கருத்தடை சத்திர சிகிச்சையின் பின்னரும் கரு தங்குமா?

Published By: Robert

31 Jan, 2016 | 09:39 AM
image

குடும்பக்கட்டுப்பாட்டு முறைகள் பல இருந்தாலும் நிரந்தரக்கட்டுப்பாட்டு முறையாக சொல்லக்கூடியது கருத்தடை சத்திர சிகிச்சையே ஆகும். கருத்தடை சத்திர சிகிச்சை முறையானது பெண்களின் பலோப்பியன் குழாய்கள் கட்டுப்போடப்பட்டு வெட்டப்படுவதன் மூலம் செய்யப்படுகின்றது. இதனை LRT சத்திர சிகிச்சையென அழைப்பார்கள். இவ்வாறாக நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டு முறையின் பின்னர் பெண்ணொருவர் தற்செயலாகக் கூட மீண்டும் கருத்தரிக்க முடியுமா? அவ்வாறு கருத்தரிக்கும் போது கருவானது கர்ப்பப்பையினுள் வளருமா ? அல்லது கர்ப்பப்பைக்கு வெளியே பலோப்பியன் குழாயில் தங்குமா என அறிய வேண்டும். இதற்கு விளக்கம் தர நான் அண்மையில் கண்ட உண்மைச்சம்பவத்தை தருகின்றேன்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் எனது கிளினிக்கில் என்னிடம் ஆலோசனை பெற வந்த தம்பதிகளில் பெண்மணி அதி கூடிய வயிற்று வலியில் இருந்தார். அவர் 34 வயதுடைய 3 பிள்ளைகளின் தாய். அவரது மூன்று பிள்ளைகளும் சிசேரியன் முறை மூலமே பிரசவிக்கப்பட்டார்கள். மூன்றாவது சிசேரியன் பிரசவ நேரத்தில் நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டு சந்திர சிகிச்சையான LRT செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இவ்வாறான LRT குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை சிலருக்கு கடைசி சிசேரியன் பிரசவ நேரத்தில் 3 வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் ஒரு பிரபல வைத்தியசாலையில் செய்யப்பட்டுள்ளது.

இம்முறை இவ்வாறு வயிற்று வலி வரும் போது அவர் ஏற்கனவே இரு இடங்களில் மருந்துகளை எடுத்துள்ளார். இதன்போது வயிற்று வலிக்கு பல காரணங்களை எண்ணி மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வயிற்று வலியோ குறைந்ததாக தெரியவில்லை. அவரது மாதவிடாய் சக்கரமும் ஒழுங்கற்றதாகவே இருந்து வந்துள்ளது. அத்துடன் நிரந்தர குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்துள்ளமையால் கருத்தரிக்க வாய்ப்பும் இல்லை. அதனால் ஏற்படும் சிக்கல்களையும் எவரும் எண்ணியிருக்கவில்லை.

எனினும் வயிற்று வலி ஒரு நடுத்தர வயதுடைய பெண்ணில் கடுமையாக வரும்போது நாம் எதற்கும் கருத்தரித்தால் வரக்கூடிய நோய்களையும் நினைக்கத்தான் வேண்டும். இதற்கமைய இப்பெண்ணின் சிறுநீரை பரிசோதித்துப் பார்த்ததில் அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. அதாவது இப்பெண் கருத்தரித்துள்ளதாகவே அறிய வந்துள்ளது. இந்த தகவலை குடும்பத்தினருக்கு கூறும் போது கணவர் அதிர்ச்சியடைந்தார். எவ்வாறு ஒரு பெண் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்த பின்னரும் கருத்தரிக்க முடியும் என்றே கேட்டனர். அத்துடன் நாம் ஸ்கான் பரிசோதனை ஒன்றை செய்து வயிற்றில் உள்ள சரியான காரணத்தை கண்டறிய முயற்சித்தேன். அதன் போது தெரிய வந்தது அப்பெண் கருத்தரித்துள்ளார். ஆனால் கருவானது கர்ப்பப்பையில் தங்காது கர்ப்பப்பைக்கு வெளியே பலோப்பியன் குழாயினுள் தங்கியுள்ளது. இவ்வாறான நிலைமைகள் நிரந்தரமான குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்த பெண்களில் சிலரில் ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது 200 பெண்களில் நிரந்தர குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்தால் அதில் ஒருவருக்கு இவ்வாறான நிலைமை ஏற்படும். எனவே இதனை அந்தக் குடும்பத்தினருக்கு விளக்க வேண்டி இருந்தது.

அடுத்ததாக பெண்களில் ஏற்படும் கர்ப்பப்பைக்கு வெளியிலான கருத்தங்கலானது எந்த அளவு கவனிக்கப்பட வேண்டியது என்று பார்க்க வேண்டும். இந்த பெண்ணுக்கு இதனை நாம் கண்டறிந்தவுடன் அதற்காக இந்த கருக்கட்டிய பலோப்பியன் குழாய் வெடித்தால் வயிற்றினுள் பெண்ணுக்கு அதி கூடிய இரத்தப்போக்கு ஏற்பட்டு ஆபத்து நிலைமைகள் கூட ஏற்படலாம். ஆகையால் சத்திர சிகிச்சை செய்து கருத்தங்கிய பலோப்பியன் குழாயை அகற்ற வேண்டும். அத்துடன் சிலர் கேட்கத் தோன்றும் இந்தக் கருவைக்காப்பாற்றி ஒரு குழந்தையாக பெற்றெடுக்க முடியுமா என்று. இதற்கு பதில் என்னவென்றால் இந்தக் கரு பலோப்பியன் குழாயில் வளர இடவசதி இல்லாததால் குழாயுடன் சேர்ந்து வெடித்து தாய்க்கு ஆபத்தைத்தான் ஏற்படுத்தும். எனவே இவ்வாறான சிக்கலை தவறவிடாமல் சரியான நேரத்தில் கண்டறிந்து சரியான சத்திர சிகிச்சையை உடனடியாக செய்வதுதான் சிறந்த சிகிச்சை. இவற்றையெல்லாம் நாம் அந்தக் குடும்பத்தினருக்கு விளங்க வைத்து உடனடியாக சத்திர சிகிச்சையை திட்டமிட்டோம். இந்த சத்திர சிகிச்சை பெண்ணை முழு மயக்கத்தில் தான் செய்யப்பட்டது. இதன்போது வயிற்றில் ஒரு சிறிய துளை மூலம் லப்பிரஸ் கோப்பி கமராவை செலுத்தி வயிற்றினுள் உள்ள பாதிக்கப்பட்ட வெடிப்படைந்த பலேப்பியன் குழாயை கண்டறிந்து அதை அகற்றினேன்.

இதன் மூலம் வயிற்றினுள் ஏற்பட்ட குருதி இழப்பைக் கட்டுப்படுத்தி பெண்ணை ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடிந்தது. இந்த வகை சத்திர சிகிச்சை வயிற்றில் ஒரு சிறிய காயத்துடன் கிட்டத்தட்ட 30 நிமிடங்களுக்குள் முடித்து விட்டோம். அதனை தொடர்ந்து அப்பெண் முற்றுமுழுதாக குணமாகி மறுநாள் வீடு சென்றார்.

எனவே இதிலிருந்து நாம் அறியத்தருவது என்னவென்றால் கருத்தடை சத்திர சிகிச்சை ஒரு நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டு முறை. எனினும் ஒரு சிலரில் இம் முறையின் பின்னர் கருத்தங்கக்கூடியவாறான சிறிய சந்தர்ப்பம் ஒன்றுள்ளது. அதிலும் கருவானது பலோப்பியன் குழாயில் தங்கி வெடித்து வயிற்று வலி வரக்கூடிய வாய்ப்பும் உள்ளது. எனவே இதனை ஞாபகத்தில் வைத்து நடுத்தர வயது பெண்ணொருவர் வயிற்று வலி சற்று அதிகமாக உள்ள போது கருத்தங்கல் தொடர்பாகவும் அதன் சிக்கல் தொடர்பாகவும் கருத்தில் கொள்ள வேண்டும். இதன் போதுதான் பெண்களில் ஏற்படும் மிகவும் ஆபத்தான பலோப்பியன் குழாய் கருத்தங்கலை தவறவிடாமல் கண்டறிந்து பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04