அண்மையில் நடைபெற்ற ஜப்பானிய பொதுத் தேர்தலில் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றிருக்கும் பிரதமர் ஷின்சோ அபே மூன்றாவது பதவிக் காலத்துக்கும் பிரதமராகியிருக்கிறார். ஆளும் கூட்டணிக்கு பாராளுமன்றத்தின் கீழ்சபையில் 313 ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. இதில் பிரதமர் அபேயின் லிபரல் ஜனநாயகக் கட்சி 291 ஆசனங்களையும் சிறிய பங்காளிக் கட்சியான கோமீட்டோ 29 ஆசனங்களையும் கைப்பற்றியிருக்கின்றன.
முன்னைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே அதைக் கலைத்து திடீர் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை செப்டெம்பரில் அபே வெளியிட்டபோது ஊழல் விவகாரங்கள் காரணமாக அவரது செல்வாக்கு குறைந்திருந்ததாக அபிப்பிராய வாக்கெடுப்புகள் வெளிப்படுத்திய ஒரு நேரத்தில் அவர் ஆபத்தான காரியத்தில் இறங்குகிறார் என்றே வர்ணிக்கப்பட்டது. ஆனால், அந்த அரசியல் சூதாட்டம் அவருக்கு வாய்ப்பானதாகவே முடிந்திருக்கிறது. லிபரல் ஜனநாயகக் கட்சி மீண்டும் மூன்றில் இரண்டுக்கும் கூடுதலான பெரும்பான்மைப் பலத்துடன் அதிகாரத்துக்கு திரும்பியிருக்கிறது.
போரை வெறுத்தொதுக்கும் ஜப்பானின் அரசியலமைப்பை (pacifist constitution) திருத்தியமைப்பதே பிரதமர் அபேயின் நிகழ்ச்சித் திட்டத்தில் இப்போது அதிமுக்கிய இடத்தை வகிக்கக் கூடிய சாத்தியம் இருக்கிறது. முழு அளவான (full - fledged miltary force ) இராணுவத்தை வைத்திருப்பதை அல்லது போர் தொடுப்பதை ஜப்பானின் தற்போதைய அரசியலமைப்பு தடுக்கிறது.
ஜப்பானின் தற்காப்புப் படைகளை (self defence force) சட்டப் படியான நிலைக்கு உறுதிப்படுத்துவதற்கு அரசியலமைப்பின் 9 ஆவது பிரிவை திருத்துவதன் மூலமாக அந்த நிலையை மாற்றியமைக்க முடியும். அரசியலமைப்பை மாற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு தேவை. அத்தகைய ஆதரவை அபேயின் அரசாங்கம் கொண்டிருக்கிறது. அவரது இரண்டாவது பதவிக் காலத்திலும் கூட அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இருந்தது. ஆனால் நாடு எதிர்நோக்குகின்ற வேறு பிரச்சினைகளில் அவர் மூழ்கியிருந்ததால் அரசியலமைப்பை மாற்றும் விவகாரத்தை முழுமையான அக்கறையுடன் அணுக முடியாமல் போய்விட்டது.
ஆனால், இத்தடவை பிரதமர் அபே அந்த விவகாரத்தை அதன் தர்க்க ரீதியான முடிவுக்கு கொண்டு செல்வதில் முழுவீச்சில் செயற்பாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது உலக மகா யுத்தத்திற்குப் பின்னரான போர் பொறுப்பு மனோநிலையில் இருந்து ஜப்பானிய மக்களை அவர் மாற்ற வேண்டியிருக்கிறது. உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றான ஜப்பான் வரலாற்று ரீதியான பகைமையுணர்வு ‘போட்டா போட்டி’ எதேச்சதிகார ஆட்சிகள், வளங்களுக்கான போராட்டங்கள் மற்றும் புதிய வல்லாதிக்க நாடுகளின் வளர்ச்சியையும் பழைய வல்லாதிக்கத்தின் வீழ்ச்சியையும் கொண்ட ஒரு பிராந்தியத்தில் வழமையையும் விட கூடுதல் ஆற்றல் கொண்ட ஒரு இராணுவத்தை நிராகரிப்பது என்பது இனிமேலும் கட்டுப்படியாகக் கூடிய ஒரு விடயம் அல்ல.
அரசியலமைப்பை மாற்றுவதற்கு ஜப்பானிய மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு வடகொரிய நெருக்கடி பிரதமர் அபேக்கு மிகுந்த வசதியாக அமையும். கிழக்காசியாவின் ஏனைய நாடுகளைப் போன்றே ஜப்பானும் அதிகரித்துவரும் அமெரிக்க வடகொரிய பகைமை நிலையினால் பெரும் சஞ்சலத்துக்குள்ளாகியிருக்கிறது. அதிகரித்துவரும் சீனாவின் முரட்டுத்தனமும் ஜப்பானின் விசனத்துக்குரியதாக இருக்கிறது. அதனால் ஜப்பானில் பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பின்மை உணர்வு கடுமையானதாக இருக்கிறது. ஜப்பானைப் பாதுகாப்பதற்கு ஏன் போருக்குப் போவதற்குக் கூட இப்போது பலம் பொருந்திய இராணுவம் ஒன்று தேவை என்று மக்களை நம்பவைப்பது பிரதமர் அபேக்கு முன்னரைக் காட்டிலும் எளிதானதாக இருக்கக் கூடியது சாத்தியம். உரமான பேச்சுக்கள், சவால் விடுப்புகளை எதிர்பார்க்க முடியும். உண்மையில் ஏற்கனவே கிழக்காசியா பதற்றத்துக்குள்ளாகியிருக்கும் ஒரு நேரத்தில் அத்தகைய உரமான பேச்சுக்கள் கடந்த காலத்தில் ஜப்பானின் இராணுவவாதப் போக்கினால் பெரிதும் பாதிக்கப்பட்ட சீனாவையும் கொரியாக்களையும் கலவரமடையச் செய்யும் என்பது நிச்சயம். அதனால் தான் செய்ய நாட்டம் கொண்டிருக்கின்ற மாற்றத்தை மிகுந்த நிதானத்துடன் கையாள வேண்டிய தேவை பிரதமர் அபேக்கு இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM