வளவு பெரிய தொகையை நான் சுயமாக தனி நபராக நின்று திரட்ட முடியாது. எனவே தான் எனது கட்சியை நடத்த பொது மக்களே பணம் தர வேண்டும் என்று விரும்புகிறேன்.

அரசியலில் எனது கொள்கை, லட்சியம் பற்றி விரைவில் எனது ரசிகர்கள் மக்களை சந்தித்து விளக்கமாக சொல்வார்கள். அதன் பிறகே மக்களிடம் இருந்து பணம் பெறப்படும்.

இதற்கிடையே மக்களை சந்தித்துப் பேச விரைவில் சுற்றுப்பயணம் தொடங்க உள்ளேன். மக்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம் செல்வேன். மக்கள் என்னை வாரணாசிக்கு வரச் சொன்னாலும் தயங்க மாட்டேன். செல்வேன்.

இவ்வாறு நடிகர் கமல் ஹாசன் கூறினார்.

இதன் மூலம் நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தின் ஒரு பகுதியாக வாரணாசி செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37