பெருந்தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ள திட்டத்தின் கீழ், களுத்துறை மாவட்டத்திலுள்ள 13 தோட்ட வைத்தியசாலைகள் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தோட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் பெரியாஸ்பத்திரி, போதனா வைத்தியசாலை, ஆதார வைத்தியசாலை மற்றும் பிராந்திய வைத்தியசாலைகளில் ஏற்படும் நெருக்கடிகளைக் குறைக்க முடியும். அத்துடன், பெரும் சிரமத்துக்கு மத்தியில் நீண்ட தூரம் சென்று சிகிச்சை பெறும் தோட்டத் தொழிலாளர்களும் சிரமமின்றி இலகுவாக சிகிச்சை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவர்.
களுத்துறை மாவட்டத்தில் வோகன், சென்ஜோர்ஜ், மில்லகந்த, ஹல்வத்துறை, அரப்பொலகந்த, சிரிகந்துர, மிரிஸ்வத்த, டெல்கீத், அஷ்க்வெளி, பள்ளேகொட, குளோடன் உள்ளிட்ட 13 தோட்ட ஆஸ்பத்திரிகள் பொறுப்பேற்கப்படவுள்ளன.
ஏற்கனவே, இம்மாவட்டத்தில் நான்கு வைத்தியசாலைகள் அரசினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. அவற்றில் கீக்கியனகந்த தோட்ட ஆஸ்பத்திரி சுமார் 25 மில்லியன் செலவிலும், நியூச்செட்டல் தோட்ட ஆஸ்பத்திரி சுமார் 35 மில்லியன் செலவிலும் நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளக் கூடிய வார்ட் வசதி உட்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.
இங்கிரிய, றைகம் தோட்டத்தில் இரண்டு ஏக்கர் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டு சுமார் 35 மில்லியன் செலவில், சகல வசதிகளுடனும் கூடிய புதிய வைத்தியசாலை தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. புளத்சிங்கள, கோவின்ன, புரொஸஸ்டந்த தோட்ட வைத்தியசாலை சுமார் 20 மில்லியன் ரூபா செலவில், அடுத்த ஆண்டில் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.
இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் தற்பொழுது அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் களுத்துறை– நாகொட வைத்தியசாலை, பேருவளை ஆதார வைத்தியசாலை, அளுத்கம, தர்காநகர், ஹொரணை, பண்டாரகம, மிம்புர, பதுரலிய, மீகஹதென்ன, இங்கிரிய, கட்டுகஹஹேன, மோற்காவ ஆகிய வைத்தியசாலைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரித கதியில் பூர்த்தி செய்யுமாறு அமைச்சர் கட்டட ஒப்பந்தக்காரர்களைக் கேட்டுள்ளார்.