இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி இருபதுக்கு 20 போட்டியில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. ஏற்கனவே தொடரை வென்றிருந்த இந்தியா மூன்று போட்டிகளையும் வெற்றிகொண்டு அவுஸ்திரேலியாவுக்கு வெள்ளையடித்தது.
சிட்னியில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் வொட்சன் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இவரது அதிரடியால் அவுஸ்திரேலியாவின் ஓட்ட வேகம் ஓவருக்கு சராசரியாக 10 ஓட்டங்களாக உயர்ந்தது. வொட்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 124 ஓட்டங்களைப் பெற்றார்.

198 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 20ஆவது ஓவரின் கடைசி பந்தில் வெற்றி ஓட்டத்தைப் பெற்று ஆஸி.க்கு அதிர்ச்சியளித்தது. இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக ஷர்மா மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஷர்மா (52), தவான்(26), கோஹ்லி (50) என ஓட்டங்களைக் குவித்தனர். இறுதி வரை களத்தில் நின்ற ரெய்னா மற்றும் யுவராஜ் சிங்க ஆகியோர் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர். இந்திய அணி மூன்று விக்கெட்டுக்களை மாத்திம் இழந்து 20 ஓவர்களையும் விளையாடி 200 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இதில் ரெய்னா 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.