ஈரான் அணுசக்தி உடன்படிக்கையை உறுதிப்படுத்துவதற்கு மறுத்திருப்பதன் மூலமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இருவருட காலமாக நடைமுறையில் இருந்து வரும் அந்த உடன்படிக்கையை ஆபத்துக்குள்ளாக்கியிருக்கிறார்.
ஈரான் மீதான உலக நாடுகளின் தடைகள் நீக்கப்படுவதற்கு பிரதியுபகாரமாக அந்நாடு அதன் அணுசக்தி திட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கு வழிவகுக்கும் உடன்படிக்கையில் 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா உட்பட 6 வல்லரசு நாடுகள் கைச்சாத்திட்டன.
அமெரிக்க சட்டத்தின் பிரகாரம் அமெரிக்க நிர்வாகம் உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கு இசைவான முறையில் ஈரான் நடந்துகொள்கிறதா? இல்லையா ?என்பதை 90 நாட்களுக்கு இரு தடவை எழுத்து மூலம் உறுதிப்படுத்த வேண்டும். உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட ஏனைய நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் ஈரான் உடன்படிக்கையை முழுமையாகக் கடைப்பிடிக்கிறது என்று உறுதிபடக் கூறுகின்றபோதிலும் டொனால்ட் ட்ரம்ப் அதை உறுதிப்படுத்த மறுத்திருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு ஏற்கனவே இரு தடவைகள் ட்ரம்ப் உடன்படிக்கையை ஈரான் முறையாகக் கடைப்பிடிக்கிறதென்று உறுதிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது ஈரான் அணுசக்தி உடன்படிக்கையை கிழித்தெறியப் போவதாக அச்சுறுத்திய ட்ரம்ப் அதை அமெரிக்க--- வரலாற்றில் படுமோசமான உடன்படிக்கை என்று தொடர்ந்து வர்ணித்து வந்தார். இப்போது மூன்றாவது தடவையாக உடன்படிக்கையை உறுதிப்படுத்துவதற்கு ஒரு சில நாட்கள் முன்னதாக அவ்வாறு செய்வதற்கு அவர் மறுத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
ட்ரம்ப் நிருவாகம் அதன் ஆரம்ப நாட்களில் இருந்தே ஈரான் தொடர்பில் ஒரு கடுமையான போக்கையே எடுத்திருந்தது. ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் தொடர்பில் புதிய தடைகளை விதித்த நிருவாகம் தெற்காசியாவில் ஈரானின் போட்டி நாடுகளுடன் கைகோர்த்துச் செயற்படவும் ஆரம்பித்தது. உடன்படிக்கையை உறுதிப்படுத்துவதற்கு ட்ரம்ப் மறுத்திருக்கின்ற போதிலும் அதிலிருந்து அவர் விலகிவிடவில்லை. பதிலாக, அடுத்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பை காங்கிரஸிடம் கடத்திவிட்டார். ஈரானுக்கு எதிராக தடைகளை மீண்டும் விதிக்க வேண்டுமா இல்லையா என்ற தீர்மானத்தை குடியரசுக்கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள காங்கிரஸ் இன்னும் 60 நாட்களில் எடுக்க வேண்டும். எந்தவொரு விரிவான சட்டமூலத்தையும் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு அமெரிக்க காங்கிரஸின் செனட் சபையில் (ஜனநாயக கட்சியினரையும் உள்ளடக்கியதாக) இருதரப்பு கருத்தொருமிப்பு அவசியம் என்பதால் ஈரானுக்கு எதிராக தடைகளை மீண்டும் விதிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் அண்மைக்காலத்தில் எடுக்கப்படக் கூடிய சாத்தியமில்லை என்றே அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.
எது எவ்வாறிருந்தாலும், உடன்படிக்கையை உறுதிப்படுத்துவதற்கு மறுத்த தனது செயலின் மூலமாக அமெரிக்க இராஜதந்திரத்துக்கு ட்ரம்ப் ஏற்படுத்தியிருக்கும் சேதம் பாரியதாகும்.
உடன்படிக்கையைப் பற்றி யதார்த்த பூர்வமான ஒரு மதிப்பீட்டைச் செய்வதிலிருந்து அவர் அரசியல் மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே தீர்மானங்களை எடுக்கிறார் என்றே தோன்றுகிறது.
பராக் ஒபாமாவின் பதவிக்காலத்தின் பிற்பகுதியில் ஈரானுடனான அமெரிக்க உறவுகள் மீளச்சீரமைக்கப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. அந்த மீள்சீரமைப்புக்கு ஒரு முடிவைக் கட்டக்கூடியதாக ட்ரம்பின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன என்று சர்வதேச அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.
இப்போது ஈரான் அணுசக்தி உடன்படிக்கைக்கு மேலாக தடைவிதிப்பு அச்சுறுத்தல் தொங்கிக்கொண்டிருக்கிறது. அது ஈரானில் நடைபெற்ற அண்மைய தேர்தல்களில் அரசியல் பின்னடைவைச் சந்தித்த கடும் போக்காளர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையக் கூடும்.
ஈரான் ஜனாதிபதி ஹசன் ரோஹானியன் நிகழ்ச்சித்திட்டத்தின் பின்னால் அணி திரண்டு நிற்கும் சீர்திருத்தவாதிகள் மற்றும் மிதவாதிகளே அணுசக்தி உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதைச் சாத்தியமாக்கியவர்கள்.
அணுசக்தி நெருக்கடிக்கு தீர்வொன்றைக் காண்பதாக உறுதியளித்த ஜனாதிபதி ரோஹானி உடன்படிக்கையை செய்துகொண்டதுடன் இவ்வருடம் நடைபெற்ற தேர்தலிலும் வென்று மீண்டும் ஜனாதிபதியாகக் கூடியதாக இருந்தது. இப்போது, அமெரிக்கா ட்ரம்ப் நிருவாகத்தின் கீழ் எடுக்கின்ற பகைமையுணர்வுடனான நிலைப்பாடுகள் காரணமாக உடன்படிக்கைக்கு ஆதரவாக ஈரானியர்களின் அபிப்பிராயத்தை கட்டியெழுப்புவது ரொஹானிக்கு பெரும் கஷ்டமாக இருக்கப்போகிறது.
ஈரான் அணுசக்தி உடன்படிக்கை குறைபாடுகளைக் கொண்டதாக இருந்தாலும் உலக வல்லரசுகள் ஒன்றிணைந்து சிக்கலான பிரச்சினைகளுக்கு இராஜதந்திர தீர்வினைக் காண முடியும் என்பதற்கு இது பிரகாசமான உதாரணமாக இருக்கிறது. ஏனைய அணுவாயுத நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு ஒரு வகை மாதிரியானதாகவும் நோக்கப்படுகிறது. அந்த உடன்படிக்கையை வலுப்படுத்துவதற்குப் பதிலாக ஈரானுக்கு எதிரான நிலைப்பாடுகளை (அதுவும் அந்த நாடு உடன்படிக்கையின் நிபந்தனைகளை கடைப்பிடித்து செயற்படுகின்ற சூழ்நிலையில்) எடுப்பதன் மூலமாக டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவுக்கு அபகீர்த்தியை ஏற்படு த்துகிறார் என்பதே அவதானிகள் மத்தியிலான பொது அபிப்பிராயமாக இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM