(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
நீதிமன்ற சுயாதீனம் தொடர்பில் அரசாங்கம் சர்வதேசத்தின் கோரிக்கைக்கு எதிராக செயற்படுமானால் எமது நாடு சர்வதேச ரீதியில் மீண்டும் தூக்கி எறியப்படும் அபாயம் இருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற நிதிச் சட்டத்தின் கீழான சிரம வாசனா நிதியத்தை கலைத்தல் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பது தொடர்பான 22ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த அரசியலமைப்பில் காலம் காலமாக ஒவ்வொரு திருத்தங்கள் வருகின்றன. 19ஆவது திருத்தத்தின் போது ஒன்றாக இருந்தவர்கள் இப்போது 22ஆவது திருதத்தில் இரு வேறுபட்ட நிலைப்பாடுகளுடன் இருக்கின்றோம். அத்துடன் இந்த திருத்தம் தொடர்பில் தற்போது பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிடுகின்றனர். நீதித்துறையின் சுயாதீனத்திற்கு இது பாதிப்பாக அமையும் என்பதனால் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்களும் இந்தத் திருத்தத்தை எதிர்க்கின்றனர்.
ஜே.ஆர்.ஜயவர்தனவினால் கொண்டுவரப்பட்ட தற்போதைய அரசியலமைப்பு தொடர்பில் இப்போது அரசாங்கத்தில் உள்ள உங்களுக்கு நீண்ட வரலாறு உள்ளது. நீங்கள் இந்த அரசியலமைப்பை சர்வாதிகார அரசியலமைப்பாகவே கூறிவந்தீர்கள். இந்த அரசியலமைப்பை கிழித்து போட வேண்டும் என்றும் நீங்கள் பேரணிகளை நடத்தினீர்கள். அதற்காக போராட்டம் நடத்தியவர்கள் நீங்களே. இந்த அரசியலமைப்பால் ஜனநாயகம் அழிக்கப்படுகின்றது என்றும் கூறியவர்கள் நீங்களே. இந்நிலையில் உங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கிய புதிய அரசியலமைப்பை கொண்டு வருவோம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த வாக்குறுதிக்கு மக்கள் ஆணை கிடைத்தது.
மக்கள் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்காகவே ஆணையை வழங்கினார்கள். இப்போது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது. இதனை புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கு பயன்படுத்த முடியும். நீங்கள் வீதியில் நடத்திய போராட்டங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எனினும் பாராளுமன்றத்தில் அதற்கான அதிகார பலம் இருந்தும் அதனை செய்யாமல் அரசியலமைப்புக்கு ஒட்டு வேலைகளை மேற்கொண்டு திருத்தங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வாதிகார அரசியலமைப்புக்கு திருத்தங்கள் அவசியமற்றது என்றும், புதிய அரசியலமைப்பே வேண்டும் என்றும் எதிர்க்கட்சியில் இருக்கும் போது கதைத்தவர்கள் இப்போது மூன்றில் இரண்டு அதிகாரம் கிடைத்தும் நம்பி வாக்களித்த மக்களுக்கு பின்பக்கத்தை காட்டும் நிலையே உள்ளது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட அறிக்கையாளரின் கடிதம் ஆகஸ்ட் 7ஆம் திகதி வந்த போதும் இன்னும் அமைச்சர் அதற்கு பதிலளிக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ் காலத்தில் இந்த நாடு தொடர்பில் பொய்கள் கூறப்படுவதாக அவர்கள் கூறினர். இப்போது அமைச்சரும் அதே மந்திரத்தை கூறுகின்றார். பொய்யான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றார். குறித்த கடிதத்திற்கு பதிலளிக்காமல் இருக்கின்றனர்.
எவ்வாறாயினும் முறை மாற்றம் நடந்துள்ள போதும், இந்த விடயத்தில் முறைமாற்றம் நடக்கவில்லை என்றே கூற வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ்வின் முறையிலேயே போகின்றனர். சர்வதேசத்திற்கு பொய்கூறுகின்றனர் என்று மஹிந்த ராஜபக்ஷ மின்சாரக் கதிரை கதையை கூறியது போன்றே இவர்களும் கூறுகின்றனர். இவர்கள் சர்வதேசத்தையும் மனித உரிமைகள் பேரவையும் சிறுபிள்ளை போன்று ஏமாற்ற முடியாது.
அதனால் நீதிமன்ற சுயாதீனம் தொடர்பில் சர்வதேசத்தின் கோரிக்கைக்கு எதிராக செயற்படுமானால் எமது நாடு சர்வதேச ரீதியில் மீண்டும் தூக்கி எறியப்படும் அபாயம் இருக்கிறது என்றார்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM